Wednesday, July 3, 2013

என்.எல்.சி போராட்டம்



நெய்வேலி பழுப்பு நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை விற்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு தமிழகத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்டுகள் கர்ஜிக்கிறார்கள்....
தி.மு.கவினர் தீப்பிழம்பாகிறார்கள்...
பா.ம.கவினர் பாய்கிறார்கள்....
விடுதலைச் சிறுத்தைகள் வீறுகொண்டெழுகிறார்கள் ...
பா.ஜ.கவினர் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்! (பா.ஜ.க ஆட்சியில் தான் முதன்முதல் இத்திட்டம் அருண்ஷோரியால் முன்வைக்கப்பட்டது)
காங்கிரஸாரோ மென்று விழங்குகிறார்கள்....
முதலமைச்சரோ பிரதமருக்கு எச்சரிக்கை கடிதம் எழுதுகிறார்!
அனைத்துகட்சித் தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு அணிதிரட்டுகின்றனர்.

ஆக, ராஜ்யசபா தேர்தலுக்கான முஸ்தீபுகளையும், பேரங்களையும் கடந்து, இன்றைய தமிழக அரசியலை என்.எல்.சியின் ஐந்து சதவிகித பங்கு விற்பனை ரௌத்திரம் கொள்ள வைத்துவிட்டது.

மத்திய அமைச்சரவையின் முடிவு ஏற்கத்தக்கதா?

அனைத்துகட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகள் நியாயமானதா?

என்பதை ஆய்வு செய்வதற்கு முன்பு என்.எல்.சி குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போம்.

1956ல் காமராஜ் ஆட்சியில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் லாபகரமாகச் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது.
2490 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது. இதில் 60%த்தை தமிழகத்திற்கு மத்திய அரசு தருகிறது.

மிக ஆழமாக சுரங்கங்கள் தோண்டப்பட்டு, அவற்றிலிருந்து நாளொன்றுக்கு 45,000டன் நிலக்கரியை இந்நிறுவனம் எடுக்கிறது.
இதில் சுமார் 18,000 நிரந்தரமாக்கப்பட்ட தொழிலாளர்களும் சுமார் 15,000 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நிரந்திரமில்லாமலும் வேலைபார்க்கிறார்கள்.

அடிக்கடி சர்ச்சைகளிலும், போராட்டங்களிலும் அடிபடும் இந்நிறுவனத்தின் பங்குகளை 2002ஆம் ஆண்டும், 2006ஆம் ஆண்டும் (பத்துசதவிகிதம்) விற்பனை செய்ய முயன்றது மத்திய அரசு. ஆனால் அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அனைத்து தொழிற்சங்கங்களும் ஆவேச போர்கோலம் பூண்டன. எனவே மத்திய அரசு பின்வாங்கியது.

ஆயினும் 1991 முதல் உலகமய, தாரளமய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா தன்னை இணைத்து கொண்டது தொடங்கி, பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியார் மயமாக்கியும், பொதுத்துறை நிறுவன பங்குகளை கிட்டதட்ட 50சதவிகிதம் வரையில் விற்பனை செய்தும் வருகிறது. தற்போது செபி அமைப்பு தந்த பரிந்துரை காரணமாக 5 சதவிகித பங்கை விற்க முன்வந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் 93.5 சதவிகித பங்கு அரசின் வசம் உள்ளது. ஐந்து சதவிகித விற்பனைக்குப் பிறகு 88.5% அரசின் வசம் இருக்கும்.

ஃ இந்த விற்பனையால் பொதுத்துறை பலஹீனப்படுத்தப்படுகிறது
ஃ பொதுத்துறை தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது
ஃ இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்
என்பதே எதிர்பவர்கள் வைக்கும் வாதமாகும்!

இதன்மூலம் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் உணர்ச்சிகொந்தளிப்பில் ஆழ்த்தி ஒன்று சேர்க்கிறார்கள்.

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்பு சில யதாரத்தங்களைப் பார்ப்போம்.

ஃ பொதுத்துறையான என்.எல்.சியின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் மீது கடந்த காலங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஃ சுரங்கப்பணிகளை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு 'காண்டிராக்ட்' விடும் வகையில் பலநூறுகோடி ரூபாயை அதிகாரிகள் கமிஷனாக பெறுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்துள்ளன,

ஃ இந்த நிறுவனத்தில் 10 முதல் 25வருடங்கள் வரையிலும் மிகக்குறைந்த சம்பளத்திற்கு - நிரந்தரபடுத்தப்படாமல் - திரைக்கூலிகளாக தொழிலாளர்கள் சுரண்டப்படும் சூழலால் கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சட்டவிரோத மனிதாபிமானமற்ற செயலுக்கு ஒரு பொதுத்துறை நிறுவனமே துணைபோனது எப்படி?

ஃ தொழிலாளர்களைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் (30,000பேர்) எக்சியூட்டிவ்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஒன்று, ஒன்றரைலட்சம் என சம்பளம் வழங்கப்படுகிறது.

ஃ இந்த வகையில் தேவையற்ற வகையில் கூடுதல் அதிகாரிகள், ஊதாரித்தனமான செலவினங்கள், அதீத அலட்சியபோக்குகள், தங்குதடையற்ற ஊழல், பணியில் அக்கரையின்மை, பொறுப்பின்மை போன்ற காரணங்களால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஃ நிர்வாகத்தோடு ஒத்துபோவதால் ஒரு சில தொழிற்சங்களும், தலைவர்களும் இதில் ஆதாயமடைகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தொழிலாளர்கள் தரப்பிலிருந்தே எழுந்துள்ளது.

இந்த யதார்த்தங்களை நாம் கணக்கிலெடுத்துப் பார்த்தால் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு ஜவஹர்லால் நேருவால் தோற்றுவிக்கப்பட்ட சோசலிஷகொள்கைகளும், அர்பணிப்பு உணர்வுகளும் தற்போது அடியோடு மாறியுள்ளதைக் காணலாம்.

அன்று பொதுத்துறை நிறுவனங்களை கோவில்களாக பாவிக்கும் தன்மை ஆள்வோரிடமும், பெதுமக்களிடமும் இருந்தது.

அதனால் தான் இந்த என்.எல்.சி உருவாக அன்றைய தினம் தன் 600ஏக்கர் நிலத்தை ஜம்புலிங்க முதலியார் தானமாகக் கொடுத்தார்!

அவர் மட்டுமல்ல, சாதாரண ஏழை, எளிய மக்களும் கூட தங்களது அரை ஏக்கர், ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரையிலான நிலங்களை தானாமாகவோ அல்லது மிகக்குறைந்த விலைக்கோ மனநிறைவுடன் அரசிற்கு நிலங்களை ஒப்புவித்தனர்.

ஆனால், இன்றைய நிலை என்ன?
இயற்கை எரிவாயுவை கொண்டு செல்ல கெயில் நிறுவனம் விவசாய நிலங்களின் அடிப்பகுதியை பயன்படுத்திக் கொள்ள - விவசாயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையிலும் - பணம் தந்து பெற்றாலுமே கூட அது போதாது என மக்கள் போர்கோலம் பூணுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களின் குணாம்சங்களே தலைகீழாக மாறியுள்ளன.

ஒரே ஒரு பேருந்து வைத்துள்ள தனியார் கூட லாபத்துடன் செயல்படும்போது பல்லாயிரக்கணக்கில் பேருந்து ஓட்டும் அரசு பலநூறு கோடி நஷ்டப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனமோ 42,570கோடிக்கடனிலும், 22000கோடி இழப்பிலும் செயல்பட்டுக் கொண்டிருக்க, தனியார் ஏர்வேஸ்களோ அபரிமிதமான லாபத்தை அள்ளுகின்றன.

அதெல்லாம் சரி, 'என்.எல்.சி லாபமாக அல்லவா செயல்படுகிறது?' எனக்கேட்கலாம்.
என்.எல்.சியின் லாபம் வெறும் 1400கோடிதான்!
இதுவே முறையாக நிர்வாகம் செய்யப்பட்டிருந்தால் சுமார் 50,000கோடி லாபமீட்ட முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய பொதுத்துறை நிறுவனங்களால் அதிகார வர்க்கமும் குறிப்பாக அதீத எண்ணிக்கையில் பணி அமர்த்தப்பட்ட அதிகாரிகளும், சில காண்டிராக்டர்களும், சில தொழிற்சங்க தலைவர்களும் பயனடையலாம்.
ஆனால், அதன் பொதுநலன்சார்ந்த அறநோக்கம் வீழ்த்தப்பட்டுள்ளது எனவே முதலில் அதைத்தான் மீட்டெடுக்க வேண்டும்.

அதற்கு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் வேண்டும். தற்போது 5சதவிகித பங்குகள் பொதுமக்களுக்குத் தான் தரப்படுகிறது..
இந்த பங்கை பெறுகிற ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து கேள்விகேட்கும் உரிமை வந்துவிடுகிறது.
இதன்மூலம் திரட்டப்படும் 466கோடி மூலமாக சில விரிவாக்கப் பணிகள் நடைபெறும். கூடுதல் தொழிலாளர்கள் வேலை பெறுவர் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.
தனியார் நிறுவனங்கள் பலவுமே தங்களின் 25சதவிகித பங்குகளை பொதுமக்களுக்கு விநியோகித்து பணம் திரட்டும் போது பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் பங்குகளை மக்களுக்கு தர முன்வருவதன் மூலம் இன்னும் வெளிப்படைத் தன்மையுடனும், ஜனநாயகத்துடனும் செயல்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.  

No comments: