Tuesday, November 25, 2014

ஜெயலலிதாவின் கைதும், எதிர்வினைகளும்

 -சாவித்திரிகண்ணன் 

ஊழலுக்கு எதிரான ஒரு தார்மீகக் கோபம், 

அறம் சார்ந்த விழமியங்கள் 

தமிழகத்தில் அரிதாகிக் கொண்டு வருகிறதோ என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தமிழகத்தில் பரவலாக வெளிப்பட்ட எதிர்வினைகள் நேர்மையை நேசிப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது! 66கோடி சொத்து சேர்ப்பில் சுமார் 56கோடிக்கு ஜெயலலிதாவால் கணக்கு காட்ட முடியவில்லை என்பதே அவர் சிறைக்கு போனதற்கான காரணம்! 

ஆக, இதெல்லாம் ஒரு பெரிய தொகையா? இதை விட பல்லாயிரம் கோடி ஊழல் செய்பவர்களை எல்லாம் சிறையில் தள்ளவில்லையே..." 

கருணாநிதிக்கும், சுப்பிரமணியசுவாமிக்கும் ஜெயலிலிதாவைக் குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? 

ஜெயலிலிதா எவ்வளவோ மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறார் அது தடைபட்டுவிடுமே.... 

ஜெயலிலிதா இல்லாவிட்டால் தமிழகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிறைவேற்றுவதற்கு யார் ஒருவரையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லையே... 
போன்ற சொல்லாடல்கள் தொடர்ந்து வெளிப்பட்டவண்ணமிருந்தன...! 

இவையாவும் அலட்சியப்படுத்தமுடியாதவை என்ற பிரச்சாரமும் எட்டுத்திக்கும் வேகம் பெற்றன. 
கட்டமைக்கப்பட்ட இந்தச்சூழலில் கண்ணுக்குத் தெரிந்த உண்மைகள், யதார்த்தங்கள் காணாமலடிக்கப்பட்டன. 

மேற்படி நான்கு வாதங்கள் குறித்து ஒவ்வொன்றாக அலசுவோம். 
இந்த நாட்டில் பெரிய தொழிலதிபர்கள் பல்லாயிரம்கோடி கடன்பெற்று வங்கியில் திரும்பச் செலுத்தாமால் உள்ளார்கள் என்பதற்காக ஒரு வங்கி மனேஜரிடம் ஒரு திருடன் மிரட்டிப் பணம் பறிக்கும் போது பிடிப்பட்டால் விட்டுவிட நினைப்போமா? அல்லது அந்த திருடனை போலீசில் ஒப்படைக்க நினைப்போமா? 

மற்றொரு உதாரணம் சொல்கிறேன். பக்கத்துவீட்டில் பெரும் நகை, பணம் சமீபத்தில் கொள்ளை போனது. தற்போது உங்கள் வீட்டில் வெறும் ஆயிரம் ரூபாயை அபகரித்து செல்பவனை நீங்கள் அனுமதித்து விடுவீர்களா...? அவன் பிடிப்பட்டால், "தொகை கொஞ்சம் தான் தேவையில்லை அவனைவிட்டு விடுங்கள்" என்பீர்களா? அவனிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்று, அவனை நான்கு நாட்களாவது ஜெயலில் தள்ள நினைப்பீர்கள் தானே! மேலும் ஒரு திருடன் திருந்தாதவரை அவனை சமூகத்தில் நடமாட அனுமதிப்பது ஆபத்தல்லவா.....? 

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை 18ஆண்டுகளுக்கு முன்பு அவர் தவறானவழியில் சேர்த்த ஒரு குறைந்தபட்ச தொகைக்காக பிடிபட்டிருக்கலாம். தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் பின்னும் அவர் அபரிமிதமாக பணம் ஈட்டாத தூய்மையான அரசு நிர்வாகத்தைத் தான் தந்தார் என்று ஒரு போதும் சொல்லமுடியாது. அதுவும் தற்போது அதிமோசமான உச்சபட்ச ஊழல் நிர்வாகத்தையே தமிழகம் கண்டுகொண்டுள்ளது. எனவே இவ்வளவு குறைந்த தொகைக்காக ஜெயலிலிதா தண்டிக்கப்படுவதா? எனக்கேட்பவர்கள் தற்போதைய யதார்த்தங்களை அலட்சியப்படுத்தக்கூடாது. 

மேலும் இந்த வழக்கில் 18 ஆண்டுகள் நீதித்துறைக்கு அவர் பெரும் சங்கடங்களை உருவாக்கி, வழக்கை இழுத்தடிக்க படுமோசமான பித்தலாட்டங்களை தொடர்ந்து அரங்கேற்றியவண்ணமிருந்தார் என்பதை மறந்துவிடக்கூடாது. அத்துடன் ஏற்கனவே கலர்டிவி ஊழல்வழக்கு, டான்சிவழக்கு, டிட்கோவழக்கு, பிளசண்ட் ஸ்டேவழக்கு, தெற்காசிய விளம்பரத்துக்கான வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல், வருமானவரி ஏமாற்று, லண்டனில் சொத்து வாங்கிய வழக்கு போன்றவற்றை அதிகாரபலத்துடன், அபரிமிதமான பணபலத்தால் சட்ட வல்லுநர்களின் துணைகொண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக அக்கரஹார லாபி துணைகொண்டும் நீர்த்துப்போக வைத்த நிதர்சனத்தை புறந்தள்ளலாகாது. 

இவை அனைத்தையும் விட சுதந்திர இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்கு ஆதரவான அதிசக்திவாய்ந்த அழுத்தங்கள் தரப்பட்ட வழக்கு இதுவாகத்தான் இருக்கும் என சட்டவல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட அழுத்தங்களை பொருட்படுத்தாது, ஆசைகாட்டிய நிர்பந்தங்களுக்கு அடிபணியாது, சலனங்களுக்கு சற்றும் இடம்கொடாது அறக்கோட்பாட்டிலிருந்து அடி பிறலாது ஊழலுக்கு எதிரான ஒரு தீர்ப்பை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கியுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு இனிவரக்கூடிய அனைத்து ஊழல் வழக்குகளின் தீர்ப்புகளிலும் மேற்கொள் காட்டப்படக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இந்த தீர்ப்பை திசைமாற்றும் முயற்சிகளும், திட்டிதீர்க்கும் ஆர்ப்பாட்டங்களும் ஜெயலலிதாவை மட்டுமல்ல, கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்குமே ஆதரவானது என்பது தான் உண்மை. 

இன்று ஜெயலலிதாவை காப்பாற்றும் முயற்சி, ஊழல் செய்துள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் நாளை காப்பாற்றி மீட்டெடுப்பதற்கான சுலபமான பாதையை சமைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. 

கருணாநிதிக்கும், சுப்பிரமணியசுவாமிக்கும் பிறர் ஊழலை சுட்டிக்காட்டும் தார்மீகத் தகுதி இல்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த காரணமே ஜெயலிலிதா செய்து கொண்டு போகும் அதீத ஊல்களுக்கு தந்த அங்கீகாரமாகிவிட முடியாது! ஒவ்வொரு ஊழல்வாதியும் தனக்கு எதிரான மற்றொரு ஊழல்வாதியை உதாரணம் காட்டியே தங்கள் பிழைப்பை மாற்றி, மாற்றி நடத்திக்கொண்டு போவதற்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும். கருணாநிதியும், சுப்பிரமணியசுவாமியும் ஊழல்வாதிகள் என்பதால் புறக்கணிக்ப்பட்டதைப் போல ஜெயலிலிதாவையும் மக்கள் புறக்கணிப்பது தானே சரியானது. 

ஜெயலிலாதவின் மக்கள் நலத்திட்டங்கள் என்பவை பிரம்மாண்டப்படுத்தப்பபட்டுவரும் மாயை. இது குறித்த மிக விரிவான ஆழமான புரிதலை உள்ளடக்கிய கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். தமிழகத்தில் சுமார் 7000 டாஸ்மாக் மதுபான கடைகளையும் 4000 மதுபான பார்களையும் அரசாங்க பலத்தில் நடத்தி கொள்ளை இலாபம் ஈட்டமுடிந்த ஜெயலலிதா அரசுக்கு ஏன் 300க்கும் குறைவான அம்மா உணவகங்களை மட்டும்தான் திறக்கமுடிந்தது. இதை மிக சுருக்கமாகச் சொல்வது என்றால் டாஸ்மாக் மதுவின் மூலம் சுமார் 24,000கோடிகளை அள்ளும் அநீதியைச் சமன்செய்யும் பொருட்டே அவர் சில எழும்புத்துண்டுகளை விட்டெறிகிறார். இது குறித்து காந்திய மக்கள் இயக்கம் ஏற்கெனவே விரிவாக தந்துள்ள விபரங்களின் படி ஜெயலலிதா மது மூலம் மக்களிடம் அபகரிப்பதை ஒப்பிடும் போது மக்களுக்கு இலவசமென்றும், மானியம் என்றும் தருவது மிகக்குறைவே என்பது நிருபிக்கப்பட்ட உண்மை! இந்த இலவசங்கள், மானியங்கள் என்பவை மக்கள் உழைப்பை உதாசினப்படுத்தி, உள்ளத்திறனையும் ஊனப்படுத்தும் தந்திரங்கள் தான்! 

ஜெயலிலிதா இல்லாவிட்டால் கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட வெற்றிடத்திற்கான முழுமுதற்குற்றவாளியே ஜெயலிலிதா தான். திறமையாளர்களை, நேர்மையாளர்களை ஒரம்கட்டுவது அல்லது ஒழித்துகட்டுவது, கட்சியையும், ஆட்சியையும் அடிமைகளின் கூடாரமாக மாற்றியது எல்லாம் சாட்சாத் அவர்தானே! 

ஆரம்பம் தொடங்கி இன்று வரை பட்டியலிட்டால் பட்டியல் வெகுநீளமாகும். உதாரணத்திற்கு சில என்றால் க.ஆராசாராம், பண்ருட்டி ராமசந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன், கே.ஏ.கிருஷ்ணசாமி, அரங்கநாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.ஆர், ரகுபதி, திருச்சி, கே.சௌந்திரராஜன், கோவைதம்பி, விஸ்வநாதன், பொன்னையன், முத்துசாமி... என பற்பலர். இது கட்சிக்குள் என்றால், ஆட்சி அதிகாரத்திலும் அவர் புறந்தள்ளிய நேர்மையான அதிகாரிகளின் பட்டியல் மிகப்பெரியது இறையண்பு, உ.சகாயம், உமாசங்கர்.... இப்படி ஏராளம்! 

ஒருவர் தக்கவர், தகுதியில்லாதவர் என்பது அவர் விட்டுச்செல்லும் எச்சத்தாற் உணர்ப்படும் என்றார் வள்ளுவர். ஜெயலிலிதாவின் எச்சங்கள் எனப்படும் இரண்டாம் கட்டத்தலைவர்களின் தகுதியின்மைய என்பது உண்மையில் அவர்கள் சம்பந்தப்பட்டதல்ல, அது ஜெயலிலிதாவின் தகுதியை உணர்ந்துகொள்வதற்கான முக்கிய அடையாளமாகும். சசிகலா போன்ற மன்னார்குடி குடும்ப வகையறாக்களைக் கொண்டே நாம் ஜெயலிலிதாவை மதிப்பிடவேண்டும். இன்றைய ஜெயலிலதாவின் வீழ்ச்சிக்கு வித்திட்ட அவரது கூட நட்பு கூட்டத்தின் மீதும், அந்த கூட்டத்தின் மீதான தன் நாட்டத்தை இன்று வரை விலக்ககொள்ள முடியாத ஜெயலலிதாவின் மீதும் மக்களுக்கு இயல்பாக எழும் கோபத்தை மடைமாற்றவே கருணாநிதியும், சுப்பிரமணியசுவாமியும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 

"தீதும் நன்றும் பிறர் தரவாரா" 
என்பது அவரவரின் அனுபவங்கள் கற்பிக்கும் பாடமாகும். 

ஊழலுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளை சமீபகாலமாக வெளிபடுத்தி வந்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு விரைந்து ஜாமீன் வழங்கியுள்ளது. 

ஜாமினில் வெளிவந்துள்ள ஜெயலிதாவை ஜெயா டிவி 'மக்கள் முதல்வர்' என்று புதுமையாக அழைத்தது. 'மக்கள் முதல்வரின் ஆணைக்கேற்ப....' என்றும் செய்திவாசிக்கிறது. 

ஆக, குற்றவழக்கில் தண்டனை பெற்று தற்காலிக நிவாரணம் பெற்றுள்ள ஜெயலிலதா தான் தமிழகத்தின் நிஜ முதல்வர். சட்டத்தின் பார்வைக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தெரிவார். ஆனால் சமானியனுக்கும் புரியும் போயஸ்தோட்டமே உண்மையான தலைமையைக் கொண்ட செயலகம் என்பது! இது அனைவரும் அறிய அரங்கேறும் நாடகம்! 

தமிழக மக்கள் தங்களை பிறர் ஏமாற்ற அனுமதித்தது என்பது கருணாநிதியின் காலகட்டம். 
தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ள தயாராக்கப்பட்டுள்ளது என்பதே ஜெயலிலிதாவின் காலக்கட்டம். 

வெளிதாக்குதலில் வீழ்ந்தவர்களை மீட்டெடுப்பதைக் காட்டிலும் உள் தாக்குதலால் சுயமிழந்து நிற்பவர்களை மீட்டெடுப்பது என்பது மிக மிக சவால் நிறைந்ததாகும்! 

ஏனெனில், தாங்கள் வீழ்ந்துள்ளோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது ஆகப்பெரிய சவாலாகும்! வெளியிலுள்ள ஒரு எதிரியை அடையாளப்படுத்தி ஒருவனை வீறுகொள்ளவைப்பது சுலபம்.ஆனால் தனக்குள் இருக்கும் எதிரயை உணர்த்தி மீட்டெடுப்பது தான் மிகவும் கஷ்டம். இந்த தாக்கம் நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் எல்லையில்லா பாதிப்புகளை தந்துகொண்டிருக்கும்! 

பாக்ஸ் மேட்டர் 

ஊடகங்களின் பாரபட்சம் ஜெயலலிதா கைதில் நிகழ்ந்த எதிர்வினைகளுக்கு தமிழக ஊடகங்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. 

இந்த வழக்கு விசாரணை பற்றிய தகவல்களை தொடர்ந்து ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவந்தன. வழக்கு விசாரணையில் ஜெயலலிதா தரப்பில் சொல்லப்பட்ட பொய்கள், பித்தலாட்டங்கள், இழுத்தடிப்புகள், தடங்கல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அத்துடன் தற்போதைய ஜெயலலிதாவின் ஊழல் மலிந்த ஆட்சி செயல்பாடுகள் எண்ணற்றவற்றை மக்களின் பார்வைக்கு கொண்டுவராமல் ஊடகங்கள் கவனமாக மறைத்துவருகின்றன. 

ஆனால், அதே சமயம் இரண்டாம் அலைக்காற்றை ஊழல் தொடர்பான செய்திகளை பிரசுரிப்பதிலும், சொல்வதிலும் மிக சிறப்புடன் செயலாற்றுகின்றன. 
கருணாநிதி, ஜெயலலிதா தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதில் ஊடகங்களின் தொடர்ச்சியான பாரபட்ச செயல்பாடுகள் ஒரு மிகப்பெரிய சமூக ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியதாகும். இந்தச்சூழல்கள் நமக்கு பெரியாரியலின் பெரு முக்கியத்துவத்தை ஆழமாக உணர்த்துகின்றன.

No comments: