Thursday, April 11, 2013

காலதாமதமாகும் காவல்துறை சீர்திருத்தம்



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

காவல்துறையின் மீதான கண்டனங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
பஞ்சாபில் பாலியல் புகார் கொடுக்கச் சென்ற பெண், காவல்களால் தாக்கப்பட்டார்.
வன்முறையை அடக்க முயற்சிக்கும் போது வரம்புமீறி அப்பாவிகள் தாக்கப்படுகின்றனர்.
அடிக்கடி நடக்கும் என்கௌண்டர்கள்... காவல்துறையின் திட்டமிட்ட கொலைகளாக அறியப்படுகிறது. காவல்நிலையத்திலேயே சம்பவிக்கும் மரணங்கள்...., சித்திரவதைகள்
போன்ற பல்லாயிரம் புகார்களை முடிவுக்கு கொண்டுவரவும், மக்களின் குரலுக்கு செவிசாய்க்கும் காவல்துறையை கட்டமைக்கவும் 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் காவல்துறை சீர்திருத்தத்தை அமல்படுத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுவதால் உஷ்ணமான உச்சநீதிமன்றம் தற்போது மத்திய மாநில அரசுகளுக்கு ஏன் காவல்துறை சீர்திருத்தம் அமல்படுத்தப்படவில்லை?" என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நமது காவல்துறைசட்டம் பிரிட்டிஷ் அரசால் 1861ல் உருவாக்கப்பட்டது அது பிரிட்டிஷ் பேரரசுக்கு விசுவாசமிக்க காவல்துறையை கட்டமைக்க உருவாக்கப்பட்டது. அது ஆட்சியாளர்கள் என்ற எஜமானர்களுக்கான ஏவலாளாக காவல்துறையை கட்டமைத்தது. அதே சட்டம், அதே அமைப்பு அப்படியே சிதையாமல் சுதந்திரத்திற்கு பிறகான இந்திய ஆட்சியாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது என்றால் நமது ஆட்சியாளர்கள் இன்னும் மன்னராட்சி மனோபாவத்திலே திளைக்கின்றனர். மக்களாட்சி தத்துவத்தை, ஜனநாயக மாண்புகளை மதிக்க தயாரில்லை என்பதே அர்த்தமாகும்.

காவல்துறையை கண்ணியாமாக, சுதந்திரமாகச் செயல்படவைக்க வேண்டும் என்ற விவாதம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனல்பறக்க நடந்து கொண்டு தானிருக்கிறது. இதன் முதல் கட்டமாக 1977ல் தேசிய காவல்துறை ஆணையம் அமைக்கப்பட்டு அது எட்டு அம்சதிட்டத்தை வடிவமைத்தது. ஆயினும் அது இன்றுவரை எழுத்துவடிவிலேயே அமைந்து எட்டாக்கனியாகிவிட்டது.

அதன்பிறகு மீண்டும் இக்குரல்கள் வலுப்பெறவே ரிபேரியாகமிட்டி, பத்மநாபன்கமிட்டி, மாலிமாத் கமிட்டி என அடுத்தடுத்து கமிட்டிகள் அமைக்கப்பட்டு கண்துடைப்பு நாடகங்களே அரங்கேறின.

மொத்தத்தில் நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே காவல்துறையை கட்டாயப்படுத்தி காரியம் சாதிக்கின்றன. அதற்காக காவல்துறையை அடிமையாய் வைத்திருப்பதையே ஆதரிக்கின்றன. 

தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றில் நடந்த துப்பாக்கி சூடு, பரமக்குடிகலவரம் குஜராத்தில் 2002ல் நடந்த மதக்கலவர அடக்குமுறை அத்துமீறல்கள், மேற்குவங்கத்தில் நடந்த நந்திகிராம துப்பாக்கி சூடுகள்.... இவை யாவுமே ஆட்சியாளர்களின் ஆணையை நிறைவேற்ற காவல்துறை ஏற்றுக்கொண்ட பழிகளாகும்! 
இவை இந்தியாவில் மட்டுமல்ல, காமன்வெல்த் நாடுகள் அனைத்திலும் காணக்கூடியதாக இருப்பதை கருதியே 2005ல் காமன்வெல்த் நாடுகள் அனைத்திலுமே இந்த காவல்துறை சீர்திருத்தம் அமலாக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, காவல்துறை சீர்திருத்தம் என்பது

  • ஜனநாயக மாண்புகளுக்கும், சமூகநலத்திற்கும் மதிப்பளிப்பது 

  • வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிபடுத்துவது

  • தனிமனித சுதந்திரத்திற்கு பாதகம் வராமல் பாதுகாப்பது

  • அனைத்துவிதமான மனித உரிமைகளையும் பாதுகாப்பது.

  • சட்டத்திற்கு பொறுப்பேற்று, தனது சேவையில் சமூக நலனை பிரதிபலிப்பது... போன்றவையாகும்.
இதை அமல்படுத்துவதில் ஜனநாயகத்தை மதிக்கும் அரசுகளுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
12-3-2013

No comments: