Thursday, September 26, 2013

சமாதானம் வேண்டும் இலங்கைதமிழர்கள்


                                                                                                               -சாவித்திரிகண்ணன்

இலங்கையில் மாகாண கவுன்சில்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் வடமகாணகவுன்சில் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மொத்தமுள்ள 38இடங்களில் 30 இடங்களைப் பெற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
இதேபோல் வடமேல்மாகாணத்திலும் மத்திய மகாணகவுன்சிலிலும் தேர்தலில் ஆளும்கட்சி கூட்டணியான மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு மாபெரும் வெற்றிகளை ஈட்டியுள்ளது. 

யாழ்பாணம் மன்னார், கிளிநொச்சி, முல்லை, வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாண கவுன்சிலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமார் 65% வாக்குகள் பெற்றுள்ளது.

கண்டி, மாத்தளை, நுவரொலியான, கொத்மலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 10லட்சம் இந்திய வம்சாவழி தமிழர்களை வாக்களார்களாகக் கொண்டுள்ள இடங்களில் மலையகத் தமிழர்கட்சிகளின் ஆதரவில் ராஜபட்சேவின் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு சுமார் 64% வாக்குகளைப் பெற்றுள்ளது. குருநாகம், புத்தளம் உள்ளிட்ட வடமேல் மாகாணசபையிலும் ராஜபட்ச

இலங்கை அரசின் தொடரும் இனப்பாகுபாடு, ராணுவ மேலாதிக்கம், ராஜபட்சேவின் குடும்ப ஆதிக்கம்... போன்ற பல குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இத்தேர்தல்கள் நடந்தன.

காமன்வெல்த் நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 2000சுதந்திரமான தேர்தல் பார்வையாளர்கள் களத்தில் இருந்துள்ளனர்.

இதனால் தேர்தலில் ஆளும்தரப்பின் ஆதிக்கம், குறிப்பாக ராணுவ மேலாதிக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள், வீடுகள் இடிப்பு, துப்பாக்கி சூடுகள் நட்க்காமலில்லை.

காமன்வெல்த் நாடுகளின் பார்வையாளர்கள் ராணுவ ஆதிக்கமும், நிர்பந்தங்களும் இருந்ததை உறுதிபடுத்தியுள்ளதோடு அதே சமயம் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி உள்ளனர்.

'கஃபே' என்ற அமைப்பு 576 தேர்தல் விதிமீறல்கள் நடந்துள்ளன" என சுட்டிக்காட்டியுள்ளது. 

நமது இந்தியாவில் இருந்து சென்றுள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தங்கள் குழு பல்வேறு இடங்களை பார்வையிடவும், மக்கள், கட்சித்தலைவர்களை சந்திக்கவும் ஆட்சியாளர்கள் எந்த தடையும் செய்யவில்லை. எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை" எனக்கூறியுள்ளார்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளும் போது குறைந்த வன்முறைகளோடு ஒரளவு நியாயமாக தேர்தல் நடைபெற்றுள்ளது என கருதவே வாய்ப்புள்ளது.

வடமாகாணக் கவுன்சில் தலைவரான முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஷ்வரன் 1,32,255மக்களின் ஆதரவை தனிப்பட்ட முறையில் பெற்றுள்ளார்.

இவர், "ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கான அதிகார பகிர்வே நடைமுறை சாத்தியம்" என்பதை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.

மிந்த தேர்தல் வெற்றி மக்கள் சமாதானத்திற்காக அளித்த வாக்குகள்" என மற்றொரு முக்கியத் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.

"தமிழர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை, அடிப்படையான உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்கே முதலிடம். அதற்குப் பிறகே அதிகார பகிர்வு" என்றும் சி.வி.விக்னேஷ்வரன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

யாழ்பாணத்தில் தேர்தல் வெற்றிகளிப்புகளோ, கொண்டாட்டங்களோ எதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்தவில்லை.

"ஆளும்கட்சி மன்ணை கவ்வியது, இது ராஜபட்சேவிற்கு விழுந்த அடி..." போன்ற வார்த்தை ஜாலங்கள், பழிதூற்றல்கள் வெளிப்படவில்லை.

தற்போதைய தமிழர் தலைவர்கள் மிகுந்த விவேகத்தோடும் ராஜதந்திரத்துடனும் செயல்படுவதையே இவை உணர்த்துகின்றன.

'தமிழ்தேசிய கூட்டமைப்பில் கருத்துவேற்றுமைகள் தலைதூக்காமல், ஒற்றுமையுடனும், விவேகத்துடனும் செயல்பட்டு அவர்கள் தமிழர்களுக்கான தேவைகளை உரிமைகளை படிப்டியாக வென்றெடுக்க வேண்டும்' என்பதே இலங்கை தமிழர்கள் வாழ்வில் அக்கரையுள்ளவர்களின் பிரார்த்தனையாகவுள்ளது.

'இதற்கிடையில், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் சில தஙகள் அரசியல் உள்நோக்கங்கள் சார்ந்து ஏதேனும் விபரீதமாகப்பேசி அங்குள்ள சிங்கள அரசை உசுப்பிவிட்டு மீண்டும், இலங்கைத் தமிழர்களை ஆபத்துக்கு ஆட்படுத்தவேண்டாம்' என்பதே வெற்றிபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுதலாக உள்ளது.


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
23.9.2013 


சீறிப்பாயும் சிமெண்ட் விலை...! மலைக்கவைக்கும் மணல்விலை...!


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

நடுத்தர மக்களின் லட்சியக்கனவான வீடு, இனி என்றென்றும் கனவாகவே, பழங்கதையாகவே நிறைவேறாமலாகி விடுமோ.,.. என்ற அச்சம் சீறிப்பாய்ந்துள்ள சிமெண்ட் விலையாலும், மலைக்கவைக்கும் மணல் விலையாலும் ஏற்பட்டுள்ளது.

இந்த விலையேற்றம் கட்டுமானப்பணிகளை கடுமையாக பாதிக்கிறது. கட்டுமான மதிப்பீடு சுமார் 40சதவிகிதம் எகிறிவிடும்... குறிப்பாக சிமெண்ட் விலை என்பது தற்போது சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிகழ்த்தும் சர்க்கஸ் விளையாட்டாகிவிட்டது. 

"எந்த நியாயமான காரணமும் இன்றி செயற்கையாக சிமெண்ட் நிறுவனங்கள் கூட்டாக 'லாபி' செய்து விலையை ஏற்றுக்கின்றன..." என்பது கட்டுமானப்பணிகளைச் செய்யும் நிறுவனங்களின் குற்றச் சாட்டாகும்.

நமது தமிழ்நாடு அரசின் சிமெண்ட் நிறுமான 'டான்செம்' ஒரு மூட்டை சிமெண்ட்டை ரூ 240 முதல் 255க்குள் தரமுடிகிறபோது தனியார் நிறுவனங்களோ ரூ 330லிருந்து ரூ 350க்கு விற்கிறார்கள். டான்செம்மின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 9லட்சம் டன்கள் தான் என்பதால் மக்களின் தேவையை பூர்த்திசெய்ய இது போதுமானதல்ல.

மத்தியிலுள்ள 'காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியாவிற்கு இந்த பிரச்சனையை பில்டர்ஸ் அசோசியேஷன் கொண்டு சென்றபோது இது குறித்து விசாரணை நடத்திய பிறகு, "சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 11பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் 'லாபி' செய்து செயற்கையாக விலையை ஏற்றி விற்பது மிகவும் கண்டத்திற்குரியது..." எனக்கூறியது.

சிமெண்ட் விலையை சீர்படுத்த மத்திய, மாநில அரசுகள் செய்த முயற்சிகள்;

நிதி அமைச்சர் சிதம்பரம் சிமெண்ட் நிறுவனங்களுக்கு சில சலுகைகளை அறிவித்து விலையை குறைக்கும் படி வேண்டுகோள் வைத்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே 15ரூபாய் உயரந்தது. பிறகு மீண்டும் சிமெண்ட் நிறுவனங்களை அழைத்து சில வரிச் சலுகைகள் அறிவித்தார். 
ஆயினும் அடுத்தவாரமே சிமெண்ட் விலை ரூ 20 எகிறியது. இதனால் சென்ற ஆட்சியில் முதலமைச்சர் கருணாநிதி, "சிமெண்ட் நிறுவனங்களை தேசியமயமாக்க போவதாக அறிவித்தார்" - இந்த அறிவிப்பும் மத்தாப்புச் சிதறலாய் மறைந்தது. ரேஷன் கடைகள் மூலம் சிமெண்ட் மூட்டை விநியோகம் சில காலம் தொடர்ந்தது. 

மற்ற இடங்களில் சிமெண்ட் விலை;

வட இந்திய மாநிலஙக்ளில் சிமெண்ட் விலை தமிழகத்தை விட ரூ 100 குறைவாக உள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்தால் ஒரு மூட்டைவிலை ரூ200க்கு தரமுடியும். சில பெரிய கட்டுமான நிறுவனங்கள் இவ்விதம் சிமெண்ட் மூட்டைகளை தருவித்துக் கொள்கின்றன.

மலைக்கவைக்கும் மணல்விலைகள்;

மணல்விலை ஒரு லோடு ரூ 3,500லிருந்து ரூ5500ஆக ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் அள்ளும் மஃபியாக்கள் சிலரின் பேராசையே இதற்கு காரணம். "தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இதனை தடுக்கவேண்டும். ஏனெனில், இவர்கள் அள்ளும் மணலுக்கு பெறக்கூடிய விலையில் நூற்றுக்கு 20சதவிகிதம் கூட அரசுக்குத் தருவதில்லை". 

ஏற்படும் பாதிப்புகள்;

  • தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிக்கும்

  • கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 50பெரிய நிறுவனங்கள் ஓரளவுசமாளித்துவிடக்கூடும். ஆனால் சுமார் 600 நடுத்தர நிறுவனங்கும், ஆயிரக்கண்க்கான சிறிய 'காண்டிராக்ட் பணி எடுப்பவர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

  • கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 50லட்சம் கட்டிடத்தொழிலாளர்களில் கணிசமனோருக்கு வேலைவாய்ப்பு அரிதாகிவிடும்.

  • சிமெண்ட், மணல் விலை அதிகரிப்பில் வீடுகட்டும் நடுத்தர மக்களின் பட்ஜெட் 40%வரை உயர்வதால் திண்டாட்டமாகிவிடும் அரசு நிறுவனங்களின் கட்டுமானப்பணிகளே கூட இதில் பாதிக்கப்படுகின்றன.

இது ஒரு புறமிருக்க, கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி போக்கை ஆரோக்கியமாக கருதுவதற்கில்லை. விபரீதமாகவே தோன்றுகிறது.

தான் தோன்றித்தனமாக நகரங்கள் விரிவாகிச்செல்லவும், தேவைக்கும் அதிகமான வீடுகளை ஆங்காங்கே வாங்கி அதை ஒரு வளரும் முதலீடாக மக்கள் கருதவும் கட்டுமானத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் கணிசமானவை குடியேற ஆளின்றிக் கிடக்கின்றன. தேவைக்கும் அதிகமாக வீடுவாங்கி குவிப்பவர்களைத் தடுக்க சட்டபூர்வமாக அரசாங்கம் எதையேனும் செய்தாகவேண்டும். இந்த வகையிலாவது சிமெண்ட், மணல் பயன்பாடு குறைத்துவிலையும் குறையட்டுமே! 
தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
21.9.2013 


வரி ஏய்ப்பாளர்களை பாதுகாக்கிறதா மத்திய அரசு..?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்


வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள், மற்றும் தனிநபர்களின் பெயரை வெளியிட மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.
இது மக்களிடையே அதிர்ச்சியையும், சந்தேகத்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் வருமானவரித்துறை அதிரடிசோதனை, கலால்வரித்துறை ஆய்வு, நீதிமன்ற வழக்குகள்... போன்ற சமயங்களில் எத்தனையோ பிரபலமானவர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயர்கள் ஏற்கெனவே அம்பலப்பட்டுள்ளன...!

இதில் அரசியல் தலைவர்கள் கூட விதிவிலக்கல்ல.

எடியூரப்பா 300ற்று சொச்சம் கோடி வரி ஏய்ப்பு 
நிதின் கட்கரியின் நிறுவனங்கள் பலவற்றில் வரி ஏய்ப்பு

ராகுல்காந்தி ஹரியானா ஹசன்பூரில் 6.5ஏக்கர் நிலம் வாங்கியதில் ஏக்கர் ரூ 65லட்சம் சந்தை மதிப்பை 1.5லட்சமாக பத்திரபதிவு செய்ததாக ஓம்பிரகாஷ் சௌதாலா குற்றசாட்டு...
கார்களுக்கான உதிரிபாகங்கள் இறக்குமதியில் BMW கார் நிறுவனம் 650கோடி வரி ஏய்ப்பு!

2ஜி அலைகாற்றை விவகாரத்தில் 
நோக்கியோ செல்போன் நிறுவனம் - 18,000கோடி வரி ஏய்ப்பு 
வோடோபோன் செல்போன் நிறுவனம் 11,000கோடி வரி ஏய்ப்பு

விஜய் மல்மையா ராயல் சேலஞ்சர்ஸ்சுக்காக - 75கோடி வரி ஏய்ப்பு, சரவணாஸ்டோர்ஸ், சக்தி மசாலா... என்று பத்திரிகைகளில், விஷ்வல் மீடியாக்களில் வெளியாகி விவாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்க, மற்றபலரை காப்பாற்ற நிதி அமைச்சகம் முயற்சிப்பது ஏன்? என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது. 

ஓட்டுமொத்தமாக இந்தியாவில் 4.83லட்சம் கோடி ரூபாய் வரிஏய்ப்பு நடந்துள்ளது. இவற்றில் 411சர்வதேச நிறுவனங்களும் அடக்கம்!

சேவைவரி ஏய்ப்பு, கலால்வரி ஏய்ப்பு, சுங்கவரி ஏய்ப்பு, வருமானவரி ஏய்ப்பு என பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன.

எனினும் எவ்வளவு போராடி முயன்றாலும் இதில் 10%த்தை வசூல் செய்வதே பகிரத பிரயத்தனம். 5% வசூலிக்க முடிந்தால் அதுவே அபூர்வ வெற்றியாகும் என அமைச்சக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

நமது நிதி அமைச்சகத்தின் பல செயல்பாடுகள்... அணுகுமுறைகள் வரி ஏய்ப்பிற்கான வழி ஏற்படுத்தி தருவதாகவே அமைந்துள்ளது என பொருளாதாரநிபுணர்கள் கூறுகிறார்கள்.
உதாரணத்திற்கு வருடாவருடம் சிகரெட் நிறுவனங்களுக்கு மட்டும் தவறாமல் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இப்படி அதிகப்படுத்தும் போது கூடுதலாக வரிவசூலாவதில்லை... காரணம் வரிஏய்ப்பிற்கு அவர்கள் வழிதேடிவிடுகிறார்கள்.

இந்த வகையில் சுமார் 100கோடி ரூபாய் சிகரெட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதை காலால்துறை கண்டுபிடித்துள்ளது.

இதே போல் சேவைவரியை ஏராளமான நிறுவனங்கள் அப்படியே மறைத்து மிகக்குறைவாகவே கட்டுகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் நுகர்வார் தான் ஏமாற்றப்படுகிறார்கள்.

எனவே இது விஷயத்தில் மத்திய அமைச்சகம் மறுபரிசிலனை செய்யவேண்டும்.

இந்தியாவில் மாநந்திர சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே வருமானவரியில் இருந்து தப்பமுடியாது.

டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சிறுவியாபாரங்களில் ஈடுபடுவோர், ரியல் எஸ்டேட் தரகர்கள்.. போன்ற பல பிரிவினர் லட்சலட்சமாக சம்பாதித்தாலும் முறையாக கணக்கு காட்டுவதில்லை...

வரிஏய்ப்பு நிகழ்த்துவதற்கென்றே மொரிஷியஸ், கேமன்தீவுகள், பிரிட்டிஷ்வர்ஜின் தீவுகள், பெர்முடாதீவு, மிகச்சமீபத்தில் லித்திவியா போன்ற மிகச்சிறு நாடுகளுடன் இந்தியா வரிவிலக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

நமது ரிசர்வ் வங்கி தரும் ஒரு தகவல் நம்பமுடியாத அதிர்ச்சியைத் தருவதோடு, எப்படி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பதையும் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

இந்தியாவிற்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 75%லிருந்து 80% மேற்படி சிறு தீவுகளிலிருந்து வந்துள்ளது. இதில் மொரியஷில் இருந்து மட்டுமே 40% அந்நிய முதலீடு வந்துள்ளது. வரி ஏய்ப்புக்கு வசதியாக பல நிறுவனங்கள் இத்தீவுகளை தங்கள் முகவரியாக்கிவிடுகின்றன!

வருமானவரித்துறையிலிருந்து ஒய்வுபெற்ற அதிகாரி பி.வி.குமார் என்பவர் வெளியிட்டுள்ள ஒரு தகவல், 'வரிஏய்ப்பு மூலமாக இந்தியாவிலிருந்து இது வரை வெளிநாடுகளுக்கு கறுப்புபணமாக கடத்தப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு 20,79,000கோடிக்கும் அதிகமாகும்' என அதிர்ச்சி தருகிறது.

இது இந்தியாவின் வெளிநாட்டுக்கடனை காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்பது தான் கவனத்திற்குரியதாகும்.

வறுமைகோட்டிற்கு கீழ் 30%மக்களை வைத்துக் கொண்டு இவ்வளவு அதிக வரிஏய்ப்பிற்கு வழி செய்துள்ள நாடு இந்தியாவாகத் தான் இருக்கும்!

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
20.9.2013 

Tuesday, September 24, 2013

அரசாங்கத்தின் கடமை மலிவுவிலை வியாபாரமா? நல்ல நிர்வாகமா?



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


சமீபகாலமாக நம் தமிழக அரசு சில மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறைந்த விலைக்கு டிபன், சாப்பாடு என அம்மா கேண்டீன்! குறைந்த விலைக்கு காய்கறிகடை, தற்போது அம்மா மினரல் வாட்டர்...!

இவை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன சந்தேகமில்லை. ஆனால், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இதில் அடிப்படை தீர்வு கிடைக்கவில்லை.

கொள்ளை லாபத்திற்கு சாப்பாடு, டிபன் தரும் ஹோட்டல்கள் தொடர்ந்துகொண்டு தான் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல் 30ஆண்டுகள், 'ஹோட்டல் பண்டங்களின் விலையை அவரவர்களும் இஷ்டத்திற்கும் நிர்ணயிக்க முடியாது' என்ற நிலைமை இருந்தது. இட்லி விலையை ஹோட்டல்காரர்கள் பத்துபைசா உயர்த்தினாலும் அது சட்டசபையில் கடும் விவாதப் பொருளானது! அந்தச்சூழல், அந்த மெக்கானிசம் - அரசின் ஆளுமை - இன்று இல்லை.

அதே போல் காய்கறிகள் விலையேற்றதிற்கான அடிப்படை காரணிகள் களையப்படைப்படவில்லை.
தண்ணீரைக் காசாக்கும் கார்பரேட் நிறுவனங்களின் செயலை நமது அரசும் செய்யத்தான் வேண்டுமா?

சுத்தமான குடிநீரை ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் அரசு ஏற்பாடு செய்யக்கூடாதா?

ஒரு குடம் தண்ணீருக்கு ரூபாய் இரண்டோ, மூன்றோ தரநேர்வதையோ பெரும் சிரமமாக கருதுகிற பெரும்பாலான மக்களிடம் பாட்டில் தண்ணீருக்கு பத்து ரூபாய் கேட்கலாமா?

20ரூபாய்க்கு பாட்டில் தண்ணீர் வாங்க முடிந்தவர்களுக்கு பத்து ரூபாய் பாட்டில் தண்ணீர் வரப்பிரசாத மாகலாம்! ஆனால், ஏழை, எளியவர்கள் நிலை?

அவர்கள் கேட்பதெல்லாம் அரிசியைக் கூட இலவசமாகத் தரமுடிந்த நமது அரசு அடிப்படை தேவையான தண்ணீரை காசு வைத்து விற்கலாமா? என்பது தான்!

மற்றொரு முக்கியமான கேள்வி, மக்களுக்கான தேவைகளையெல்லாம் அரசே உற்பத்தி செய்து விற்பனை செய்வது சாத்தியமா?

அரசின் செயல்பாடு சிறந்த நிர்வாகமா? குறைந்த லாபத்திலான வியாபாரமா?
இதை விட குறைந்த விலையில் குடிநீர் விற்க சில தானியார்கள் கூட முன்வரலாம் ஆனால், சிறந்த நிர்வாகத்தை மக்கள் அரசிடம் மட்டும் தானே எத்ரபார்க்க முடியும்? வியாபாரிகள் கொள்ளை லாபமீட்டுவதை அரசு தடுத்து நியாயவிலையில் கிடைக்க செய்யும் நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாதா? 

காமராஜர் ஓர் ஆபூர்வத் தலைவர்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்


நினைத்தாலே பிரமிப்பாகத் தான் இருக்கிறது - கர்மவீரர் காமராஜரைக் குறித்து! 

தன்னைத் தானே கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிந்த மனிதன் இந்த நாட்டையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு காமராஜர் தான்!

பற்றுகள் இல்லாமல் அவர் வாழ்ந்த பத்திய வாழ்வு தான் அவரை பெருந்தலைவராக்கியது. இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு பொற்கால ஆட்சியை சாத்தியமாக்கிற்று.

பதவிகள் இருந்தும் பற்றற்று வாழ்வது துறவிலும் உன்னத துறவாகும்! 

அதிகார பலங்கள் அபரிமிதமாய் வாய்த்திருந்த போதிலும் ஆத்மபலத்தை மட்டுமே பயன்படுத்தி வாழ்வதற்கு பெரிதும் பக்குவம் தேவை.

அவர் காந்திய யுகத்தால் கட்டமைக்கப்பட்ட தலைவரல்லவா...?

மெத்தப்படித்த மேதாவியான பண்டித ஜவஹர்லால்நேருவே காமராஜரின் யோசனைகளை கேட்டுப் பெற்றார் என்றால், சமூகத்தை படித்ததில், மனிதர்களை மதிப்பீடு செய்வதில், பட்டறிவில், அனுபவஞானத்தில் காமராஜர் ஓர் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தார் என்பதுவன்றோ உண்மை!
வாராது போல் வந்த மாமணியாய் தமிழகத்தின் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்று அவர் ஆட்சி செய்த ஒன்பதே ஆண்டுகளில் ஒப்பற்ற பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு சென்றார்.

அந்த காலகட்டத்தில் தமிழகம் கல்வி எனும் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பெற்றது. தமிழகத்தை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் நீராதாரத்திட்டங்களான பல அணைகள் கட்டப்பட்டன. வைகை. மணிமுத்தாறு, கீழ்பவானி, அமாரவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, நொய்யாறு, ஆழியாறு... என்ற அணைகள் தான் இன்று தமிழகத்தை வாழவைத்துக் கொண்டுள்ளன, அவர் காலத்திற்குப் பின் இது போன்ற அணைகள் ஏன் உருவாக்கப்படவில்லை?

சில நூறு கோடிகளே அரசு வருவாயிருந்த ஒரு காலகட்டத்தில் நிகழ்த்த முடிந்த சாதனைகளை இன்று ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வரிவருவாய் பெறுகின்ற அரசுகளால் நிகழ்த்த முடியவில்லை.
குறைந்த பட்சம் ஏரி குளங்களைக் கூட தூர்வாறத் துப்பற்ற நிலைமைகளையே காண்கிறோம் - இத்தனைக்கும் ஆண்டுக்காண்டு ஏரி குளங்களைத் தூர்வாற பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டும் பலன் காண இயலவில்லை!
இது மட்டுமா? என்.எல்.சி உள்ளிட்ட எத்தனையெத்தனை மின் உற்பத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன... அதற்கு பின் வந்தவர்களால் ஏன் முடியவில்லை?
பெரம்பூரில் ரயில்பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை, திருச்சியில் பெல் தொழிற்சாலை, மணலியில் ஆயில்சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் போட்டோபிலிம் தொழிற்சாலை... போன்றவை லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த திட்டங்களல்லவா?

இவ்வளவு சிறந்த நல்லாட்சியை தந்து கொண்டிருந்தவர் தானே விரும்பியல்லவா பதவியைத் துறந்தார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்களில் பலர் அதிகார போதையில் சிற்சில தவறுகளை செய்யத் தொடங்கிய காலகட்டத்தில், காங்கிரசின் நற்பெயருக்கு ஒரு களங்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது எனத் தெரியவந்தவுடனேயே காமராஜர் அவர்கள் அகில இந்திய அளவில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் அதைத் துறந்து களப்பணிகளில் ஈடுபட முன்வரவேண்டும். அதன் மூலம் மட்டுமே மீண்டும் மக்களிடம் நம் நற்பெயரை மீட்டெடுத்து தக்க வைக்க முடியும் என்றார்.

இது சாதாரணத்திட்டமா? அதிகாரத்தை துறப்பது என்பது எவ்வளவு சிரமமானது. கர்நாடகத்தில் எடியூரப்பாவை பதவி இறங்க வைக்க பா.ஜ.க மேலிடம் எவ்வளவு பகிரத பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் காமராஜரோ ஏதோ செருப்பை கழட்டுவதை போல தன் பதவியை மிக இயல்பாகத் துறந்தார். அது அகில இந்தியாவின் அனைத்து முன்னணி தலைவர்களின் மனசாட்சியையும் உலுக்கியது.

காமராஜர் செயலின் எதிர்வினையாக ஒரிசா முதல்வர் பி.ஜூபட்நாயக், காஷ்மீர் முதல்வர் பக்ஷிகுலாம்முகமது, உத்தரபிரதேச முதல்வர் பி.ஏ.மண்டலாய் ஆகியோரும் முதலமைச்சர் பதவியைத் துறந்தனர். இதோடு முடியாமல் மத்திய அமைச்சர்களாயிருந்த மொரார்ஜிதேசாய், லால்பகதூர் சாஸ்திரி, எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம், பி.கோபால்ரெட்டி, கே.எல்.ஸ்ரீமாலி ஆகியோறும் பதவியைத்துறந்தனர்.

இறுதியாக பிரதமர் நேருவும் தன் பதவியை துற்க்க முன்வந்தபோது காமராஜர் அதனை உறுதியாகத் தடுத்துவிட்டார். 'அது இட்டுநிரப்பமுடியாத வெற்றிடம் எனவே நிச்சயம் நீங்கள் தொடரவேண்டும' என நேருவுக்கே கட்டளையிட்டார்.

உண்மையில், காமராஜர் இடத்தையும் அதற்குபின் இட்டு நிரப்பக்கூடிய யாரும் இல்லை என்பதே நிதர்சனமாயிருந்தது என்றாலும், அடுத்தவருக்கு அதிகாரம் செய்ய வழிவிட்டு கர்மமே கண்ணாய் தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட மகத்தான கர்மவீரர் காமராஜரே!

காமராஜர் ஓர் ஆபூர்வதலைவர். இனி இப்படியொரு தலைவன் கிடைக்க தமிழகம் நூறாண்டுகள் தவம் கிடக்க வேண்டுமோ? 

அழகிபோட்டிகளின் பின்னுள்ள பொருளாதார அரசியல்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

அமெரிக்காவின் அழகுப்பெண்ணாக இந்திய மரபு வழி வந்த நீனாதவுலூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஓர் இந்திய வம்சாவழிப்பெண் அமெரிக்க அழிகியாகத் தேர்வானது அங்கு சிலரிடம் இனவெறுப்பு, பாகுபாடு சார்ந்த பார்வையை தோற்றுவித்துள்ளது.

இது ஒரு புறமிருக்க, இந்தியப் பெண்கள் அடிக்கடி உலக அழகிகளாக, பிரபஞ்ச அழகிகளாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.!!

குறிப்பாக, 1951முதல் நடக்கும் உலக அழகிப் போட்டிகளில் இந்தியா மட்டுமே ஐந்து முறை வென்றுள்ளது. இந்த வகையில் இந்தியா உலக அழகி போட்டிகளில் பங்குபெறும் 180நாடுகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அதுவும் குறிப்பாக 1990களில் உலகமய, தாராளமய பொருளாதாரக் கொள்கையை இந்தியா ஏற்கத் தொடங்கிய பிறகு 1994ல் ஐஸ்வர்யாராய் 97ல் டயானா ஹெய்டன், 99ல் யுக்தாமுகி, 2000ல் பிரியங்கா சோப்ரா எனத் தொடர்ச்சியாக இந்தியப்பெண்கள் உலக அழகி பட்டம் சூட்டப் பட்டுள்ளனர். பிரபஞ்ச அழகி, புவி அழகி போன்ற போட்டிகளிலும் அவ்வப்போது இந்தியப்பெண்கள் அழகிபட்டம் வென்றாலும் அது அவ்வளவு பிரதான கவனம் பெறவில்லை.

உலகில் 199நாடுகளில் சில இஸ்லாமிய மற்றும் பழமைவாத நாடுகளைத் தவிர்த்து 180நாடுகள் பங்குபெறும் அழகிபோட்டிகளில் இந்தியப்பெண்களுக்கு அவ்வப்போது அழகிபட்டம் சூட்டப்பெறுவதில் ஒரு பொருளாதார அரசியல் மறைந்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ஏனென்றால், இந்தியாவில் எத்தனையோ தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்றைக் கூட தரவரிசையில் முதல் 200 இடங்களில் அங்கீகரிக்க மறுக்கும் மேற்கத்திய நாடுகள்,

இந்தியாவில் எத்தனையோ அற்புதமான திரைப்படைப்புகள், திரைக்கலைஞர்கள் இருந்தாலும் அவற்றை சட்டைசெய்யாத அமெரிக்க ஹாலிவுட் பார்வைகள்...
இந்திய பெண்களை அழகிகளாக தேர்ந்தெடுப்பதற்கும், ஸ்லம்டாக் மில்லியனரையும் ஏ.ஆர்.ரகுமானையும் தேர்ந்தெடுப்பதற்கும் சில பொருளாதார அரசியல் உள்நோக்கங்கள் இருக்கின்றன.

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியப்பெண்களிடம் அழகு சாதனப்பொருட்கள் அதிகம் பரிச்சயமில்லாமல் தான் இருந்தது,உஞ்சள்பூசி குளிப்பதும், மருதாணி இட்டுக்கொள்வதும், பொட்டுவைத்து, பவுடர்பூசி, பூவைப்பது மட்டுமே பெருமளவு புழக்கத்தில் இருந்தது.

ஆனால், கடந்த இருபதாண்டுகளில்இந்தியாவில் அழகு சாதனபொருட்களின் சந்தை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி அழகு சாதனப் பொருட்களின் இந்திய சந்தை 10,000கோடியை கடந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இது 30% வளர்ச்சியை பெற்று வருகிறது இன்றைய இந்தியாவில் மாநகரம், பெருநகரம் தொடங்கி சிற்றூர்கள் வரையில் ஆங்காங்கே அழகிப்போட்டிகள் நடக்கும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது.

இதன் விளைவாக தெருவுக்கு தெரு ப்யூட்டி பார்லர்கள், மட்டுமின்றி நியூட்ரிசியன் டயட் சென்டர்கள் பெருகியுள்ளன. தங்கள் உடலை அழகாக, டிரிம்மாக வைத்துக் கொள்வதில் இளம் பெண்களோடு இன்று ஆண்களும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

அழகு சாதனப் பொருட்களின் சந்தையில் 25%த்தை ஆண்களுக்கானவை பிடித்துள்ளன. அந்த வகையில் தற்போது ரூ 2,450கோடி ஆண்களின் அழகு சாதனச் சந்தை பெற்றுள்ளது.

உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த ஆண்டு முழுவதும் சில கார்ப்ரேட் நிறுவனங்கின் மாடலாக ஒப்பந்தம் செய்யப்படுகிறார். இதன்மூலம் விதவிதமான துணிகள், நகைகள், காலணிகள் தொடங்கி கார்களின் விளம்பரம் வரை இந்த அழகி பயன்படுத்தப்படுகிறார்.

இப்படியாக பலதரப்பட்ட நுகர்வுகாலச்சாரத்தை வேகமாக இந்தியாவில் வளர்த்தெடுக்க உலக அழகிகள் தேர்வு மேலைநாடுகளுக்கு உதவிவருகின்றன என்பதே மறுக்க முடியாத யதார்த்தம்.

கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இந்தியாவில் நுகர்வு கலாச்சாரம் 20 மடங்கு அதிகரித்துள்ளதில் அழகிபோட்டிகளின் பங்களிப்பை புறந்தள்ள முடியாது.

இதனால் தான் இந்த ஆண்டு உலக அழகிபோட்டி இந்தோனேஷியாவில் நடந்த போது கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு உலக அழகி போட்டிக்கு மாற்றாக பெண்களுக்கான கண்ணியமான போட்டி ஒன்றும் அந்நாட்டில் எதிர்ப்பாளர்களால் அரங்கேற்றப் பட்டது.

இதேபோல் இந்திய மண்சார்ந்த, மரபுசார்ந்த, அறிவார்ந்த கண்ணியமான போட்டிகளை இந்திய இளந்தலைமுறையினரிடம் நடத்துவதில் சில சுதேசி இயக்கங்கள் செயல்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தந்திடிவி, 
செய்தியும் பின்னணியும்,
18.9.2013

கபளீகரமாகும் காடுகள்

                                                                                                                 -சாவித்திரிகண்ணன்


மத்திய கணக்கு தணிக்கைதுறை மற்றொரு முறைகேட்டை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் வனங்கள் சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் துறைகளால் இணைந்து கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் வனத்துறை நிலங்களை தனியார்களுக்கு தாரைவார்த்த வகையில் ரூ 30,000கோடி கணக்கில் காட்டப்படவில்லை என்பது மத்திய கணக்குத் துறையின் கண்டுபிடிப்பு.

இந்தியாவின் பொருளாதாரம் எப்படி சரிந்துவருகிறதோ அதை விட அதிகமாக இந்தியாவின் சுற்றுச்சூழல் அம்சங்கள் சரிந்து வருகின்றன.

பொருளாதாரத்தை கூட பெருமுயற்சி எடுத்து மீட்டுவிடமுடியும். ஆனால் அழிக்கப்பட்ட பிறகு இயற்கைவளங்களை மீண்டும் உருவாக்குவது சுலபமல்ல. புவிவெப்பமாவதைத் தடுக்க வனவளம் மிக மிக அவசியம்!

காடு இல்லாவிட்டால் நாடு இல்லை, மனிதர்களுக்கு வாழ்க்கை இல்லை.
அடந்த காடுகளும், அழகிய மலைகளும் இயற்கையின் பொக்கிஷங்கள். 
நமக்கு மழைகிடைக்க, நீர் கிடைக்க மாத்திரமல்ல, அரிய மூலிகைகள், மரங்கள், பறவைகள், விலங்கினங்கள் ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளன காடுகள்.

காடுவளத்தில் நாம் உலக அளவில் கவனிக்கப்படும் நாடாக உள்ளோம்.
உலக பறவையினங்களில் 12.5% மானவை இந்தியக்காடுகளில் உள்ளன. 47,000வகை மூலிகைகள் 90,000வகை விலங்கினங்கள், பூச்சிகள்.... போன்றவற்றோடு விலை உயர்ந்த தேக்குமரங்கள், சந்தனமரங்கள், நிலக்கரி... போன்றவையும் காடுகளின் சொத்துகள்.
இவை தொடர்ந்து களவாடப்படுகின்றன. அதிகாரவர்கத்தினரும், மஃபியாவும் கை கோர்த்து இதைச் செய்கின்றனர்.

ஏராளமான பண்ணை தோட்டங்கள், பங்களாக்கள், ரிசார்டுகள், தொழிற்சாலைகள் காடுகளை ஆக்கிரமித்து கட்டமைக்கப்படுகின்றன. இதன்விளைவாக,

1970களில் இந்தியாவின் வனப்பகுதி 6,40,000சதுரகிலோமீட்டர்!
ஆனால், தற்போதோ 3,50,000சதுகிலோமீட்டராக சுருங்கியுள்ளது.

இந்த மாற்றத்திற்காக லட்சக்கணக்கான பழங்குடிகள் இடப்பெயர்வுக்கு நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர். இடப்பெயர்வுக்கு மறுப்பவர்கள் சித்திரவதைகள், கொலைகள், மானபங்கம் போன்றவற்றுக்கு ஆளாக்கப்பட்டுவருகின்றனர். இந்த எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கில்லை. 

ஆனால், 3,00,000த்திற்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளன. இந்தியாவில் தினசரி சராசரியாக 330ஏக்கர் வனநிலம் பறிபோகின்றது என்ற வபரம் தகவல் அறியும் உரிமைசட்டம் வழியாகத் தெரியவந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து காடுகளை காப்பாற்ற ஏராளமான சட்டங்கள், மசோதாக்கள், திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1953 -ல் காடுகள் தேசியமயமாக்கப்பட்டன.
1969 -ல் காடுகள் உரிமைச்சட்டம்
1972 -ல் காட்டு விலங்குகள் பாதுகாப்புசட்டம்
1988 -ல் தேசிய காடுகளுக்கான கொள்கை
2002 -ல் காடுகளுக்கான தேசிய கமிஷன் உருவாக்கம்
2007 -ல் வன உரிமை மசோதா 

இவை எல்லாமே உன்னத நோக்கங்கள் கொண்டவை. சந்தேகமில்லை.
ஆனால், எவையுமே முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை... என்பது ஒவ்வொரு ஆண்டும் தனது மொத்த வனப்பரப்பில் இந்தியா 0.6% இழந்து கொண்டு இருப்பதிலிருந்து தெரியவருகிறது.

உச்சநீதிமன்றம் எத்தனையோ சுற்றுச்சூழல் வழக்குகளில் மத்திய, மாநில அரசுகளை, அதிகாரிகளை எச்சரித்துள்ளது, கண்டித்துள்ளது. உச்சநீதிமனற்த்தின் அதிகாரமளிக்கப்பட்ட மத்திய கமிட்டி நமது வனவளங்கள் பறிபோவது குறித்த பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது.

எனினும், ஆளும் தலைமையிடம் ஒரு உறுதியான நிலைபாடு வனவளத்தை பாதுகாக்கும் விஷயத்தில் வெளிப்படாதது மிகவும் கவலையளிக்கிறது. 

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
16.9.2013 

கைதிகளுக்கு விடிவு எப்போது?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

தில்லியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும், சமூக சேவகருமான சுமா செபாஸ்டியன் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு - அனைவரும் கவனம் செலுத்த தவறிய - ஒரு முக்கிய விஷயத்தை கொண்டுவந்துள்ளார்.

இந்திய சிறைச்சலைகளில் விசாரணை கைதிகள் என்பதன் பெயரால் வருடக் கணக்கில் சிறைப்பட்டிருக்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய ஆதரவற்ற கைதிகள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சனா பிரகாசும் இது தொடர்பான விபரங்களை, விளக்கங்களைத் தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நாட்டில் எவ்ளவோ பிரச்சினைகள் இருக்கும் போது சிறைச்சாலைகளில் இருக்கும் அபாயகரமான கைதிகள் மீது ஏன் அக்கரைகாட்டவேண்டும்? என்று பலருக்குத் தோன்றும்.

கற்பழிப்பு பேர்வழிகள், பிக்பாக்கெட்காரர்கள், திருடர்கள், வழிப்பறி கொள்ளையர்கள், ரவுடிகள், கொலைகாரர்கள், பஞ்சமா பாதகத்திற்கு அஞ்சாத பயங்கரவாதிகள் ஆகியோரே நமது சிறைசாலைகளில் அடைபட்டிருக்கிறார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

இதில் ஒரளவு உண்மை இருக்கறிது. ஆனால், உண்மையில் சுமார் 60முதல் 70%கைதிகள் விசாரணைகைதிகளாக சிறைச்சாலைகளுக்கும், நீதிமன்றங்களுக்குமாக அலைகழிக்கப்பட்டவண்ணமுள்ளனர் என்பதே யதார்த்தமாக உள்ளது!

தற்போது இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கமுடிந்த கைதிகளின் எண்ணிக்கை 3,32,782 தான்! ஆனால், அதையும் மீறி சுமார் 60,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் கைதிகள் சிறைகொட்டிகளில் திணிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 13,900கைதிகளை மட்டுமே அடைக்க கூடிய தமிழக சிறைகளில் தற்போது சுமார் 22,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

நமது காவல்துறை, வழக்கறிஞர்கள், பிரபல அரசியல்வாதிகள் அல்லது செல்வாக்கோடு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள், நீதிமன்ற மன்ற நடைமுறைகள் போன்றவை குறித்தெல்லாம் ஓரளவு அறிந்தவர்களுக்குத் தெரியும் உண்மையான குற்றவாளிகள் எப்படியெல்லாம் தப்பித்துக் கொள்கிறார்கள் அல்லது விரைந்து விடுவிக்கப்படுகின்றனர் என்பதும், அப்பாவிகள், கேள்விகேட்க நாதியில்லாத ஏழை, எளிய கைதிகள் - வாய்த்தகராறு முற்றி கை கலப்பில் கைதானவர்கள் - வருடகணக்கில் சிறையில் உள்ளனர் என்பதும்!

சமீபத்திய சில மனித உரிமை அமைப்புகள் ஆய்வில் சில பட்டவர்த்தனமான உண்மைகள் தெரியவந்துள்ளன.

சில நெருக்கடியான வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை பிடிக்க முடியாததே போலீசார், ஏற்கெனவே சிறு, சிறு வழக்குகளில் கைதாகி விடுதலையான அப்பாவிகளை பிடித்து பொய்வழக்கு ஜோடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்கின்றனர். நீதிமன்றங்களின் பணிச் சுமைகளுக்கிடையே வாய்தா மீது வாய்தா, வழக்கு தள்ளிவைப்பு... என வருடக்கணக்கில் இவர்களும் விசாரிக்கப்படாத விசாரணை கைதிகளாக அலைகழிக்கப்படுகின்றனர்.

பிணையில் விடுதலையாக பணமில்லை, எடுக்க ஆளில்லை என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கானோர்.

'வெளியில் வந்தால் போக்கிடமில்லை' என்ற நிலையிலிருப்பவர்கள் ஜெயிலில் போலீசாரின் அடிமைகளாக மாறி பலதரப்பட்ட பணிகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர்.

என்ன காரணத்திற்காக கைதாகியுள்ளோம் என்றே தெரியாமல் விரக்தியில் மனமுடைந்து கிடப்பவர்கள்...


எனபலதரப்பட்டவர்கள் நீதிமறுக்கப்பட்டவர்களாக நெடுநாள் சிறைகளில் வாடி வதங்கி கொண்டுள்ளனர். 'ஒரு நாகரீகமான சமூகம் இந்த அநீதி தொடர அனுமதிக்கலாகாது'. அதுவும், 'பல குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படலாது' என்பதை வெறும் ஏட்டளவில் வாரத்தைகளில் கூறிக் கொண்டு, நடைமுறையில் எதிர்மறையாகச் செயல்படுகிறோம்' என்பதே சமூக ஆர்வலர்களின் பார்வையாகும்.

இது போன்ற ஒரு வழக்கு 1979ல் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தபோது உச்சநீதிமன்றமே ஒரு குழுவை நியமித்து விசாரித்து 27,000விசாரணை சிறைக்கைதிகளை விடுவித்தது. ஆனால் மீண்டும், மீண்டும் இது போன்ற நிலமைகள் ஏற்படாதவண்ணம் சில தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் தான் இதற்கு தீர்வாகும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டு, குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நீதிபரிபாலனம் செய்யப்படுவதும் அப்பாவிகள் அநாவசியமாக சிறைகளில் அல்லப்படுவதை தவிர்க்க வழி வகை காண்பதும் மிக மிக முக்கியமாகும்.


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
14.9.2013 

Thursday, September 12, 2013

நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மசோதா



"இவர்கள் சமுதாயத்திற்கு தேவையானவர்களாகவும் உள்ளார்கள். அதே சமயம் தொந்தரவானவர்களாகவும் உள்ளனர்" - இது தான் நடைபாதை வியாபாரிகள் குறித்த பொதுமக்களின் பார்வை.

பட்ஜெட்டுக்கு ஏற்ப குறைந்த விலைக்கு பல தரப்பட்ட பொருட்களை வாங்கவும், உடனடியாக ஒரு பொருளை வாங்கிச் செல்வதற்கும் மிகப்பெரும்பாலான மக்கள் நடைபாதைக் கடைகளையே நாடுகின்றனர்.
அதேசமயம் குறைந்த முதலீட்டில் ஏராளமானோர் சுயமாக வாழ்வதற்கும் நடைபாதை வாயாபாரமே ஆதாரமாகிறது.

இந்தியாவில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான நடைபாதை வாயாபாரிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே ஏழெட்டு லட்சம் நடைபாதை வியாபாரிகள் இருக்ககூடும் என நம்பப்படுகிறது.

இவர்கள் உள்ளூர் போலீஸ் மற்றும் 'தாதாக்களின் தொந்தரவுகளையும், உள்ளாட்சி அமைப்புகளின் இடையூறுகளையும் அடிக்கடி சந்திக்கிறார்கள் அதேபோதில், 'நடைபாதைகளை ஆக்கிரமிக்கிறார்கள்' என்ற குற்றசாட்டுகளுக்கு ஆளாகிறார்கள்!

எனவே இவர்களை ஒழுங்குபடுத்த, இத்தொழிலை சட்டப்படி முறைபடுத்த பல முயற்சிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன. நடைபாதைவியாபாரிகள் தரப்பில் இதற்கான வேண்டுகோள் நீண்ட நாட்களாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது.

நடைபாதை வியாபாரிகளுக்கான கொள்கை - 2004ல் உருவானது. மீண்டும் இது நகரங்களின் நடைபாதை வியாபாரிகளுக்கான தேசிய கொள்கையாக -2009ல் செழுமை பெற்றது.

நடைபாதை கடைகள் பெரும்திரள் மக்களின் வாழ்வியல் ஆதாரமாக உள்ளது. என்பதை - 2010ல் உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. இதை தொடர்ந்தது இவர்களுக்காக உருவாக்கப்பட மசோதாவுக்கு ஆகஸ்ட் -17-2012ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் உச்சமாக செப்டம்பர் 2013ல் தற்போதைய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைபடுத்தல் மசோதாவின் முக்கிய அம்சங்கள்;
  • நடைபாதை வியாபாரத்திற்கான இடங்களை வரையறுப்பது

  • நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய உரிமம் வழங்குவது

  • நடைபாதை வியாபாரம் தொடர்பான விவகாரங்களை ஒழுங்குபடுத்த அந்தந்த ஊர்களிலேயே குழு அமைப்பது.

  • அக்குழுவில் நடைபாதை வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் சங்கம், உள்ளாட்சி அமைப்பின் பிரிதிநிதி, காவல்துறை, முனிசிபல் கமிஷனர் ஆகியோர் இடம்பெறுவர்.

  • சூழலுக்கேற்ப பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் நலன் ஆகிய இரண்டையும் கவனத்தில் கொண்டு இவர்கள் முடிவுகளை எடுப்பர்

  • இனி உள்ளூர் ரவுடிகள் போலீசார் போன்றோர் நடைபாதை வியாபாரிகளிடம் 'மாமுல்' வாங்க முடியாது.

  • நடைபாதை வியாபாரிகளுக்கான சமூக அந்தஸ்த்தை இம்மசோதா உறுதி செய்கிறது.

  • மாநில அரசும், உள்ளாட்சி அமைப்பும் நடைபாதை வியாபாரிகள் விஷயத்தில் முறையாக திட்டமிடவேண்டும்.

  • ரயில்வே துறைக்கான இடங்கள், ரயில்கள் போன்றவற்றில் கடை போடும் வியாபாரிகள் தண்டிக்கப்படுவார்கள்.

  • அனுமதி வழங்கப்படாத இடங்களில் நடைபாதை வியாபாரம் செய்யக்கூடாது.