Wednesday, November 7, 2012

குதர்க்க வாதங்கள் மலிவான விளம்பரங்கள்....

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்





எதற்கெடுத்தாலும் சர்ச்சையை கிளப்புவது...
குற்றம் காண்பது,குதற்க்கமான அர்த்தங்கொள்வது.... என்று அவர்களும் புறப்பட்டுவிட்டால் நாட்டில் கருத்துச் சுதந்திரமும், பேச்சுசுதந்திரமும் ஒடுக்கப்படுவதாகத் தான் அர்த்தமாகும்!

பா.ஜ.க தலைவர் நிதின்கட்கரி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது
"அறிவுத்திறன் என்பது அனைவருக்கும் ஒன்று தான். மனிதன் அதை எவ்வாறு செயல்படுத்துகிறான் என்பதில் தான் வேறுபாடு. சுவாமி விவேகானந்தருக்கும், தாவூத் இப்ராஹிம் முக்கும் ஒரே விதமான அறிவுத்திறன் தான்! விவேகானந்தர் அதை அனுமதி, நல்லிணக்கத்திற்கு பயன்படுத்தினார். தாவூத்தோ பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார்" என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் அவரது கொடும்பாவியை காங்கிரசார் எரித்துக் கொண்டுள்ளனர். துறவியையும், பயங்கரவாதியையும் ஒப்பிடுவதா? அப்படியானால் கசாப்பையும், கட்கரியையும் ஒப்பிடலாமா? என காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

இப்படி குதர்க்கமாக அர்த்தம் கற்பித்துக் கொணடு விண்சண்டைக்கு இழுக்கும் அபத்தமான நாடகங்கள் எலக்ரானிக் மீடியா வளர்ச்சி தரும் விளம்பரங்களுக்காக அடிக்கடி அரங்கேறி வருகிறது.

"நெருப்பை கொண்டு தீபத்தையும் ஏற்றலாம்
வீட்டையும் எரிக்கலாம்"
என்றொரு வழக்கு மொழி உண்டு.
இதையே கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில்
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ...?
எனகேள்வி எழுப்பினார்.

நல்ல வேளையாக அன்று தொடங்கி இன்று வரையாருமே கவிஞர் தீபத்தை பழித்து பாட்டெழுதிவிட்டார்... என போர்கொடி தூக்கவில்லை.

நிதின் கட்கரிக்கு தற்போது நிகழ்ந்தது தான் சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிக்கும் இந்து இயக்கங்களாலும், பா.ஜ.கவினராலும் நிகழ்ந்தது.

"நமது நாட்டில் கழிவறைகளைக் காட்டிலும் கோயில்கள் அதிகமாக உள்ளன. கோயில்களை விட கழிப்பறைகள் தான் மக்களுக்கு அதிகம் தேவைப்படுகின்றன" என்ற ஜெய்ராம் ரமேஷின் பேச்சை கோயில்களுக்கு, இந்து மதத்திற்கு எதிராக பேசப்பட்டதாக குதர்க்கம் சொன்னார்கள்.

இந்த விவகாரங்களை விபரமறிந்தவர்கள் பார்வையில் பார்க்கும் போது, நிதின்கட்கரியாகட்டும், அவர் சம்மந்தப்பட்ட கட்சியாகட்டும் சுவாமி விவேகானந்தர் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டவர்கள் என்பது உலகறிந்த உண்மை அதே போல் ஜெய்ராம் ரமேஷ் நாத்திகவாதியல்ல, கடவுள் துவேஷியல்ல. கழிப்பறையில்லாததால் ஏற்படும் பெரும் சுகாதாரக்கேடுகளை உணர்த்தவே அவர் இவ்வாறு பேசினார் என்பது தெளிவு.

பொறுப்பில்லாத பேச்சுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தலாம், தவறில்லை.

"அரிசி, பருப்பு, கோதுமை, காய்கறிகள் விலைகளெல்லாம் அதிகரிப்பது மிகவும் நல்லது. இதனால் விவசாயிகள் தானே பலனடைகிறார்கள்..." என்று மத்திய அமைச்சர் பெனிபிரசாத் பேசியதன் மூலம் விவசாயிகள் மற்றும் நாட்டு நடப்புகள் குறித்த அவரது அறியாமை வெளிப்பட்டது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.எம்.மணி அவர்கள் ஒரு மேடையில் பேசும் போது, தங்களது கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனி இயக்கம் கண்ட R.M.P தலைவர் டி.பி. சந்திரசேகரன் சொல்லப்பட்டதை நியாயப்படுத்தி, "துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்டினோம்" என்றார். அந்த பேச்சு ஏற்படுத்திய சர்ச்சைகளையும், கொந்தளிப்பையுமடுத்து அவர் போலீசாரின் தேடலுக்களாகி தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது.

அந்த பேச்சின் மூலம், அவர் பாடம் பெற்றிருப்பார் என நாம் நம்பலாம்! பொறுப்பேற்ற பேச்சுகள் அவரவர்களை சரியாக அடையாளம் காட்டுவது போலவே, தப்பர்த்தம் கண்டுபிடிக்கும் குதர்க்கவாதிகளும் மலிவான விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் மரியாதையை இழக்கிறார்கள்.


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
06-11-2012







Friday, November 2, 2012

ஊழல் எதிர்ப்பும், வன்முறையும்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

ஊழலுக்கு எதிரான மக்கள் எழுச்சி வேகம் பெற்று வருகிறது. அந்த எழுச்சியின் வேகம் அரசியல்வாதிகளை ஆத்திரப்படவைத்து நிதான மிழக்க வைக்கிறது என்பதற்கு தற்போது உத்திரபிரேச மாநிலத்தின் பருக்காபாத்தில் நடந்த வன்முறைகளே அத்தாட்சி!


மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் ஊழலை கண்டித்து ஊழலுக்கு எதிரான இயக்கத்தினர். இதற்கு மக்கள் அமோக ஆதரவளித்தற்கு அத்தாட்சி திரண்ட கூட்டம் தான்!

இது மட்டுமின்றி பாரத விவசாய சங்கத்தினர் சுமார் 1400பேர் போராட்டங்களுக்கு பாதுகாப்பளிக்க தன்னார்வ தொண்டர்களாக ஊர்வலத்தில் பங்கேற்றனர். நடக்கும் ஊழல்கள் சாதாரணவிவசாயிகளை கூட எவ்வாறு உத்வேகம் கொள்ள வைத்துள்ளது என்பதை நாம் இதிலிருந்து உணரலாம்!

உத்திரபிரதேச காவல்துறை பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளதிலிருந்தே இது முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படும் ஜனநாயக ரீதியான போராட்டம் என்பதை உணர்த்துகிறது.

ஜனநாயக நாட்டில் அதிகார பலத்தால் சில அநீதிகள் வலுக்கும் போது அதற்கு எதிரான குமுறல்களை மக்கள் வெளிப்படுத்தும் வடிகால்களே இது போன்ற போரட்டங்கள்! எந்த ஆளும்கட்சியும் இதிலிருநது தப்பியதில்லை. மாபெரும் தலைவர்களான நேரு, பட்டேல் போன்றவர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்த போது கூட ஆவர்கள் தங்கள் தொண்டர்களை கொண்டு போராட்டக்காரர்களை தாக்கியதில்லை! தொண்டர்களே உணர்ச்சிவசப்பட்டாலும் கூட அதை அவர்கள் அனுமதித்ததில்லை!

ஆனால் மத்திய சட்டத்துறை அமைச்சராயிருந்த சல்மான் குர்ஷித் அவர்கள் "தனக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் எப்படி பாதுகாப்பாக திரும்பி போவார்கள் பாரத்துக் கொள்கிறேன். இது வரை பேனாவில் மையை நிரப்பிய நான் ரத்தத்தை நிரப்பவும் தயங்கமாட்டேன்" என ஏற்கெனவே கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சு இந்தியா முழுமையிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தின் போது அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக்கப்பட்டார்!

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சட்ட அமைச்சுருக்கே உறுதிப்பாடு இல்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகவே அவரது பேச்சு ஊடகத்தால் விமர்சிக்கப்பட்டது. இவ்வித கடும் விமர்சனங்களையடுத்து சல்மான்குர்ஷித் தனக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தில் வன்முறை இடம்பெற அனுமதிக்க மாட்டார் என்றும் நம்பப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் மீது போலீஸ் பாதுகாப்பையும் மீறி கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது போன்ற சட்டவிரோத அராஜகங்கள் ஊழலுக்கு எதிரான மக்களின் உத்வேகத்தை அதிகப்படுத்தவே உதவும்.

வன்முறையில் ஈடுபட்டவர்களையும், தூண்டிவிட்டவர்களையும் சட்டப்படி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் மக்களிடமிருந்து ஆக்ரோஷமாக வெளிப்பட்டுவருகிறது.
தவறு சுட்டிக்காட்டப்படும் போது திருத்திக்கொள்ள முன்வருபவர்கள் தப்பிக்க வழியுண்டு. ஆத்திரப்படுபவர்கள் தவறுக்கு மேல் தவறாக செய்துகொண்டே போவார்கள்! இது தான் இப்போது நடந்துள்ளது. இப்படிப்ட்டவர்களை ஆட்சி அதிகாரத்தால் கூட காப்பாற்ற முடியாது. தன்னைத்தானே கட்டுப்படுத்த இயலாதவர்களை மன்னன் கட்டுபடுத்த மறந்தாலும் மக்கள் தீர்ப்பு கட்டுப்படுத்தியே தீரும் என்பது தான் கடந்த கால வரலாறு.


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
01-11-2012

சிறப்பு காவல் இளைஞர் படை

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தீராத காவலர் பற்றாக்குறை...
அதிகரித்து வரும் குற்றச்செயல்கள்...
நிலமையை சமாளிக்க தமிழக காவல்துறைக்கு உதவியாக 50,000 இளைஞர்கள் கொண்ட துணை காவல்படை ஒன்றை உருவாக்க இருப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இவர்களுக்கு ரூ 7,500 மதிப்பூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வேலையின்றி இருக்கும். 18வயது முதல் 30 வயதுவரையிலுமுள்ள இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்குபடுத்துவது.... உள்ளிட்ட பல பணிகளில் இவர்கள் காவல்துறைக்கு உதவியாக செயல்பட்டு வருவார்கள் என்றும். ஒரு வருடம் நிறைவுறும் போது இவர்களில் தகுதியானவர்களை காவல்துறை முறைப்படி தேர்வு நடத்தி ஈர்த்து கொள்ளும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாகவே காவலர் பற்றாகுறை ஒரு பெரும் குறையாக இருந்து கொண்டிருக்கும் சூழலில் இப்படியொரு அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. வி.ஐ.பிகளுக்கான பந்தோபஸ்த்து, நீதிமன்றப்பணிகள், அரசியல்கட்சி மற்றும் மக்கள் இயக்கங்களின் கூட்டங்கள், போராட்டங்களுக்கான பாதுகாப்புபணிகள்... என்பதாக பல்வேறு பணிகளில் காவலர்கள் ஈடுபடுத்தப்படும் போது மக்கள் பிரச்சினைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறையில் எண்ணிக்கை பலம் உண்மையில் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

நல்ல நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் அரசின் நோக்கம் சிதைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் தரப்பிலும், ஏன்... காவல்துறை தரப்பிலுமே கூட வெளிப்படுகிறது.
முறையான பணி நியமனம் பெறாமல் காவல்துறைக்குள் வருபவர்கள் மிகக்குறைந்த சம்பளத்தை காரணம்காட்டி, 'கரப்சனில்' ஆர்வம் காட்டினால் என்ன செய்வது? என்ற பொதுவான கவலையும் உள்ளது.

ஏற்கெனவே 'Friends of Police' என்ற ஒரு முயற்சி நல்ல நோக்கத்தோடு நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதில் சம்மந்தப்பட்டவர்கள் காலப்போக்கில் காவல்துறையுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை கொண்டு பற்பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அது தோல்வியில் முடிந்தது.

ஆகவே இந்த துணை காவல்படைக்கான தேர்வு எந்தவித குற்றச்சாட்டுகளும் சுமத்த முடியாத வெளிப்படை தன்மையுடன், மிக நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தலைமையில், வழிகாட்டுதலில் நடக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் லட்க்கணக்கான இளைஞர்களுக்கு முறைப்படி முன்னுரிமை வழங்கப்படும் வகையிலும், உடல்தகுதி, நடத்தை தகுதி போன்றவை கவனத்தில் கொண்டும் செயல்பட்டால் அரசின் நோக்கம் நிறைவேறும். குற்றச்சாட்டுகளுக்கு இடமிருக்காது அதோடு தற்போது காவலர் பற்றாக்குறைக்கு மற்றொரு முக்கியகாரணமாக கருதப்படுவது ஆர்டர்லி முறையை அடியோரு ஒழித்து சம்மந்தப்பட்ட காவலர்களை மக்கள் பணிநில் ஈடுபடுத்தும் உறுதியான முடிவை நமது முதலமைச்சர் எடுக்கும் பட்சத்தில் அது மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுத்தரும்.

இதே சமயத்தில் அதிக பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் சுகாதாரத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சி துறைகிளின் மீதும் முதல்வரின் கருணைப் பார்வை விழவேண்டும். பணியாளர் பற்றாக்குறை இங்கும் தீர்க்கப்பட்டு மக்கள் நலபணி சிறக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த மாதிரியான மதிப்பூதிய அணுகுமுறைகள் அவசரத் தேவைகளுக்கான தற்காலிக தீர்வுதானேயன்றி நிரந்தரத் தீர்வாகாது என்பதால் முறைப்படியாக நிரந்தரப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
31-10-2012

Thursday, November 1, 2012

இணையதளக்குற்றங்கள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

"இணையதளத்தை தவறாகப் பயன்படுத்தினால் உடனே கைது. மூன்றாண்டுகள் ஜெயில்" என அறிவித்துள்ளார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இணையதளசீண்டல் தொடர்பான பிரபல பின்ணணி பாடகி சின்மயியின் புகாரும் சம்மந்தப்பட்டவர்களின் கைதும் ஒரு மிகப்பெரும் விவாதப் பொருளாகி உள்ள தருணத்தில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைச் சமூகமாக வாழ்ந்த மனிதகுல நாகரீகத்தில் தன் நிகரற்ற ஊடக வளர்ச்சியின் உச்சமே இணையம்! விஞ்ஞானம் மனிதகுலத்திற்கு வழங்கியுள்ள ஈடு இணையற்ற சுதந்திரம்.

பிரபல ஊடகங்கள் வாயிலாக வெளிப்படும் கருத்து சுதந்திரத்தை விடவும், இணையதளங்களில் வெளிப்படும் கருத்து சுதந்திரம் வித்தியாசமானது. இணையதளங்களில் அரசியல் சமூக அவலங்கள் குறித்த ஒவ்வொரு தனிமனிதனின் ஆதங்கமும், ஆற்றாமையும் பொதுவெளியில் அரங்கேற சிறந்த வாய்ப்பாகிறது.

மாபெரும் மக்கள் பங்கேற்பும், மகத்தான கருத்து பரிமாற்றங்களும் இணையதளத்தால் இன்று சாத்தியமாகி உள்ளது.

எந்தப்பெரிய அரசாங்கமானாலும் சரி, எவ்வளவு பிரபல தனிநபரானாலும் சரி, இனி எதையும் மக்களிடமிருந்து மறைக்க முடியாது, மக்கள் விமர்சனத்திற்கு தப்ப முடியாது என்பதை இன்று இணையவெளி நிருபித்துள்ளது.

ஆனால் கட்டற்ற சுதந்திரம் சாத்தியமாகும் இடத்தில் தான் சுயகட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.

குற்றவாளிகளைக் கூட கண்ணியக் குறைவாக நடத்தக்கூடாது என்பது தான் நாகரிகமான ஒரு சமுதாயத்திற்கான இலக்கணமாகும்.

ஒருவருக்கு சரி என்று தோன்றும் கருத்து வேறு ஒருவருக்கு படு அபத்தமாகவும் தவறாகவும் தோன்றும்.
வேறுபட்டு விவாதிப்பது விவேகத்தின் அடையாளம்! மாறுபட்ட கருத்து ஆயினும் அவதூறு செய்வது அறிவீனம்!

இணைய தள சில்மிஷத்தால் மதுரையில் ஒரு பெண்ணும், செஞ்சியில் ஒரு பெண்ணும் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையின் தகவல்! இதில் காவல்துறையின் கவனத்திற்கு வராமல் போன தற்கொலைகள் எவ்வளவோ...? மனம் ஒடிந்து மனதிற்குள் மரித்துப் போனவர்கள் எவ்வளவோ...?

பரந்து விரிந்த வெளி என்பதால் தங்கள் இஷ்டத்திற்கு வாளைச் சுழற்றும் வீராதிவீரர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்.
இனி பாதிக்கப்படுபவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்க முடியும். தகவல் தொழில்நுட்ப சட்டம், வன்கொடுமைச் சட்டம் சம்மந்தப்பட்டவர்கள் மீது பாயும் என்பது ஒரு ஆறுதலே!

நமது மாநில காவல்துறையில் இதற்கான சைபர் கிரைம் பிரிவிற்கு இரண்டே உதவி கமிஷனர்கள்! 25தே போலீசார்கள் என்பது மிகக் குறைவாகும்! இதை அதிகப்படுத்தி பலப்படுத்தவேண்டும்!

அதே சமயம் சகிப்புத் தன்மையற்றவர்கள் கச்சை கட்டி சர்ச்சையில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

உலைபொங்கினால் மூடமுடியாது! ஊர்வாயையும் அடைக்க முடியாது. வெள்ளம் பெருக்கெடுத்தால் அணை தாங்காது. இதை பிரபலங்கள் உணர வேண்டும். சட்டங்கள், தண்டனைகள் குற்றங்களை ஒரளவே குறைக்க உதவும்.
அதே சமயம் சட்டங்கள், தண்டனைகளைக் காட்டி நியாயமான கருத்து சுதந்திரத்தை பறித்து விடவும் கூடாது.

விக்கி லீக்ஸின் வீரநாயகன் அசாஞ்சே வெளிப்படுத்திய உண்மைகள் உலகையே உலுக்கி எடுத்தன. ஆனால் அவர் இன்று உலகப் பேரரசுகளால் வேட்டையாடும் நகராகியுள்ளதை பார்க்க வேண்டும்! தவிர்க்க முடியாதவற்றை அலட்சியப்படுத்துவதே அறிவுடமை! அளவுக்கு மீறி ஆடுபவர்களை அடக்குவது அரசின் கடமை!
ஆள்பவர்களே ஆனாலும் தவறுசெய்தால் தட்டிகேட்பது ஒவ்வொரு குடிமகனும் பெற்றுள்ள உரிமை!
 

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
24-10-2012