Tuesday, March 11, 2014

கூட்டுக்கொள்ளையடிக்கவோ கூட்டணிகள்?

                                                                                                                    -சாவித்திரிகண்ணன் 

தேர்தல் கூட்டணியில் இன்னும் எந்த ஒரு கட்சியும் திருப்திகரமான நிலையை எட்டவில்லை. 

அ.இ.அ.தி.மு.க அணியில் இடதுசாரிகளின் இருப்பு வெற்றிடமாக்கப்பட்டு விட்டது. பதிலுக்கு பா.ஜ.க வரக்கூடும் அல்லது, பா.ஜ.க ஆதரவு இந்துத்துவா ஓட்டுகளாவது அ.தி.மு.கவிற்கு விழக்கூடும். என்ற பேச்சுகள் அடிபடுகிறது. தி.மு.க கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

பா.ஜ.க கூட்டணியின் நிலை இன்னும் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத வகையிலேயே உள்ளது. பேரம், ஊசலாட்டம், பேதமை, பேராசை அனைத்தும் ஒரு புள்ளியில் ஐக்கியமாக முடியாமல் தவிக்கிறது. 

ஊழலுக்கு எதிராக அணிதிரட்டியது ஒரு கூட்டணி..... 
மதவாதத்திற்கு எதிராக அணி திரட்டியது ஒரு கூட்டணி..... 
பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டுக்கும் மாற்றான மூன்றாவது அணி என்பதாக ஒரு கூட்டணி..... 
என்பதாக விளக்கங்கள் தரப்படுகின்றன. 

ஆனால், அறிவித்த முழக்கத்திற்கும், அணிசேரும் முயற்சிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. 

 எந்தக்கட்சியும், எந்தக்கூட்டணிக்குள்ளும் வரலாம், போகலாம் நேரத்திற்கு ஒரு வியாக்கியானம் தரலாம் என்ற நிலை தெரிகிறது. சந்தர்பவாதம் என்பது ஒரு காலத்தில் அரசியல் சரிவாகக் கருதப்பட்டது. 

ஆனால், சந்தர்ப்பவாதமே அரசியலில் சாகஸமாக பாரக்கப்படும் நிலை இன்று தோன்றியுள்ளதோ? 

துரோகம் என்பதை அபவாதமாக கருதியது அந்தக் காலம். இன்று துரோகம் என்பது அரசியல் இலக்கணமாக அங்கீகாரம் பெற்றுவிட்டதா? 

 கட்சிகள் என்பவை குறிப்பிட்ட விகிதச்சார அளவில் ஓட்டுகளை சேர்த்து வைத்திருக்கும் கருவூலங்களாகவும், மக்கள் என்பவர்கள் ஓட்டு போடும் கருவிகளாகவும் கருதக்கூடிய ஜனநாயகம் தான் இன்றைய யதார்த்தமா...? 

கொள்கை என்பது வெளியில் தெரியும் சட்டையாகவும்,
 உள்ளிருக்கும் உயிர்தாங்கும் உடல் என்பது உளுத்துபோனதுமாக
அரசியல் இயக்கங்கள் உருமாறி வருகின்றவோ...?
 கூட்டணி குழப்பங்கள் மக்கள் மனதில் எழுப்பியிருக்கும் கேள்விகளே இவை. 

ஆயுத எழுத்து,
 தந்திடிவி,
 6.3.2014 

No comments: