Friday, March 14, 2014

மீத்தேன் ஆபத்தா...?



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


காவேரி பாசனப்பகுதி விவசாயிகள் கதிகலங்கிக் கிடக்கிறார்கள். பன்நெடுங்காலமாக பசித்தோருக்கெல்லாம் அன்னமிட்ட பூமித்தாயை சில சக்திகள் சூறையாட திட்டமிட்டுவிட்டதான செய்தி விவசாயிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது உண்மையா? இல்லை மிகைப்படுத்தப்படகூடிய அனுமானமா? எதற்கெடுத்தாலும் மக்களைத் தூண்டி உணர்ச்சி கொந்தளிப்பில் வைத்து போராடத்தூண்டும் அமைப்புகளின் கைவரிசையா?

காவேரி பாயும் பாசனப்பகுதிகளான மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம் ஆகிய தாலுக்காக்கனைச் சேர்ந்த 50 ஊர்களின் நிலங்களுக்கு அடியில் ஆழப்புதைந்துள்ள மீத்தேன்வாயுவை எடுக்கும் முயற்சியில் சுமார் 2000இடங்களில் சுமார் 500அடி முதல் 1650 அடிவரை ஆழத்தோண்டி கிணறுகள் வெட்டவுள்ளனர்.

ஏன்? எதற்கு?

தற்போது பயன்பட்டுவரும் பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருள்கள் வெகுவிரைவில் தீர்ந்து போகவுள்ளன. இந்நிலையில் மாற்று எரிபொருளை கண்டடையும் முயற்சியாக மீத்தேன் வாயு உலகெங்கிலும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மீத்தேன் வாயு இருக்கும் இடங்களை கண்டறியும் நீண்ட நெடிய தேடலின் விளைவாக காவேரி பாசனப்பகுதிகள் தற்போது மீத்தேன் வாயு புதைந்திருக்கும் பொக்கிஷங்களாக அறியப்பட்டுள்ளன. பன்னாட்டு பகாசுர மற்றும் உள்நாட்டு பெரும் தொழில் நிறுவனங்களான ONGC, RIC, ESSAROIL, GEECC போன்றவை தற்போது காவேரி பாசன நிலங்களை சூது கவ்வுவது போல் சூறையாடப் புறப்பட்டுள்ளன.

இது வரை பல்லாயிரம் ஆண்டுகளாய் கோடானுகோடி பசித்த மனிதகுலத்திற்கு சோறு படைத்த பூமித்தாயின் அடிமடியை அபகரிக்கும் திட்டமே மீத்தேன் எரிவாயுத்திட்டம்!

"ஐயோ எங்கள் அன்னையின் அடி வயிற்றில் ஆங்காங்கே துளை போடுவீர்களா? பாவிகளா.." என்று பரிதவிக்கும் குரல்கள் ஒரு புறம் ஒலிக்க, ஏன் ஒலடுமிடுகிறீர்கள்? அரிசிக்கு எவ்வளவு பணம் கிடைத்தது? அதைக்காட்டிலும் இது விலை மதிப்பில்லா அரிய பொக்கிஷம்..! 

இந்த நவீன உலகமே எரிபொருள் பசியால் ஏங்கித் துடிக்கிறது..!
அரபுநாடுகளில் அள்ளிக்கொடுத்த பெட்ரோல் கிணறுகளைப்போல காவேரி பாசனப்பகுதிகள் இனி மீத்தேனை தரவுள்ளன.. இதை எப்படி நாங்கள் விட்டுவைப்போம். ஓட்டு உங்கள் கையில், ஆனால் உங்கள் அரசுகளோ எங்கள்பையில்..." என்கின்றன பெரு நிறுவனங்க்சகள்!

2001 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் மீத்தேன் வாயுக்கான தேடல் ஆரம்பித்துவிட்டது. 2003லேயே மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச் சோகாபூர் பகுதிகளில் மீத்தேன் கிணறுகளைத் தோண்ட ஆரம்பித்துவிட்டனர். அஸ்ஸாம், மகாராஷ்டிரா என மேலும் சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கும் மீத்தேன் வாயு என்ற எரிபொருளின் உற்பத்தி நிருபிக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒரு கட்டமாகவே தமிழகத்தில் 2010ஆம் ஆண்டிலேயே great Eastern Energy Corporation Ltd என்ற நிறுவனம் காவேரி பாசனபகுதிகளை களவாட முடிவெடுத்துவிட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தஞ்சை மண்ணில் தோன்றிய திருவாரூர் முத்துவேல் கருணாநிதியின் புதல்வர் திருவாளர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஜனவரி 4,2011ல் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து விவசாய அமைப்புகள் விழித்தெழுந்தன.

"கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா? மண்ணை அடகு வைத்து பொன்னை பெறுவதாயினும் அது வேண்டாம். எங்களுக்கு சோறுபோட்ட பூமித்தாயை சோரம் போக விடமாட்டோம்..." என போர்க்கோலம் பூண்டன! தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அறிவியலாளர்கள் அணியும் இதில் கைகோர்த்துள்ளன.

மரித்துக் கொண்டிருந்த இந்திய வேளாண்மையை ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் கோரப்பிடியிலிருந்து படிப்படியாக அகற்றி இயற்கை வேளாண்மை பக்கம் மடை மாற்றம் செய்து கொண்டிருந்த மாபெரும் மக்கள் தொண்டர் நம்மாழ்வார் இந்தக் கொடுமையைத் தடுக்க போர்க்கோலம் பூண்டிருந்தார். அகால மரணம் அவரை அரவணைத்து தற்போது இயற்கை அன்னையின் மடியிலேயே இளைப்பாறச் சென்றுவிட்டார். அவர் விட்டுச் சென்ற பணியை தொடரும் கடமை இந்த மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவருக்குமே உள்ளது.

என்ன செய்யப்போகிறது ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்...?
தற்போது முதல் கட்டமாக ரூபாய் 100கோடி முதலீட்டில் 50 ஆழ்துளை கிணறுகளைத் தோண்டி ஆய்வு செய்ய உள்ளது. இதில் அது எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும் என்பது உறுதிப்படும் பட்சத்தில் ரூபாய் 3,500கோடி முதலீடு செய்து காவேரி பாசனப்பகுதிகளில் கால்பரப்பிக் கொள்ளும். 1,66,210 ஏக்கர் பரப்பில் தற்போது மீத்தேன் வாயு உறைந்து கிடக்கின்றன. இதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் மீத்தேன் வாயுவை அள்ளமுடியும் என்பது அதன் அனுமானமாயுள்ளது. சுமார் 35 வருடம் காவேரி பாசனப்பகுதிகள் அதன் கட்டுபாட்டுக்குள் சென்றுவிடும். மீத்தேன் வாயு சில லட்சம் கோடி வருமானத்தை பெரு நிறுவனங்களுக்கு தரவுள்ளன.
இதில் மத்திய அரசுக்கு வரி வருமானமாக ஆண்டுக்கு 10,000கோடி கிடைக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

யோசித்துப்பார்த்தால் இந்திய அரசுக்கு 10,000கோடி என்பது ஒரு பெரிய விஷயமல்ல! இலவச திட்டங்கள், மானியங்கள் என்பதாக மத்திய அரசு மக்களை கையேந்தும் பிச்சைகாரர்களாக்குவதற்காக 2012-13ஆம் நிதியாண்டில் செலவழிக்க தொகை மட்டுமே 2,57,700கோடியாகும்! பொதுத்துறை வங்கிகள் மூலமாக பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப வராது என விட்டுவிட்ட கடன் தொகை 47,000த்து சொச்சம் கோடி! 

"பணம் பெரிய விஷயமில்லை. மாற்று எரிபொருள் என்பது தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவை. எரிபொருள் இல்லாமல் வீட்டின் சமையலறை முதல் சாலைகள் வரை ஸ்தம்பித்துவிடும். எனவே மீத்தேன் வாயு என்பது நிச்சயமாக பூமிக்கடியிலிருந்து மீட்டெடுக்கவேண்டிய வைரம் தான். ஆகவே எடுத்தற்கெல்லாம் போராட்டம் என்பது தேவையற்றது. காலச்சுழற்சி எதையும் விட்டுவைக்காது. அது அனைத்தையுமே புரட்டிப் போட்டே தீரும்" என்று சிலர் வியாக்யானம் பேசுகிறார்கள்.

உண்மைதான். மாற்று எரிபொருள் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். இந்தியாவில் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேனின் அளவு 92டிரில்லியன் கியூபிக் அடிகள் என்பது அறிவியலாளர்களின் மதிப்பீடு. இது வரை கண்டறியப்பட்டுள்ளது 8.9டிரில்லியன் கியூபிக் அடிகள் தாம்!

அதாவது 10ல் ஒரு பங்கு கூட இல்லை. மேற்கு வங்கத்தின் ராணிகஞ்ச் சோகாபூரி போன்ற வறண்ட, விளைச்சலற்ற நிலபரப்புகள் இந்தியாவில் ஏராளம், தாராளம்! அப்படியான இடங்களை கண்டறிவதை விட்டு நல்ல விளை நிலங்களான காவேரி பாசனப்பகுதிகளை சீரழிப்பது முறையா?

இந்த திட்டம் செயல்படும் போது குறிப்பிட்ட இடங்கள் என்றில்லாமல் ஓட்டு மொத்த பிராந்தியங்களுமே விவசாயத்திற்கு பயன்பாடில்லாத வறண்ட பூமியாகிவிடும் என தமிழகத்தின் முக்கிய சூழலியல் ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள்.

இது மட்டுமின்றி மீத்தேன் வாயுவை பெரும் கழிவுக்குவியல்களிலிருந்து பெறமுடியும். பெருநகரங்களின் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், தாவரக்கழிவுகள்.. என ஏராளமான வழிமுறைகளில் மீத்தேன் வாயுஉற்பத்தி செய்யலாம். சிறிய மாட்டுப்பண்ணை, கால்நடைப்பண்ணை வைத்திருப்பவர்கள் சாணங்களை குழியில் இறக்கி பயோகேஸ் உற்பத்தி செய்து ஆங்காங்கே சமையலறை தேவைகளை பூர்த்தி செய்வது நடைமுறையில் உள்ளது. 

ஆனால் மிகக்குறைவான முயற்சிகளே இதில் நடந்துள்ளன. ஆனால், அனைவரையும் இதில் ஊக்குவித்து, அரசும் துணைசெய்யும் பட்சத்தில் லட்சக்கணக்கான மீத்தேன் உற்பத்தி செயல்பாடுகள் ஆங்காங்கே எந்த சூழலியல் பாதிப்புமின்றி நடந்தேறும் மையப்படுத்தப்பட்ட அசூர உற்பத்தி என்பது எப்போதும் மனித குலத்தை அழிவுக்கே இட்டுச்செல்லும். அந்தந்த ஊர்கள், நகரங்கள், மாநகரங்கள் அவரவர்களுக்கு தேவையான மாற்று எரிபொருளை தங்களுக்குத் தாங்களே உற்பத்தி செய்யலாம் - ஏனெனில், கழிவுகள் என்பது மலை போல குவிந்து அச்சுறுத்தும் கலியுகத்தில் அதை மடைமாற்றி மாற்று எரிபொருளாக்கும் உற்பத்தியே தவிர்க்க இயலாத கடமையாகும்.

எனவே ஒரு சில பெரு நிறுவனங்கள் சுரண்டிக் கொழுக்க, விளைநிலங்கள் வேட்டை காடாகிவிடக்கூடாது. காவேரி பாசனப்பகுதி மக்களை கவலைக்கு ஆளாக்கியிருக்கும் இத்திட்டம் குறித்த தமிழக அரசின் நிலைபாடு என்ன?

2011ஜனவரியில் இத்திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் புத்துயிர் கொடுத்தது தி.மு.க அரசு என்றால், அதே ஆண்டு மே. 24ல் திட்ட செயலாக்க விதிமுறைகளுக்கு ஒப்புதல் கொடுத்தது புதிதாக பதவியேற்ற அ.தி.மு.க அரசு. இது மட்டுமின்றி, இந்நிறுவனத்திற்கு ஆதரவாக ஆங்காங்கே மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் பங்கெடுக்கும் கருத்து கேட்பு கூட்டங்கள் ஒப்புக்கு நடத்தப்பட்டு தப்புக்கு துணை போயுள்ளது தமிழக அரசு. மத்திய அரசோ இந்த கொடூர திட்டத்திற்கு ஆகஸ்ட்12, 2012ல் தடையில்லா சான்றிதழ் தந்து சுற்றுச்சூழல் அமைச்சகம் வழி ஆதரித்துள்ளது.

அதே சமயம் விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், சமூக ஆர்வலர்களின் மீத்தேன் வாயு திட்டத்திற்கு எதிரான இடையறாத போராட்டங்களையடுத்து தமிழக அரசு இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர ஜீலை 2013ல் ஒரு குழுலை நியமித்தது. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் 3மாதத்திற்குள் அறிக்கை தருவதைக் கொண்டு தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும் எனக்கூறப்பட்டது. தற்போது ஆறுமாதங்களை கடந்த நிலையிலும் தமிழக அரசு தன் நிலைபாட்டை தெரிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை அரசு எதையும் அறிவிக்காது என நாம் நம்பலாம்.

தமிழக அரசு இப்படி ஒரு குழுவை நியமித்துள்ளது பற்றி மீத்தேன் வாயு திட்டத்தில் ஈடுபட்டுள்ள கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷனின் தலைமை செயல்பாட்டு அதிகாரி பிரசாந்த் மோடியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதட்டமில்லாமல், பரவசத்தோடு அவர் சொன்னார்.

"மிகவும் நல்லது, எங்கள் நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கை தான் வரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை"
பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர் சந்தேகமின்றி சந்தோஷப்படுகிறார் என்றால், நாம் சந்தேகப்படவேண்டிய - விழித்தெழுந்து போராடவேண்டிய - கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது சந்தேகமின்றி உறுதியாகிறது. இந்தக்கட்டுரையின் முதல் பாராவில் வந்த ஒரு வாக்கியத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் ஓட்டு மக்கள் கையில்! தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அரசுகளோ பெரு நிறுவனங்களின் பையில்!

ரௌத்திரம் பேசுகிறது
பிப்ரவரி 2014


Tuesday, March 11, 2014

அரசியலுக்கு படையெடுக்கும் அதிகார வர்க்கத்தினர்



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்... படிக்காதவர்கள் கட்சி அரசியலின் வாயிலாக அதிகாரத்திற்கு வந்து, படித்துவந்த உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் நிலைமாற வேண்டும்' என ஒரு காலத்தில் சொல்லப்பட்டது.

ஆனால், அரசியலை சாக்கடை என வர்ணித்து அதில் இறங்கி அவமானப்படுவதா? என்ற கேள்விகள் படித்தவர்கள் தரப்பில் வைக்கப்பட்டன. 
ஆனால், தற்போது சமீபகாலமாக மிக உயர்ந்த பதவி வகித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசியலுக்கு அணிவகுத்து வர ஆரம்பித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தாக்கம் இதற்கு முக்கியகாரணம் எனலாம்! 
ஊழல் எதிர்ப்பு என்ற தார்மீக கோபம் படித்த இளைஞர்களை தெருவில் இறங்கி போராட வைத்தது. நியாயம் கேட்டுப் போராடிப் பயனில்லை நியாயம் வழங்கும் இடத்திற்கு நாம் வருவதே சரியான தீர்வாக இருக்கமுடியும் என படித்தவர்களை சிந்திக்க வைத்தது. அதன்விளைவாக பிறந்ததே ஆம்ஆத்மி அரசியல் கட்சி.

ஆம்ஆத்மிக்கும் முன்பே ஆந்திராவில் ஜெயபிரகாஷ் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி லோக்சத்தா என்ற கட்சியை தொடங்கி சுயேட்சையாக தேர்தல் போட்டியிட்டு வென்றது ஓர் முன்னுதாரணமானது.

ஜெயபிரகாஷின் அரசியல் நுழைவு ஆந்திர அரசியல்களத்தில் மட்டுமே அதிர்வுகளை உருவாக்கிய தோடில்லாமல் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் கூட படித்த இளைஞர்கள் பலரை அக்கட்சியின் அணிக்குள் இணைத்து தேர்தலில் அரசியல்களத்தில் இறக்கியது.

ஆம்ஆத்மி கட்சியின் புதியவர்களாட்டும், லோக்சத்தாவின் இளைஞர்களாட்டும் ஏற்கெனவே இருக்கும் அரசியல்கட்சிகளின் அணுகுமுறையில் அதிருப்தி கொண்டு அதற்கு மாற்றான புதிய சக்தியாக தங்களை அடையாளம் காட்ட வந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால், தற்போது ஓய்வுபெற்ற அதிகாரிகளின் பட்டாளமே ஒரு சில அரசியல்கட்சிகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவருகிறது. குறிப்பாக பா.ஜ.கவில் முன்னாள் இந்திய ராணுவத தளபதி வி.கே.சிங் தன்னுடன் நூற்றுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் பட்டாளத்துடன் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அப்படி அவர் இணையும் நிகழ்ச்சியில் அங்குள்ளவர்கள், "வருங்கால பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே.சிங் ஜீ வாழ்க" என கோஷம் எழுப்பியது குறித்தும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

இவரை போலவே இந்திய அரசுத்துறையில் உயர் அதிகாரப்பொறுப்பில் இருந்தவர்கள் பலர் பா.ஜ.கவில் ஐக்கியமாகி உள்ளனர். 

முன்னாள் உள்துறை செயலாளராக இருந்த ஆர்.கே.சிங், ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாகவும், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்டவருமான ஹர்தீப்சிங் பூரி.
மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் சத்யபால்சிங், 

இந்திய உளவுத்துறையான 'ரா'வின் முன்னாள் தலைவர் சஞ்சீவ்திரிபாதி.
எண்ணெய்வளம் மற்றும் இரும்புத்துறையின் செயலாளராக இருந்தவரும், நாகலாந்தின் தலைமை செயலாளராக பணியாற்றியவருமான ராகவ் சரண்பாண்டே.

தொழிலாளர் துறை செயலாளராயிருந்த ஹர்கேஷ் சிங் சித்து,
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலான அருண்ஓரான், (இவர் பா.ஜ.கவில் ஐக்கியமாக இவரது மனைவியோ ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் ஜார்கண்ட் மாநில அமைச்சராக உள்ளார். அவர் பெயர் கீதாஸ்ரீ)

ஜார்கண்ட் மாநில முன்னாள் டி.ஜி.பியான முக்தியார் சிங்..... என பல அதிகாரிகள் பா.ஜ.கவில் ஐக்கியமாகி உள்ளனர். மேற்குவங்கத்திலோ முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளரான ராதாகாந்தி திரிபாதி, முன்னாள் தேர்தல் ஆணையாளர், ஐந்து முன்னாள் டி.ஜி.பிக்கள் எனப்பலரும் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.

இதேபோல் ஆம்ஆத்மி கட்சியிலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்ஸான விசால்நாத்ராம், ராமாசங்கர்சிங், ஸ்வரன்சிங் போன்றோர் இணைந்துள்ளனர்.

இவர்களைத்தவிர சர்ச்சைக்குள்ளான இந்தியாவின் அமெரிக்க தூதரக அதிகாரி தேவயானியின் அப்பா உத்தமகோபர்கடேவும் அரசியலில் இறங்கப்போவதாகவும், அதற்கான கட்சியை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார். உத்தம் கோபர்கடே ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரி என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உயர் அதிகார பொறுப்பில் பல காலம் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் அதிகாரத்தை அரசியலின் வாயிலாக அடைய நினைத்து களத்திற்கு வந்துள்ள அதிகாரிகள் குறித்த பல விதமான கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? 
ஊழலுக்கு எதிராக செயல்பட்ட தருணங்கள் எத்தனை? 
காட்டிய உறுதிப்பாடு என்ன? 
அரசியலில் ஈடுபடும் எண்ணம் முன்பே இருந்ததா? 
அப்படி எனில் பதவியை துறந்து அப்போதே வந்திருக்கலாமே!

இப்போது அதிகாரத்திற்கு வருவதற்கான அனுகூலமுள்ள கட்சியாக கருதப்படும் பா.ஜ.கவில் அதுவும் தேர்தல் நெருங்கும் போது சேருவதும், சேர்ந்தவுடனேயே தேர்தலில் நிற்க 'சீட்' கேட்பதும் எதைக் கருதி?

இந்தியாவின் ராணுவத்தளபதி, தேர்தல்ஆணையாளர், தலைமைச் செயலாளர் போன்ற பொறுப்பில் இருந்த இவர்கள் ஏற்கெனவே பதவியில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட கட்சியின் ஆதரவாளராக இருந்துள்ளனரா? 
ஒரு அரசு அதிகாரி கட்சி சார்பற்ற மக்கள் சேவராக இருக்கவேண்டும் என்ற நியதி மீறப்பட்டுள்ளதா?

ராணுவத்துறையிலும், நிர்வாக இயந்திரத்திலும் கட்சி ஆதரவு போக்கு எதிர்காலத்தில் வித்தூன்ற இவர்கள் காரணமாகக்கூடுமா? அப்படி ஆதரவு போக்குடன் இருந்தால், ஓய்வுபெற்ற பிறகு எதிர்காலத்தில் தானும் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு சாதகமாகலாம் எனக் கருதும் போக்கு தலைதூக்குமா?
எனப் பல கேள்விகள் எழுகின்றன.

அதே சமயம் தங்களின் பழுத்த நிர்வாக அனுபவம், திறமை, மக்களின் மீதான ஈடுபாடு காரணமாகவும் அதிகாரிகள் அரசியல் களத்திற்கு வரலாம். ஆனால், உத்தம் கோபர்கடே போன்ற ஊழல் அதிகாரிகள் தங்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகளிலிருந்து தங்களை விடுவித்துகொள்ளவும் அரசியல் பாதுகாப்பை தேடலாம்! 



மக்களாட்சி வழிமுறையில் மன்னராட்சியா?

                                                                                                                      -சாவித்திரிகண்ணன் 

இந்தியா என்பது உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நடைபெறும் நாடு. இங்கே மக்கள் வாக்களிப்பதன் மூலம் தான் எந்த ஒரு கட்சியும் அதன் தலைவரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால், அப்படி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தலைவர்கள் - தாங்கள் பெற்றிருப்பது மக்கள் தந்த அதிகாரம் என்பதையும், நிர்வகிப்பது மக்களின் வரிப்பணத்தால் என்பதையும் வசதியாக மறந்துவிடுகிறார்களா? 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆட்சியாளர்கள் அரசு செலவில் ஆட்சியின் சாதனை குறித்த விளம்பரங்கள் செய்யக்கூடாது. தங்கள் பிம்பங்களை அரசாங்க கட்டிடங்களிலோ, அரசின் உரிமைக்குரியவற்றிலோ பிரபலப்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

இதன் மூலம் அரசு கட்டிங்களிலும், அம்மா உணவகங்களிலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவங்கள் விரைவில் மறைக்கப்படும் அல்லது அகற்றப்படக்கூடும் என தேர்தல்கமிஷன் தெரிவித்துள்ளது. 

இது போன்ற நிலைமைகள் நாற்பதாண்டுகளுக்கு முன்பு இருந்ததில்லை. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரோ, குமாரசாமி ராஜாவோ, ராஜாஜியோ, காமராஜரோ முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர்களின் உருவங்கள் அரசுகட்டிடங்களில் தென்பட்டதில்லை. அரசு நலத்திட்ட உதவிகளில் அரசின் லட்சனை மட்டுமே இருக்கும். 

தற்போது தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் அரசு கட்டிங்கள், குடிநீர்பாட்டில்கள் சிறிய பேருந்துகள், எம்.ஜி.ஆர் நினைவிடம் ஆகியவற்றில் அரசு செலவில் முதலமைச்சர் படமும், அ.தி.மு.க கட்சி சின்னமும் முன்னிலை படுத்தப்பட்டதை உயர்நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தி உள்ளார். 

ஆனால், தி.மு.க ஆட்சியின் போதும் மக்கள் நலத்திட்ட உதவிகளில், வழங்கப்பட்ட இலவச பொருட்களில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் படம் இடம் பெற்றது. பேருந்துகளில் கூட அவரது உருவமும், வாசகமும் இடம்பெற்றது. 

எனவே அந்தந்த காலத்தில் ஆட்சியாளர்கள் தங்களால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை அடையாளப்படுத்த செய்யும் முயற்சிகள் தவறாகுமா? இதன்மூலம் மக்கள் பலனடைவதை மட்டும் கருத்தில் கொண்டால் போதாதா? என ஒரு தரப்பின் பார்வை வெளிப்படுகிறது. ஆனால், " இது மக்களாட்சி, மன்னராட்சியல்ல, அந்தந்த ஆட்சிகாலங்களில் ஆட்சியாளர்கள் தங்கள் பிம்பங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்கு....!" என்பது சமூக ஆர்வலர்களின் ஆணித்தரமான வாதமாக வெளிப்படுகிறது. 

ஆயுத எழுத்து,
  தந்திடிவி,
 7.3.2014

கூட்டுக்கொள்ளையடிக்கவோ கூட்டணிகள்?

                                                                                                                    -சாவித்திரிகண்ணன் 

தேர்தல் கூட்டணியில் இன்னும் எந்த ஒரு கட்சியும் திருப்திகரமான நிலையை எட்டவில்லை. 

அ.இ.அ.தி.மு.க அணியில் இடதுசாரிகளின் இருப்பு வெற்றிடமாக்கப்பட்டு விட்டது. பதிலுக்கு பா.ஜ.க வரக்கூடும் அல்லது, பா.ஜ.க ஆதரவு இந்துத்துவா ஓட்டுகளாவது அ.தி.மு.கவிற்கு விழக்கூடும். என்ற பேச்சுகள் அடிபடுகிறது. தி.மு.க கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

பா.ஜ.க கூட்டணியின் நிலை இன்னும் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத வகையிலேயே உள்ளது. பேரம், ஊசலாட்டம், பேதமை, பேராசை அனைத்தும் ஒரு புள்ளியில் ஐக்கியமாக முடியாமல் தவிக்கிறது. 

ஊழலுக்கு எதிராக அணிதிரட்டியது ஒரு கூட்டணி..... 
மதவாதத்திற்கு எதிராக அணி திரட்டியது ஒரு கூட்டணி..... 
பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டுக்கும் மாற்றான மூன்றாவது அணி என்பதாக ஒரு கூட்டணி..... 
என்பதாக விளக்கங்கள் தரப்படுகின்றன. 

ஆனால், அறிவித்த முழக்கத்திற்கும், அணிசேரும் முயற்சிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. 

 எந்தக்கட்சியும், எந்தக்கூட்டணிக்குள்ளும் வரலாம், போகலாம் நேரத்திற்கு ஒரு வியாக்கியானம் தரலாம் என்ற நிலை தெரிகிறது. சந்தர்பவாதம் என்பது ஒரு காலத்தில் அரசியல் சரிவாகக் கருதப்பட்டது. 

ஆனால், சந்தர்ப்பவாதமே அரசியலில் சாகஸமாக பாரக்கப்படும் நிலை இன்று தோன்றியுள்ளதோ? 

துரோகம் என்பதை அபவாதமாக கருதியது அந்தக் காலம். இன்று துரோகம் என்பது அரசியல் இலக்கணமாக அங்கீகாரம் பெற்றுவிட்டதா? 

 கட்சிகள் என்பவை குறிப்பிட்ட விகிதச்சார அளவில் ஓட்டுகளை சேர்த்து வைத்திருக்கும் கருவூலங்களாகவும், மக்கள் என்பவர்கள் ஓட்டு போடும் கருவிகளாகவும் கருதக்கூடிய ஜனநாயகம் தான் இன்றைய யதார்த்தமா...? 

கொள்கை என்பது வெளியில் தெரியும் சட்டையாகவும்,
 உள்ளிருக்கும் உயிர்தாங்கும் உடல் என்பது உளுத்துபோனதுமாக
அரசியல் இயக்கங்கள் உருமாறி வருகின்றவோ...?
 கூட்டணி குழப்பங்கள் மக்கள் மனதில் எழுப்பியிருக்கும் கேள்விகளே இவை. 

ஆயுத எழுத்து,
 தந்திடிவி,
 6.3.2014 

Thursday, March 6, 2014

கிரிக்கெட்டில் சூதாட்டம் அனுமதிக்கப்படுமானால்...


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

இந்தியாவில் வேறெந்த விளையாட்டுக்கும் இல்லாத செல்வாக்கு கிரிக்கெட்டிற்கு உள்ளது. 
இந்தியர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதில் ஒரு மயக்கம், போதை அல்லது வெறியே உண்டு.

சோறு, தண்ணி, தூக்கம், வேலை, கடமை, படிப்பு, குடும்பம்.. என எல்லாவற்றையும் புறந்தள்ளி கிரிக்கெட்டில் பைத்தியமாக இருக்கும் பலரைக் கொண்டது இந்த தேசம்..!

இந்த விளையாட்டு இங்கு வெள்ளையர்கள் விதைத்த விதை!
இங்கு மட்டுமல்ல, தங்கள் காலனியாதிக்க நாட்டிலெல்லாம் பிரிட்டிஷரால் கால்கோளப்பட்ட விளையாட்டு!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற காலனியாதிக்க நாடுகளில் தான் கிரிக்கெட் களேபரங்கள் உள்ளன. மாறாக வளர்ச்சியை மையமாகக் கொண்ட அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுகள் கிடையாது.

ஆனால், இன்று வெள்ளைகாரர்களே வியக்கும் வண்ணம் இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு வாரியமாகத் திகழ்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு மாத்திரமல்ல, அதையும் தாண்டிய மிகப்பெரும் பொருளாதார சக்தி. அரசாங்கங்களையும், ஆட்சியாளர்களையும், நீதிபரிபாலான அமைப்புகளையும் கூட கட்டுப்படுத்தும் சக்தி!

எனவே தான் சமீபத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்பித்துள்ள நீதிபதி முக்தல் கமிட்டியின் பரிந்துரைகள் கண்டு நாம் பதட்டப்படவேண்டியுள்ளது.
"இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரம்மாண்டமாக கறுப்புபணம் புழங்குகிறது! இதில் நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கமும் உள்ளது! எனவே, இதை முடிவுக்கு கொண்டுவர அல்லது கட்டுப்படுத்த அரசாங்கமே கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிடுவது தான் தீர்வு. அரசாங்கத்திற்கு பெரும் வருமானமும் கிடைக்கும்..." என்கிறது. நீதிபதி முக்தல் கமிட்டி.

நீதிபதி முக்தல் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமை நிதிபதி. இந்த குழுவின் மற்றொரு உறுப்பினர் கூடுதல் சொலிசிடர் ஜெனரலான நாகேஸ்வரராவ், மற்றொரு உறுப்பினர் அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினரான நிலாய்தத்தா!

சென்ற ஆண்டு மேமாதத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கிரிக்கெட் ஆட்டக்காரர்களான ஸ்ரீசாந்த், அங்கீத், அஜித் சாண்டிலா ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து மேலும் சுனில்பாட்டிலா, கிரண்டோலோ, மணீஸ்குட்வேர் ஆகிய ஆட்டகாரர்களும் கைதானார்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனும் கைதானார்கள்.

இந்த விவகாரத்தை தானே ஒரு விசாரணை கமிட்டி அமைத்து பூசிமெழுகி, புதைக்கப்பார்த்தார் சீனிவாசன். ஆனால், அது ஈடேறவில்லை. ஆகவே, உச்சநீதிமன்றம் ஒரு மூவர்கமிட்டி அமைத்து விசாரணை அறிக்கை கேட்டது.

அப்படி அமைக்கப்பட்ட கமிட்டியான முக்தல்கமிட்டி இந்த விசாரணை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை கழுவுகிற மீனில் நழுகிற மீனைப்போல அமைந்துள்ளது.

தொலைபேசி உரையாடல்கள், போலீஸ்விசாரணை அறிக்கைகள், நேரடி சாட்சியங்கள் அனைத்துக்குப் பிறகும் நீதிபதிகள் ஒரு மித்த கருத்துக்கு வரவில்லை.
'இந்த ஆறு ஆட்டக்காரர்களுக்கும் சூதாட்டத்தில் பங்கு இருந்தது. குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இவர்கள் பல நூறுகோடி பணப்புழக்கத்தில் சம்பந்தப்பட்டனர்' என்பதை உறுதிபடுத்துவதில் இவர்களுக்குள் பலத்த கருத்து வேறுபாடு. "இருக்கும் ஆனா இருக்காது" என்பதாக சொதப்பியுள்ள ஒரு அறிக்கை தந்துள்ளனர்.

இந்த மாகானுபாவர்கள் தான் இந்த லட்சணத்தில் 'கிரிக்கெட் சூதாட்டத்தை இந்திய அரசு சட்டபூர்வமாக்கலாமே...' என திருவாய் மலர்ந்தருளி உள்ளனர்.

மேற்படி ஆறுகிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சென்னை கிங்ஸ் ஆட்ட உரிமையாளருமான குருநாத் மெய்யப்பனும் சூதாட்டத்தில் பங்கெடுத்த சூதாடிகள் என்பது இந்த நாட்டின் பாமர மனிதனுக்கு கூட பட்டவர்த்தனமாக தெரியத்தக்க அளவில் உண்மைகள் அம்பலப்பட்ட பிறகும் கூட குற்றவாளிகளை சுட்டிக்காட்டுவதில் தடுமாற்றம் கொண்ட ஒரு கமிட்டி அரசுக்கு சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதில் வியப்பில்லை தான்!

"கிரிக்கெட்டில் தரகர்களையோ, சூதாட்டத்தையோ கட்டுபடுத்துவது நடைமுறையில் சாத்தியமல்ல, கிரிக்கெட் ஆட்டக்காரர்களையே கூட ஓரளவு தான் எங்களால் கட்டுப்படுத்தமுடியும்..."

இப்படி அடிக்கடி பேசிவருபவர் வேறுயாருமல்ல, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தலைவர் சீனிவாசன் தான்!

இதே கருத்தை தான் சென்ற ஆண்டு நவம்பரில் இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐயின் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும் கூறினார்; கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளில் பெட்டிங் என்ற பெயரிலான முறைகேடுகளை தவிர்க்க சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிடலாம்.."

இந்தியாவில் ஊழல்களை விசாரிக்கும் ஒரு அமைப்பின் தலைவர் மனநிலையையும், சிந்தனைபோக்கையும் வெளிச்சம் காட்ட அவரது இந்த ஒரு கருத்து போதுமானது. எந்த தார்மீக பார்வை கொண்ட ஒருவரும் இது போன்ற கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பில்லை என்பதை நாம் உணர்வோம்.

ஆக, இப்படியான கருதாக்கங்களை வலுப்படுத்தும் விதமாக - இதன் தொடர்ச்சியாக நீதிபதி முக்தல் கமிட்டி கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க பரிந்துரைத்துள்ளது. புக்கிகள், சூதாடிகள், இவர்களை இயக்குபவர்கள், அனுமதிப்பவர்கள், ஆதாயமடைவர்கள்... போன்ற தரப்புகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தக்க வகையில் இப்படியான பரிந்துரை அமைந்துள்ளது. இது நம் இந்திய சமூகத்தையே இருளில் ஆழ்த்திவிடும்.

இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை படித்தவர்கள் தொடங்கி பாமரர்கள் வரை உள்ள பல கோடி கிரிக்கெட் பைத்தியக்கரார்களில் இது வரை சில, பல ஆயிரம் பேர்கள் தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால், கிரிக்கெட் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை பல மடங்கு கூடிவிடும். ரூ100பெட் கட்டினால் ஆயிரம், இரண்டாயிரம் கிடைக்க வாய்ப்புண்டு. ரூ 1000கட்டினால் லட்சரூபாயைக் கூட அள்ள முடியும் என ஆசைக்காட்டினால் இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட பலியாகிவிடுவார்கள். இந்த அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டத்தால் பல கோடி இந்தியக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும். ஏற்கெனவே லாட்டிரி மற்றும் குதிரைபந்தய சூதாட்டங்களில் வாழ்விழந்தோர்களின் கண்ணீர் கதைகள் சொல்லி மாளாது. இந்நிலையில் அதிக மக்களை ஈர்க்கும் கிரிக்கெட்டில் சூதாட்டத்தை அங்கீகரித்தால் வேறு வினையே வேண்டாம்.

சமீபத்திய ஒரு சர்வதேச நிறுவன ஆய்வறிக்கை சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் எடுத்த கருத்து கணிப்பிலிருந்து, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தற்கொலை உணர்வு மிகுந்திருப்பதையும், அவர்கள் அடிக்கடி வன்செயல்களில் ஈடுபடுவதையும், பெரும்பாலோர் மது உள்ளிட்ட போதைக்கு பழக்கப்பட்டிருப்பதையும் சுட்டிகாட்டியுள்ளது. மேலும் அந்த ஆய்வு, "சூதாடிகள் காலப்போக்கில் உழைப்பில் ஈடுபாடற்றவர்களாய், பொறுபற்ற பேர்வழிகளாய் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் சுமைகளாகி விடுகின்றனர்" என்கிறது.

அதுவும், கிரிக்கெட் விளையாட்டில் முதலில் எந்த அணி விளையாடுவது என பூவா? தலையா? போட்டு பார்ப்பது தொடங்கி, ஒவ்வொரு பால் வீசப்படும் போதும் எத்தனை ரன்கள்? எத்தனை ஓவர்கள்? எப்போது ஆட்டமிழப்பார், எந்த அணி எவ்வளவு எடுக்கும், எந்த அணி ஜெயிக்கும் என ஒவ்வொரு நிமிடத்துக்கும் பெட்டிங் கட்டிக் கொண்டே இருப்பார்கள் எனும் போது ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும் அதன் எதிர்வினையாக பல லட்சம் குடும்பங்கள் பணம், சொத்து, அந்தஸ்த்து இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிடுவது சர்வ சாதாரணமாகிவிடும்.

ஆக, மிகப்பெரிய சமூக அழிவிற்கு வித்திடும் ஒரு பரிந்துரையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லாவிட்டால் இன்றில்லாவிட்டாலும் வருங்காலத்தில் மெல்ல மெல்ல இக்கருத்து செல்வாக்கானவர்களைக் கொண்டு 'லாபி' செய்யப்பட்டு கிரிக்கெட் சூதாட்டத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை பெற்றுத் தந்துவிடும்.

அப்படியானால் பெரும் கறுப்புபணப்புழக்கத்தை கட்டுபடுத்த என்னவழி? 
நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கத்தை தடுக்க என்னவழி?
என்ற கேள்விகளை ஆழமாக அலசவேண்டும். இதில் ஆட்டக்காரர்கள் தொடங்கி அவர்களை ஆட்டுவிப்பவர்கள், ஆதரிக்கும் பார்வையாளர்கள் அனைவருமே தங்களை ஆத்ம பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும்.

உடலுக்கும், உள்ளத்திற்கும்புத்துணர்ச்சி தரும் விளையாட்டுகளான கபடி, ஹாக்கி, தடகளம், கால்பந்து, கூடைப்பந்து... என பல விளையாட்டுகள் இருக்கும் போது ஏன் கிரிக்கெட் மட்டும் அதி முக்கியத்துவம் பெற்றது?

இதை சாத்தியப்படுத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கங்கள் என்ன? கையாளப்பட்ட தந்திரங்கள் என்ன? பெற்றுவரும் ஆதாயங்கள் என்ன...? என அனைத்திற்கும் விடைதேடினால் கறுப்பு பண புழக்கத்திற்கும், நிழல் உலகதாதாக்களின் ஆதிக்கத்திற்கும் விடை கிடைக்கும்!

பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவில் பிரசவிக்கப்பெற்ற கிரிக்கெட் சுதந்திர இந்தியாவில் பிரட்டிஷாரை அண்டி வாழ்ந்து அதிகாரத்தை அனுபவித்து வந்த மேல்தட்டு வர்க்கத்தால் மட்டுமே ஆரம்பகாலங்களில் விளையாடப்பட்டு வந்தது. அன்றைய தினம் மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பழம் போன்ற பகுதிகளில் கிரிக்கெட் கிளப் வைத்து தங்களுக்குள் மும்மரமாக விளையாடிவந்தார்கள்.

1970 களில் இந்தியாவில் தொலைகாட்சி பிரபலமாகத் தொடங்கியபோது கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பியதன் மூலம் கிரிக்கெட்டிற்கு செல்வாக்கு பெருகத் தொடங்கியது.

1975லே ஐந்து தினப்போட்டி ஒரு நாள் போட்டியாக மாற்றம் பெற்றது. கிரிக்கெட் நடக்கும் நாட்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டு கிரிக்கெட் வெறி வளர்த்தெடுக்கப்பட்டது! பாகிஸ்தானோடு விளையாட்டு என்றால் தேசபக்தி என்ற மாயை கட்டமைக்கப்பட்டது. 1983ல் இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றது இந்தியாவில் வரலாறு காணாத களேபரக் கொண்டாட்டமாக சித்தரிக்கப்பட்டது..!

இந்திய கிரிக்கெட் ஆட்டகாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு பரிசுத் தொகைகளையும் வீட்டுமனை போன்ற சலுகைகளையும் அள்ளி வழங்கினர்.

இதற்கான அவசியம் என்ன? மக்கள் கவனத்தை சமூக பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப இந்த யுக்தி கையாளப்பட்டதாகவே சமூக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

1990களில் உலகமய, தாராளமய கொள்கை இந்தியாவில் ஏற்கப்பட்டபோது கிரிக்கெட்டும் மிகப்பெரிய ஏற்றம் கண்டது. கிரிக்கெட்டில் பணபுழக்கம் அதிகரித்தது. போட்டிகளுக்கான கட்டணங்கள் உயர்ந்தன. ஸ்பான்சர்கள் குவிந்தன. விளம்பர வருமானங்கள் பெருகின.

1980களின் மத்தியில் மெல்ல நுழையத் தொடங்கிய 'பெட்டிங்' கலாச்சாரம் 90களில் வேகம் பெறத் தொடங்கியது. மக்களின் கிரிக்கெட் மோகத்தை, பிரேமையை காசாக்கி கொள்ள கிரிக்கெட் தரகர்கள், புக்கீகள் களம் கண்டனர். பெரும் வெற்றியடைந்து மிகப்பெரிய கோடீஸ்வர்களாயினர். தங்களுக்கு உகந்தவர்களை அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குள் அடையாளம் கண்டனர். கைகோர்த்தனர். கைமேல் பலனும் கண்டனர்!
சூழ்ச்சிக்கு பேர் போன தொழில் அதிபர்கள், தந்திரமான அரசியல்வாதிகள், பேராசை கொண்ட பிரபலங்கள் இதில் அணிசேர்ந்தனர்.

விளையாட்டை மையப்படுத்தி திரைமறைவு வில்லங்கங்கள் நடந்தேறின.

1994ல் நடந்த பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தீவிரம் காட்டாமலிருக்க இரண்டரைகோடி ரூபாய் கொடுத்ததாக கிரிக்கெட் தரகர் முகேஸ்குமார் குப்தா 2000ல் சி.பி.ஐ விசாரணையின் போது தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டில் அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர்... உள்ளிட்ட சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதாயினர். இந்த கைதினால் பல உண்மைகள் அம்பலத்திற்கு வந்தன. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னை புனருத்தானம் செய்து கொள்ளவேண்டும் எனப்பலர் எழுதினர். ஆனால் பி.சி.சி.ஐ யோ களவாணித் தனத்தை எப்படி கமுக்கமாகச் செய்வது என்ற பாடத்தைத் தான் இதிலிருந்து பெற்றதோ என்று நினைக்க தோன்றும் வண்ணம் நடந்து கொண்டது.

ஒரு வகையில் கிரிக்கெட்டிற்கு கிடைத்த அபார விளம்பரமும், மிதமிஞ்சிய பணமும், அதற்காக கட்டமைக்கப்பட்ட மாயையும் தான் கிரிக்கெட் விளையாட்டையே சீரழித்தது.

கவாஸ்கர் காலத்தில் 5நாள் போட்டிக்கு ஆட்டக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த சம்பளமே ரூ2000தான்!

இன்றோ, ஒரு போட்டிக்கு வழங்கப்படுவது ரூ20லட்சத்திலிருந்து 50லட்சம் வரை! இதோடு ஒரு நாள் போட்டிக்கான ஊதியம் ரூ 2லட்சம். இவை தவிர விளம்பரங்கள் வாயிலாக ஆண்டுக்கு பல கோடி வருமானம் ஈட்டுகிறார்கள். சச்சின் டென்டுல்கரின் ஒராண்டு விளம்பரவருமானம் மட்டுமே ரூ 200கோடி!

கிரிக்கெட் வியாபாரத்தை விஸ்வரூபமாக்கவும், சூதாட்டத்தை மேன்மேலும் வேகப்படுத்தவும் ஆமர்பிக்கப்பட்டது தான் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக்.

இது தான் சந்தையில் மாடுவாங்குவது போல, கிரிக்கெட் ஆட்டகாரர்களை சந்தைபடுத்தி ஏலம் எடுத்தது. கிரிக்கெட் ஆட்டகாரர்களை நமது ஊடகங்கள் கிரிக்கெட் வீரர்கள் என எழுதிவருவது மிகப்பெரிய அபத்தம். சோரம் போவதற்கு தானே உடன்பட்டவர்களை எப்படி வீரர்கள் என்று அழைப்பது...?

இதே போல் பி.சி.சி.ஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை 'இந்திய கிரிக்கெட் களவாணிகள் வாரியம்' என்றழைப்பதே சாலப்பொருந்தும்!

2007ல் தொடங்கிய இந்த விபரீதம் விஸ்வருபம் பெற்றுவளர்கிறது. கடைசியாக நடந்த ஏலத்தில் தங்களை விற்க அணிவகுத்து நின்ற ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை 514. இதில் புதிதாக சோரம் போகத் துணிந்தவர்கள் 259. டெல்லி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேதர்ஜாதவ் என்ற ஆட்டக்காரர், "இன்னும் அதிகவிலைக்கு ஏலம் போவேன் என எண்ணினேன்... என்ன செய்ய? கிடைத்ததைக் கொண்டு திருப்திபட்டுக் கொள்ள வேண்டியது தான்.." என்று ஊடகங்களிடம் வெளிப்படையாகப் புலம்பினார்... என்றால் பாருங்கள்! இவர்களுக்கு சோரம் போகிறோமே என்ற சொரணை கூட இல்லாத அளவுக்கு அவர்கள் மட்டுமல்ல, இந்த சமுகமே மரத்துப் போய்விட்டது...!

2007ல் தோனி தான் 6கோடி என அதிகமாக விலைபேசப்பட்டவர். 2014ல் யுவராஜ்சிங் ஏலம் போன தொகை 14கோடி. ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் அணிகளுக்கும், வீரர்களுக்கும் இன்ன பிறவற்றுக்குமான முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ 3000கோடி. அள்ளிய பணம் 5000கோடி!

இந்த விளையாட்டுகளை பிரபலபடுத்த ஆபாசநடனங்கள், கேளிக்கைகள் என கலாச்சரா சீரழிவுகள் அரங்கேற்றப்பட்டன ஆபாசநடனங்கள், கேளிக்கைகள் என கலாச்சரா சீரழிவுகள் அரங்கேற்றப்பட்டன. ஊடகங்களின் பெரும் வெளிச்சமும் இவற்றிற்கு கிட்டியது. இதன் விளைவாக இந்த போட்டியின் பெருமதிப்பு தற்போது 20,000கோடியை கடந்துவிட்டது.

'வல்லான்வகுத்ததே சட்டம்' என்பது தானே யதார்த்தமாக இருக்கிறது. அதன்படி அவர்கள் இன்னும் தங்களை வலிமைபடைத்தவர்களாக்கி கொள்ள கிரிக்கெட் சூதாட்டத்தில் இப்போது சுமார் 2லட்சம் கோடி பணப்புழக்கம். இருக்கும் என நம்பப்படுகிறது. இதில் புக்கீஸ்கள் அடையும் ஆதாயம் இரண்டரை சதவிகிதம்! நடத்துபவர்கள் அடையும் ஆதாயங்களுக்கு கண்க்கு வழக்கே இல்லை.

கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் நம் சமூகம் மீளமுடியாத வீழ்ச்சிக்கு செல்லும் என்பது திண்ணம், எனவே இதனை நம் முழுபலத்தையும் திரட்டி எதிர்பதோடு கிரிக்கெட் விளையாட்டை தனியார்களிடமிருந்து விடுவித்து இந்திய அரசு விளையாட்டைத் துறையின் கீழ் ஒரு விளையாட்டாக கொண்டு வர வேண்டும். கிரிக்கெட்டிற்கான தனி முக்கியத்துவம் தகர்த்தெறியப்படவேண்டும். இப்படி செய்தாலே கறுப்பு பணப்புழக்கம் காணாமலாகிவிடும். நிழல் உலக தாதாக்கள் வெளிச்சத்தில் நமக்கென்ன வேலை? என விலகி விடுவார்கள். வில்லங்களிலிருந்து விடுபடவேண்டும் என்றால் கிரிக்கெட் விளையாட்டையும், போட்டிகளை அரசுடைமையாக்குவது ஒன்றே தீர்வாகும்.