Tuesday, November 12, 2013

புகையிலை, குட்காவிற்கு எதிராக ராஜஸ்தான் அரசின் உறுதியான நடவடிக்கை



                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

"அரசு பணிக்கு வர விரும்பும் இளைஞர்கள் புகையிலை குட்காவை பயன்படுத்தமாட்டோம்' என உறுதிமொழி தந்தால் தான் வேலை" என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

அதிர்ச்சி தரத்தக்க வகையில் புகையிலை குட்கா பயன்பாட்டின் அதிகரிப்பும், எப்படியாவது இந்தப் பேரழிவிலிருந்து இளைஞர்களை காப்பாற்றியாக வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்படி ஒரு நிலையை ராஜஸ்தான் மாநில அரசு எடுத்துள்ளது.

குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களின் பயன்பாடு முன்எப்போதைவிடவும் அதிகரித்துள்ளது!

ஆண்கள் -60% பெண்கள் -32% பயன்படுத்துகிறார்கள் என சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

"இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் இறப்போர் எண்ணிக்கை - 9லட்சம் முதல் 10லட்சம் வரை!

அதாவது தினசரி சுமார் 2,500பேர் இறக்கிறார்கள்" - என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாய்தொடங்கி வயிறுவரை ஏற்படும் புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, நுரையீரல்நோய்கள், ஜீரணக்கோளாறு, தூக்கமின்மை, மூளைபாதிப்பு, ஆண்மை இழப்பு, போன்ற பல நோய்களுக்கு புகையிலை மூலகாரணமாகின்றன.

எனவே தான் உலக சுகாதார நிறுவனத்தின் முன் முயற்சியால், புகையிலை கட்டுப்பாட்டிற்கான சட்டபூர்வ ஒப்பந்தம் - 2003ல் கொண்டுவரப்பட்டது. இதில், இந்தியா உள்ளிட்ட 174நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்தே தமிழகம் போன்ற மாநிலங்கள் புகையிலை பொருட்களாக பான்பராக், குட்கா விற்பனைக்கு தடைவிதித்துள்ளது.

புகைபிடிப்பது பொது இடங்களில் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கணிசமான இளந்தலைமுறையினர் காப்பாற்றப்பட்டுள்ளனர்...! 

உலக அளவில் மனித இறப்பிற்கு புகையிலை இரண்டாவது பிரதான காரணமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தான் உலகில் 174நாடுகளில் சில விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஊடகங்களிலோ, பொது இடங்களிலோ புகையிலை பொருட்களின் விளம்பரத்தை அனுமதிக்கக்கூடாது.

கல்வி நிறுவனங்களின் உள்ளும், புறமும் கண்டிப்பாக புகையிலை சார்ந்த பொருட்களை விற்கக்கூடாது.

18வயதுகுட்பட்டவர்களுக்கு விற்பது சட்டப்படி குற்றம்.

திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வந்தால் 'புகைபிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது' என்ற எச்சரிக்கை வாசகம் தவறாமல் காட்டவேண்டும்.

இவை போன்ற விதிகளால் கூட புகையிலை பயன்பாட்டை குறைக்க முடியவில்லை என்பதே நடைமுறை யதார்த்தமாக உள்ளது.

அப்படியானால் புகையிலை உற்பத்திக்கே தடைவிதித்தால் என்ன?

என்ற கேள்விகள் அரசை நோக்கி சமூக ஆர்வலர்களால் எழுப்பபட்டன உலகில் புகையிலை ஏற்றுமதியில் இந்தியா பிரதான இடம் வகிப்பதோடு கணிசமான லாபத்தையும் ஈட்டும் நாடாக உள்ளது.

2012-2013ல் இந்தியாவின் புகையிலை ஏற்றுமதி -2,63,575டன்கள் இதன் மொத்த மதிப்பு - 4,979கோடிகள்!


இந்தியா புகையிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள்:

இந்தோனேஷியா, அமெரிக்கா, ரஷ்யா, கொரியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், பிரான்ஸ் ஆகியவை!

ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் பல்லாயிரம் விவசாயிகள் இதனைப் பயிரிடுகின்றனர். பலனடைகின்றனர்!

"புகைபிடிப்பதால் எனக்கு எந்த நோயும் கிடையாது. அளவோடு தான் புகைக்கிறேன்" என பலர் கூறிவருகின்றனர். ஆனால், 'ஒவ்வொரு சிகரெட்டும் மனித ஆயுளில் 7முதல் 14நிமிடங்களை காவு கொள்கிறது' என்பது சர்வதேச ஆய்வில் வெளிப்பட்டுள்ள உண்மை!

எனினும், ஆபத்தோடு விளையாடுவதில் மனிதர்களுக்கு அளவில்லா ஆனந்தம் போலும்! 

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
08.11 .2013 


No comments: