Monday, February 11, 2013

ஊழல் ஒழிய லோக்பால் வரட்டும்..


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் விளைவாக இரண்டு அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளன.

ஒன்று, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 'லோக்பால் மசோதா' கொண்டுவரப்படும். 
மற்றொன்று, அரசியல்வாதிகள், உயர்அதிகாரிகள் ஊழல்களை விசாரிக்க 22 சி.பி.ஐ நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.

கடந்த பல ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட முறை பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் நிறைவேற்ற முடியவில்லை.

இதனால் அண்ணாஹசாரே தலைமையிலான ஒரு குழு இதற்காகப் போராடியது. சந்தோஷ்ஹெக்டே, அரவிந்த் கேஜ்ரிவால், பிரசாந்த்பூஷண் ஆகியோர் 'ஜன்லோக்பால்' என்ற ஒரு முன்மாதிரி மசோதாவை அரசுக்கு உருவாக்கி கொடுத்தனர்.

அதில் பிரதமர், நீதிபதி உள்ளிட்டவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்! எந்த ஊழல் வழக்கும் இரண்டாண்டுகளில் நடத்திமுடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவேண்டும். ஊழல்வாதிகளின் சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற வலுவான வடிவம் தரப்பட்டிருந்தது.

இந்த ஜன்பால் மசோதாவை இந்தியாவில் மிகப்பெரும்பாலான அரசியல்கட்சிகள் விரும்பவில்லை. இதனால் வலுக்குறைந்த லோக்பால் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்தது. அந்த மசோதாவும் 2011ன் இறுதியில் நாடாளுமன்றத்தில் மட்டுமே தாக்கலானது மாநிலங்களவையில் அதனை தாக்கல் செய்ய முடியவிலைல.

இந்நிலையில் மத்திய அரசின் மீதான ஊழல்புகார்கள் அதிகரித்தன.
எனவே, தன் மீதான ஊழல் கரைகளை கழுவிக்கொள்ளும் பிராயசித்தமாகவாவது இந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்றியாக வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அண்ணாஹாசரே பிப்ரவரி மாதம் தொடங்கி லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாடுமுழுக்க சுற்றுப்பயணம் செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தான் தற்போது மத்திய அமைச்சரவை கூடி லோக்பால் மசோதாவை கொண்டு வருவதென முடிவெடுத்துள்ளது. 

இதன் அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் 'லோக்ஆயூக்தா' நிறுவப்பட வேண்டும். அப்போது தான் மாநில அரசுகளின் ஊழல்கள் ஒரளவேனும் குறையும். இந்த வகையில் இந்திய மாநிலங்கள் பத்தில் ஏற்கெனவே லோக்ஆயுக்தா நிறுவப்பட்டு அதன் மூலம் அந்தந்த மாநிலங்கள் சில சிறப்பான பயன்பெற்றதைக் கூட பட்டியலிட்டு கூறமுடியும்! தன்மீது நம்பிக்கையுள்ள எந்த மாநில அரசுக்கும் லோக்ஆயூக்தாவை கொண்டுவருவதில் தயக்கமிருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் இப்போது 34 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தேங்கி உள்ளன. இந்நிலையில் 22 சி.பி.ஐ நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஏனெனில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மீதான ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தேங்கியுள்ளன.

ஏற்கெனவே சில முறை இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆனால், இதை நிறைவேற்றத் துணியவில்லை மத்திய அரசு. எனவே இந்த முறை இரண்டு மாதகால அவகாசத்தில் 22 சி.பி.ஐ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டேயாக வேண்டும் என கால அவகாசத்தை கணித்தே கூறிவிட்டது உச்சநீதிமன்றம்!

லோக்பால் மசோதா - வலுவானதா? வலுவற்றதா? என்ற வாதங்கள் இருந்தபோதிலும் முதலில் அது வரட்டும் பின்னர் அதை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் நிலைபாடாக உள்ளது.

அதே போல சி.பி.ஐ நீதிமன்றங்கள் வந்தால் மட்டும் போதாது.
ஊழல் அரசில்வாதிகள், அதிகாரிகள் விசாரிக்கும் அனுமதியை அரசு விரைந்து வழங்கவேண்டும். சிபி.ஐ சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
31-1-2013

Sunday, February 10, 2013

அரசு மருத்துவமனைகளும், அத்தியாவசிய தேவைகளும்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

மருத்துவமனைகள் என்பவை உயிர்களை காப்பாற்றுவதற்காக என்பது தான் நம் அனைவரின் எண்ணமாக உள்ளது. ஆனால் நமது அரசு மருத்துவமனைகளோ உயிர் பறிப்பிற்கான உறைவிடங்களாகி விட்டனவோ... என்று எண்ணத்தக்க சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சமீபத்தில் கொளத்தூர் அரசு மருத்துவமனையில் கழிவறை சென்ற 14வயது சிறுவன் விக்னேஷ் தடுப்புச்சுவர் சரிந்ததில் நான்காவாது மாடியிலிருந்து விழுந்து உயிர் இழந்துள்ளான்.

கடந்த வருடம் சுதந்திரத்தினம் ஆகஸ்ட் 15 அன்று பிறந்தது ஒரு குழந்தை! எடை குறைவாயிருந்த அக்குழந்தை கஸ்தூர்பா அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எலி கடித்து குதற இறந்துபோனது.
இதன் பிறகு மருத்துவமனை வளாகத்தில் உள்ள எலிகள், சுற்றித்திரியும் நாய்கள், பாம்புகள், பன்றிகள்... என ஒரு வேட்டையே நடத்தப்பட்டு அந்த பிரச்சினை ஆறப்போடப்பட்டுவிட்டது.

ஆனால், இன்று வரை அரசு மருத்துவமனைகள் சந்திக்கும் அவலங்கள் பல முடிவுக்கு வரவில்லை.

அரசு மருத்துவமனைகளில் மக்களின் உயிர்காக்கும் மருந்துகளில் சுமார் 40வகை மாத்திரை, மருந்துகள் பெரும்பாலும் 'ஸ்டாக்கில்' இருப்பதில்லை. பற்றாக்குறை பதிலை கேட்டு பதறியபடி நோயாளிகள் வெளியில் அலைந்து திரிந்து வாங்கி கொள்ளவேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் 2011-12ஆம் ஆண்டில் மருந்துமாத்திரைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 7கோடியே போதாமல் இருந்த நிலையில், 2012 - 13க்கு 6கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு நிதிகுறைத்ததையடுத்து, மாநில அரசும் இவ்விதம் குறைத்துள்ளது. மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் ஏழில் ஒரு பங்கைத் தான் 120கோடி மக்களின் ஆரோக்கியம் காக்கும் மருத்துவத்திற்கு ஒதுக்கிறது... போன்றவை இன்னும் விரிவான தளத்தில் விவாதிக்க வேண்டியுள்ளது.

இதனால் அரசு மருத்துவமனைகள் சந்திக்கும் அவலங்கள் சொல்லி மாளாது. தமிழகத்தில் சுமார் ஆயிரத்து நானூற்று சொச்சம் ஆரம்ப சுகாதாரமையங்கள் உள்ளன! இதில் நூற்றுக்கணக்கான மையங்களில் டாக்டர்கள் இல்லை. மற்ற சில நூற்றுக்கணக்கான ஆரம்ப சுகாதார மையங்களிலோ தற்காலிக டாக்டர்கள் தான்! இது மட்டுமின்றி நர்ஸ்கள், மருத்துவபணியாளர்கள், ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பற்றாக்குறை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. பல்லாயிரக்கணக்கணக்கில் மருத்துவதுறை பணியிடங்கள் நிரப்படவேண்டியுள்ளன.

இந்நிலையில் சுமார் 2000டாக்டர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஆணையிட்டுள்ளது ஒரளவு ஆறுதல் அளிக்கிறது.

நாற்றமெடுக்கும் கழிவறைகள், குவிந்து கிடக்கும் குப்பைகள், அகற்றப்படாத மருத்துவகழிவுகள்... போன்றவைகளால் அரசு மருத்துவமனைகள் நோய்பரப்பும் மையங்களாகி வருகின்றன - காரணம் குறைந்த கூலிக்கு வேலைசெய்யும் துப்புரவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள   முடியாத நிதி பற்றாக்குறை!

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை - விலை உயர்ந்த ஸ்கேனிங்கை வெளியே எடுத்துவரும்படி நிர்பந்திப்பது! - அதுவும் அரசு டாக்டர்கள் பரிந்துரைக்கும் இடத்திற்குச் சென்று! இதில் என்ன கமிஷனோ...?

தி.மு.க ஆட்சியில் ரூ 500கோடி மருத்துவகாப்பீடு திட்டத்தால் பயனடைந்தது அனைத்துமே தனியார் மருத்துவமனைகளே!

ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் மருத்துகாப்பீடு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ 750கோடி நிதியில் அரசு மருத்துமனைகளுக்கு கிடைப்பதோ சுமார் 200கோடி தான்!
இந்த மருத்துவகாப்பீடு நிதியை முழுக்க, முழுக்க அரசு மருத்துவமனைளே பெற்று பயனடையும் விதமாக கூடுதல் மருத்துவமனைகளும், கூடுதல் மருத்துவர்களும், 24மணிநேர அறுவை சிகிச்சை ஆபரேஷன் அரங்குகளும் அமைத்தால் அது நிரந்தப்பலன் தரும்!

தமிழகத்தில் 'டாஸ்மாக்' கடைகளின் நேரம் 15 மணிநேரத்திற்கும் போது அரசு மருத்துவ மனைகளின் ஆபரேஷன் தியேட்டர்களின் நேரமே 8மணிநேரத்திற்கும் குறைவாக உள்ளது. இந்நிலை மாறி 24மணிநேரம் ஷிப்டு முறையில் இயங்கினால் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஆறுதலடைவார்கள்!

அரசு மருத்துவமனைகளுக்கு இன்றைய இன்றியமையாத தேவைகள்; கூடுதல்நிதி, கூடுதல் மருத்துவமனை, கூடுதல் பணியாளர்கள், அக்கறையான நிர்வாகம், மனிதாபிமானமுள்ள மருத்துவ அணுகுமுறைகள்! அரசு கவனிக்குமா?



தந்தி டிவி,
EDITORIAL VOICE,
29-1-2013 

தெலுங்கானா பிரச்சினை


                                                                                                                 -சாவித்திரிகண்ணன்

ஹைதராபாத் கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கிறது
தெலுங்கானா தனி மாநிலத்திற்கான மக்கள் போராட்டத்தில் மத்திய அரசு தெளிவான தீர்மானத்திற்கு வர முடியாமல் நீண்ட காலமாகத் திணறிக் கொண்டிருக்கிறது.

கடைசியாக எதிர்பார்க்கப்பட்ட - உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய படி ஒரு மாத கால அவகாசம் ஜனவரி 28ல் முடிந்தது. ஆனால் முடிவெடுக்க முடியாத காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் நிலைபாட்டால் தெலுங்கானா பிரச்சினை மேன்மேலும் தீக்கொழுந்தாக எரிகிறது.

போலீஸ்தடியடி, கண்ணீர்புகை, துப்பாக்கி சூடு, கைதுகள், தீவைப்பு, பொதுச்சொத்துகள் சேதம்... என போராட்டம் வலுக்கத் தொடங்கி விட்டது.
அடுத்தகட்டமாக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜீனாமா செய்யப் போவதாகத் தெரியவருகிறது.
தெலுங்கானா பிரச்சினை மனதளவில் ஆந்திரமக்களை ஏற்கெனவே இரு எதிர் எதிர் துருவங்களாக நிறுத்திவிட்டது.

ராயல்சீமா பகுதியின் செல்வாக்குள்ள அனைத்துக்கட்சி பிரமுகர்களும், தொழில் அதிபர்களும், முக்கியஸ்தர்களும் தெலுங்கானாவிற்கு எதிராக மிகத்திறம்பட 'லாபி' செய்து வருகின்றனர்.
1953ல் மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிட்டி, "தெலுங்கானா பகுதி மக்கள் ஆந்திராவோடு இணையவிரும்பவில்லை. ஆகவே தனி மாநிலம் தரலாம்" என பரிந்துரைத்தது.
அப்போதும் ராயல்சீமா பகுதி தலைவர்கள் லாபி செய்து ஒன்று பட்ட ஆந்திராவுக்கு ஓங்கி குரல் எழுப்பினர்.

விரும்பாத மக்களை சேர்ந்திருக்கும் படி வற்புறுத்துவது, 'ஆளும் நிலப்பரப்பை விரிவுபடுத்த துடிக்கும் ஏகாதிபத்திய மனோபாவமேய என்றார் ஜவஹர்லால் நேரு. ஆனபோதிலும், ராயல்சீமா பகுதி காங்கிரஸாரின் வலுவான லாபியால், "எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகக்கூடிய உரிமையுடன் கூடிய ஒப்பந்தம் பிப்ரவரி20, 1956ல் இரு பக்கத் தலைவர்களாலும் கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகான இந்த 57ஆண்டுகளில் - தாங்கள் இன்று வரை ஏமாற்றப் படுவதாக - தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே தெலுங்கானா பகுதி மக்கள் உணருகிறார்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம், பொருளாதாரம் என அனைத்திலும் ராயல்சீமா பகுதியினர் சுமார் 80%த்தை அனுபவித்துக் கொண்டு தங்களை சுரண்டுவதாக நினைக்கின்றனர்.

இனதால் கடந்த 57 ஆண்டுகளாக தெலுங்கானா போராட்டம் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. 1969,1972,2000,2009 என்று அவ்வப்போது அது வெடிப்பதும், இவற்றில் இது வரை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிர்துறந்திருப்பதும் பெருங்கொடுமை!

சமீபகாலமாக புதிதாக 12 மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநில உருவாக்கத்தில் மட்டும் ஏன் இந்த தேக்கம்?

'ஹைதராபாத் - தெலுங்கானா பக்கம் போய்விடும்
கிருஷ்ணா, கோதாவரி நீர்வரத்து பாதிப் பிற்குள்ளாகும்' என்ற ராயலசீமா பகுதி மக்களின் அச்சமே தெலுங்கானா தீர்வில்லாமல் தொடரக் கராணமாகிறது.

இதனால் தான் ஒவ்வொரு முறையும் 'தெலுங்கானாவிற்கான உறுதிமொழி தரப்பட்டு பிறகு வாபஸானது. எத்தனை முறை எந்தெந்த கட்சித் தலைவர்கள் இப்படி உறுதிமொழி கொடுத்து பிறகு பின் வாங்கினர் என்பது மிகப்பெரிய பட்டியலாகும்! பா.ஜ.க ஆட்சியில் வாஜ்பாய்யும் கூட கூறினார் கடைசியாக 2008ல் பிரணாப் முகர்ஜி, 2009ல் ப.சிதம்பரம் என அறிவிப்பு தந்து பிறகு பின்வாங்கினர்.

கிருஷ்ணாகமிட்டி 5விதமான வழிமுறைகளைக் கூறி குழப்பமான தீர்ப்பளித்தது. மீறப்படும் உறுதிமொழிகள், தடுமாறும் தலைமைகள்... போன்றவை மேன்மேலும் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து, விரும்பா\த்தகாத விளைவுகளுக்கே வித்திடும்.
ரத்தத்திலும், வன்முறையிலும் பிரியாமல் இருதரப்பிலும் இணக்கமான சுமூகச்சூழலை கட்டமைத்து தீர்வு எடுக்கும் தலைமையே தற்போதைய தேவை!



தந்தி டிவி,
EDITORIAL VOICE,
28-1-2013

Sunday, February 3, 2013

வர்மாகமிட்டி அறிக்கை தீர்வாகாது!


                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

தில்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையையடுத்து எழுந்த தார்மீக ஆவேச உணர்ச்சிப் பேரலைகள் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான சட்டவடிவங்களை கடுமையாக்கும் நிர்பந்தத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் மூவர் கமிட்டி உருவாக்கப்பட்டு, அக்கமிட்டியானது மிக்குறுகிய காலத்திற்குள் ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அறிவித்துள்ளது.

இந்த கமிட்டி தந்த அறிக்கை அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததைப் போன்று அமைந்துள்ளது.

முதலாவதாக, நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் வக்கிரங்களை சட்டத்தின் வழியாக மட்டுமே சமாளித்துவிடலாம் என மத்திய அரசும், வர்மா கமிட்டியும் நம்புவது நகைப்பிற்குரியதாகிவிடும்!

சமூக அமைப்பு, குடும்ப அமைப்புகள், கலாச்சார ரசனைகள், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் கலை படைப்புகள், கற்பிக்கப்படும் கல்வி வாழும் சூழல்... என அனைத்திற்குமே பாலியல்வன்முறைகளுக்கான பங்களிப்பு உள்ளது.

எனவே சமூகத்தின் பல தளங்களிலும் செயல்படும் பெண்கள் அமைப்பு, இளைஞர்கள் அமைப்பு... போன்ற எண்ணற்ற அமைப்புகளிடம் கலந்துரையாடல்களை நிகழ்த்தி உருவாக்கப்படவேண்டிய கருத்தாக்கங்களே இதற்கு சரியான தீர்வை நோக்கிய பயணத்தை சமூகத்திற்கு காட்டவல்லது.

ஏதோ பெருநகரங்களின் சாலைகளில் மட்டும் இந்த அநீதிகள் அரங்கேறுவதில்லை விவசாயக் கூலிகளாக உள்ள பெண்கள்
கட்டிடவேலை செய்யும் பெண்கள்
டீ எஸ்டேட் போன்ற பண்ணைகளில் பணியாற்றும் பெண்கள்
வீட்டுபணிகளை மேற்கொள்ளும் பெண்கள்
சின்னஞ்சிறுகடைகள் தொடங்கி பெரிய ஷாப்பிங்மால் வரை குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் ஏழை எளியவர்க்கத்து பெண்கள்.... 
என பற்பல தளங்களில் பணியாற்றும் பெண்கள் சந்திக்கும் பாலியல் நெருக்கடிகளும் அவை சார்ந்த மன உளைச்சல்களும் வெவ்வேறானவை!
இவை தவிர்த்து குடும்ப அமைப்பிற்குள்ளேயே நெருங்கிய உறவினர்கள் சிலரால் ஏற்படும் வெளியில் சொல்லமுடியாத புழுக்கங்கள் கோடி!

இவற்றையெல்லாம் கள ஆய்வுகள் நடத்தி, சேகரித்து அதன் அடிப்படையில் ஒரு ஒட்டுமொத்த சமூக மாற்றித்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும்.
இதற்கு உண்மையான அக்கறையும், தொய்வில்லாத செயல்பாடுகளும் அவசியமாகும்!

ஆகவே, தண்டனைகளின் கால அளவை நிர்ணயிப்பதாலோ 
தண்டனையின் கடுமையை அதிகரிப்பதாலோ பாலியல் குற்றங்களை ஒரு போதும் குறைத்துவிடமுடியாது!

அதே சமயம் பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை தேவையற்றது,
ஆண்மை குறைப்பு அணுகுமுறைகள் மனித உரிமைக்கும், சட்டத்திற்கும் விரோதமானது போன்ற விசயங்களை தெளிவுபடுத்திய வகையில் வர்மா கமிட்டியின் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

வர்மாகமிட்டியின் அறிக்கை உடனடியாக மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அரசியல் சட்டதிருத்தத்தில் மாற்றம் செய்யப்படும் என மத்தியசட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் கூறியுள்ளார்.

ஆண்டாண்டுகாலமாக ஆழமாக வேரூன்றி, விஸ்வரூபமெடுத்து நிற்கும் ஒரு சமூக குற்றத்தை அடியோடு களைய வேண்டுமெனில் அதற்கு அவசரம் கூடாது. தேவை நிதானம் மற்றும் திடசித்தம்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
24-1-2013

Saturday, February 2, 2013

ராகுலின் வருகை



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

நேரு குடும்பத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய தலைமை கிடைத்துள்ளது ஆச்சரியத்திற்குரியதல்ல!

42வயதான ராகுல்காந்தி எட்டாண்டுகள் அரசியல் பணியாற்றி, சில எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளார் - மறுக்க முடியாது.

மோதிலால் நேரு, ஜவஹர்லால்நேரு, இந்திராகாந்தி போன்ற அவரது குடும்பத்தின் முதல் மூன்று தலைமுறை, சுதந்திரப்போராட்ட கால அனுபவத்தை, தியாகத்தை பின்னணியாகப் பெற்றிருந்தது! இந்த மூவருக்கும் அரசியலில் தலைமை ஏற்கவேண்டும் என்பது ஒரு இலக்காகவே ஆரம்பத்திலிருந்தே அமைந்தது.

ஆனால், ராஜூவ்காந்தி தன் அம்மாவின் படுகொலைக்குப் பிறகு கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை ஏற்க நிர்பந்திக்கப்பட்டார். இந்திரா மரணத்திற்கு பிறகான தேர்தலில் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்று பிரதமரானார். ஆனால் அடுத்த தேர்தலுக்குள் செல்வாக்கிழந்து ஆட்சியை பறிகொடுத்தார். ஆனபோதிலும் கட்சியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் என்ற 'இமேஜ்' அவர் இறப்பது வரை தொடர்ந்தது.

பாட்டி இந்திராவின் படுகொலையை 14 வயதில் பார்த்து, அப்பா ராஜூவின் கொடூர முடிவை 21 வயதில் எதிர்கொண்டு, 'அரசியலே வேண்டாம்' என்று 34வயதுவரை விலகி இருந்தவர் ராகுல்காந்தி!

வீட்டிலிருந்தபடியும், டூன் பள்ளியிலுமாக ஆரம்பகல்வி, ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் என்று வெளிநாட்டில் உயர்கல்வி என்று மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வளர்க்கப்பட்டவர். படிப்பை முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் தன்னை 'இன்னார்' என அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் அடக்கமாகப் பணியாற்றியவர், பெரிய குடும்பத்து பிள்ளைகள் சிலருக்கே உரித்தான ஆடம்பரம், ஊதாரித்தனம், அதிகாரதுஷ்பிரயோகம் போன்றவை இல்லாமல் வளர்ந்தவர், குறிப்பாக அதிகாரம், பதவி ஆகியவற்றிக்கு ஆசைப்படாததாக அவரது இயல்பு இருந்தது இதற்கு அதிகாரம், பதவி போன்றவற்றால் அவரது குடும்பம் பெற்ற ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகள் காரணமாயிருந்திருக்கலாம்.

துணைத்தலைவராக பதவி ஏற்றபோது அவர் ஆற்றிய உரையில் இருந்த நெகிழவைக்கும் உணர்வுகள், பட்டவர்த்தனமான வெளிப்படைத்தன்மை மாற்றத்திற்கான ஏக்கம் போன்றவை அவரிடம் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளன.

இதே போன்ற உரைகளை அவரது தந்தை ராஜீவ்காந்தியும் ஆற்றியுள்ளார். உரைகள் ஏற்படுத்தும் உணர்வுகளைவிட செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் தோற்றுவிக்கும் உணர்வுகளே காலத்தை கடந்து நிற்கும்! 

ஜவஹர்லால் நேருவைக் காட்டிலும் மிகச்சிறந்த பேருரைகளை ஆற்றி இந்திய மக்களின் இதயங்களை கவர்ந்த அரசியல் தலைவர் இந்தியாவில் இது வரை எவருமில்லை!

ஆயினும் சூழ்நிலை நிர்பந்தங்கள் ஆகப்பெரிய ஆளுமைபடைத்த நேருவையே கட்டிப்போட்டன. ஓரளவுக்கு மேல் அவரால் மாற்றங்களை உருவாக்க முடியவில்லை!


  • சூது,வாது,தந்திரம்... என்பவற்றோடு அதிகாரப்பசிகொண்ட அரசியல்சகாக்கள்.


  • பொருளாதார பலத்தால் அரசாங்கத்தையே ஆட்டிவைக்கும் பெரிய தொழில் அதிபர்கள்


  • ஊழல், அலட்சியம், சுயநலம்... போன்றவற்றில் ஊறித்திளைத்த அதிகாரவர்க்கம், போன்றவர்களை நுட்பமாகக் கையாண்டு, மக்கள் நலைப் பேணுவது என்பது ஒரு அசாதாரணமான அரசியல் ஆளுமையாகும்!

இவர்களை சரியாக கையாளமுடியவில்லை என்றால் அவர்கள் ராகுல்காந்தியை கையாளத் தயாாராகிவிடுவார்கள்!

காஷ்மீர் பிரச்சினை, நக்சல்பாரிகளின் வளர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகள், மததீவிரவாதங்கள், ஜாதியமோதல்கள், அதிரவைக்கும் ஊழல்கள், பதறவைக்கும் பாலியல் வன்முறைகள், வறுமை, வேலையின்மை, பொருளாதார பிரச்சினைகள்... என இந்தியாவின் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்தி இது வரை தன்னுடைய தெளிவான கருத்துகளை வெளிப்படுத்தியவரல்ல!

எனவே, இவை பற்றி இனிமேல் தான் அவருடைய பார்வைகள் தெரியவரும்! 
இந்திய மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவரே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக அவர் பிரதானப்பட்டுவிட்டார் என்பதும், தவிர்க்க முடியாத இந்த சவாலை இந்த தேசமும், அவரும் எதிர்கொண்டாக வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாகும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
22-1-2013 

ஊழலுக்கு தண்டனை உறுதிப்படவேண்டும்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவும், அவரது மகனும் ஆசிரியர் தேர்வில் அக்கிரமமாக ஊழலை அரங்கேற்றிய வகையில் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் இந்த ஊழல் நடந்து 12ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் உறுதிபடுத்தப்பட்டு தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது.

நீதி நிலைநாட்டப்படுவதற்கு மிக நீண்ட கால கட்டம் தேவைப்படுகிறது. பல வழக்குகளில் மிக நீண்ட காலகட்டம் ஆனாலுமே கூட நீதி நிலைநாட்டப் பட்டு விடுவதில்லை. ஊழல் புரிந்தவர்கள் குற்றவாளியா? இல்லையா? என்ற குழப்பமே மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாட்டுத் தீவன வழக்கு - ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்ததாக பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான குற்றச்சாட்டும், வழக்கும் என்ன ஆனதென்றே தெரியவில்லை. அரசாங்க கணக்கில் தப்பு செய்த லாலு, அரசியல் கணக்கில் சாணக்கியராக இருந்ததால் மத்திய காபினெட் அமைச்சராகி மாபெரும் மரியாதை பெற்றார்.

கர்நாடகாவில் எடியூரப்பா மீதான ஊழல் குற்றச் சாட்டுகளை லோக் ஆயூக்தா நீதிமன்றம் உறுதிபடுத்தியது. ஆனால் அவர் சிறை செல்லவில்லை. தலைப்பாகையைத் தான் இழந்தார்.

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியின் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு வழவழ வென்று நீடித்துக் கொண்டே போகிறது. அவர் மத்திய அரசுக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவு என்ற மந்திரக்கோலில் அந்த ஊழல் புகார்கள் மாயமாய் மறைத்து கொள்கின்றன.

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி மீதான ஊழல்புகார்கள் தீடீரென விஸ்வரூபமெடுத்தன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குகள் பாய்ந்தன. இப்படி அம்பு எய்தவர்களின் கட்சியின் ஆட்சிக்கு முதல்வராய் இருந்தவர் தான் ராஜசேகரரெட்டி! ஜெகன்மோகன் ரெட்டிக்கு இன்று வருமானத்திற்கு அதிகமான சொத்து இருக்குமானால் அதற்கு பொறுப்பு இறந்த அவர் தந்தை ராஜசேகரரெட்டி தான்! காங்கிரஸ் கட்சிக்கு ஆந்திராவில் முகமாய் இருந்தவரை அவர் அளப்பரிய ஊழல் செய்தபோது ஆட்சேபணை எழவில்லை. இன்று அவரது மகன் காங்கிரஸுக்கு எதிராகச் சென்றவுடன் வழக்குகள் அவரை சுற்றி வளைக்கின்றன. சிறைக்குள் தள்ளுகின்றன!

சுதந்திரத்திற்கு பிறகான சுமார் 60 ஆண்டுகால இந்திய அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஆட்சியாளர்கள் மிக அரிதே! அந்த அரிதானவர்களும் ஆரம்பகாலத்தலைவர்களே! ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஆட்சித் தலைமைகள் சுலபத்தில் தண்டிக்கப்படுவதில்லை.

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக மிக்குறுகிய காலம் பதவிவகித்த மதுகோடா மாபெரும் செல்வந்தராக மாறிய மர்மம் என்ன? அவர் சிறைக்குச் சென்ற குறுகிய காலத்திற்குள் வெளிவர முடிந்தது எப்படி?

இதெல்லாம் இந்திய மக்களின் மனங்களில் விடை தெரியாத கேள்விகளாக தொடர்கின்றன...
சௌதாலா கைது, ஊழல் எதிர்பாளர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.
இதேபோல் அனைத்து ஊழல் அதிகாரமையங்களும் தண்டனைக்கு ஆட்படுத்தப்படவேண்டும்.

'ஊழல் செய்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது' என்பது இந்தியா முழுமையும் உறுதிபடுத்தப்படவேண்டும். அரியானா முன்னாள் முதல்வர் ஒம்பிரகாஷ்சௌதாலாவின் சிறைவாசம் இதற்கு தொடக்கப்புள்ளியாகட்டும்!
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
17-1-2013

பென்னிகுயிக்கின் பெரும் தியாகம்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தமிழக மக்களின் நீண்டகால ஆசையை இன்று நிறைவேற்றி வைத்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா.

தென் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் மணிமண்டபத்தையும், வெண்கலச்சிலையையும் முல்லை பெரியாறு அணைகட்டின் லோயர் கேம்பில் இன்று தமிழக முதல்வர் நேரில் சென்று திறந்து வைத்து அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தி உள்ளார். உண்மையில் இன்று தென்மேற்கு தமிழக மக்கள் உள்ளம் உவகை பெருக்கில் பொங்கிவழிகிறது.

'வெள்ளையனே வெளியேறு' என்று போர்ப்பரணி பாடிய நாட்டில், ஒரு வெள்ளை இனத்து இன்ஜினியர் மக்களின் இதயங்களை கொள்ளையடித்து நிரந்தரமாக கொழுவீற்றிருக்கும் அதிசய வரலாறு பென்னிகுக்கின் மகத்தான சாதனையாகும்!
இந்த மாபெரும் முக்கியத்துவம், அவருக்கு எப்படி கிடைத்தது? என்பதை வராலாற்றை பின்நோக்கிப் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.
வறட்சியும், வறுமையும் தென் தமிழக மக்களை ஆட்டி படைத்துக் கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் மேற்குநோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகிக் கொண்டிருக்கும் முல்லைபெரியாறு நீரை கிழக்குநோக்கித் திருப்ப முயற்சி எடுத்து முடியாமல் தவித்தார் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி.

இந்நிலையில் பட்டினிச்சாவுகளும், சமூக விரோதச் செயல்களும் மலிந்தன. உழைக்கும் ஆர்வம் கொண்ட இந்த மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமென்றால் வேளாண்மைக்கு வித்திடுவதே சரியான வழி என்று தேர்ந்து தெளிந்தார் பென்னிகுயிக்.

இதையடுத்து பிரிட்டிஷ் அரசுக்கு அவர் ஒரு பிராஜெக்ட் ரிப்போர்ட் கொடுத்தார். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் சிவகிரி மலையில் உற்பத்தியாகி தெற்குநோக்கி பாய்ந்து முல்லைபெரியாறில் கலந்து திசைமாறி மேற்குநோக்கிச்செல்லும் நீரை கிழக்கு நோக்கித் திருப்ப வேண்டும். அப்படி திருப்பினால் தேனீ, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் சிவகங்கை பகுதிகள் வளம் பெறும். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விளைநிலங்களாக மாறும், வேளாண்மை தழைத்தோங்கும். அதன் மூலம் வேளாண்மை தழைத்தோங்கும் என கணித்தார் பென்னிகுயிக். இந்த பிராஜக்ட் ரிப்போர்ட்டை பிரிட்டிஷ் அரசு ஏற்ற போதிலும் இதற்கு நிதி உதவி செய்வதில் பின்வாங்கியது.

இதைத்தொடர்ந்து பென்னிகுயிக்கின் மனைவி தன் அத்தனை நகைகளையும் களைந்து தர, மேற்கொண்டும் நிதி தேவைப்பட சொந்த நாட்டிற்குச் சென்று சொத்துகள் அனைத்தையும் விற்று வந்து ரூ 42லட்சத்தை பொதுப்பணிக்கு அர்பணித்தார் பென்னிகுயிக். அணையின் மொத்த செலவே 53லட்சம்! இதில் பென்னிகுயிக்கின் சொந்தப்பணமே பெரும்பகுதி.

இந்தச் சாதனையை பெரும் மக்கள் திரளை ஒன்று திரட்டி அவர்களின் உழைப்புதிறனை, அயராத ஆர்வப்பெருக்கை முறையாகப் பயன்படுத்தியதில் தான் அவரது வெற்றியின் ரகசியமே புதைந்துள்ளது. 

இந்த கரடுமுரடான பெரும் பணியில் விஷப்பூச்சிகள், கொடிய அட்டை பூச்சிகள், வனவிலங்குகள், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு எட்டாண்டுகள் பாடுபட்டதில் தங்கள் இன்னுயிரை இந்த இடர்பணியில் இழந்தவர்களின் எண்ணிக்கை 123. இதில் பிரிட்டிஷார் 23பேர். தமிழர்கள் 100பேர்.

இந்த தருணத்தில் அந்த தியாகிகளுக்கும் நாம் கரம்குவித்து, சிரம்தாழ்த்தி கண்ணீர் மல்க நன்றி சொல்வதே நியாயமாகும்!
அரபிக்கடலில் அநியாயமாக கலந்து வீணாண தண்ணீரை திசைதிருப்பி தமிழகத்திற்கு தந்ததில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உடன்பாடில்லை என்றாலும் பிரிட்டிஷ் பேரரசின் நிர்பந்தம் 999வருட ஒப்பந்தத்திற்கு திருவிதாங்கூரை உடன்பட வைத்தது.

அதனால் தான் இன்று வரை கேரளமக்கள் பென்னிகுயிக்கின் பெரும் பணியை அங்கீகரிக்க மறுக்கின்றனர். ஆனால் அவர் கட்டிய அணைத்தண்ணீரை தங்களுக்கும் சேர்த்து இடுக்கி உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பிற்கு இன்று பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் நன்றி மறவா நன்நிலத்திற்கு சொந்தக்காரர்கள் என்று காலம் தாழ்ந்தேனும் அந்த வரலாற்று நாயகரை கௌரவித்ததில் நிலைநிறுத்திவிட்டோம்....! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
15-1-2013 

யாராயிருந்தாலும் குற்றத்திற்கு தண்டனை வேண்டும்


-சாவித்திரிகண்ணன்


பாலியல் குற்றங்களுக்கு எதிரான மக்களின் தார்மீக ஆவேசம் பொங்கி பிரவாக மெடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் பிரமிளா சங்கர் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.

"பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் ஆணையிட வேண்டும்" என்ற அந்த வழக்கில் நமது உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

"அவர்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் எங்களுக்கில்லை. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தான் இதில் முடிவெடுக்க வேண்டும். ஆனால் தற்போது விரைவு நீதிமன்றங்கள் உருவாகியுள்ளதால் இவர்களின் மீதான வழக்குகளை வேகப்படுத்தி விரைந்து நீதியை நிலைநாட்டலாம்"
இது மிகச்சரியான ஆலோசினை.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளதினாலேயே ஒருவர் சஸ்பெண்ட் ஆகிவிடுவார் எனில் இதற்காகவே நிறைய குற்றச்சாட்டுகள் யார் மீது வேண்டுமானாலும் பதிவாகக்கூடும்.

ஆனால் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டநிலையில் அது நிலுவையில் நீண்டநாட்களாக வருடங்காளாக இழுத்தடிக்கப்படுவது தான் கொடுமை.

இதைத்தான் அரவிந்த் கேஜரிவால், "இது போன்ற வழக்குகள் இந்தியாவில் 20,25 வருடங்கள் இழுத்தடிக்கப்படுவதால் தான் நாங்கள் லோக்பால் மசோதாவை கோருகிறோம்" என்றார்.

தற்போதைய நமது பாராளுமன்ற எம்.பிக்களில் 162பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கொலை, கொலைமுயற்சி, ஆள்கடத்தல், கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம்... என பல குற்றச்சாட்டுகள் கொண்டவர்கள் பாராளுமன்றம் என்ற பாதுகாப்பில் வளைய வருகின்றனர்.

இதனால் இவர்கள் மீதான வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கின்றன.
ஆனால் அவ்வாறில்லாமல் இனி மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளுக்கு மற்றவற்றை காட்டிலும் மிகுந்த முக்கியத்துவம் தந்து நியாயமாக நடத்தி முடித்து தீர்ப்பு தந்தாக வேண்டும். குறைந்தபட்சம் 3மாதம் அதிகபட்சம் 6மாதம் என கால நிர்ணயம் செய்து போர்கால வேகத்தில் இவை நடைபெற்றால் தான் மக்களுக்கு நம்பிக்கை துளிர்க்கும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
4-1-2013