Wednesday, September 3, 2014

ஜல்லிகட்டு காளையா? சல்லிக்காசு காளையா...?

-சாவித்திரிகண்ணன் 

ஜல்லிகட்டு சுப்ரீம்கோர்ட் தடைவிதித்தாலும் விதித்தது..., 
தமிழர்களுக்கு இது நாள் வரை இல்லாத ரோஷம் எப்படி வந்ததோ தெரியவில்லை...! 

"தமிழர்களின் வீரவிளையாட்டுத் தடைவிதிப்பதா...?" 
"மறத்தமிழன் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்குமா...?" 
"இது தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால்..." என ஆளாளுக்கும் வானத்திற்கும், பூமிக்குமாக எம்பிக்குதிக்கிறார்கள்....! 

இப்படி தமிழன், வீரம், தன்மானம், இனஉணர்வு... பேசிட்டா மூச்.... தமிழ்நாட்ல அதுக்கு மாற்று கருத்து சொல்றதுக்கே யாருக்கும் தைரியம் வராது பார்த்துக்கிடுங்க...! ஆனா, நம்ம மனசு கேட்பனாங்குது..! 

எது வீரம்...? 
சிவனேன்னு புல்லையும், புண்ணாக்கையும் தின்னுட்டுக் கெடக்கிற வாயில்ல அந்த சாதுவான ஜீவனிடம் கூட்டம் கூட்டமா சேர்ந்து விழுந்து மோதறது தான் வீரமா...? 
அது யாருகிட்டேயாவது வந்து, "வாங்கடா மோதி பார்க்கலாம்னு கூப்பிட்டதா?" 
வாடிவாசல்ல இருந்து அத ஜல்லிகட்டு மைதானத்திற்கு அனுப்புவதற்குள்ள அது, "ம் கூம் மாட்டேன்.. என்னை விட்டுடுங்க" அப்படின்னு முரண்டு பிடிக்கிறதா பாக்குற யாருக்குமே "ஐயோ பாவம்... பாவி மக்கா அத விட்டுட மாட்டீங்களா? அப்படின்னு தான் கேட்கத் தோன்றும்...! 

ஆனா, மாட்டுவாலை முறுக்கிவிட்டு, அதவிடாப்பிடியா நெறித்து தள்ளி வாடிவாசலுக்கு தள்ளி விடுவீக.. அதுல சில மாடுகள் வெளியில வந்ததுமே நிக்குற கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஓட்டம் கின்னிடும் பாருங்க... 

இன்னும் சில மாடுகளோ, 'எதுக்காக இந்த பாவி மக்கா நம்மள புடிச்சு இப்படி தள்ளிவிட்டாய்ங்க.. அப்படின்னு புரிபடாம மலங்க மலங்க முழிச்சு நிக்குமே.. அப்ப அது தான் சாக்குன்னு ஆளாளுக்கு அதோட கொம்ப பிடிக்கிறதும், திமிலை பிடிக்கிறதும், எகிறி மேல விழிகிறதும்னு பாடா படுத்துவாக.. உடனே அது ஐய்யோ சாமி வேண்டாம்பா இந்த இம்சைன்னு தட்டுகெட்ட மாடா தறிகெட்டு ஓடுமே.. அப்ப யாராவது ஒருத்தன் அதோட திமிலையும், கொம்பையும் பிடிச்சா மாதிரி ஒரு முப்பது நாப்பதடிதூரம் கூடவே போவான் ஒடனே அவஞ்ஜெயிச்சதா அறவிக்கப்படும்.... இதுல என்ன வீரமிருக்கு..?

 சொளை சொளையா லஞ்சம் வாங்கின அரசியல்வாதிகள் ஓட்டுகேட்டு வர்றப்ப ஐநூறு, ஆயிரம்னு கொடுத்து ஓட்டை விலை பேசும் போது, 'டே படுவா எங்க பணத்தை கொள்ளையடிச்சு எங்க கிட்டயே தரவந்தியான்னு வராத கோபம்...ரோஷம்...வீரம்... 
தேர்தல் வந்தா மட்டுமே மக்கள் ஞாபகம் வந்து 'ஷோ' காட்டிவிட்டுப் போடும் தலைவர்களிடம் வாரத ரோஷம்... 

இலவசமாக ஒத்த ரூபா சாக்லெட் கிடைத்தாலும் கூட, அதை முட்டி மோதி உருண்டு பிரண்டு, பிச்சுப் பிடுங்கி முக்கு விடைக்க, முழிகள் தெறிக்க வாங்கும் போது வராத தன்மானம்... 

இப்படி வீரவசனங்கள் பேசும் போது மட்டும் தமிழனுக்கு விறைச்சிகிட்டு வந்துடும் போல...! 

ஜல்லிகட்டு என்பது தமிழனின், தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளமாம்! 

சில முரட்டுக் காளைகள், "டேய் வேண்டாங்கடா, விட்டுருங்க... என்ன எம் போக்குல போகவிடுங்கன்னு நின்னு நிதானிச்சு மொறைக்கும்..." 

அப்பத்தான் நம்மாளுங்க ஓஹோ முறைக்கிறியா... சரி வா பாத்திடுவோம்னு எகிறி பாய்வான்...." 
இதுல, சிலபேரு குடல் கிழிஞ்சு குத்துயிரும் குலை உயிருமா சாவான், 
இன்னும் சில பேருக்கு தொடைகிழியும்... 
இன்னும் சில பேருக்கு படக்கூடாத இடத்துல பட்டுடும்... 
அப்புறம் அவன் கல்யாணத்திற்கே தகுதியில்லாதவானகப் போறதும் உண்டு. 

கதையில, சினிமாவுல வர்றாப்ல இன்னைக்கு எந்தப் பொண்ணும்
"நீ முதல்ல இந்த மாட்டை அடக்கி காட்டு. அப்பதான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு" ஒத்த கால்ல நிக்குறதுமில்ல..... 

'இந்தக்காளைய அடக்குகிறவனுக்குத்தான் எம்பொண்ணுன்னு' எந்த தகப்பனும் கூறுவாறில்லாம அறிவிக்கிறதுமில்ல... 
பெறகு எதுக்கு இந்த விவேகமில்லாத வெத்துவீரம்... 

இதுல நானும் காளைய அடக்க நின்னேனாக்கும்னு ஒப்புக்குச் சப்பாக போய் நிற்பவயங்களும் உண்டு. 
இந்த அப்பாவிகளின் நிலை சில நேரங்களில் அதோ கதியாகிப் போவதுண்டு...மேலும் இதில் பார்வையாளர்காளக நின்னு பலியானவங்களும், காயம்பட்டவர்களும் கணக்கிடலங்காது...! 

இது மட்டுமில்ல, சல்லிக்காசு பொறாத போலி ஜாதிப்பெருமை, குலப்பெருமை, குதர்க்க மனோபாவங்கல்லாம் இந்த ஜல்லிகட்டு சமாச்சாரத்துல பொதைஞ்சி கெடக்கு...! 

இப்படி நாலுப்பேரக்குத்தி கிழிச்சி, இரண்டு பேரை பலிவாங்கிருச்சுன்னா அந்த கொலைக்காரக் காளைக்கு கெடைக்குற மரியாதையே தனிதான்! 

மாலை என்ன..! மரியாதை என்ன..! ஆரத்திகள் என்ன..! 

மனுஷன மனிஷன் குத்திக் கிழிச்சாலோ, கொலை பண்ணினாலோ தான் குற்றம். அதுக்கு ஜெயிலு, தண்டனை எல்லாம்...! 

ஆனா, மனுஷன் மாட்டை ஏவிக்கொன்னா அதுக்கு பேரு பா....ரம்பரிய விளையாட்டு...! 

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் 'பாரத்தை யார் சுமப்பா...? ன்னு யாரும் கேட்டு தொலைச்சிடக்கூடாது...! 

அப்படி கேட்பவன் கேணைப்பயல்! அவன் தமிழர்களின் பாரம்பரியப் பெருமை தெரியாத பண்ணாடை! அரை லூசு... இன்னும் என்னவெல்லாம்மாகவோ வெல்லாம் பார்க்கப்படுவான்! என்னமோ நமக்கு ஈரமனசு கேட்கமாட்டேங்குது...! 

இது மனுஷங்க படறபாடுன்னா... தோத்துப் போன காளைகள் அதாவது அடக்கப்பட்டுவிட்டாதாக கருதப்படுகிற காளைகள் அந்தந்த குடும்பங்களல் நடத்தப்படற விதமே ஒரு தினுசாத்தான இருக்கும் பாருங்க... 

அந்தந்த வீட்டுபெண்டு பிள்ளைக மொதக் கொண்டு அதை ஏசியும் பேசியும் தூற்றுவாக.. 
"தண்டக் கருமாந்திரம்.. ஒனைப்போயி இத்தனை நாளா படாதபாடு பட்டு செலவழிச்சு கவனிச்சேன் பாரு..ன்னு" புறக்கணிக்கப்படும்! 

அது பாவம் அதுக்கு என்ன தெரியும்...! அதுக்கு இத்தனை நாளா தனக்கு கிடைச்ச அன்பு, பரிவு, அக்கரைக்கொல்லாம் என்னா அர்த்தம்னு தெரியாது. 

இப்ப ஏதோ கொலைக்குற்றவாளி போல உதாசினப்படுத்துவதற்கான அர்த்தமும் தெரியாது...! 

அதாவது, தான் கொலை செய்யாததைத் தான், தன் எஜமான் வீட்டில குற்றமாக கருதுறாங்கன்னு அந்த சாதுவான ஜீவனுக்கு எப்படித்தெரியும்...? 
இதுல சில காளைகள் மன உளைச்சலுக்களாக்கி பெறகு புண்ணாக்கு, புல்லு தண்ணி எதிலும் ஆர்வம்காட்டாமல் மெலிஞ்சு துரும்பாகி வெகுவிரைவில் மாட்டுச்சந்தையில் கறிக்காக அடிமாட்டு விலைக்குப் போவதுமுண்டு. 

காலமெல்லாம் தன் குடும்பத்துக்கு பாலை கொடுத்து ஜீவனத்துக்கும் காரணமாயிருந்த பசுக்களையே பால் வற்றியதும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு தோளில துண்டைப்போட்டுகிட்டு வருகிற மனுஷப் பராம்பரியம் மல்லவா நம் பாரம்பரியம்...! 

இதுல வீரத்தை காட்டுவதற்குன்னு ஊட்டச்சத்துகள் தந்து வளர்க்கப்பட்ட காளை சோரம் போனபிறகு எப்படி வளர்ப்பான்மனுஷப்பய...? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற வள்ளலார் மனசு எல்லாருக்கும் இருந்தா அப்புறம் வாடிப்பட்டி மாட்டுச்சந்தைக்கு வேலையே இல்லை....! 

இப்பக்கூட பாருங்க, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடை விசிச்சதுன்ன உடனே வாடிப்பட்டி மாட்டுச்சந்தையிலே ஜே....ஜேன்னு மாடுகள் குவிஞ்சுருச்சு.. முன்ன வீரக்காளையாக பாரக்கப்பட்டு ஐம்பதாயிரம், ஒரு லட்சம்னு விலைப்பேசப்பட்ட மாடுகளெல்லாம் இன்னைக்கு எடைமதிப்பிடப்பட்டு ஆறாயிரம், ஏழாயிரம் ரூபாய்க்கு விலையோயிருக்கு...! 

உழவுக்கு நீர் இறைத்து, ஏர் இழுத்து பாடுபட்டு தன் உணவுக்கு காரணமாயிருக்கும் காளைகளையே கூட காலப்போக்கில் அதன் உடல்பலம் குறையும் போது அடிமாட்டு விலைக்கு விற்றுச்செல்லும் நன்றி கெட்ட மனுஷஜாதி நாம்! இதில் உழைக்கத் தெரியாத ஜல்லிக்கட்டு காளையென்றாலும் சல்லிக்காசுக்காவது உதவட்டுமேன்னு தான நினைக்க தோணுது. 

அது மாடப்பொறந்தது குத்தம். 

நாம மனுஷனாப் பொறந்தது அதவிட மாபாதகம்!

(May-2014)

No comments: