Friday, December 28, 2012

கிரானைட் முறைகேடு வழக்குகள் செல்லும் திசை என்ன?


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

ஏழு மாதங்களுக்கு முன்பு எல்லோரையும் அதிர வைத்தது அந்தக் கடிதம். அது மதுரை மாவட்ட ஆட்சியராயிருந்தபோது உ.சகாயம் அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த கடிதம்!

ஐந்தாறு மாதங்கள் யாராலும் அறியப்படாதிருந்த அந்தக் கடிதம். தகவல் அறியும் உரிமைசட்டத்தால் தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றது.

கேட்டவர்களைக் கிறிகிறுக்க வைத்த அந்த கிரானைட் குவாரி முறைகேடுகளால் மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற மலைக்குன்றுகள் தரைமட்டமானதும், அதிலிருந்த வரலாற்றுச் சின்னங்கள், பிராமிகல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள், சமணர் படுக்கைகள் இருந்த இடம் தெரியாமல் போனதும் உலகையே உலுக்கி எடுத்தது.

இது மட்டுமின்றி இந்த கிரானைட் கொள்ளையர்களால் 60க்கும் மேற்பட்ட கண்மாய்கள், 50க்கும் மேற்பட்ட ஊருண்ணிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், மக்கள் பயன்படுத்தும் பாதைகள்... என பலவும் சூறையாடப்பட்டிருந்தன.

இந்த தகவல்கள் ஊடகங்களில் பெரிய அளவு வெளியானதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சூல்மிஸ்ரா தலைமையில் 18 குழுக்கழை அமைத்து கள ஆய்வையும், விசாரணையையும் மேற்கொண்டது தமிழக அரசு. கிரானைட் முறைகேடுகள் மதுரையையும் கடந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் 500க்கு மேற்பட்ட குவாரிகளில் நடந்திருப்பது தெரியவந்தது.

மதுரைமாவட்டத்தின் 175குவாரிகளில் 94ல் முறைகேடு நடந்திருப்பதாக அன்சூல் மிஸ்ரா அறிக்கை தந்தார். ஆனால் இது வரை சுமார் 10 நிறுவனங்களின் கிரானைட் ஏற்றுமதி உரிமம் மட்டுமே ரத்தாகியுள்ளது.

கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்ட அதிபர்கள் அரசு அதிகாரிகள்,... என்பதாக 55பேர் கைதானார்கள். பற்பல வழக்குகள் பதிவாயின.

நமது முதல்வர் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தந்த தகவல்படி 9,783 கோடி ரூபாய் பொறுமான சொத்துகள் மீட்டெடுக்கப் பட்டுள்ளன. முடிந்த வரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்... நடந்தவரை மகிழ்ச்சியே!

ஆயினும், இந்த ஏழுமாதங்கள் வரையில் ஏறுமுகமாய் காட்சியளித்த அணுகுமுறைகள் தற்போது தாழ்நிலைக்கு தள்ளப்படுவதான ஒரு அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

சுமார் 15 வழக்குகளில் மிகப்பெரும் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்ட நிலையில் பி.ஆர். பழனிச்சாமி ஜாமினில் விடுதலையாகியுள்ளார்.

இதே போல் ஓடி ஒளிந்து கொண்ட ஓலிம்பஸ் கிரானைட் நிறுவன அதிபர் துரை தயாநிதிக்கும், மற்ற 14பேருக்கும் எளிதில் ஜாமீன் கிடைத்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆளான குவாரிகள் இன்னும் முடக்கப்படவில்லை...! 
ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்படவில்லை...!
பறிக்கப்பட்ட இயற்கைவளங்கள் மீட்ருவாக்கம் செய்யப்படவில்லை...! 
பெரும்பாலான அரசு அதிகாரிகள் கைதாகவில்லை....!
பற்பல வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை...! 
நடந்திருப்பது மாபெரும் அநீதி, மன்னிக்க முடியாத குற்றங்கள்...! எனவே, இவை இனி தொடரக்கூடாது. 
முற்ற முழுக்க அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டாக வேண்டும் என்றால், சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் சமரசமின்றி நடவடிக்கைகள் பாய வேண்டும்.

களைகளை கருவறுக்க வேண்டும் என்றால், அதை அரைகுறையோடு நிறுத்தி விடலாகாது!
அவை மீண்டும் பூதாகரமாக, முன்னிலும் அதிகமாக வளர்ந்துவிடும்.
இயற்கை அரண்களை பாதுகாக்க,
இழந்த மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க,
இன்னும் உறுதியான, தளராத நடவடிக்கைகள் தேவை.
பல ஆயிரம் கோடி அளவில் இதில் அந்நியஞ் செலவாணி அத்துமிறல்கள் நடந்திருப்பதைத் தொடர்ந்து மத்திய அமலாக்கப்பிரிவின் விசாரணையும் விரைந்து எடுக்கப்படவேண்டும்.


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
17-12-2012

நில ஆர்ஜித மசோதா


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

புதிய நில ஆர்ஜித மசோதா சட்டம் மத்திய அமைச்சரவையால் அங்கீரிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் அவ்வப்போது பெரும் சர்ச்சையை உருவாக்கி கொண்டிருக்கும் நிர் ஆர்ஜித மசோதா பாராளுமன்ற அவைகளில் விரிவாக விவாதிக்கப் படாமல் அமைச்சர்கள் மட்டத்திலும் சோனியாகாந்தியின் வழிகாட்டுதலிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது பழைய நில ஆர்ஜிதசட்டம் என்பது பிரிட்டிஷ் அரசால் 1894ல் கொண்டுவரப்பட்டதாகும். சுதந்திரத்திற்கு பிறகு இது வரை நாம் இந்த சட்டத்தையே எதிர்கொண்டுவருகிறோம். இது நமது அரசுகளுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது. 
இந்த சட்டத்தின் மூலம் சுதந்திரத்திற்கு பிறகு முதல் 40 ஆண்டுகளில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட வகையில் சுமார் 22லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 75 விழுக்காடு மக்களுக்கு இன்னும் மறுவாழ்வு தரப்படவில்லை காத்திருக்கிறார்கள்.

பொது நலன், அவசரமான திட்டம் போன்றவைகளை அமல்படுத்தும் போது நில ஆர்ஜித சட்டம் 5 ஏ பிரிவின் படி நில உரிமையாளர்களின் ஆட்சேபணைகளை பொருட்படுத்த தேவையில்லை என்பது சட்டத்திலேயே உள்ளது. உச்சநீதிமன்றமும் பல வழக்குகளில் இதை உறுதிபடுத்தி உள்ளது.

தற்போது துறைமுகசாலை விரிவாக்கத்திற்காக 160 மீனவக் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மாற்று இடம் முறையாக வழங்குவதை உறுதிசெய்தால் போதுமானது என்பதே நீதிமன்றத்தின் பார்வையாக வெளிப்பட்டது.

மேற்கு௨வங்கத்தில் டாடா கார் நிறுவனத்திற்காக விவசாயவிளைநிலங்கள் 997 ஏக்கர் விவசாயிகளின் விருப்பமில்லாமல் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது பெரும் பிரச்சனையாக வெடித்தது. அது 30 ஆண்டுகால இடது முன்னணி அரசின் நீட்சியையே முடிவுக்கு கொண்டுவந்தது. 
நர்மதா நிதித்தண்ணீரை அணைகட்டி குடிநீருக்குப் பயன்படுத்தும் சர்தார்சரோவார் அணைதிட்டத்தில் இரண்டு லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். இதற்காக மேதாபட்கர், அருந்ததிராய் போன்றோர் மிகக்கடுமையாக மக்களை திரட்டி போராடியும் இன்று வரை அம்மக்களில் பெரும்பாலோருக்கு மறுவாழ்வு அமையவில்லை.

இந்தச்சூழல்களே இந்தியா முழுமையிலும் நிலவுகிறது. அதுவும் குறிப்பாக இந்தியப் பழங்குடியினரில் பத்தில் ஒருவர் தன்வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தபட்டு அலைகழிபவராக உள்ளார்.

இந்நிலையில் புதிய நில அர்ஜித மசோதாவானது குடியிருக்கும் மக்களில் 70சதவிகித்தினரின் ஒப்புதல் கிடைத்தாலே அரசு - தனியார் கூட்டு திட்டப்படி நில ஆர்ஜிதம் செய்யலாம் என்கிறது. முன்பு 80 சதவிகிம் இருந்தபோதே எந்த பாதுகாப்பும் மக்களுக்கு கிடைத்ததில்லை என்பது கவனத்திற்குரியது. 

பெரும்பாலும் வனப்பகுதியிலும், மலைசார்ந்த பகுதியிலும் தற்போது நில ஆர்ஜிதம் என்பது வெளிநாட்டு சர்வதேச நிறுவனங்களுக்காகதான் நடக்கிறது. இந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காகவும், நமது இயற்கை வளங்களை சுரண்டி செல்வதற்காகவும் நமது மத்திய அரசு அவ்விடங்களில் வாழும் ஏழை, எளிய பழங்குடிமக்களை அப்புறப்படுத்தி வருகிறது. 

பொது நலன்களை முன்னிட்டு சில தனிநபர்கள் பாதிக்கப்படுவது தவறில்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுக் கண்ணோட்டமே! நமது தர்ம சாஸ்திரங்களிலும் கூட இதுவே வலியுறுத்தப்படுகிறது. ஆனபோதிலும் நவீன ஜனநாயகத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முழு உத்திரவாதம் வழங்கப்பட்டு அவர்களை வாழும் இடத்திலிருந்து போகச் சொல்வது தான் நியாயமாக இருக்கமுடியும்.

அரசு நிர்வாகத்திற்கேயுரிய மெத்தனபோக்குகள், ஊழல் போன்றவை நிலம் தந்த மக்களை நிரந்தரமாக நிர்கதியான சூழலில் வைத்துவிடுவதை அனுமதிக்கக் கூடாது.

இவ்வளவு முக்கியமான மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு மாற்று கருத்துகள் ஏதேனும் உள்ளதா என்பதனை அறிந்து முறைப்படி நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாக இல்லாமல் நடைமுறைப் படுத்தப்பட்டால் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை அரசு சந்திக்கும் என்பதே நிதர்சனம். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
14-12-2012

சுடர்விடப்போகும் சூரியமின்சக்தி



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது.
சூரிய மின்சக்திக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சிகழகத்திற்கும், தனியார் நிறுவனத்திற்கும் கையெழுத்தாகியுள்ளது.

இதற்காக இந்தியாவிலேயே முதன்முதலாக சூரியமின்சக்தி உற்பத்தி பூங்கா ஒன்று ராமநாதபுரத்தில் 500ஏக்கரில் 920கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 1000மெகாவாட் வீதம் மூன்றாண்டுகளில் 3000மெகாவாட் சூரிய மின்சக்தி தயாரிக்கும் திட்டம் நிறைவேறவுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் ஜவஹர்லால்நேரு தேசிய அமைப்பு இந்தியா முழுமையிலும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டமிட்டுள்ளதன் ஓர் அங்கமாகவே இத்திட்டம் அமலாகிறது. தேசிய அளவில் ஐந்தாண்டுகளில் 54,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு அதில் 5,000மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு அரசுடனும், தனியாருடனும் இணைந்து உற்பத்தியாகவுள்ளது.

தமிழகத்தில் சூரியசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய சுமார் 600க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இது இதில் பிரகாசமான எதிர்காலம் உள்ளதையே காட்டுகிறது.

ஏனெனில் சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்திக்கு மூன்றாண்டுக்கு முன்பு யூனிட்டுக்கு ரூ 18செலவானதென்றால் தற்போது ஏழரை ரூபாய் மட்டுமே செலவாகிறது. காலப்போக்கில் இதுவும் குறையலாம்.

மேலும் இதில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அறவே இல்லை. எனவே இதற்கான எதிர்ப்பு மக்களிடையே ஏற்படவாய்ப்பில்லை. மாறாக மக்கள் மத்தியிலுமே கூட வணிக நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றில் சூரிய மின்சக்தி தயாரித்து பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ஆகவே தான் தமிழக அரசு இவ்விதம் முயற்சிப்போருக்கு சலுகைகளும் மானியங்களும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் சுமார் 8,000தொழில் நிறுவனங்கள் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றன. அவை ஒவ்வொன்றும் தலா ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்தாகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் சிகரமாக தமிழகத்தில் 103 மாணவர் விடுதிகள் சூரியமின்சக்தி பெறுவதற்காக ரூ2கோடி 32லட்சத்தை தமிழக முதல்வர் ஒதுக்கி உள்ளார்.

இவையாவும் முனைப்போடு செயல்படுத்தப்படவேண்டும். நமது மின்தட்டுப்பாடு நீங்குவதற்கு வரப்பிரசாதமாக வாய்ந்துள்ள இத்திட்டங்களை அரசு நிர்வாகத்தில் உள்ளோர் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுத்திட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

அணுமின்சக்தியில் உள்ள ஆபத்து குறித்த அம்சங்கள், அதனால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, நிலக்கரி கிடைப்பதில் உள்ள சிக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் அணு மற்றும் அனல் மின்சாரம் போன்றவற்றிற்கு இனி எதிர்காலம் கேள்விக்குரியாகியுள்ளது.
அதே சமயம் புதுமையான பற்பல வழிகளில் மாற்று மின் உற்பத்தி திட்டங்கள் மகத்தான வரவேற்பு பெற்று வருகின்றன.
ஜெர்மன் நாட்டில் 50 விழுக்காடு மின்சாரம் சூரியமின்சக்தியால் தான் பெறப்படுகிறது. ஜெர்மனி ஒரு மணிநேரத்திற்கு 22,000மெகாவாட் மின்சாரம் சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது 20 அணுமின்நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்திற்கு இணையாகும்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாட்டிற்கு சூரிய மின்சக்தி என்பதே மிகவும் ஏற்புடையதாகும். தற்போது கிடைத்துள்ளது காலம் கடந்த ஞானோதயம் என்றாலும் கருமமே கண்ணாக இதை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
13-12-2012

Sunday, December 16, 2012

வால்மார்டிடம் விலை போனார்களா? நமது எம்.பிக்கள்?


                                                                                                                 -சாவித்திரிகண்ணன்

மூன்று நாட்களாக பாராளுமனறம் முடக்கப்பட்டதற்கான காரணம் வால்மார்ட் நிறுவனத்தால் விலைபேசப்பட்டவர்கள் யார் யார்? என்பதற்கான விடைதேடலே!

'முடிவாக ஒய்வுபெற்ற நீதிபதி ஒருவரை வைத்து விசாரணை நடத்துவோம்' என்று மத்திய அரசு அறிவிக்க, எதிர்கட்சிகள் ஒய்நதன.
'விசாரணைகமிஷன் என்பது கிணற்றில் போடப்படும் கல்போல' என்பதே கடந்த காலத்தில் நாம் கண்ட அனுபவம்.

நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்பட்ட சம்பவங்கள் நமக்கு புதிதல்ல. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான நல்லதிட்டங்களை உருவாக்கும் பொருட்டு பணம் பெற்றுக்கொண்டு கேள்விகேட்ட MPக்கள் அம்பலப்பட்ட சம்பவம் எளிதில் மறக்கக் கூடியதன்று.

கொள்கை உறுதி, மக்கள்நலன் குறித்த பார்வைகள் அரசியல்கட்சிகளின் தலைமைக்கே அற்று போய்விட்ட நிலையில் எம்.பிக்களிடம் மட்டும் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஒரு வேளை வால்மார்ட் விலைபேசியிருப்பார்களேயானால் அது அரசியல்கட்சித் தலமைகளை குறிவைத்தே நடந்திருக்கவேண்டும். யார்கண்டது?

"வால்மார்ட் யார்யாருக்கு பணம் கொடுத்தது?" என பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்பிய கூட்டத்திலேயே கூட பணம் பெற்ற எம்.பிக்கள் பாதுகாப்பாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் சில உள்ளன.
பல கோடி செலவழிப்பவர்களே இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் 150க்கு மேற்பட்டோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு எம்.பி.யும் பதவி ஏற்கும் போது வைத்திருக்கும் சொத்துமதிப்பிற்கும் பதவி முடியும் தருவாயில் வைத்திருக்கும் சொத்து மதிப்பிற்குமான இடைவெளி மிகப்பெரிதாகவுள்ளது.
இத்தனைக்குப் பிறகும் நாம் மீண்டும், மீண்டும் இவர்களையே அல்லது இவர்களை போன்றவர்களையே தேர்ந்தெடுக்கிறோம்.

ஓட்டுக்கு விலைபோக மக்கள் தயாராகி விட்டபிறகு, வால்மார்ட்டிற்கு விலைப்போகும் எம்.பிக்கள் குறித்துப் பேசும் அருகதையை நாம் இழந்துவிடுகிறோம்!

இப்போது நமது நாட்டில் உள்ள மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் 80 சதவிகிதமான பொருள்கள் - சோப்பு, பற்பசை, பால்பவுடர், கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை வெளி நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் தாம். இவற்றை வாங்கி விற்பதற்கு நமது வியாபாரிகள் தயங்கவில்லை. உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கும் ஆதரவு காட்டவில்லை ஆக பொதுவாக நமது நாட்டு வியாபாரிகளின் மனநிலை வெளிநாட்டு நிறுவன பொருட்களை ஏற்றுக்கொள்கிறது ஆனால் அதை அவர்கள் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதை மட்டுமே எதிர்க்கிறது.

இந்நிலையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு காட்டும் எதிர்ப்பு என்பது 'முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்க்கு' என்பதை போலத்தான். சுதேசி பொருட்களே இல்லாமல் அற்று போய்கொண்டிருக்கும் ஒரு தேசத்தை நாம் எல்லோரும் சேர்ந்து கட்டமைத்துவிட்டபிற்பாடு அதை கடை விரிப்பதற்கு மட்டும் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கமாட்டோம் என்பது எந்த கொள்கை உறுதியில் சேர்த்தியாகும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
12-12-2012

ஜல்லிகட்டு

                                                                                                                  -சாவித்திரிகண்ணன்
கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிகட்டு நடத்துவது ஒரு விவாதப் பொருளாகி நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை சந்தித்துவருகிறது. தற்போது அந்த 19 வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடைவிதிக்கமுடியாது' என்று உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியுள்ளதானது தமிழக மக்களில் ஒரு பிரிவினரிடையே பெரிய சந்தோஷத்தை தோற்றுவித்துள்ளது.

பிராணிகள் நல வாரியம், விலங்குகள் வதை தடுப்பு அமைப்புகள், ஜீவகாருண்ய சங்கங்கள் போன்றவை ஜல்லிகட்டு கூடாதென்று கடுமையாக சட்டப்போராட்டம் நடத்தி வருவதோடு பிரச்சாரங்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் ஜல்லிகட்டு என்பது பாரம்பரிய வீர விளையாட்டு, பழந்தமிழர்களின் கலாச்சார அடையாளம், இதில் விலங்குகள் கொடுமைப்படுத்தபடுவதில்லை என்ற வாதங்களும் வைக்கப்பட்டன.
ஆனால் மிருக வதை தடுப்பு அமைப்புகளோ இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் என்னென்ன வகைகளில் வதைப்படுத்தப்படுகின்றன என்பதை துல்லியமாக ஒரு ஆவணப் பதிவாகவே நீதிமன்றங்களில் சமர்பித்தனர். இதைத் தொடர்ந்தே ஜல்லிகட்டுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.

 
ஆனால் இந்த தடையை எதிரத்து தமிழகத்தில் ஒரு பிரிவினரிடையே பலத்த கொந்தளிப்பு உருவானது. தடையை விலக்ககோரி போராட்டங்கள் நடந்தன. இதனால் தமிழக அரசே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தடையை விலக்ககோரி நீதிமன்றம் சென்றது.

இதனால் சில கட்டுபாடுகள், விதிமுறைகள் கறாராக உருவாக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் ஜல்லிகட்டு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதித்தது. இந்நிலையில் ஜல்லிகட்டில் நடந்தேறிய சில விரும்பத் தகாத அம்சங்கள் விலக்கப்பட்டன. உயர்பலிகளும், படுகாயங்களும் குறைந்தன. மிருகவதையும் ஒரளவு கட்டுபடுத்தப்பட்டது. எனினும் தங்கள் நோக்கம் முழுமை பெறும் வகையில் ஜல்லிகட்டு ஒழிக்கப்பட வேண்டும். என்பதில் ஜீவகாருண்ய அமைப்புகள் கச்சைகட்டிக் கொண்டு களத்தில் இறங்கியும், நீதிமன்றங்களில் போராடியும் வருகின்றன. இன்றைய நிலையில் சுமார் 19 வழக்குகள் நடந்துகொண்டுள்ளன.... என்பதே இதன் தீவிரத்தை உணர்த்துவதாகும்.

2008தொடங்கி, தொடர்ந்த மூன்றாண்டுகளில் ஜல்லிகட்டில் 43 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.... எனினும் ஜல்லிகட்டு குறிந்த அச்சமோ, வெறுப்போ அது சம்மந்தப்பட்ட மக்களிடம் ஏற்படவில்லை.

ஜல்லிகட்டு குறித்து பழம்பெரும் எழுத்தாளர் சி.சு.செல்லாப்பாவின் 'வாடிவாசல்' நாவல் மிகவும் புகழ்பெற்றது. மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் சல்லிக்காசு துணியை துணிச்சலாக பறித்தெடுப்பது தான், 'ஜல்லிகட்டு' என்ற வழக்குமொழியானது. அந்த காலத்து பெரும் நிலச்சுவான்தார்கள் இதற்காகவே தங்கள் காளைகளை கொழு, கொழுவென்று வளர்ப்பார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து வீரமறவர்கள் மாடுகளை அடக்கி அந்த சல்லிக்காசு துணி முடிச்சை பறிப்பார்கள்.

எது ஒன்றும் தொன்றுதொட்டு பழக்கமாகும் போது, அது சமூகத்தின் பெருவாரியான மக்களிடையே நீண்டகாலத்திற்கு முன்பே திணிக்கப்பட்டு, அது பிறகு ஏற்கப்பட்டு, விருபப்திற்குரிய ஒன்றாக மாற்றமடைந்துவிடும் போது அவை குறிந்த தீய விளைவுகளை மக்கள் ஆராய்ந்து கொண்டு இருப்பதில்லை.

பாட்டன், முப்பாட்டன் காலத்துவீரவிளையாட்டு, சமூகத்தில் கிடைக்கும் ஒரு கௌரவம், மாற்றுப் பார்வைக்கே வழியில்லாமல் ஒரே நோக்கில் உருவான சிந்தனை போக்கு.... ஜாதிய அடையாளத்தை மீட்டெடுக்க வலியுறுத்தப்படும் குலப்பெருமை போன்றவை ஜல்லிக்கட்டில் ஈர்ப்பு ஏற்பட காரணமாகின்றன.

ஜல்லிக்கட்டின் பின் உள்ள சமூக முரண்கள், ஜாதிமோதல்கள், வித்திடப்படும் பகைமை போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளன. அரசும், நீதிமன்றங்களும் எவ்வளவு கறாராக விதிகளை போட்டாலும் நடைமுறையில் அவை ஒரளவே சாத்தியமாகின்றன. ஜல்லிகட்டு பாதுகாப்பற்ற வீர விளையாட்டகவே தொடர்கின்றன.

அன்பு, கருணை போன்றவை மனித உயிர்களைக் கடந்து சகல ஜவராசிகளிடமும் வியாபிக்கும் போதே மனிதன் உன்னத நிலையை அடைகிறான். தன் உடல்பலத்தை நிருபிக்க, அப்பாவி மிருகங்களை கட்டாயப்படுத்தி நிர்பந்திக்கும் போது ஒரு வகையில் மனிதன் மிருக நிலைக்கு கீழ்இறங்கி விடுவதோடு, மிருகத்திற்கே வெறி ஏற்படுத்தி வீரத்தை நிலைநாட்டத் துடிக்கிறான். சேவல்சண்டை தொடங்கி ஜல்லிக்கட்டுவரை வெளிப்படும் ஆர்வம் மற்றும் வெறிசார்ந்த மனநிலை நாம் பண்பட இன்னும் பயணப்பட வேண்டியதையே உணர்த்துகின்றன.


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
11-12-2012

எதிர்காலம் கேள்விக்குறியான எடியூரப்பா

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க அரசு பலவீனமடைந்துவிட்டது. சிலமணிநேரங்களிலோ, ஒரிரு நாட்களிலோ அதன் ஆட்சிகாலம் முடிவுக்கு வரக்கூடும்.

தென் இந்திய மாநிலங்களில் பா.ஜ.கவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு மிகவும் பரிதாபகரமான நிலையை அக்கட்சிக்கு தோற்றுவித்துள்ளது. காங்கிரசின் மீது ஏற்பட்ட கசப்பும்,

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மதில் மேல் பூனையான சந்தர்பவாதபோக்கும், கர்நாடகமக்களுக்கு பா.ஜ.கவின் மேல் கரிசனம் தோன்றக் காரணமாயிற்று. 224 எண்ணிக்கை பலத்தை கொண்ட சட்டசபையில் பா.ஜ.கவிற்கு மக்கள் 120எண்ணிக்கை தந்து ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.

ஆட்சி ஏற்ற உடனேயே கட்சிக்குள் அடிதடி, உள்குத்து ஆரம்பமானது. அது கர்நாடக மாநில மக்களை பிரதிநித்துவப் படுத்தும் இரு பெரும் ஜாதிப்பிரிவின் உரசலாகவும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு 16,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியது, தனது மகன்களுக்கு அரசு நிலங்களை சட்டவிரோதமாக வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகளை மாநில லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ்கௌடா விசாரித்து உறுதிபடுத்த, எடியூரப்பாவிற்கு பதவிவிலகும் நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால் அவ்வளவு சுலபமாக அவர் அசைந்து கொடுக்கவில்லை. தேசிய அளவில் ஊழலுக்கு எதிராக பா.ஜ.க பேசிவந்த நிலையில் கர்நாடகா பிரச்சினை அதற்கு கண்ணில் விழுந்த துரும்பாக உறுத்தியது. இறுதியில் ஒரு வழியாக எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

லிங்காயத் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்திய எடியூரப்பாவிற்கு பதில் அதே போன்ற வேறொரு பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சதானந்தகௌடாவை முதல்வராக்கியது பா.ஜ.க மேலிடம்.

சதானந்தா கௌடா சிறப்பான நிர்வாகத்தை தந்த நிலையில் கர்நாடக அரசியலில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ எனக்கருதிய எடியூரப்பா பல குடைச்சல்களை தந்தார். தன் சமூக ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டி படைபலத்தை காட்டி மேலிட்டத்தையே மிரட்டினார்.

இறுதியில் சதானந்தாவை சாய்த்துவிட்டு, தன் சமூகத்தை சார்ந்த ஜெகதீஸ் ஷெட்டரை முதல்வராக முன்மொழிந்தார்.

இந்நிலையில் அவரையும் நிம்மதியாக ஆட்சிசெய்யவிடாமல் கட்சியைப் பிளந்து புதிதாக கர்நாடக ஜனதா கட்சியை துவக்கி உள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விசயம் முன்பு எடியூரப்பா முதல்வர் பதவி விலக நிர்பந்திக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவாக கட்சியில் சுமார் 80 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவரால் முதல்வர்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர் தான் சதானந்த கௌடா. பின்பு சதானந்த கௌடாவை அவர் சாய்க்க முயன்றபோது 55 எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர். தற்போது தனிக்கட்சி தொடங்கி உள்ள நிலையில் 17எம்.எல்.ஏக்களே ஆதரித்துள்ளனர். தன்னால் முதல்வர் பதவி பெற்றவர்களே தன்னை நிராகரிக்கும் நிலைக்கு அவர் சென்றுள்ளார்.

எப்போது பா.ஜ.க மேலிடத்திற்கு எடியூரப்பா இடையூரப்பாவாக மாறினாரோ அப்போதிருந்தே அவரது ஆதரவுதளத்தை மெல்ல, மெல்ல அசைத்து குறைக்கத் தொடங்கிவிட்டது கட்சித்தலைமை!

இப்போது அவரால் அப்படியொன்றும் பெரிய ஆபத்தில்லை. ஆட்சிபோனாலும் கட்சியை காப்பாற்றி கரை சேர்த்துக் கொள்ளலாம் என்று பா.ஜ.க மேலிடம் தீர்மானித்துவிட்டது போலும்.

கர்நாடக மாநிலம் தேசிய நீரோட்டத்தில் எப்போதுமே இரண்டற கலந்தது. அங்கே சக்திவாய்ந்த மாநிலத்தலைவர்கள் வளர்ந்து வருவார்களே தவிர சக்திவாய்ந்த மாநில கட்சி அந்த மண்ணில் வேரூன்றியது இல்லை. ராமகிருஷ்ணஹெக்டேவை மிஞ்சியவரல்ல எடியூரப்பா!

ஆசை, அதிகாரம், பணபலம், ஜாதியப் பின்புலம் போன்றவை யதாரத்தங்களிலிருந்து எடியூரப்பாவை விலகிச் செல்ல வைத்துவிட்டது. தற்போது அவர், "காங்கிரஸ், மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தை விட பா.ஜ.க ஆபத்தானது" என்கிறார். இதன்மூலம் அவர் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை தெளிவாக எடுத்துள்ளார். பா.ஜ.கவை எதிர்பதற்கு காங்கிரஸ், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் போன்றவை ஏற்கெனவே உள்ள நிலையில் இந்த மூவரில் யாருக்கு அதிக பலமோ அந்த கட்சியே மக்களின் ஆதரவைப் பெறும்!

40 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்.சின் அடித்தளத்திலிருந்து உருவாகி உயர்ந்த எடியூரப்பா தற்போது இந்து தத்துவத்தை எதிர்ப்பது போலவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவு போலவும் பேசிவருவதால் மக்கள் ஏற்றுவிடப் போவதில்லை. 'ஐயோ பாவம் இரண்டுங்கெட்டானாகிவிட்டாரே...' என்று வேண்டுமானால் இரக்கப்படலாம்.

புதிய கட்சி அரசியல் வானில், புஸ்வாணமாக மேலேந்து வரும்போது பேசப்படும்.... பிறகு...?

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
10-12-2012



Saturday, December 8, 2012

சிறைத்துறை சீர்த்திருத்தம்

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


சேலம் சிறையில் கைதிகள் கலாட்டா,
மதுரை சிறையில் கைதிகள் மரத்தின் மீது ஏறிப்போராட்டம்,
வார்டன்கெடுபிடியால் கோவை சிறையில் கைதிகள் குமுறல்,
திருச்சி சிறையில் திடீர் பதற்றம்... இது போன்ற செய்திகள் சமீபத்தில் அதிகமாக வருகின்றன.

சிறைச்சாலைகளில் என்னதான் நடக்கின்றன...?

எந்த மனிதர்களால் சமூகத்திற்கு ஆபத்து என்று கூறி அரசு அவர்களை சிறைக்கொட்டடியில் அடைத்ததோ, அந்த மனிதர்கள் இங்கே தங்களுக்கு பாதுகாப்பில்லை' என மரத்தின் மீது ஏறி கூவினார்கள்... அது தான் அடுத்த சில நாட்களில் உண்மையானது. அவர்கள் போலிஎன்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இது ஏதோ தமிழகத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வுகளல்ல. இந்தியா முழுமையிலும் சிறைக்கூடங்கள் அமைதியிழந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அளவில் விசாரணை வளையத்தில் இருக்க வேண்டிய 2560 பேர் போலி என்கௌண்டர்களில் பலியாகியுள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, சிறை நிர்வாக அமைப்பே முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் சிறையில் டி.ஐ.ஜிக்கள், ஏ.டி.எஸ்.பிக்கள் உள்ளிட்ட 20 பெரிய பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்படாமல் இருப்பதாகவும், இதனால் சீறை நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பல சிறைத்துறை அதிகாரிகள் பதவி உயர்வு கிடைக்காததால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதனால் முன்எச்சரிக்கை கைது செய்பவர்களை விடுவித்தல், தண்டனை முடிந்த கைதிகளை விடுவித்தல், பரோல் கேட்கும் கைதிகளுக்கு அனுமதி வழங்கல், போன்றவை தடைபடுவதால் கைதிகள் அனைவரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்திய சிறைகள் முழுமையிலுமே இது போன்ற பற்பல இன்னல்களே நீக்கமற நிறைந்துள்ளன. தேசிய குற்ற ஆவண ஆணையத்தின் தகவல்படி இந்தியாவில் மொத்தமுள்ள 1374 சிறைகளில் 16,000பெண்கள் உள்ளிட்ட 3,80,000பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் விசாரணை கைதிகள் மட்டுமே 2,14,200. கடும் இட நெருக்கடியில் உழலும் நமது சிறைகளில் நீண்ட நெடிய ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் இந்த அளவு எண்ணிக்கையில் கைதிகளை அடைத்துவைப்பது எந்த நீதியில் சேரும்?

மோசமான சுகாதாரச்சீர்கேடு, தரமற்ற உணவு, சரியான மருத்துவ உதவி கிடைக்காமை போன்றவற்றால் ஆண்டுக்கு சுமார் 1400 கைதிகள் மரணமடைகின்றனர். மற்றும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அத்துடன் முறைகேடான ஒரினச்சேர்க்கை போன்றவற்றால் கணிசமானோர் எச்.ஐ.வியால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமாற வேண்டும்.

சிறைச்சாலைகளில் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படவர்கள் தங்களை உள்நோக்கி பார்த்து சீர்திருத்திக் கொண்டு வெளியேறும் வகையிலான சூழல்கள் அமைய வேண்டும்.

வழக்குகள் விரைந்து நடத்தப்பட்டால் தான் விசாரணை கைதிகளுக்கு விடிவுகாலம் ஏற்படும். இந்திய நீதிமன்றங்களில் சுமார் இரண்டரைலட்சம் வழக்குகள் தேங்கியுள்ளதே.... தாமதிக்கப்பட்ட நீதி, அநீதியல்லவா?

சிறைச்சாலைகளில் அவரவருக்கு தக்க உடல் உழைப்பை கட்டாயமாக்க வேண்டும். உழைப்பு என்பது ஒரு ஒழுக்கத்தை ஏற்படுத்தி தரும். அத்துடன் யோகா, தியானம், உடற்பயிற்சி, சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், நூலகவாசிப்பு, விளையாட்டு நேரம்... என சகலமும் தரப்பட வேண்டும்.

சமூகத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தும் தண்டனை ஒன்றே போதுமானது. மற்றபடி சிறைச்சாலை அவர்களுக்கான சீர்திருத்த கூடமாயிக்க வேண்டுமேயல்லாது சித்திரவதைக் கூடங்கள் ஆகிவிடலாகாது.

சீகரெட், பீடி, கஞ்சா, கத்தி, இரும்புகம்பி, செல்போன்கள் போன்றவை அவர்களிடம் இருக்குமானால் அதற்கு அதிகாரிகள், ஊழியர்களே முழுப்பொறுப்பாகும்.

எவ்வளவு செல்வாக்கானவர்கள் சிறைக்குள் வந்தாலும் சரி, எவ்வளவு எளிய மனிதன் வந்தாலும் சரி பராபட்சமின்றி நிர்வாகம் செயல்படவேண்டும்.

சிறைச்சாலைகளுக்கு வெளியில் இருக்கும் ஆபத்தானவர்களை விடவும், சிறையில் இருப்பவர்கள் ஆபத்தானவர்களல்ல, சிறைச்சாலைக்குள் சிறந்த மனிதநேயம் சாத்தியபடுமானால் அது தான் ஒரு நாகரீக சழுதாயத்திற்கான ஆகச் சிறந்த அடையாளமாகும்.



தந்தி டிவி,
EDITORIAL VOICE,
07-12-2012

கலப்பு திருமணங்கள்

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

காலந்தோறும் காதல் திருமணங்கள் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளன. காதல்களே பல காவியங்கள் உருவாக காரணமாயிருந்திருக்கின்றன. நேற்றைய இன்றைய இலக்கியங்கள் மட்டுமல்ல, காட்சி ஊடகங்களும் காதலைத்தான் மீண்டும், மீண்டும் பேசுகின்றன.

படிப்பதற்கும், பார்ப்பதற்கும் இன்பமாக இருக்கும் காதல், ஏனோ வாழ்வியல் அனுபவமாகும் போது எதிர்க்கத்தக்கதாகிவிடுகிறது. உறவுகள், சொந்தங்களின் தொடர்பு அறுந்து போய்விடுமோ, பழக்கவழக்கங்கள், மரபுகள் மறைந்துவிடுமோ..., உணவு, உடை, பேச்சு, கடவுள் நம்பிக்கை என ஒவ்வொரு ஜாதிக்கும் இருக்கும் பிரத்யேக அடையாளங்கள் பின்பற்றப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சங்கள் சொல்லப்படுகின்றன.

அன்பு வலுவாக இருந்தால் உறவுகள் ஜாதிகளைக் கடந்து பலப்படும். காலந்தோறும் பழக்கவழக்கங்கள் மாறத்தான் செய்யும்.. நவின தொழில்நுட்பங்கள் நமது வாழ்க்கையை எவ்வளவோ புரட்டிப் போட்டுள்ளன. மாற்றங்களை ஏற்கும் சமூகம் மட்டுமே வளரமுடிகிறது.

இந்தியா முழுமையும் செய்யப்பட்ட பல்வேறு விதமான ஆய்வுகள், ஜாதிப் படிநிலையில் முதலாவதாக உள்ள பிராமண ஜாதி தான் காதல்கலப்பு திருமண விகிதாச்சாரத்திலும் முதலாவதாக உள்ளதாக தெரிவிக்கின்றன.

எனவே எந்த ஜாதியால், ஜாதிகள் கட்டமைக்கப்பட்டது என்று நாம் கூறிவந்தோமோ, அந்த ஜாதி தான் இன்று ஜாதி மறுப்புத் திருமணங்களில் முன்னோடியாகத் திகழ்கிறது என்பது கவனத்திற்குரியது. இதற்கு அடுத்ததாக தலித்துகள் அதிகமாக கலப்புத் திருமணங்கள் செய்கிறார்கள். முன்னதில் இல்லாத எதிர்ப்பு பின்னதில் மட்டும் ஏன் வருகிறது..?

பறச்சியாவது ஏதடா
பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பிலும்
இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ
பணத்திபோகம் வேறதோ?
என்ற சிவவாக்கியார் எழுதிய பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

கலப்புத் திருமணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் சட்டங்களே இயற்றி நிதி உதவி மற்றும் சலுகைகள் வழங்கி வருகின்றன.

தாழ்த்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால் ரூ 20,000மும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவரைத் திருமணம் செய்தால் ரூ 10,000மும்
தமிழக அரசு வழங்குகிறது. புதுச்சேரி அரசோ கலப்புமணத்தம்பதிகளுக்கு ரூ 60,000 தருகிறது.

கலப்புத் திருமணத்தால் கைவிடப்பட்ட பெண்கள் எந்த ஜாதியில் அதிகம் என்றால் அதில் தலித்பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் தாழ்த்தபட்ட பெண்ணை திருமணம் செய்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதைப் பயன்படுத்தி வேலையும் பெற்றுக்கொண்டு, நல்ல அரசு வேலை கிடைத்த தைரியத்தில் சொந்த ஜாதியில் வரதட்சனை, சீர்வரிசை பெற்று திருமணம் செய்யும் இளைஞர்கள் கணிசமாக உள்ளனர். இதற்கு காவல் துறையில் பதிவான புகார்களே சாட்சியங்களாகும்! எனவே திருமண உறவில் விரிசல், ஏமாற்றங்கள் என்பதற்கு எந்த ஜாதியும் விதிவிலக்கல்ல.
எல்லா திருமணங்களும் 100க்கு நூறு வெற்றி பெறுவதுமில்லை.
காதலை தடுக்க செல்போன், சினிமா, சீரியல், இண்டர்நெட்... என எதையும் இளைஞர்களோ, பெண்களோ பார்க்க அல்லது பயன்படுத்தக்கூடாது என்று எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தடுத்தால் அதில் முழுவெற்றியும் கிட்டாது.

நமது அரசு பதிவுத்துறைத் தரும் தகவல்களின்படி நடைபெறும் திருமணங்களில் பத்துசதவிகிதத்திற்கும் மேலானவை ஜாதிகலப்புத் திருமணங்களாக உள்ளன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகவும் பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூகம் வேகமாக மாற்றத்தை உட்கிரகித்துக் கொண்டு வருகிறது என்ற எதார்த்தை ஏற்க மறுப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தம். அன்பு, அறிவு, பண்பு போன்றவற்றை மட்டுமே கணக்கில் கொண்டால், காலம் எதிர்கொண்டு வரும் எந்த பிரச்சனையையும் சமாளித்துவிடமுடியும்.

இப்போதும் கூட இதே தமிழகத்தில் லட்சக் கணக்கான ஜாதிகலப்பு திருமணம் புரிந்தோர் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஒரு நீண்டகால கோரிக்கை என்னவென்றால் ஜாதிமறுப்புத் திருமணம் செய்தோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு படிவங்களில் சாதிகளற்றவர்கள் என பதிவு செய்யும் உரிமையைத் தாருங்கள் என்பதே! இப்படிப்பட்டவர்களுக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி விட்டால்... அப்புறம் இந்த சமூகத்தில் நடக்கும் அதிசயங்களுக்கு அளவிருக்காது.


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
02-12-2012

Thursday, December 6, 2012

அரசு கேபிள் நிறுவனத்தின் அத்துமீறல்கள்



                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

தகவல் தொழில்நுட்பம் என்பது இந்த 21ஆம் நூற்றாண்டில் மிக உன்னதமான இலக்குகளை எட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

அதிக பட்ச ஜனநாயகத்தை, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான நிர்வாகத்தை கட்டமைப்பதற்கு இது காலம் தந்தப் பரிசாகும்.

அப்படிப்பட்ட மக்கள் செய்தி தொடர்பு ஊடகங்களின் உச்சகட்ட வளர்ச்சியாக பாரக்கப்படும் காட்சி ஊடகங்கள் தமிழநாட்டைப் பொறுத்த அளவில் தொடர்ந்து அரசியல் அராஜக சக்திகளின் கட்டுப்பாட்டில் ஊழல்வது தான் வேறெங்கும் காணவியலாத விசித்திரமாகும்!

'செய்தி மக்கள் துறை' என்பதையே 'சேவை - ஆளுங்கட்சித்துறை'யாகப் புரிந்து கொண்டு இயங்கக்கூடிய அரசியல், ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கிறது என்ற போதிலும், அது அரசு ஊடகத்தின் மீதான கட்டுப்பாட்டை - சர்வாதிகாரத்தை - சாத்தியப்படுத்தவில்லை.
ஆனால் இங்கே சேட்டிலைட் சேனலின் முதல் பிரவேசம் என்பதே அரசியல் கட்சி ஒன்றின் கருவறையிலிருந்து பிறந்தது என்பதும், அது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அரசியல் பலத்தையே ஆகிருதியாக்கி கொண்டது என்பதும் தமிழகத்தின் பிரத்தியேக ஊடக வரலாற்று பின்னணியாகும்.

ஆக, முதல் கோணலே முக்கோணலானது. இது தொடர்பாக நான் ஏற்கெனவே 'சன்குழுமச் சதிகளும் - தி.மு.கவின் திசைமாற்றமும்' என்ற சிறிய நூல் ஒன்றை எழுதி, அந்த காலகட்டத்தில் நிலவிய அவலச் சூழல்களை அழுத்தமாக பதிவு செய்துவிட்ட காரணத்தால் தற்போது தவிர்க்கிறேன்.

சேட்டிலைட் துறையில் கோலோச்சியதோடு கேபிள் நெட்வொர்க்க என்ற மல்டி சிஸ்டம் ஆப்பரேஷன்லிலும் சன்குழுமச் சர்வாதிகாரம் நிலவியபோது அது சமன்செய்யப்பட வேண்டும்... அனைவருக்கும் தொழில் செய்வதற்கான அடிப்படை உரிமைகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் தகவமைக்கப்படவேண்டும்... என்று குரல் கொடுத்தனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் இன்று துரதிர்ஷ்டவசமாக எஸ்.சி.வி என்ற எமன் வீழ்த்தப்பட்டு அந்த இடத்தில் அதைவிட பன்மடங்கு அராஜக அரக்கனாக அரசுகேபிள் உதயமாகியுள்ளதோ என எண்ணக்கூடிய நிலை உருவாகி வருகிறது.

தி.முக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் அரசு கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு நேர்மையும், நிர்வாகத்திறனுமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் பொறுப்பேற்றார். தஞ்சை, கோவை, நெல்லை, வேலூர் என நான்கு இடங்களில் கண்ட்ரோல் ரூமுடன் அது கட்டமைக்கப்பட்டது. ஆனால் அதைதலையெடுக்க விடாமல் பல்முனைத் தாக்குதல் தொடுத்து படுக்க வைத்தது எஸ்.சி.வி. அதற்கு பக்கதுணையாக இருந்தது தி.மு.க அராசங்கம்!.

இதைத் தொடர்ந்து, அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சி, அரசு கேபிளுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்பது அனைத்து மக்களின் ஆதங்கமாக இருந்தது. செப்டம்பர் திங்கள் 2011ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு கேபிள் நெட்வொர்கை ஆரம்பித்து வைத்தார்.
ஆனால் இதற்கு முறையான திட்டமிடல் இல்லை, தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் செயல்பாடுகள், நோக்கங்கள் வரையறுக்கப்படவில்லை. தமிழகம் முழுக்க உள்ள சுமார் ஒன்றை முக்கால் கோடி இல்லங்களுக்கு சேனல்களை கொண்டு சேர்க்கும் ஒரு மாபெரும் இயக்கத்திற்கான அலுவலகங்கள், விஞ்ஞான தொழில்நுட்ப கருவிகள்.... போன்ற எதையுமே நிறுவ முனையவில்லை.

உடுமலை ராதாகிருஷ்ணன் என்ற கட்சிகாரரை தலைவராக அறிவித்தனர். ஜெயராமன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை இயக்குநராக அறிவித்தனர். அரசின் முறையான நிர்வாகத்தின் கீழ் அரசுகேபிள் நெட்வொர்க்கை கொண்டு செலுத்த முயன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை செயல்பட முடியாமல் முடக்கினார் உடுமலை ராதாகிருஷ்ணன். அரசு கேபிள் நிர்வாகத்தை அ.திமு.கவின் கிளை அலுவலகமாக்கினார்.

தனியார்களால் நடத்தப்பட்டு வந்த கண்ட்ரோல் ரூம்கள் கைப்படுத்தப்பட்டன அவர்களின் லட்சக்கணக்கான முதலீடு கேள்வி முறையில்லாமல் கட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குப் போனது. நீண்டகாலமாக தொழிலில் இருந்தவர்கள் துரத்தப்பட்டனர். கேள்வி கேட்டவர்கள் மீது போலீஸ் கேஸ் பாய்ந்தது. அரசு கேபிள் வந்தபின்பு தொழில் பாதுகாப்பு கிடைக்கும் என்று எண்ணிய எம்.எஸ்.ஒக்கள், கேபிள் ஆப்ரேட்டர்கள் எண்ணத்தில் மண்விழ்ந்தது இருந்த தொழிலையும் இழந்து பலர் நடுத்தெருவுக்கு வந்தனர்.

இப்படியாக எந்த முதலீடுமின்றி தமிழகம் முழுமையும் அரசு மற்றும் ஆளும்கட்சி பலத்தால் அராஜக முறையில் 31 மாவட்டங்களில் எம்.எஸ்.ஒக்களின் கண்ட்ரோல் ரூம்கள் கபளீகரம் ஆயின. தனியார் சொத்துகள் ஆளும்கட்சியின் வசமாயின.

இதன்மூலம் சென்னை தவிர்த்த தமிழகம் முழுமையும் அரசு கேபிள் நெட் வொர்க் என்பது தனிப்பெரும் சக்தியாக, மற்ற எம்.எஸ்.ஒக்களை ஒழித்துக்கட்டி ஏகபோக ஒரே நிறுவனமாயிற்று. இப்படி தகவல் தொழில்நுட்ப ஒளிப்பரப்பை கட்டுப்படுத்தும் ஏகபோக அதிகராம் என்பது உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் கிடையாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடந்திராத ஒன்றாகும். இதன்மூலம் தமிழக மக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள தொலைகாட்சி பெட்டிகளில் எந்தெந்த சேனல்களை பார்ப்பது, எதை பார்க்கக் கூடாது என்பதை அரசே நிர்ணயிக்கும் அதிகாரத்தை தானாக கையில் எடுத்துக்க கொண்டுள்ளது. இந்த அதிகாரத்தின் மூலம் சேனல் நடத்தும் உரிமையாளர்களுக்கும் குறிப்பாக அதில் பணியாற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு - நிகழ்ச்சிகளை உருவாக்கும் அறிவுசார்ந்த சிந்தனையாளர்களுக்கு இருந்த அரசை விமர்சிக்கும் உரிமை அபகரிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, காட்சி ஊடகங்கள் அரசை விமர்சித்தால் அரசு கேபிள் சர்வீஸ் மூலமாக மக்களை சென்றடையாது, தடுக்கப்பட்டுவிடும் அல்லது மக்கள் பார்க்கவியலாத ஓர் இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும். இதை எதிரக்கும் துணிச்சல் வேண்டுமானால் சேனல் உரிமையாளரும் அரசியல் செல்வாக்கு மிக்க தமிழகத்தின் தலைவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்! ஆக, இங்கே மீண்டும் காட்சி ஊடகங்கள் என்பது முழுக்க, முழுக்க ஆளும்கட்சி, எதிர்கட்சிகளின் அதிகார பரிவர்த்தனை மற்றும் லாவணி கச்சேரியாகி விடுகிறதேயன்றி, நடுநிலை பார்வை என்பதும் அரசியல் சார்பற்ற துணிச்சலான அணுகுமுறை என்பதும் தவிர்க்கப்படவேண்டிய நிர்பந்தமாகிவிடுகிறது. அப்படியே விமர்சிக்க வேண்டிய மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவற்றைக் கூட அடக்கி விமர்சிக்கவும், 'ஏதோ தொட்டாச்சு' என்ற அளவில் கடந்து செல்லவும் வேண்டிய சூழலே காட்சி ஊடகங்களில் காணக்கிடைக்கின்றன.

இது கருத்தியல் ரீதியான அடக்குமுறை என்றால் வியாபார ரீதியிலான அராஜகம் மற்றொரு வகைப்பட்டதாகும்.

அரசு கேபிள் விஷன் என்பது முழுக்க, முழுக்க மக்கள் பணத்தால் இயங்குவதாகும். மாதாமாதம் மக்களிடமிருந்து கேபிள் ஆபரேட்டர்கள் வசூலித்து தரும் பணத்தில் செயல்படுவதாகும். இதை வசூலிக்கும் வகையிலும், வசூலித்த பணத்தை கட்டணச் சேனல்களுக்கு வழங்கும் வகையிலும் அளப்பரிய ஊழல்கள் அரங்கேறும் இடமாக அரசு கேபிள் விஷன் திகழ்கிறது.

தமிழகத்தில் ரேஷன்கார்டுகளின் படி 1கோடி 97லட்சத்து 36ஆயிரத்து 525 குடும்பங்களில் தொலைக்காட்சிகள் உள்ளன.
இலவச டி.விக்களை அள்ளி வழங்கிய மாநிலம் என்ற வகையில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் தொலைகாட்சிகள் உள்ளன. இலவச டி.விக்களை அள்ளி வழங்கிய மாநிலம் என்ற வகையில் பொதுவாக எல்லாவீடுகளிலும் தொலைகாட்சிகள் உள்ளன. ஆனால் இப்படியுள்ள சூழலில் சென்னை தவிர்த்து சுமார் ஒன்றரைகோடி இல்லங்களின் கேபிள் கட்டணமாக தலா ரூ20 வீதம் அரசுக்கு மாதாமாதம் 30கோடி வசூலாக வேண்டும். ஆனால் அரசு கேபிளோ வாடிக்கையாளர் கணக்கை 58லட்சமாக குறைத்துக் காட்டுகிறது. அப்படியெனில் அரசுக்கு வரவேண்டிய உண்மையான வருமானத்தின் மற்றொரு பகுதி என்னவாகிறது? அவை எந்தெந்த சட்டபூர்வமற்ற அணுகுமுறைகளில் 'ஸ்வாகா' ஆகிறது என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்றால் மக்களின் சாதாரணமான எதிர்பார்ப்புகள் என்னென்னவாயிருக்க முடியும்.
நியாயமான கட்டணம், விரும்பிப் பார்க்க கூடிய சேனல்கள், தெளிவான ஒளிபரப்பு, நேர்மையான நிர்வாகம், தொழில் செய்வோருக்கான முறையான அங்கீகாரம், வெளிப்படையான நிர்வாகச் செயல்பாடுகள் போன்றவற்றோடு மக்கள் பணம் அரசு கஜனாவிற்கு வரவேண்டும் என்பவையே!

இந்த வகையில் அரசு கேபிளுக்கு முன்பு ரூ 100 முதல், 150,200வரை கட்டணம் செலுத்தி வந்த மக்கள் ரூ 70 அல்லது ரூ80 தான் கேபிள் கட்டணம் கட்டுகிறார்கள். எனவே நியாயமான கட்டணம் உத்திரவாதம் செய்யப்பட்டதாகவே நாம் கொள்ளலாம்.

ஆனால் விரும்பி பார்க்க கூடிய சேனல்கள் தருவிக்கப்படுகின்றனவா? என்பதில் தான் ஏறத்தாழ அனைத்து மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் இந்த சேனல்களை தெளிவாக ஒளிபரப்பக்கூடிய சிறந்த நவீன தரத்திலான கருவிகளைக் கொண்ட கண்ட்ரோல் ரூம்களை அரசு நிறுவாததாகும். ஏற்கெனவே தனியாரிமிருந்து அராஜகமாக பறித்த இடத்தில் கூடுதலாக ஒரு சில பொருட்களை தருவித்துக் கொண்டனர் அவ்வளவே! 'அனலாக்' என சொல்லப்படும் அரத பழசான பழைய முறையிலேயே அரசு கேபிள் கழகம் செயல்படுவதால் தான் கூடுதல் சேனல்களைக் கொடுக்க முடியாததோடு, தெளிவான ஒளிபரப்பையும் செய்ய இயலவில்லை. எழுபது சொச்சம் சேனல்களிலிருந்து அதிகபட்சம் 106 சேனல்கள் வரை அந்தந்த இடத்திற்கு தகுந்தவாறு சேனல்கள் ஒளிபரப்படும் எண்ணிக்கை வேறுபடுகிறது. இராமநாதபுரத்தில் 78 சேனல்கள் என்றால் நாகை, நாமக்கல், திருவள்ளுவர் போன்றவற்றில் 80 சொச்சம் சேனல்களும், சேலம், கரூர், தஞ்சை போன்ற இடங்களில் 90 சொச்சம் சேனல்களும், திருச்சி, மதுரை, கோவை போன்றவற்றில் முன்னதைக்காட்டிலும் சுமார் 10 சேனல்கள் அதிகமாகவும் காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய ஊர்களிலும், அந்தந்த பகுதி ஆளும்கட்சி முக்கியஸ்தர்களே கண்ட்ரோல் ரூமை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அரசாங்கம் சார்பில் பெயருக்கு ஒரு தாசில்தார் அங்கே இருந்தாலும், ஆளும்கட்சி பிரமுகர்களின் அதிகாரமே அரசு கேபிளில் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் இவர்களின் விருப்பு வெறுப்பு சாரந்ததாகவும், அந்தந்த பகுதியில் ஒளிபரப்படும் சேனல்களின் இடவரிசையும், இல்லாமல் போகும் வரிசையும் அமைகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் இந்த கட்டற்ற சுதந்திரத்தை இவர்களுக்கு யார் தந்தது?

பலகோடி ரூபாய் முதலீடு செய்து பகல் இரவு பாராமல் அலைந்து திரிந்து செய்திகளை சேகரித்து, முளையை கசக்கி பல முத்தான நிகழ்ச்சிகளை உருவாக்கி தருகின்ற சென்னையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் சேட்டிலைட் டி.வி நிறுவனங்கள் எந்தெந்த ஊர்களில் தாங்கள் மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறோம் அல்லது தெளிவாகத் தெரியாத வகைில் பின்னுக்குத் தள்ளப்படுகிறோம்.... என அறிய வரும் போது மனதில் ஏற்படும் ஆற்றாமைகள், குமுறல்கள் சொல்லக் கொதிக்கும் சோககங்களாகும். அரசு கேபிளில் ஆரம்ப காலங்களில் சன்குழுமத்தையே காட்டாமல் புறக்கணித்து இருட்டடிப்பு செய்தனர். இதற்கு மக்களிடையே பலமான எதிர்ப்புகள் உருவானதைத் தொடர்ந்து முறையான ஒப்பந்தமின்றி திருட்டுத்தனமாக வழிமுறைகளில் ஆங்காங்கேயுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் சன்குழுமச் சேனல்களை காண்பித்தனர்.

சன்குழுமத்தின் மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அரசு கேபிள் என்று வந்துவிட்டபிறகு அனைவரையும் ஒரே சமநோக்கில் தான் அரசு அணுகியிருக்கவேண்டும். அது தான் ஒரு நாகரீக அரசின் அணுகுமுறையாக இருக்கமுடியும்.

கட்டணச் சேனல்களும், கையூட்டுகளும்

சேட்டிலைட் சேனல்களில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றச் சேனல்கள் கட்டணச் சேனல்களகவும், சுமாரான வரவேற்பை பெற்றச்சேனல்கள் கட்டணமில்லாத இலவசசேனல்களாகவும் காட்டப்படுகின்றன.
கட்டணச் சேனல்களுக்கு மக்களிடமிருந்து வசூலித்த பணத்திலிருந்து அரசு கேபிள் கழகம் பணம் தருகின்றது. இந்த வகையில் சுமார் 12 சேனல்கள் மட்டுமே தமிழில் கட்டணச்சேனல்களாக அரசிடமிருந்து பணம் பெறுகின்றன. ஆனால் பல வட இந்திய மொழிச்சேனல்களுக்கும், ஆங்கிலச்சேனல்குளுக்கும் அவை அரசு சேனல்களில் காட்டப்பட்டாலும், காட்டப்படாவிட்டாலும் காட்டப்பட்டதாக கணக்கெழுதப்படுகின்றன. மக்கள் விரும்பி பாரக்கிறார்களா? இல்லையா? என்பதெல்லாம் தேவையில்லை எனக்கருதி அவற்றிற்கு அபரீதபணத்தை அள்ளி இறைத்து ஒரு அரசு கேபிள் கழகம் செயல்படுவது தான் வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் மக்களுக்காக தமிழக மக்களின் பணத்தில் இயங்கும் தமிழக அரசின் கேபிள் கழகத்தில் தமிழ்சேனல்கள் சில காட்டப்படாமல் இருட்டடிக்கப்படுவதோடு தமிழ் சேட்டிலைட் சேனல்களை விட வட இந்திய மொழி மற்றும் ஆங்கில சேனல்களுக்கு அதிகநிதி கொட்டிக்கொடுக்கப்படுவதாகும்.

கட்டணச் சேனல்கள் என்ற வகையில் தமிழக அரசு மாதாமாதம் சுமார் 14கோடியே 50லட்சம் ரூபாய் சேட்டிலைட் சேனல்களுக்கு வழங்குகிறது. இதில் ஒட்டுமொத்த தமிழ் சேனல்களுக்குமாக தமிழக அரசு வழங்கும் தொகை வெறும் நாலரை கோடி தான்! ஆனால் மற்றமொழிச் சேனல்களுக்கு வழங்கப்படுவதோ ரூ 10கோடி! தமிழகத்தில் மற்றமொழி மற்றும் ஆங்கிலச் சேனல்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றின் நிகழ்ச்சிகளுக்கு தமிழக டி.வி பார்ககும் மக்களிடையே உள்ள வரவேற்பு என்ன? என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு அலசி ஆராய்ந்தால் நியாயப்படி தமிழ்சேனல்களுக்கு மொத்த கட்டணச்சேனல் செலவினத்தில் மூன்றில் இருமடங்கும், வேற்றுமொழிச் சேனல்களுக்கு மூன்றில் பங்கும் தான் தந்திருக்க வேண்டும்.

நாம் அரசு கட்டணச்சேனல்களின் வரிசையில் உள்ள ஆங்கிலச் சேனல்களின் பெயர்களைப் பார்த்தால் அவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான பெயர்களை 90சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பாவம்,அந்த மக்கள் அரசு கேபிளுக்கு வழங்கும் பணத்தின் பெரும்பகுதி தாங்கள் இது வரை கேள்விப்பட்டிராத சேனல்களுக்குததான் இதுநாள் வரை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையே அவர்களுக்குத் தெரியாது.

எந்தெந்த சேனல்களுக்கு அரசு கேபிள் கழகம் எவ்வளவு பணத்தை தந்து கொண்டிருக்கிறது என்ற விரிவான தகவல்களைத் தருகிறேன்.

மீடியா புரோ நிறுவனம் (விஜய் டிவி, ஜீ தமிழ் 2 தமிழ்2 தமிழ் சேனல்களை தவிர ) - ரூ.4.25
Star Plus, Star Gold, Star Movies, Star World, NGC, Fox Traveller, Channel V,ABP News, Zee Tv,Zee Cinema, Cartoon Network,Zee Marathi,Zee News,CNN,Zee Cafe,Zee Studio,Zee Trendz,Zee Punjabi,Zee Bangla,Fox Crime, Nat Geo Wild, Life Ok, MGM, HBO,Pogo,Zee Business, WB, FX,Baby Tv, Nat Geo Adventure, Nat Geo Music, Zee Salaam, Zee News UP,ETC Punjabi, ETC, Zing,Zee Jagran, ABP Ananda, Star Jalsha, Zee Talkies, Zee 24 Tass, NDTV India, NDTV 24x7, NDTV Profit, NDTV Good Times, Star Parvah, ABP Majha, Zee Khana Khazana, Zee Smile, Star Utsav,Zee Kannada, Suvarna, Zee Telugu,Zee 24 Ghanthalu, Zee Classic, Zee Action, Zee Premier, 9x, Asianet, Asianet Plus, Movies OK, Fox Action Movies, Zee Bangla Cinema, ZeeQ, Nat Geo HD, Star Plus HD,Star Gold HD, Star Movies HD,Star World HD, Zee Tv HD, Zee Cinema HD,Zee Studio HD, Life OK HD 
 
சன்குழுமம் - 3கோடி (நவம்பர் 30ஆம் தேதி ஒப்பந்தம் முடிந்ததாகவும், மறு ஒப்பந்தம் விரைவில் செய்யப்படுவதாகவும் தெரிகிறது...)
MSM டிஸ்கவரி - ரூ 2.5கோடி
Animel Planet, AXN, Discovery, Max, Sony, AajTak,Animax,TLC,Headlines Today,Pix, SAB, Tez,Aath,Discovery Science, Discovery Turbo, Sony Mix, Discovery Tamil, Discovery Kids, Six
ஈ.எஸ்.பி.என் ( ESPN, STAR Sports, STAR Cricket) - ரூ 2.25கோடி
டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ( Ten Sports, Ten Action, Ten Cricket) - ரூ 90லட்சம்
ஜெயா டிவி குழுமம் - ரூ 80 லட்சம்
ராஜ் டிவி குழும் - ரூ50 லட்சம்
டைம்ஸ் குழுமம் - ரூ 20லட்சம்
இவை மக்களிடமிருந்து மறைக்கப்படும் வரையில் தான் கொள்ளையடிப்பவர்களுக்கு கொண்டாட்டம். இனி மக்களே தீர்ப்பளிக்கட்டும்.

கட்டணச் சேனல்கள் வரிசையில் ஜெயா தொலைகாட்சியின் நான்கு சேனல்களும் அரசு கேபிள் வருவதற்கு முன்பு இடம்பெறவில்லை என்பதை கவனப்படுத்த விரும்புகிறேன இது நமக்கு குறையில்லை அதே சமயம் ஜெயாடிவி குழுமத்திற்கு கட்டணச்சேனல் அந்தஸ்த்து வழங்கப்படும் போது அந்த அந்தஸத்துக்காக தவிக்கும் மற்ற சேனல்களை மதித்து ஒரு வார்த்தை பேசக்கூட அரசு கேபிள் கழகம் தயாராக இல்லை. மெகா டி.வி கட்டணச்சேனலாக அறிவித்தபிறகு எவ்வளவோ மெனக்கெட்டும் அரசு கேபிள் கழகத்தில் அலைகழிப்பும், அவமானமுமே அவர்கள் பெற்ற பரிசானது.

எனவே கட்டணச் சேனல்கள் என்ற கணக்கில் கபளீகரம் செய்யப்பட்டு வரும் பணத்தை குறித்த கேள்விகள் மக்கள் மன்றத்தில் எழுப்பப்பட்டாக வேண்டும். இதில் நியாயமான வரை முறைகளும், வழிமுறைகளும் வெளிப்படையாகப் பின்பற்றப்படவேண்டும். தமிழ் சேனல்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படும் தமிழ் சேட்டிலைட் சேனல்களின் எண்ணிக்கை 36 - கலைஞர் டிவி, இசையறுவி, கலைஞர் செய்திகள், முரசுடி.வி, சித்திரம், சிரிப்பொலி, எஸ்எஸ்.மியூசிக், பாலிமார், வசந்த்டி.வி, மக்கள் டி.வி, மூன் டி.வி, தமிழன் டி.வி, விண் டி.வி, புதியதலைமுறை, தந்தி டி.வி, சத்தியம் டி.வி, சூப்பர் டி.வி, ஆராடி.வி, லொட்டஸ் டி.வி, எஸ்.ஜே டி.வி, GTV SPV,பெப்பர்ஸ் டி.வி, ஸ்ரீசங்கரா டி.வி, இமயம் டி.வி, கேப்டன் டி.வி, கேப்டன் நியூஸ், 7S மியூசிக், கிருஷ்ணா டி.வி, தென்றல் டி.வி, ஏஞ்சல் டி.வி, நியூஸ்ப்ளஸ், ஆசிர்வாதம் டி.வி, Shopping Zone, Max Vision. இவைகள் தான்...!!

இவையணைத்துமே தமிழ் மக்களுக்கு காட்டப்படவேண்டும். ஆனால் இவற்றில் எவையெவை மறைக்கப்படுகின்றன என்பது மக்களுக்கே தெரியாது. இது போக தமிழில் வெகுசீக்கிரமாக ஐந்தாறு சேனல்கள் வரவுள்ளன. இன்னும் இரண்டாண்டுகளில் சுமார் 15 சேனல்கள் வரக்கூடும். இவையெல்லாம் மக்கள் பார்வைக்கு தெரியவேண்டும்.
இவை அனைத்தும் பாரபட்சமின்றி முக்கிய இடத்தில் தெளிவாகத் தெரியும் படி ஒளிபரப்பு செய்யப்பட்டாக வேண்டும். ஆனால் இவற்றில் சுமார் பாதி சேனல்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இப்படிச் செய்யும் அதிகாரத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்...? மக்களின் கண்களில் இருந்து காட்சி ஊடகங்களை கண்கட்டுவித்தைகாரணைப்போல மறைப்பதற்கு எதற்கு மக்கள் பணத்தில் செயல்படும் அரசு கேபிள் கழகம்...? மக்கள் விரும்பி பார்க்காத வேற்றுமொழி சேனல்களை அரசுகேபிளுக்குள் தமிழ்சேட்டிலைட் சேனல்களைக் காட்டிலும் அதிகமாக திணிப்பது ஏன்?

அரசு கேபிள் கழகத்தின் முறைகேடுகள் தொடர்பான ஒரு சில 'சாம்பில்'களைத் தான் நான் இங்கு எழுதியுள்ளேன். மற்றவை குறித்த முழுமையான பதிவுகளை விரைவில் மக்கள் மன்றத்திற்கு நூல் வடிவில் கொண்டுவர உள்ளேன் அதில் உள்ளுர் சேனல்களை அனுமதிப்பதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறைகள், அரசியல் தலையீடுகள், அபரீதமான பணப்பரிவரத்தனைகள், ஒழுங்குபடுத்தப்படாத சினிமா ஒளிப்பரப்புகள்... என பலவற்றையும் விவாதப்பொருளாக்கி விடை தேடவேண்டியுள்ளது.

மொத்தத்தில் அரசு கேபிள் கழகம் முதலில் ஏகபோக உரிமம் என்ற நிலையில் இருந்து வெளியேறி, பல்முனை தொழில் போட்டியை எதிர்கொள்ளவேண்டும். காட்சிதகவல் தொடர்பு ஊடகத்தில் ஜனநாயக அணுகுமுறை வேண்டும். ஆட்சி அதிகார அரசியல் பலத்தில் கட்டுண்டு கிடக்கும் காட்சி ஊடகத்தின் கருத்துச்சுதந்திரம் மீட்டெடுக்கப்படவேண்டும். அது வரை நிச்சயம் மத்திய அரசு தமிழக அரசு கேபிளுக்கு டிஜிட்டலைஷேசன் வழங்க அங்கீகாரம் தராது என்று நம்புவோமாக!

ஏனெனில், ஒரு ஜனநாயக நாட்டில் மற்றவர்களின் தொழில்செய்யும் உரிமையை பறித்தெடுக்கும் ஏகபோக உரிமையை நிலைநாட்டியுள்ள ஒரு நிறுவனத்தை நிச்சயம் 'டிராய்' அனுமதிக்காது. இது தொடர்பாக தமிழகத்திலிருந்து டிராய் அமைப்பிற்கும். 'காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா' அமைப்பிற்கும் ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. அதன் விசாரணை வட்டத்திலிருந்து வெளியேற வேண்டுமானால் தமிழக அரசு கேபிள் கழகம் தன்னை தூய்மைபடுத்திக்கொள்ள வேண்டும். தன் செயல்பாடுகளை ஒழுங்கமைத்துக்கொள்ளவேண்டும். தமிழக மற்றும் இந்திய ஊடகங்கள் தமிழக அரசின் கேபிள் நெட்வொர்க் கார்ப்பரேஷன் தொடர்பான தங்களின் மௌனத்தை கலைக்க வேண்டும். மக்கள் மன்றத்தில் விழிப்பேற்படுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். 

Wednesday, December 5, 2012

வன்கொடுமை தடுப்பு சட்டம்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆபத்தானதா? அவசியமானதா? என்பது தற்போது சமூகத்தில் ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கான ஆதரவும், எதிர்ப்பும் அவரவர் அரசியல் உள்நோக்கங்கள் சார்ந்து அணுகப்பட்டு வரும் நிலையில் ஜாதிகளைக் கடந்த மனிதநேயப் பார்வையில் இதை நாம் அணுக வேண்டியுள்ளது.

நமது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது தலித் மக்களை பாதுகாக்கவென்று தனிசட்டம் உருவாக்கப்படவில்லை. 1955ன் குடிமை உரிமை பாதுகாப்புச் சட்டத்திலேயே தலித் மக்களின் பாதுகாப்புக்கான கூறுகளையும் உள்ளடக்கியிருந்தனர்.
அன்றைய தினம் நிலவிய காந்தியத்தின் தாக்கம், பெரியார், நாராயணகுரு போன்றவர்களால் உருவாக்கப்பட்ட சாதிமறுப்பு பார்வைகள், பாரதியார், பாரதிதாசன், தாகூர், சரத்சந்திரர், பக்கிம்சந்திரர்... தொடங்கி பல மாபெரும் படைப்பிலக்கியவாதிகள் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு மேலோங்கியிருந்தது.

பிற்காலத்தில் தேர்தல் அரசியல், சாதியத்தின் தேவையை வளர்த்தது. இதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை தற்காக்கவென்று 1989ல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் கொண்டுவரபட்டது.

இச்சட்டத்தில் 15விதமான வன்கொடுமைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி வனகொடுமையில் ஈடுபடுவோருக்கு 6மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தணடனை நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தவிர்த்து குடிமை உரிமை பாதுகாப்புச்சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப்படியும் மேலும் 7வன்கொடுமைகள் சேர்க்கப்பட்டு அதற்கு ஏழாண்டுகள் தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் தவறாக கையாளப்படுகிறது. இது தலித்அல்லாதவர்களைச் அச்சுறுத்த, அடிபணிய வைக்கப் பயன்படுத்தப்படுகிறது.... என்ற வாதம் தற்போது வலுப்பெற்று வருகிறது. இந்த வாதத்திற்கு தலித் அல்லாத சில ஆதிக்க சாதியினரின் ஆதரவும் கிட்டியுள்ளது...!

இந்த எதிர்பபு சில நடைமுறை கசப்பான அனுபவங்களில் இருந்து எழுந்துள்ளது. இந்த வாதத்தை முற்றிலும் புறக்கணிக்க முடியாது. ஆனால் நாம் சில எதார்த்தங்களை, நடைமுறை நிதர்சனஙக்ளை கணக்கில் கொள்ளவேண்டும்.

"இதுவரை பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் 2.2% மட்டுமே நிருபணமாகியுள்ளது. மற்றவை நிருபிக்க முடியவில்லை. எனவே அவையாவும் பொய்வழக்குகள்.." என்பவை எதிர்ப்பவர்களின் வாதம்!
இந்தச்சூழலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான தேசிய ஆவண காப்பகம் சமீபத்தில் தந்துள்ள தகவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர். 12 தலித்துகள் படுகாயப்படுத்தப்படுகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஆயிரம் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆண்டுக்கு சுமார் 1000 முதல் 1200 கௌரவ கொலைகள் அரங்கேறுகின்றன.... ஒவ்வொர் ஆண்டும் 30,000க்கு மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன.

இவை ஒரு புறமிருக்க, இந்த வன்கொடுமை சட்டத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
அவற்றின் சராம்சம் என்னவெனில், " வன்கொடுமை தடுப்பு சட்டம் ஒரு சில சமூக விரோத சக்திகளாலோ, அல்லது சந்தர்ப்பவாதிகளாலோ தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவை மிகக் குறைவே. உண்மையில் தலித்துகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுலபத்தில் வெளியில் சொல்வதில்லை. ஏனெனில் அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களில் பெரும்பாலோருக்கு இல்லை. அப்படியே ஒரு சிலர் காவல் நிலையம் வந்து புகார் அளித்தாலும் அவர்களை கடுமையாக அலைகழிக்காமல் அதை காவலர்கள் பதிவு செய்வதில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சட்டத் தேவைகளுக்கு உட்பட்டு சாட்சியங்களைக் கொண்டு நிருபிக்க வேண்டிய பொறுப்பு சாதாரணமானதல்ல. இதற்கிடையில் ஆதிக்க ஜாதியினர் தரும் நிர்பந்தம், காவல்துறையின் நேர்மையின்மை போன்றவற்றால் வன்கொடுமை சட்டவழக்கு நிருபிக்கப்பாடாமல் நீர்த்துப் போகிறது.

எனவே விடுவிக்கப்பட்டவர்கள் - குற்றம் நிருபணமாகாமல் போனவர்களே அன்றி- நிரபராதிகளல்லர்....! என்கிறது அந்த ஆய்வுகள்.
எனவே வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில் ஒரளவு உண்மை இருந்தாலும், அச்சட்டம் சரியாக பயன்பட்டு தலித்துகளை காப்பாற்றவில்லை என்பது பெருமளவு உண்மை.
தமிழகத்தில் மேலவளவுபடுகொலைகள், திண்ணியம் கொடுமைகள் போன்ற பிரபல வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களே நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டனர். ஆகவே, வன்கொடுமை தடுப்புசட்டத்தை நியாயமாக அமல்படுத்தவேண்டும். அதே சமயம் எந்த ஒரு சட்டமும் முழு பாதுகாப்பை தந்துவிட முடியாது. மனமாற்றம் தான் முக்கியம். இதற்கு காந்தி வழியே கதிமோட்சமாகும். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
01-12-2012

Monday, December 3, 2012

தாறுமாறாக விலை வைக்கப்படும் மருந்து மாத்திரைகள்




                                                                                                                       -சாவித்திரிகண்ணன்


மத்திய அரசின் அமைச்சரவைகூட்டம் அமைச்சர் சரத்பவார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மக்களின் உயிர்காக்கும் அத்தியாவசிய 348 மருந்து மாத்திரகளின் விலைகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது சமூக ஆர்வலர்கள் தரப்பில் நீண்ட வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது காலதாமதாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் நிச்சயம் வரவேற்க்கப்பட வேண்டியதே! ஆனால் பொத்தாம் பொதுவாக 348 மருந்து மாத்திரைகளின் விலைகளை மட்டும் அரசு கட்டுப்படுத்தி விடும் என்பது மக்கள் சந்திக்கும் பற்பல மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.

தற்போது மருத்துவ சந்தையில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மருந்து மாத்திரை வகையறாக்கள் விற்பனையாகிக்கொண்டுள்ளன. இவற்றில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டவை தேவையற்றவை.... என உலக சுகாதார நிறுவனமே அறிவித்துள்ளது.
மருத்துவ விஞ்ஞானம் நாளும், நாளும் வளர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளது. ஆனால் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமோ மிகவும் தேக்கநிலையில் உள்ளது.
இது நாள் வரை நமது அரசு 74 மருந்து மாத்திரைகளை மட்டுமே அத்தியாவசியமானவை என்று நிர்ணயித்திருந்தது. ஆனால் அவற்றில் பல மார்க்கெட்டில் காலாவதியாகி வெகுநாட்களானதைக் கூட கவனத்தில் கொள்ள மறுத்து வந்தது. இந்த லட்சணத்தில் தற்போது அரசு அறிவித்துள்ள 348 அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் என்னென்ன? அவை சரியான மதிப்பீடுதானா? என்பது ஒரு பெரும் விவாதமாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த அத்தியாவசிய மருந்து மாத்திரைகளைப் பொறுத்தவரை அதன் உற்பத்தி மதிப்புக்கு மேல் 100 சதவிகிதம் லாபம் வைத்து விற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமே அரசின் இலக்கு. மற்ற மருந்து மாத்திரைகளெல்லாம் உற்பத்தி மதிப்புக்கும் மேலாக 500 முதல் 1200 சதவிகிதம் வரை அதிக லாபம் வைத்து விற்கப்படுவதை வழக்கம் போலவே மத்திய அரசு பொருட்படுத்தாது. 

'இது மிகவும் பொறுப்பற்ற அணுகுமுறை' என இந்திய மருத்துவ பிரதிகள் கூட்டமைப்பு விமர்சிக்கிறது. நமது நாட்டில் சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது முதல் மருந்து மாத்திரைகளின் விலை ஏகத்துக்கும் எகிறியுள்ளன. அத்துடன் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட சில மருந்து மாத்திரைகளையும், குறிப்பாக இரண்டு மற்றும் இதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவைகளில் உருவான ஏற்கத்தகாத மருந்து மாத்திரைகளையும் தற்போது அதிகமாக புழக்கத்தில் பார்க்கமுடிகிறது என்பதை மத்திய நிறுவன விவகாரத்துறை அமைச்சகமே தெரிவித்திருந்தது.

இந்த சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தையில் முதன்மைபடுத்த தார்மீக நெறிமுறைகளை தூக்கி எறிந்து, பணத்தை அள்ளி இறைத்து முக்கிய சில மருத்துவர்களையும் வளைத்துப் போட்டுக் கொள்கின்றன,

சென்ற ஆண்டு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டபோது, "முக்கியமான மருந்து மாத்திரைகளின் விலையை அரசு விரைந்து கட்டுப்படுத்தவேண்டும். இல்லையேல் இதில் நீதிமன்றமே நேரடி கவனம் செலுத்த வேண்டியதாகிவிடும்" என எச்சரித்தது நீதிமன்றம். இதையடுத்துத் தான் மத்திய அரசு மூன்று பேர் கமிட்டி அமைத்து இவ்விவகாரத்தில் மும்முரம் காட்டியது.

120கோடி மக்களை கொண்ட ஒரு பெரிய நாட்டில் மனிதநேயமற்று கொள்ளை லாபத்தையே குறிப்கோளாகக்கொண்ட சில மருந்து மாத்திரை தயாரிப்பு நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய் லாபத்தை சம்பாதித்து பதிலுக்கு மக்களின் உயிரோடும், பொருளாதாரத்தோடும் விளையாடுவதை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.
குறிப்பாக அத்தியாவசியமான - மக்களின் உயிர்காக்கும் - மருந்து மாத்திரைகளை மத்திய அரசின் பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களே உற்பத்தி செய்து நியாயமான விலைக்குத் தரவேண்டும்.

அத்துடன் மருந்து மாத்திரைகளின் மீதான அதீத எக்சைஸ் வரிகளை ஒரளவாவது குறைக்கவேண்டும்.
12வது ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் மக்களுக்கு நியாயவிலையில் கிடைக்கவேண்டும் என்ற கொள்கை திட்டம் அமல்படுத்தப்படவேண்டும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
23-11-2012