-சாவித்திரிகண்ணன்
தமிழ் நாட்டில்
கடந்த ஒராண்டாக எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த கூட்டுறவு சங்க தேர்தல்கள் ஏப்ரல்
5தொடங்கி நான்கு கட்டங்களாக நடக்கவுள்ளன. அதன் பிறகு ஐந்து நிலைகளில் நிர்வாகிகள்
தேர்தலும் நடக்கும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பிப்ரவரி 15க்குள்
இத்தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பற்பல பிரச்சினைகள், வழக்குகள், அரசியல்
உள்நோக்கங்கள் காரணமாக காலம் தாழ்த்தப்பட்டு விட்டது.
ஏழை, எளிய, நடுத்தர
பிரிவு மக்களின் உயர்வுக்கு கூட்டுறவு அமைப்புகளே அடித்தளமிடுகின்றன. அந்த வகையில்
அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால்நேரு, வல்லபாய்பட்டேல், வ.உ.சி போன்றவர்களால்
வளர்த்தெடுக்கப்பட்ட கூட்டுறவு அமைப்புகள் காமராஜர் ஆட்சி காலத்தில் வளர்ச்சியின்
உச்சகட்டத்தில் இருந்தன.
இந்தியாவிலேயே தமிழகத்தின் திருவள்ளுவர்
மாவட்டத்தின் திருர் கிராமத்தில் தான் முதல் கூட்டுறவு சங்கம் 1904ல்
அமைக்கப்பட்டது, இன்று 22,532 சங்கங்களாக பல்கி பெருகியுள்ளது.
வேளாண்மை,
பால் உற்பத்தி, வீட்டுவசதி, நெசவு, சர்க்கரை ஆலைகள், சிறுதொழில்கள்.... என பற்பல
வகைகளில் உருவான கூட்டுறவுகளே கோடிக்கணக்கான மக்களை வயிறு காயாமல் காப்பாற்றி
வருகின்றன.
இவை முழுக்க, முழுக்க மக்கள் அமைப்பு. இதில் அரசியல் தலையீடுகள்
இல்லாதிருந்த வரை இவை லாபகரமாக இயங்கின. எப்போது அரசியல் தலையீடுகள் ஆரம்பித்தனவோ
அன்று முதல் கூட்டுறவு என்பது கூட்டுக்கொள்ளை என்பதான தவறான புரிதலுக்களானது.
இதனால் நஷ்டப்பட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆண்டுக்காண்டு அரசு மானியம்
வழங்கப்பட்டுவருகிறது.
இந்தச் சூழலில் தான் சமூக ஆர்வலர்கள் பலரின் தளராத
போராட்டத்திற்குப் பிறகு தற்சார்பு கூட்டுறவு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி
கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதற்கு
உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது மிக அவசியமான, நல்ல சட்டம் என்றாலும் இதனை
சம்பந்தப்பட்ட கூட்டுறவுசங்க தலைமைகள் தன்நலமின்றி பொதுநோக்கோடு செயல்படுத்தும்
போது தான் பலன்கள் இருக்கும்.
இதற்கு சங்க உறுப்பினர்கள் மத்தியில்
விழிப்புணர்வும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியமும் தேவை. இல்லையெனில் வெறும்
சட்டத்தால் பெரிதாக எதையும் சாதித்திட முடியாது.
முதலாவதாக இந்த
தேர்தல்களில் அரசியல் அடையாளம் அறவே தவிர்க்கப்படவேண்டும்.
தேர்தல்கள்
முறைகேட்டில்லாமல் நடத்தப்படவேண்டும்.
பொதுசொத்தை சூறையாட நினைப்பவர்களை
மக்கள் முற்றாக புறக்கணிக்கவேண்டும்.
நம்பகமான நல்ல தலைமையை அடையாளம் கண்டு
ஆதரிக்கவேண்டும்.
கூட்டுறவு தேர்தலில் தில்லுமுல்லு செய்யத் துணிபவர்களை
கடும் தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.
இவை நடந்தேறினால் கூட்டுறவு அமைப்புகள்
செழித்தோங்கும். மக்கள் வாழ்க்கை வளம் பெறும். கூட்டுறவு அமைப்புகள் அரசிடமிருந்து
எதிர்பார்ப்பது நிதியை அல்ல நீதியைத் தான்!
அந்த நீதி கூட்டுறவு
அமைப்புகளில் நான்கு நிலை நாட்டப்ப படுமானால் அதுவே நிதி ஆதாரத்தை பெருக்கி
கொள்ளும்.
ஆகவே, கூட்டுறவு அமைப்புகளை அரசியல் ஆதிக்கத்ததிலிருந்து
விடுவித்தால், அதன்மூலம் மக்கள் அடையும் ஆதாயங்கள் காரணமாக இந்த ஆட்சிக்கு நல்ல
பெயர் கிடைக்கும். அந்த நல்லபெயர் ஆண்டு கொண்டிருக்கும் கட்சிக்கும்
கைகொடுக்கும்!
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
04-3-2013
No comments:
Post a Comment