Wednesday, September 3, 2014

மோடியின் அமைச்சரவை உணர்த்தும் செய்தி என்ன?

-சாவித்திரிகண்ணன் 

அதிக எண்ணிக்கையை தவிர்த்திருப்பது, பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தந்திருப்பது என்ற வகையில் நரேந்திரமோடியின் புதிய அமைச்சரவைக்கு ஒரு வசீகரம் கிடைத்துள்ளது. 

அதே சமயம் அமைச்சரவை என்பது எண்ணிக்கை சார்ந்தோ, பிரதிநிதித்துவம் சார்ந்தோ மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. 

பொறுப்பு ஏற்றுள்ளளவர்களின் நேர்மை, திறமை, கடமை உணர்வு, சமூக அக்கறை சார்ந்ததுமாகும். 

அப்படியானவர்களுக்கு பா.ஜ.கவில் ஒன்றும் பஞ்சம் வந்துவிடவில்லை. இதற்கு வாஜ்பாய் அமைச்சரவையே அத்தாட்சி. 

மோடியின் அமைச்சரவையில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இளையவர்களின் பங்கேற்பு நல்லது தான்! 

ஆனால், தகுதி இல்லாதவர்களின் பங்கேற்பு ஆரோக்கியமானதல்ல. 

உயர்கல்வித்துறையை நிர்வகிக்க ஸ்மிருதி இராணி' என்ற சினிமா, டி.வி.சீரியல் பிரபலத்தை தவிர வேறு யாருமே கிடையாதா? 

சமூக ஆர்வலரும், பெண் உரிமைப் போராளியுமான மதுகிஷ்வார் எழுப்பியுள்ள கேள்விகள் கவனத்திற்குரியவை...! 

கல்லூரிகள், ஐ.ஐ.டிகள், பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், துணைவேந்தர்கள் போன்றவற்றை எதிர்க்கொள்ளவும், பலதரப்பட்ட மாற்று கருத்துகளை உள்வாங்கி நடைமுறைக்குகந்த முடிவு எடுக்கவுமான ஆளுமை வேண்டாமா? அத்தகு திறமையாளரா ஸ்மிருதி இராணி? 

இது நாள் வரையிலான அவரது கலைத்துறை பங்களிப்பில் இருந்து கூட நாம் பெரிதாக ஒன்றும் கண்டடைய முடியவில்லையே? 

அகடமிக் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் அலட்சியப்படுத்த வேண்டியவர்கள் என்ற நிலைபாட்டிலும் நமக்கு உடன்பாடில்லை. 

அகடமிக் தகுதியில்லாத அநேக சமூக சீர்த்திருத்தவாதிகளை, எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் பட்டியல் வெகு நீளமானது. 

ஆனால், அவர்கள் சுயம்புவாக வளர்ந்தவர்கள். எந்த தனிநபர் தந்த சலுகைகளாலோ, பதவிகளாலோ அடையாளம் காணப்பட்டவர்களல்ல. மாறாக, தங்களின் சுய சிந்தனைகளால், ஆற்றல்களால் அகிலத்தையே அதிரவைத்தவர்கள். ஸ்மிருதி இராணியை அவர்களோடு ஒப்பிட்டு அப் பெரியோர்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. 

மிகச்சதாரணமான நடைமுறைக்குகந்த அறிவு சார்ந்து விவாதிப்போம். 

பள்ளிக்கூடமே போகாதவருக்கு வாத்தியார் வேலை இல்லை. கல்லூரி பக்கமே போகாதவர் பிரின்ஸ்பால் ஆக முடியாது. பல்கலைக்கழகமென்றால் என்னவென்று தெரியாதவர் துணைவேந்தராக முடியாது. 

ஆனால், எந்தத் தகுதியுமில்லாவிட்டாலும் கட்சித்தலைமை ஆதரவை பெறுவதாலேயே, ஒருவர் கல்வி மந்திரியாக முடியுமென்றால், அது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகாதா? 

இந்தப் பொறுப்பை ஏற்க ஆளில்லாமல் போய்விட்டதா அக்கட்சியில்? அதுவும் அமேதி தொகுதியில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவரை கொண்டுவந்து அரியணையில் ஏற்றிவைக்கும் அளவிற்கு அதிதிறமைசாலியா? 

முரளிமனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த்சின்ஹா அருண்ஷோரி, அத்வானி.... போன்ற பல திறமைசாலிகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளனரே! 

தகுதியானவர்களை சரியான முறையில் பயன்படுத்தும் பக்குவம் பெற்ற ஆளுமையே தலைமைப் பண்பாகும். பெருந்தலைவர் காமராஜ் பொற்கால ஆட்சி தமிழகத்திற்கு தர காரணமானவர்கள் கட்சியில் அவருக்கு எதிரணியில் இருந்த சி.சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றவர்களே. காமராஜ் ஆட்சியின் சாதனைகளை சாத்தியப்படுத்தியவர்கள் இவர்களே! 

தன்னை மையப்படுத்தி சிந்திக்காமல் நாட்டு நலனை, வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிந்தித்த தலைவர்கள், மாற்று கருத்தாளர்களை மதித்து அங்கிகரித்தார்கள் என்பதே வரலாறு. 

நேருவின் அமைச்சரவையில் அவரது ஆளுமைக்கே சவால்விடக்கூடிய மாற்றுக்ககருத்தாளர்கள் அம்பேத்கார், ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஷண்முகம் செட்டியார் பொன்றோர் இடம்பெற்றது தானே இந்திய ஜனநாயகத்தை செழுமைப்படுத்தியது. 

ஆனால், தன்னைத்தானே மறைத்து சமூகத்திற்கு பொய்தோற்றம் தரும் வண்ணம் தன் கல்வித் தகுதி பற்றி ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு விதமாக பேசியவராயிற்றே ஸ்மிருதி ராணி. 
இப்படிபட்டவர்களை அமைச்சராக்கினால், 'பொய்சொல்வதுதான் அமைச்சராவதற்கான தகுதி' என புரிந்து கொள்ளப்படுமே! 

இது மட்டுமின்றி, ஸ்மிருதி இராணியின் உண்மையான கல்விதகுதி சான்றிதழ் வெளிவருவதற்கு காரணமான தில்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது எதை உணர்த்துகிறது...? இது போன்ற தருணத்தில் தார்மீகக்குரல் எழுப்பும் தகுதியை கடந்த கால கல்விதுதறை செயல்பாடுகளால் காங்கிரஸ் இழந்துவிட்டது..... என்பது உண்மை தான்! 

ஆனால், அநீதிக்கு மாற்றாக நீதியை நிலைநாட்டவே மக்கள் தீர்பளித்துள்ளனரேயன்றி, மீண்டும் அநீதிகளை அரங்கேற்றுவதற்கு அல்லவே!

(May2014)

No comments: