Tuesday, January 1, 2013

தேசிய வளர்ச்சி கவுன்சில் சர்ச்சை



                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

ஆழமான விவாதங்கள், அர்த்தமுள்ள கருத்துபரிமாறல்களோடு நடைபெற்று இருக்க வேண்டிய 57வது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று அதிருப்தி அலைகள் வெளிக்கிளம்ப நடந்திருக்கிறது.

உருவாக இருக்கின்ற 12வது ஐந்தாண்டு திட்டத்தின் வடிவம் முழுமைபடுத்தப்பட வேண்டிய நிலையில் 28மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றியப் பிரதேசங்களின் முதல்வர்கள் அழைக்கப்பட்டது கருத்து பரிமாற்றங்களின் போக்கிலான வளர்ச்சிக்கு வித்திட்டிருக்குமேயானால் அது தான் கூட்டப்பட்ட நோக்கத்திற்கு வலு சேர்த்திருக்கும்.

ஆனால் NDCகூட்டம் ஏதோ சடங்கிற்கானது போல் நடத்தப்பட்டால் அது ஏற்புடையதன்று.

விவாதிக்க வேண்டிய பெரிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, அவை எதிர்கால இந்தியாவின் தலையெழுத்தையே தீர்மானிக்க கூடியதாய் இருக்கும் போது முதல்வர்கள், திட்டக்குழு துணைத்தலைவர், மத்திய அமைச்சர்கள், தலைமைதாங்கிய பிரதமர் ஆகியோர் பேச நேர அவகாசமில்லாமல் கூடிக் கலைவதென்றால் என்ன பொருள்?

இந்த கூட்டத்தை நான்கு நாட்களுக்கானதாக திட்டமிடலாம். அல்லது வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நான்கு பகுதியினரையும் தனித்தனிபிரிவாக அழைத்து ஒரு நாளும் சேர்ந்தாற்போல் அடுத்த நாளுமாக இரு நாட்களாவது நீடித்திருக்கலாம். வருடத்திற்கு ஒரே ஒரு முறை தான் நடத்தப்படுவதால் இந்த வாய்ப்பை அனைவரும் சரியாக பயன்படுத்த காலவகாசம் என்பது மிக முக்கியமாகும். முக்கியமாக மத்திய - மாநில உறவுகள் வலுப்பட இந்தக்கூட்டம் உதவவேண்டுமேயல்லாது விரிசல் பெற வித்திடலாகாது.

இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசு மலர்ந்தது தொடங்கி 1990வரையிலும் மாநிலங்கள் மத்தியிலிருந்து வரிவருவாய் 32.5% பெற்றன. பிறகு அது 29.5% மாகக் குறைந்தது. தற்போதோ மாநிலங்கள் பெறும் மத்திய வரிவருவாய் என்பது 19விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது.

கூட்டாட்சி ஜனநாயகத்தில் அதிகாரப் பரவல் என்பதே அடிப்படை பலமாகும்! ஆனால் அதிகார குவியலை நோக்கியே மேன்மேலும் மத்திய அரசு சென்று கொண்டிருப்பது தேசிய ஒற்றுமைக்கே பங்கமாகிவிடும்.
குடியரசு மலர்ந்த பிறகு மக்களாட்சியைப் பற்றிய புரிதலும், பொதுநலன் குறித்த கூட்டு முயற்சியும் வளர்த்தெடுக்கப்படாமல் மேன்மேலும் பின்தங்கியதன் விளைவாகவே மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதையும், மாநில அரசுகளிடமிருந்து அதிகாரங்கள் குறைக்கப் பட்டதையும் பார்க்கவேண்டும்.


தற்போது மத்திய அரசிடம் 98 வித அதிகாரங்களும் ,
மாநில அரசுகளிடம் 62வித அதிகாரங்களும்

மத்திய - மாநில அரசுகளிடையே கையாளும் விதமாக 52 அதிகாரங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மத்திய - மாநில அரசுகளிடையே ஒரு சமத்துவமற்ற உறவுகளுக்கு இவை வித்திட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்நிலையில் மாநில ஒருங்கிணைப்பு கவுன்சில், தேசிய வளர்ச்சி கவுன்சில் போன்றவை ஒரு சடங்காகி போயுள்ளன.

மத்திய அரசு ஒரு பேரரசு போலவும், மாநில அரசுகளோ பேரரசின் தயவில் வாழும் சிற்றரசுகள் போன்றவுமான நடைமுறை ஜனநாயக யுகத்திற்கு ஏற்றதல்ல!
தான் அவமானப்படுத்தப்பட்டதாக' தமிழக முதலவர் ஜெயலலிதா கூறியுள்ளதும் "மத்திய அரசின் கருத்தை கேட்டுச் செல்வதற்காக மட்டுமே முதல்வர்கள் அழைக்கப்படுவதை ஏற்க முடியாது" என நரேந்திரமோடி கூறியிருப்பதையும் அலட்சியப்படுத்த முடியாது.

நடந்த நிகழ்வுகளை ஆழ்ந்து பரிசிலித்து, நடக்கவேண்டிய நல்லவற்றை மனதில் நிறுத்தி, மத்திய ஆட்சியாளர்கள் மாற்று சிந்தனை பெறவேண்டும். அது அதிருப்திகளைக் களைந்து, அரவணைப்பை உறுதிபடுத்துவதாக இருக்கவேண்டும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
27-12-2012


No comments: