Wednesday, September 3, 2014

370வது சட்டமும், சர்ச்சைகளும்

 -சாவித்திரிகண்ணன் 

இயற்கையின் சாம்ராஜ்ஜியம் கோலாச்சும் எழில்மிகு ஜம்மு காஷ்மீர் மாநிலம் தற்போது இன்னல்களின் தாயகமாகியுள்ளது. 

பட்டாசு வெடிப்பது போல அடிக்கடி வெடிக்கும் நிஜ துப்பாக்கிசத்தங்கள்... 

எங்கெங்கும் காணினும் நீக்க மற நிறைந்திருக்கும் ராணுவ ஜவான்கள்.. 

கேள்விவரைமுறையற்ற கைதுகள், விசாரணைகள், சித்தரவதைக் கூடங்கள்.. 
இவை தான் நாம் இந்தியாவின் அங்கமாக நம்பிக்கொண்டிருக்கும் காஷ்மீர் மாநிலத்தின் காட்சிகள்! 
இன்றைய பொழுது எப்படியோ தெரியாது.... 

நாளைக்கும் இங்கே தான் இருப்போமா என்பதில் உத்திரவாதமில்லை... 
வெளியே சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லை... 
ராணுவத்தினரின் சந்தேகப்பார்வைகள் துளைத்தெடுக்க, 
சந்தோஷத்தை தொலைத்திருக்கும் இந்த காஷ்மீரிகள் அங்கே பிறந்தார்கள் என்பதைத்தவிர வேறென்ன தவறு செய்தனர்....? 

"அடிப்படை உரிமைக்களுக்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவனிடம் தான் இங்கே சில அரசியல்வாதிகள், "உனக்கேன் விஷேச அந்தஸ்த்து?" என்கிறார்கள்! 

விஷேஷ அந்தஸ்த்தாக பார்க்கப்பட்ட விஷயம் தான் வில்லங்கமாக அவர்களின் இன்று விஷேஷமான வேதனைகளுக்கு காரணமாயிற்று. 
உண்மையில் காஷ்மீர் பிரச்சினை தான் என்ன? 

அது, இந்தியாவின் தலைப்பாகையா? அல்லது தலைவலியா? 
இவற்றை தெரிந்துகொள்ள சில வரலாற்று யதார்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டும். 

இந்தியா - பாகிஸ்தான் என பிரிவினை ஏற்பட்ட போது இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி இந்தியாவாகும் என்றும், முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதி பாகிஸ்தான் என்பதுமாக முடிவானது. 

அதன்படி அன்றைய தினம் சுமார் 80% இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதி என்பதால் அது பாகிஸ்தான் வசம் வந்துவிடும் என்று பாகிஸ்தானியர்கள் நம்பினார்கள். 

ஆனால், அப்போது அதை ஆட்சி செய்த ராஜாவான ஹரிசிங் இந்து என்பதாலும், அதிகாரவர்க்கம் இந்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்துவிடும் என்பது இந்திய ஆட்சியாளர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. 

காஷ்மீர் ராஜா ஹரிசிங் இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் அவருக்கு தந்த வாக்குறுதிகள் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றவே பாகிஸ்தான் பக்கம் சற்றே சாய்ந்தார். 

ஆனால், காஷ்மீர் வாழ் முஸ்லீம்கள் பாகிஸ்தான் பக்கம் செல்ல விரும்பவில்லை. ஏனெனில், கலாச்சார ரீதியாகவும், ஆன்மீக வழிமுறைகளிலும் அவர்கள் பாகிஸ்தானிய முஸ்லீம்களிடமிருந்து மேம்பட்டவர்களாகத் தங்களைக் கருதினார்கள். அப்போது காஷ்மீர் மக்கள் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவும் பாகிஸ்தான் பக்கம் செல்வதை விரும்பவில்லை. அதை விட ஷேக் அப்துல்லாவும், காஷ்மீர் முஸ்லிம்களும் மதம் எனும் சிப்பிக்குள் தங்களை அடைத்துக் கொள்ளமல் மதச்சார்ப்பற்றவர்களாக இந்துக்கள், புத்தபிட்சுகள், சீக்கியர்கள் உள்ளிட்டோர்களோடு இணைந்த ஒரு தேசத்தை காணவே பெரிதும் விரும்பினார். 

காஷ்மீர் என்பது இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழும் காஷ்மீரை மட்டுமின்றி, இந்துக்கள் கணிசமாக வாழும் ஜம்முவையும், புத்தமதத்தினர் மற்றும் சீக்கியர்கள் வாழும் லடாக் பகுதியையும் உள்ளடக்கியது. 

ஜம்முவில் உள்ள இந்துக்களும், இஸ்லாமியர்களோடு இணக்கமாகவே இருந்தனர். புத்தமதத்தினர் எந்த பிரச்சினையும் செய்யாதவர்கள். இந்தச்சூழுநிலைகள் ராஜாவை பாகிஸ்தான் பக்கம் போகவிடாமல் தடுத்தது. ராஜாவின் கீழ் இருந்த இந்து அதிகார வர்க்கமோ இந்தியாவுடன் இணைவதில் விருப்பம் காட்டியது. 

இதனால், 'கனியும் என்று காத்திருந்தால் காஷ்மீர் கைநழுவிப்போய்விடும் என பதற்றமடைந்த பாகிஸ்தான் பழங்குடியின படையுடன் அதிரடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இநத்பப்டை காஷ்மீரில் கண்டதை எல்லாம் சூறையாடியது. இஸ்லாமிய, சீக்கியப் பெண்களை ஈவிரக்கமில்லாமல் கறிபழித்தது. 

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் தான் காஷ்மீரை காப்பாற்ற முடியும் என்று முடிவுக்கு வந்த ராஜாஹரிசிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டு இந்தியப்படைகள் உதவியுடனும், ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி தொண்டர் பலத்துடனும் பாகிஸ்தான் ஆபத்திலிருந்து தப்பினர். எனினும் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. 

இப்பிரச்சினையை இந்தியா ஐ.நா.வுக்கு எடுத்துச்சென்றது. 
ஐ.நா.சபை மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி மக்கள் விருப்பப்படி காஷ்மீரின் தலைவிதியை தீர்மானிக்கலாம் எனக்கூறியது. 
பாகிஸ்தான் அதற்கு ஒத்துக்கொண்டது. இந்தியாவும் இந்த யோசனையை ஒத்துக் கொள்வதாகவே கூறியது. 

இதன்படி காஷ்மீர் தனிநாடா? இந்தியாவோடு இணைவதா? பாகிஸ்தானோடு இணைவதா? என்ற வாக்கெடுப்பு அன்றே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதுவே பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் பார்வையாகவும் அன்று வெளிப்பட்டது. 

ஆனால், ஜம்மு பகுதியில் இருந்த பிரஜாபரிஷத் என்ற இந்துகட்சி காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கக் கோரி அதிரடிப் போராட்டங்களை நடத்தியது. அப்போதைய ஜனசங்கத் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி இந்த போராட்டங்களுக்கு உத்வேகம் தந்தார். 

இந்தியாவோடு ஐநூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்த போது நாம் மக்களிடம் வாக்கெடுப்பா நடத்தினோம்? காஷ்மீரில் ஏன் நடத்த வேண்டும்? என்பது இந்து இயக்கங்களின் குரலாக ஒலித்தது. 

'வாக்கெடுப்பு நடத்தினால் காஷ்மீர் இந்தியாவிற்கு இல்லமலாகிவிடுமோ?' என்ற அச்சம் இன்று வரை இந்திய ஆட்சியாளர்களிடம் உள்ளது. எனவே, வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

ஆனால், அதே சமயம் காஷ்மீரிகளை சமாதானப்படுத்த வாக்கெடுப்புக்கு பதிலாக சில வாக்குறுதிகளை நேரு அரசாங்கம் தந்தது. அதன்படி காஷ்மீருக்கு தன்னாட்சி பெற்ற மாநில அந்ததஸ்த்து தரப்பட்டது. 

உண்மையில் இது போல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகாரம் பகிர்நதளிக்கப்பட்டிருந்தால் அது இந்திய ஜனநாயகத்திற்கே உச்சபட்ச பெருமை சேர்த்திருக்கும். 

ஆனால், இப்படி வழங்கப்பட்ட அரசியல் சாசன 370வது சட்டப்பிரிவு என்பது ஏதோ இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக வழங்கப்பட்டது என்ற கோணத்தில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த 370வது சட்டப்பிரிவு காஷ்மீருக்கு மட்டுமின்றி அருணாசலபிரதேசம், நாகலாந்து, இமாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

எனினும், அவை குறித்து இந்து இயக்கங்கள் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்வதென்றால் இதே போன்ற 371வது சட்டப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது குஜராத்தில் சௌராஷ்டிரா, கட்ச் போன்ற பகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் விதர்பா பகுதிகளுக்கும் வழங்கப் பட்டுள்ளது. 

ஆனால் , காஷ்மீரிகள் விஷயத்தில் மட்டும் ஒரு துவேஷப் பார்வையுடன் இந்த 370வது பிரிவு கடும் விமர்சனம் பெற்று வருகிறது. 
இதன் விளைவாக 1954ல் இந்திய அரசியல் சாசனச்சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டு, இந்த 370ன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. 

1958ல் மற்றுமொரு சட்டம் ஜம்மு, காஷ்மீரின் விசேஷ உரிமைகளைப் பறித்து, மத்திய அரசின் நிர்வாக கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது, 1964ல் மத்திய அரசுக்கு ஜம்மு காஷ்மீரின் சட்டசபையை அதிரடியாக கலைக்கும் அதிகாரம் ஒரு சட்டத்திருத்ததால் தரப்பட்டது. 

இப்படியாக நாம் தருவதாகச் சொல்லி பறித்துக் கொண்டும், இருப்பதாகச் சொல்லி இல்லாமலாக்கி வைத்திருப்பதுமான 370வது சட்டப்பிரிவின் படி இன்றைக்குஒரே ஒரு விசேஷ சலுகை மட்டுமே மிஞ்சியுள்ளது. 

அது அந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மட்டுமேயான நிலம் வைத்துக்கொள்ளும் உரிமை. அதாவது மற்ற மாநிலத்தார் அங்கு செல்லலாம், வியாபாரம் செய்யலாம், சம்பாதிக்கலாம், வாழலாம்... ஆனால் அந்த மண்ணை காஷ்மீரிகளிடமிருந்து அபகரிக்க கூடாது என்பது தான்! 

இதில் கூட இப்போது உச்சநீதிமன்றத்தின் தலையீட்டில் ஒரு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, காஷ்மீரில் பிறந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்பவர் அங்கு நிலம், வீடு வாங்கலாம். 
ஆக, அந்த மக்களோடு வாழ்க்கையை பகிர்ந்து கொள்பவர்களுக்கு அங்கே நிலம் வாங்க பிரச்சினையில்லை. 

ஆனால், இதுவும் போதாது.. யார் வேண்டுமானாலும் அங்கே நிலம் வாங்க உரிமை வேண்டும்.. அதுவும் இந்தியாவின் ஓர் அங்கம் தானே..? என்பது சிலர்வாதம்! 
சரி, இவர்களின் விருப்படியே 370வது பிரிவு விலக்கப்படுமானால் அங்கே ஆதாயமடையப்போவது யாராக இருப்பார்கள்..! 

அம்பானிகளும், அதானிகளும், இந்துஜாக்களும், டாடாக்களும், பிர்லாக்களுமே! காஷ்மீரின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை உடனடியாக பட்டா போட்டு வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த சிலரின் அபிலாசையை நிறைவேற்ற அந்த மக்களின் நிம்மதியை நாம் குலைக்க வேண்டுமா? 

கோடிக்கணக்கான மக்கள் நடைபாதைகளிலும், சேரிகளிலும் எந்த நில உரிமைகளுமற்று வாழும் நாட்டில், அந்த எளிய மக்களின் காணி நில ஆசையை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுப்பது தானே மக்கள் நல அரசின் முன்னுரிமை திட்டமாக இருக்கவேண்டும். 

காஷ்மீர் விஷயத்தில் இந்தியா செய்யவேண்டிய முக்கியமான கடமை ஒன்று உள்ளது. 
அது, அங்கு நிலவும் மட்டுமீறிய ராணுவ ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டியதாகும். 

எப்படி இப்போது இலங்கை மண்ணில் தமிழர் வாழ்விடப்பகுதிகளில் சிங்கள ராணுவம் ஆதிக்கம் கொண்டுள்ளதோ... அதற்கும் சற்று அதிகாமகவே அதுவும், கடந்த கால்நூற்றாண்டாக இந்திய ராணுவம் காஷ்மீரிகளின் இயல்புவாழ்க்கையை பாதித்து வருகிறது. 

கடந்த கால்நூற்றாண்டில் காஷ்மீரிகள் சுமார் ஒன்றரைலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 80%த்தினர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். யாரையும் சுடலாம், கைது செய்யலாம், அடைத்து வைக்கலாம், துன்புறுத்தலாம், பணம் பறிக்கலாம், பொய்வழக்கு புனையலாம், கொல்லலாம்.... என மட்டுமீறிய அதிகாரம் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

'இதை வாபஸ் பெறவேண்டும்' என்றே இந்திய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏராளமான கள ஆய்வுகள் நடத்தி எதிர்வினையாற்றியுள்ளன. 

முதலில் நாம் காந்தி தேசத்து இந்தியர்கள் என்ற வகையில், காஷ்மீரிகளுக்கு அவர்களின் இயல்புவாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு தான் இன்று முன்னுரிமை தரவேண்டும். நமது நடவடிக்கைகளால் நாம் அவர்களை அரவணைத்து வெற்றிகொள்வதற்கு மாறாக, அந்நியப்படுத்தி தோல்வி கண்டு வருகிறோம். 
துவேஷ அரசியல் துன்பத்தையே வளர்த்தெடுக்கும். 
அன்பு, அரவணைப்பு, ஆன்மபலம் கொண்டு தான் நாம் அந்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். 

மூர்க்கத்தனமாக மலர் பறிக்க முற்பட்டவரின் கையை முட்கள் பதம் பார்த்தனவாம்! "ஐயோ கைகளில் ரத்தம், பூச்செடியின் தீவிரவாதத்தை பூண்டோடு ஒழித்து, மலர் கொய்ய இனி கோடாரியே துணை" என்றானாம் அந்த முட்டாள்! இது போன்ற அணுகுமுறைகளை அறவே தவிர்ப்போம்!

(June 2014)

No comments: