-சாவித்திரிகண்ணன்
எப்போது
வேண்டுமானாலும், எந்த தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் மனோதிடம் இருந்தால் தான்
இன்றைய இந்தியாவில் எந்த குடிமகனும் வாழும் தகுதியைப்
பெறமுடியும்.
3மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையேற்றம்
ஆண்டுக்காண்டு சமையல் கேஸ் விலை ஏற்றம்
அரிசி, பருப்பு, காய்கறிகள் தொடங்கி
உணவுப் பொருட்களின் விலையேற்றம் மின்கட்டண உயர்வு.
என அவ்வப்போது கசப்பு
மருந்துகளை உட்கொண்டு பழக்கப்பட்டு வருகிறது இந்திய சமூகம்.
"பத்தாண்டுகளாக
ரயில்வே கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே உயர்த்தி உள்ளோம்"
என்கிறார்கள்.
இதில் முழு உண்மை இல்லை. பத்தாண்டுகளாக முதல்வகுப்பு, ஏசிவகுப்பு
கட்டணங்களைத் தவிர்த்து!
ஆனபோதிலும் இப்போதைய கட்டண உயர்வு அநியாயம் என
சொல்வதற்கில்லை. ஆனால் பட்ஜெட் வருவதற்கு இரண்டு மாதம் இருக்கையில் இந்த பாய்ச்சல்
எதற்கு என்ற பயம் தான்! இரண்டு மாதம் கழித்து ஒரேயடியாக உயர்த்தாமல் படிப்படியாக
உயர்த்தலாம் என நினைக்கிறார்களோ என்பதே மக்கள் சந்தேகம்.
கடந்த ஒரே
வருடத்திற்குள்ளாக நான்கு அமைச்சர்களைக் கண்ட துறையாகி உள்ளது ரயில்வே
இலாகா!
சிறந்த நிர்வாக அறிவும், நேர்மையும் ஒருங்கே பெற்றிருந்த
திணேஷ்திரிவேத கடந்த மார்ச் மாதம் மம்தா பானார்ஜியின் பிடிவாதத்தால் பதவி இழந்தார்.
அதற்குப் பிறகு முகுல்ராய், சி.பி.ஜோசி தற்போது பவன்குமார் பன்சால் என
அடுத்தடுத்து மூவர்!
இது நிர்வாக ஸ்திரத்தன்மையை கடுமையாக
பாதிக்கும்.
ஏற்கெனவே ரயில்வே துறை மக்களின் எதிர்பார்ப்புகளில் பலவற்றை
நிறைவேற்ற முடியாத துறையாக உள்ளது. அதில் முக்கியமானது கூடுதல் பாதைகள், புதிய
வழித்தடங்கள், அதிக ரயில்கள் என்பதாகும். ஆனால் இதற்கு முதலில் தேவைப்படுவது நில
ஆர்ஜிதமே! - இது ஏற்கெனவே விழித்துக் கொள்ளததால் இப்போது குதிரைக்
கொம்பாகிவிட்டது.
இதனால் தான் பிரிட்டிஷார் காலத்தில் நிறுவப்பட்ட
அடிப்படைகட்டுமானத்தில் அதிகபட்சம் 20 சதவிகிதமே நம்மால் அதிகரிக்க
முடிந்துள்ளது.
ஆனால் ரயில் பயணிகளின் எண்ணிக்கையோ 1200சதவிகிதத்திற்கும்
மேல் அதிகரித்துள்ளது.
இன்றைய டிக்கெட் கட்டண உயர்வால் அஅரசுக்கு
கிடைக்கவிருக்கும் ஆண்டு கூடுதல் வருமானம் வெறும் 6,600கோடி தான்!
ஆனால்
ரயில்வே துறை ஏற்கெனவே அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றி முடிக்கத்
தேவைப்படுவதோ, 1,70,000கோடி!
இந்த நிதி எப்படி
திரட்டப்படவுள்ளது...?
இதற்கான செயல்திட்டம் என்ன?
இல்லையெனில் புதுப்புது
அறிவிப்புகள் ஏட்டளவிலேயே நின்றுவிடும்.
இது மட்டுமல்ல தற்போது ரயில்வே துறை
காலாவதியாகிப்போன கம்யூனிகேஷன்களையும், நவீனப்படுத்தப்படாத சிக்னல்களையும்,
இண்டர்லாக்கிங் சிஸ்டம் இல்லாத ரயில்வே கேட்டுகளையும் கொண்டுள்ளதே பல விபத்து
களுக்கு காரணமாகிறது.
இந்திய ரயில்வே பல வழிகளில் நவீனப்படுத்தப்பட
வேண்டியுள்ளது.
பாதுகாப்பான பயணத்தை பயணிகளுக்கு உத்திரவாதப்படுத்த வேண்டி
உள்ளது.
சூழலை பாதிக்காத கழிவறை தொடங்கி, சுத்தமான பெட்டிகள், பழுதில்லா
இயந்திரங்கள் என பற்பல வகைகளில் நவீனத்துவம் பேண வேண்டியுள்ளது.
இதற்கு 12வது
ஐந்தாண்டு திட்டத்தில் சுமார் 5.60லட்சம் கோடிகள் ஒதுக்கினால் மட்டுமே அனைத்தும்
சாத்தியமாகும்.
ஆனால் ரயில்வேதுறை சுதந்திரமாக முடிவெடுக்கமுடியாத ஒரு
துறையாக அரசியல் உள்நோக்கங்கள், தேர்தல் ஆதாயங்கள் போன்றவற்றை கருதி செயல்படும்
அரசியல்வாதிகளால் அலங்கோலப்படுகிறது. திட்டங்கள், செயல்பாடுகள், அறிவிப்புகள்
அனைத்திலும் இந்த அரசியல் பார்வையே வெளிப்படுகிறது.
ரயில்வே துறைக்கு
தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படவேண்டும்.
அரசியல் தலையீடுகளற்ற நேர்மையான
நிர்வாகத்தின் கரங்களில் அது ஒப்படைக்கப்பட்டால் தான் அபரிமிதமான வளர்ச்சியைக்
காணும் மக்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தற்போதைய கட்டண உயர்வு,
ரயில்வேக்கு தற்காலிக நிவாரணமே! வரப்போகிற பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வையுடன்
கூடிய, நடைமுறை எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்க கூடிய உறுதியான செயல்திட்டம் தேவை!
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
10-1-2013
No comments:
Post a Comment