Thursday, January 31, 2013

நிலைதடுமாறும் முதல்வர் பதவிகள்



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்


சமீபகாலமாக இந்திய மாநிலங்கள் சிலவற்றில் நிலைதடுமாறும் பதவியாக முதல்வர் பதவி நிலைதாழ்ந்து வருகிறது.

இதனால் ஆட்சித்தலைமை ஏற்றது தொடங்கி ஆடும் நாற்காலியில் அமர்ந்தவர்களாக திரிசங்கு நிலையில் திணறுகிறார்கள் முதல்வர்கள்!

தற்போது இதற்குச் சிறந்த உதாரணமாக ஜார்கண்ட் மாநிலம் திகழ்கிறது. 2000ஆண்டு தான் இந்த மாநிலம் உருவானது. இந்த 12 ஆண்டுகளில் எட்டு முதல்வர்களைக் கண்டுவிட்டது ஜார்கண்ட்!

பா.ஜ.க, ஜார்கண்ட் முக்திமோர்சா கூட்டணி அரசு பரிதாப முடிவை எட்டிக் கொண்டிருக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆதரவை விலக்கியதை அடுத்து பா.ஜ.கவின் அர்ஜீன்முண்டா கவர்னரிடம் ராஜீனாமா கடிதம் தந்துவிட்டார்.

ஏற்கெனவே ஜனதாதளக் கூட்டணியில் பா.ஜ.கமுதல்வராக பதவிஏற்ற பாபுலால் மராண்டியும் இவ்வாறு பாதி ஆட்சிகாலத்தில் பதவி இழந்தார்!
ஜார்கண்டின் அரசியலில் எந்தகட்சியையும் மக்கள் முழுமையாக ஏற்க முடியாத நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
இதனால் தான் மதுகோடா என்ற சுயேட்சை வேட்பாளர் கூட அங்கு சில காலம் முதல்வராக அமர முடிந்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் முதல்வரான தரம்சிங் 610நாட்களே ஆட்சியில் இருக்க முடிந்தது!
அந்த ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க உதவியில் முதல்வரானார் குமாரசாமி. ஒப்பந்தப்படி 20 மாதத்தில் அவர் முதல்வர் பதிவியை பா.ஜ.கவிடம் ஒப்படைக்க மறுத்தார். கூட்டணி முறிந்தது.
அதைத்தொடர்ந்து பதவியேற்ற எடியூரப்பா எட்டு நாட்களே முதல்வராய் இருக்க முடிந்தது!

அடுத்த தேர்தலில் போட்டியிட்டு அறுதிப்பெரும்பான்மை பெற்ற பிறகும் பா.ஜ.கவிற்கு முதல்வர் பதவி என்பது நிலையற்றதாக தத்தளிக்கிறது.

மிக்குறுகிய காலத்தில் எடியூரப்பா, சதானந்தாகௌடா, ஜெகதீஸ்ஷெட்டர் என மூன்று முதல் மந்திரிகள் பதவிஏற்றுள்ளனர் - கர்நாடகத்தில்! 

இதே போல் உத்திரபிரதேசத்தில் முதல் மூன்று முறை முதல்வர் பதவியில் மிக சொற்பகாலமே ஆட்சிபுரிந்தார் மாயாவதி.

முதல்காலகட்ட முதல்வர் பதவி 15 மாதங்கள் என்றானது!
கல்யாண்சிங் முதல்வர் பதவி அடிக்கடி ஆட்டம் கண்டு, ஆட்சி மாற்றங்கள் நடக்கின்றன.

இந்தச்சூழல் நிலவுகின்ற போது பதவி ஏற்ற ஒவ்வொரு முதல்வருக்கு ஆட்சியை சிறந்த முறையில் பரிபாலானம் செய்வதற்கு நேரமின்றி தங்கள் பதவியை தக்க வைப்பதிலேயே அவர்கள் போராட வேண்டியவர்களாகிறார்கள்.

நம்பிக்கை துரோகங்கள், குதிரைபேரம், பதவிமோகம்... என்பவை சூழ்ந்த அரசியிலில் பணபலமே பலவற்றையும் தீர்மானிப்பதால் ஆட்சியில் அமர்ந்த குறுகிய காலத்திலேயே மாநில முதல்வராயிருப்பாவர்கள் அபரிமிதமான ஊழல்களில் திளைக்கிறார்கள்.

இதனால் தான் மிக்குறுகிய கால முதல்வராயிருந்த மதுகோடா சில ஆயிரம் கோடி சொத்துகளை குவித்து வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தார் என கைதானார்.
சுரங்க ஊழலுக்கு துணைபோனதிலும், சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை வளைத்து போட்டதிலும் எடியூரப்பா பதவி இழந்தார்.

இதே போல் குறுகிய காலத்தில் பதவியில் இருந்த H.D. குமாரசாமியின் மீதும் ஏகப்பட்ட ஊழல் புகார்கள் அணிவகுத்தன.
மாயாவதியும் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்.

கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சிகள் ஒப்பந்தத்தை மீறுவது குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கூட நிறைவேற்றாது போன்றவை அம்மாநில மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்! 
அரசியல் தலைமைகளெல்லாம் அநீதிகளின் தலையாகி கொண்டுள்ளனவோ... என்ற அச்சமே மக்களிடம் மேலோங்குகிறது.
'ஆங்கு அமைவு எய்திய கண்ணும் பயமின்றே
வேந்து அமைவில்லாத நாடு - ' குறள் கூறும் அறமாகும்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
8-1-2013

No comments: