Thursday, September 18, 2014

தி.மு.க வீழ்த்தப்பட்டுவிட்டதா?

-சாவித்திரிகண்ணன் 

திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்த்தப்பட்டுவிட்டதா? இது அக்கட்சிக்கு வரலாறு காணாத தோல்வி" "தலித் இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்களை கூட்டணியில் சேர்த்தும் கூட இமாலய தோல்வியை கண்டுள்ளதே..." "மு.க.ஸ்டாலின் தலைமையை மக்கள் ஏற்கவில்லை... இனி தி.மு.கவின் எதிர்காலம் கேள்விக்குறி தான்..." என பலவாறான விமர்சனங்கள், அலசல்கள் வெளிபட்டவண்ணமுள்ளன! மேற்கூறப்பட்ட சொல்லாடல்களில் ஓரளவு உண்மைகள் இருக்கலாம்! ஆனால், முழு உண்மையில்லை. தமிழக மண்ணை, தமிழ்ச் சமுகத்தை, மக்களின் அரசியல் அணுகுமுறைகளை உணரமுடிந்தவர்கள் ஒரு உண்மையை மறுக்க முடியாது. தமிழகத்தில் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், மத்தியிலும் திராவிட இயக்கம் தோன்றி, நிலை பெறுவதற்கான சமூக காரணங்கள், தேவைகள் என்னென்ன இருந்தனவோ அவை தொடர்ந்து கொண்டிருக்கும் வரை தி.மு.க போன்ற ஒரு அரசியல் இயக்கத்தின் இருப்பும் தவிர்க்க முடியாததாகவே கணிசமான மக்களால் உணரப்படும். அப்படியானால், அன்றைக்கு நிலவியதைப் போலவா இன்னும் பிராமண மேலாதிக்கம் நிலவுகிறது..? இன்றைக்கென்ன தீண்டாமை பிரச்சனை இருக்கிறது...? பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும், மூடநம்பிக்கை ஒழிப்புக்கும் இன்றென்ன வேலை...? என்று அடுக்கடுக்காக பல கேள்விகள் வைக்கப்படலாம்? எங்கே இல்லை பிராமண மேலாதிக்கம்...? ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இல்லையா? தமிழக கோயில்களில் பிராமண அர்ச்சகர்களைத் தவிர தீவிர சைவ, வைணவ தமிழ்ப்பற்றாளர்களுக்கும், தமிழ் மந்திரங்களுக்கும் இன்றேனும் இடம் கிடைக்கிறதா? ஜனநாயகத்தின் உன்னத உயர்ந்த பீடங்களாக நீதித்துறை, உயர் கல்வி துறை,நிர்வாகத்துறை என எல்லாவற்றிலுமே பிராமணலாபி பிண்ணிப் பிணைந்தருப்பதை மறுக்க முடியுமா? உடனே சில பேர் இத்துறைகளிலுள்ள பிராமணர்களின் எண்ணிக்கை சார்ந்த புள்ளி விபரங்களை பட்டியலிட்டு வானத்திற்கும், பூமிக்குமாக எகிறக்கூடாது... 'பிராமணலாபி' என்பது எண்ணிக்கை சார்ந்ததல்ல, எண்ணிங்களின் பலத்தால் கட்டமைக்கப்பட்டது. எந்த ஒன்றின் ஆதிகத்திற்கும் எதிர்வினை சமூகத்தில் இருந்தே தீரும் என்பதற்கான உதாரணங்கள் தான் பெரியாரிய இயக்கங்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற சமூக இயக்கங்களும் பிராமணர்களின் தீவிர இனப்பற்று, சுயநலம், உயர்ஜாதி மனோபாவம் அனைத்து நல்ல அம்சங்களையும் மற்றவர்களோடு பங்கிட்டுக் கொள்ளாமல் தாங்களே ஆக்கிரமிக்கும் போக்கு... போன்றவை சமூகத்தில் தொடருகின்ற வரை ஏதேனும் ஒரு திராவிட இயக்கத்தின் தேவை சமூகத்தின் நிர்பந்திமாகிவிடும்! பிராமணமர்களில் முற்போக்குச் சிந்தனையாளர்கள், சுயநலம் துறந்தவர்கள், பரோபகாரிகள், அப்பாவி ஏழைகள்... ஏன் அதி தீவிர புரட்சியாளர்களே கூட இருக்கத்தான் செய்கிறார்கள்...! ஆனால், பாவம் அவர்களே அந்த சமூகத்தின் பெரும்பான்மையினாரல் விலக்கி வைக்கப்பட்டவர்களாகவே வாழ வேண்டியுள்ளது. ஏன் தலித் இயக்கங்களும், இஸ்லாமிய இயக்கங்களும் தி.மு.க.வோடு ஓரணியில் நின்றன...! சென்ற தேர்தலில் அ.தி.மு.கவோடு இருந்த இந்த இயக்கங்களால் எதனால் தொடர முடியவில்லை? பொதுவுடமை இயக்கங்கள் கூட அ.தி.மு.க அணியில் அங்கம் வகிக்க முடியாத சூழலின் தாத்பாரியம் என்ன? இனி தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் யாரோடு கைகோர்க்க முடியும்? அனைத்து இந்துத்துவ இயக்கங்களும், இந்துத்துவ அநுதாபிகளும் அ.தி.மு.க தலைமையை ஆராதித்தப்பதற்கான காரணங்கள் என்ன? இந்த அம்சங்களோடெல்லாம் கலந்திருக்கும் சமூக காரணிகளே தி.மு.கவை உயிர்ப்போடு வாழ வைக்கப் போதுமானதாகும். இவை மட்டுமின்றி தற்போதைய தமிழக அரசு செயல்படும்விதமும் நோக்கமும் அதன் பிராமணிய சிந்தனைகளை அப்பட்டமாக நிலை நாட்டுகிறது என்பதற்கு சில உதாரணங்கள். சமச்சீர் கல்வியை சமாதியாக்க துடித்தது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகுவதற்கு தி.மு.க ஆட்சி செய்த முயற்சிகளை சீரழித்தது செம்மொழி நூலகத்தை சீரழிக்கவைத்தது சிதம்பரம் கோயிலை தில்லை தீட்ஷிதர்களுக்கு தாரை வார்த்தது இந்துதுவ சக்திகளோடு இணக்கம் பாராட்டுவது அடிமை கலாச்சாரத்தை அடிமட்ட தொண்டன் தொடங்கி அமைச்சர்கள் வரை ஸ்தாபித்தது கல்விகோயிலாம் அண்ணா நூலகத்தை கருவருக்க துடித்தது தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றியது ஆட்சி தலைமை குறித்த அச்ச உணர்வை அனைத்து மட்டத்திலும் விதைப்பது சொத்து குவிப்பு வழக்கில் வரலாறு காணாத வாய்தாக்கள் பெற்று, நீதி துறையில் 'லாபி' செய்வது இதையெல்லாம் எதிரத்து போராட இன்றைய தினம் தி.மு.க போன்ற ஒரு இயக்கத்தின் தேவை தமிழர்களுக்கு இன்றியமையாததாகிறது. அதே சமயம் தமிழர்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளை எந்த அளவுக்கு தி.மு.க கடந்த காலங்களில் நிறைவேற்றியுள்ளது? நிறைவேற்றித் தவறியுள்ளது என்பதை நாம் கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், தி.மு.க வை முற்றிலும் நிராகரிக்க முடியாது. ஏனெனில், இன்றைக்கு எந்த ஒரு அரசியல் இயக்கமும் ஜீவித்திருப்பதற்கு அதன் எதிர்ப்பு அரசியலே அடித்தளமாயுள்ளது. அந்த வகையில் தி.மு.கவின் தவறுகளே அ.தி.மு.கவை வாழவைக்கிறது! 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்த போது இரு அணிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 23.43% இது, இன்றைய வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் அதிகமே! தி.மு.கவின் குடும்ப அரசியல், உள்கட்சிபூசல்கள் போன்றவை அந்த இயக்கத்தை கணிசமாக பலம் இழக்க வைத்துள்ளது உண்மை எனினும், தற்போதைய ஆட்சித்தலைமை, அடிமட்டத் தொண்டன் தொடங்கி அமைச்சர்கள் வரை ஸ்தாபித்துள்ள அடிமை கலாச்சாரம், சமூகத்தின் சகல தளத்திலும் ஆட்சித் தலைமை குறித்த அச்ச உணர்வை விதைத்திருக்கும் சர்வாதிகார போக்குகள் போன்றவை தி.மு.கவை அதன் பலஹீனங்களைக் கடந்து பலப்படுத்தக் கூடியதாகும். தி.மு.க வீழ்ந்து மண்ணோடு மண்ணாக வேண்டும் எனில், அதை வாழவைக்கும் சமூகக்காரணிகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக சமாதியாக்கப்படவேண்டும். அல்லது தி.மு.கவைக் காட்டிலும் இந்த சமூகதேவைகளுக்கு வடிகாலாக பார்க்கப்படும் இன்னொரு பலமான இயக்கம் கண்டறியப்படவேண்டும்.

No comments: