Tuesday, October 30, 2012

அதிகரித்து வரும் கொலை குற்றங்கள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தமிழகத்தில் அசதாரணமான வகையில் குற்றங்கள், கொலைகள் அதிகரித்துவருகின்றன.
மாநகரங்களெல்லாம் மாபாதகங்கள் அரங்கேறும் களங்களாக காட்சி தருகின்றன.

சென்னையில் ஒரே நாளில் நான்கு இடங்களில் திருட்டுகள் நடந்துள்ளன. இதில் இரண்டு இடங்களிலுமாக 270 சவரன்நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வருடத்திற்கு சுமார் 20,000 திருட்டு சம்பவங்கள் நடப்பதாக காவல்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
சென்ற ஆண்டு தமிழகத்தில் நடந்தேறிய கொலைகளின் எண்ணிக்கை 1747.

வரலாறு காணாத கலவரம் அல்லது போரில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் கொல்லப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயல்பான ஒரு சூழலில் இவ்வளவு கொலைகள், குற்றங்கள் நடக்கின்றன என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணவேண்டும்.

ஏனெனில் நீதி, நேர்மை, நியாயத்திற்கு கட்டுபட்டு கிடைக்கின்ற வருவாய்க்குள் எளிய முறையால் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் குழப்பதிற்கும், பயத்திற்கும் உள்ளாகிறார்கள்!

ஆட்சியாளர்களான அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல்செய்து மக்கள் பணத்தை சூறையாடுகிறார்கள் அதிகாரிகள் தங்கள் பங்குக்கு பலனடைகிறார்கள்.

தொழில் அதிபர்கள் சட்டத்தை வளைக்கிறார்கள். மிகப்பெரிய பொருளாதார குற்றங்களை கமூக்கமாகச் செய்கிறார்கள். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் தொடங்கி ஆன்மீகவாதிகள் வரை நெறிபிறழ்ந்து நடக்கும் செய்திகள் சாதரண எளிய மனிதனை சஞ்சலத்தில் ஆழ்த்துகிறது.

மதுபழக்கம் பல தீயசெயல்களுக்கு வித்திடுவதாக இக்குற்றங்கள் தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே 'டாஸ்மாக்' குறித்த மறுபரிசிலனையை தமிழக அரசு மேற்கொண்டேயாக வேண்டும்.
75சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குற்றச்செயல்கள் மது போதையால், மதுவின் தேவையால் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

அறநெறிகள் பிறழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் உளவியல் நெருக்கடியில் அதிகரித்து குற்றச்செயல்களுக்கு வித்திடும் என்பதே உண்மை குற்றச் செயல்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் வித்தியாசமில்லை!

படிக்காதவர்களின் குற்றங்கள் உடல்சார்ந்த வன்முறையாகவும் படித்தவர்களின் குற்றங்கள் அறவுசார்ந்த வன்மமாகவும் உள்ளது.
சைபர் குற்றங்கள் நடப்பதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ரியல்எஸ்டேட், கல்விதிட்டங்கள், அறக்கட்டளைகள், தேர்தல்பிரச்சாரங்கள் போன்றவற்றில் சட்டவிரோத பணபரிமாற்றங்களும், கறுப்புபணமும் கணக்கிடமுடியாதவகையில் நடந்து கொண்டுள்ளன..!

சட்டவிரோத பணபரிமாற்றத் தடுப்பு சட்டம் குறித்த விவாதங்கள் நடந்தேனவேயன்றி சட்டம் நிறைவேற பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அப்ரோ ஏசுதாஸ் என்பவர் குறைந்த வட்டியில் கடன் தருவதாக பல கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளார் என 12,500 பேர் புகார் தந்துள்ளனர். இவ்வளவு பெருந்திரளான மக்களை பகிரங்கமாக ஒருவரால் எப்படி ஏமாற்றமுடிகிறது? அவரது நடவடிக்கைகளை ஏன் காவல்துறை முன்கூட்டியே தடுக்கவில்லை. பிறந்த பச்சிளம் குழந்தைகளைத் திருடிச்செல்லும் கயமை அரசு மருத்துவமனைகளில் எப்படி நடக்கின்றன..?

தமிழகத்தில் காவல்துறை காவலர்களின் எண்ணிக்கையை 88,000த்தில் இருந்து இரு மடங்காக்கினால் கூட இந்த குற்றங்கள் குறைய உத்திரவாதமளிக்க முடியாது.
சட்டங்களால் மாத்திரமல்ல, சகலவழிமுறைகளிலும் ஆராய்ந்து இதற்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
26-10-2012

யார் அறங்காவலர்களாவது?


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

கோயில் அறங்காவலர்களாக கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் இருப்பதா? கடவுள் நம்பிக்கையற்ற 'எத்திஸ்டுகள்' இருப்பதா?

என்ற விவாதம் சுமார் அரை நூற்றாண்டுகளாக இந்தியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கேரள அரசு இந்து சமயத்திலும், சமயசடங்குகளிலும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கோயில்களை நிர்வகிக்கும் தேவசம் போர்டுகளில் பொறுப்புக்கு வரவேண்டும் என்று அவசர சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசின் இந்த முடிவை கம்யூனிஸ்டு கட்சி அங்கே கடுமையாக எதிர்த்துள்ளது.

"கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் பொறுப்புக்கு வந்தால் கடவுளுக்கு பயந்து கோவில் சொத்தை கையாடல் செய்யமாட்டார்கள். கோயிலில் சடங்குகள் நடக்கவும், சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவும் ஒத்துழைப்பார்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் நாம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்...?" இதுவே பெரும்பாலான மக்களின் அபிப்ராயம்!

இது முற்றிலும் புறக்கணிக்கப்பட முடியாத அபிப்பிராயம் தான்! ஆனால் இதில் ஒரளவு உண்மையே உள்ளது. அதனால் உண்மையின் முழ பரிமாணத்தை புரிந்துகொள்ள கடந்தகால, நிகழ்கால யதார்த்தங்களை கவனத்தில் கொண்டு சீர்தூக்கி பார்ககவேண்டும்.

நம் முன்னோர்களில் பலர் கோயிலுக்காக தம் சொத்துக்களை அப்படியே எழுதிவைத்தனர். சைவ, வைணவ மடங்களுக்கு சொத்துகளை கொடுத்தனர். அந்த காலத்தில் அரசர்களும், அந்தணர்களும், பெரும் நிலப்பரப்புகளும் கோயிலை நிர்வகித்தனர்.

இவர்கள் அனைவருமே ஆத்திகர்கள் தான்! ஆனால் கோயில் சொத்துகளை நிர்வகிப்பதிலும், சமயச் சடங்குகளை நடத்துவதிலும் இவர்களிடையே ஏற்பட்ட மோதல்களும், குற்றச்சாட்டுகளும் அந்த காலத்திலேயே ஆலயங்கள் எப்படியெப்படியெல்லாம் மனிதர்களின் சுயநலத்திற்கும், ஆதிக்க மனோபாவத்திற்கும் பயன்பட்டு சீரழிந்தன என்றபதற்கு உதாரணங்களாகும்!

பிரிட்டிஸ் அரசும், நீதிமன்றங்களும், சுதந்திரத்திற்கு பிறகான நேருவின் அரசும் இந்துசமய அறநிலையத்துறையை அரசாங்கத்தின் கீழ்கொண்டு வந்த பிறகு தான் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களும், சொத்துகளும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டன. காப்பாற்றப்பட்டன, ஆனால் இவை முழுமை பெறவில்லை என்பது மாத்திரமல்ல, இவை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றன என்பதும் யதார்த்தம் தான்!

அதனால் தான் நமது தமிழக அரசு கோயில்களுக்கு குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை தற்போது அந்தந்த கோயில்களின் வாசல்களிலேயே வைத்துள்ளது. இந்தப் பட்டியல் உள்ள 99 சதவிகிதத்தினர் இறை நம்பிக்கையுள்ளவர்கள் தான்!

'சிவன் சொத்து குலநாசம்' என்று நம் சமூகத்தில் பல்லாண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்தாலுமே கூட, தமிழகம் முழுமையிலும் நமது அறநிலைத்துறை மேற்கொண்ட ஒர் ஆய்வில் பெரும்பாலான கோயில் நிலங்களை அவற்றின் அர்ச்சகர்களே தங்கள் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்ட அவலங்களை அம்பலப்பட்டுள்ளது.


சிதம்பரம் நடராஜர் கோயில் மிகச்சமீபத்தில் தான் நமது தமிழக அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்பு அக்கோயிலின் உண்டியல் பணம் ஆண்டுக்கு ரூ 37,000 என்பதாகத் தான் கணக்கு காட்டப்பட்டது. ஆனால் கோயில் அறநிலைத்துறைக்கு வந்ததிலிருந்து மாதம் ஒன்றிற்கே ஒரு லட்சத்திற்கும் மேல் உண்டியல்பணம் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே கோயில் பொறுப்புகளை நிர்வகிக்க அறநெறியில் பற்றுள்ள நேர்மையானவர்களும், தெளிவான - கறாரான சட்டதிட்டங்களுமே தேவைப்படுகின்றது என்பதே நடைமுறை அனுபவங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். அதே சமயம் இறை நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேசுபவர்கள் அறங்காவலர்களாக வருவது ஏற்புடையதல்ல பிரச்சினை கடவுள் நம்பிக்கை சம்மந்தமான தல்ல. கண்ணியம் சம்மந்தமானது.


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
25-10-2012

இலங்கையில் இழுத்தடிக்கப்பட்டுவரும் தமிழர்களின் வாழ்வுரிமைகள்

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

கொடூரமான யுத்தம்....
கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் தமிழர்கள்...
குற்றுயிராய் சீர்குலைந்து நிற்கும் சமூகம்.....
ஒரு அடிப்படையான வாழ்வாதாரத்தை கட்டமைப்பதற்கான தவிப்பு...
என்ற இக்கட்டான சூழலில் இலங்கையில் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்க இலங்கை அமைச்சர், சம்பிக்கரணவக்க பேசியுள்ள பேச்சு சர்வதேசத்திலுமுள்ள சமாதான ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"இலங்கைத் தமிழர்களுக்கு குறைந்தபட்ச தன்னாட்சி அதிகாரம் கொண்ட 13வது சட்ட திருத்த மசோதா தேவையற்றது. அது நாட்டை பிளவுபடுத்தும்" என இலங்கை அமைச்சர் 'ஜாதிகஹெல உறுமய' மாநாட்டில் பேசியுள்ளார். இது கடந்த கால துயரங்கலிருந்து எந்த பாடத்தையும் கற்கமறுக்கும் போக்கு என்பதில் சந்தேகமில்லை.

1956ல் இலங்கையில், 'சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி' என்று சட்டம் கொண்டுவரப்பட்டபோது, ஒரு பிரபல இடதுசாரி சிங்களத்தலைவர் அரசுக்கு ஒரு எச்சரிக்கை செய்தார்!

"இந்த இலங்கை தீவு இரண்டுமொழிகள் கொண்ட ஒரே நாடாக திகழ விருப்பமா? அல்லது ஒரே மொழி, இருநாடுகள் என்ற நிலையை எய்த உத்தேசமா? என்பதை அரசாங்கம் யோசித்து முடிவு செய்யப்பட்டும் அந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதன் அவலத்தை தான் அரைநூற்றாண்டு இலங்கை அனுபவித்தது.

சர்வதேச சமூகம் இலங்கை அரசின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்துவருகிறது.

ஏற்கெனவே ஐ.நா.சபையில் பல நாடுகளின் கண்டனத்தை பெற்றுள்ளது இலங்கை. தற்போது அம்னெஸ்டிக் இண்டர்நேஷனலும் அரசை எச்சரித்துள்ளது.
நவம்பர் 1ல் ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. அதில் இலக்கை நிலவரம் தொடர்பாக விவாதிக்க பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், டென்மார்க்.... உள்ளிட்ட நாடுகள் விபரங்கள் சேகரித்து தயாராகி வருகின்றன.

வடமாகாணத்தில் இன்னும் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதும், இயல்புவாழ்க்கை அங்கு தமிழர்கள் அனுமதிக்கப்படாததும், குறிப்பாக வட மாகாணத்தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசின் போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வெலிக்கடை புதிய மக்சின் சிறைச்சாலையில் இன்னும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இங்கே 'விசிட்' செய்த வாசுதே நாணயக்கரா என்ற இலங்கை அமைச்சர், "இவர்கள் மீதான விசாரணைகள் உடடியாக நடத்தப்பட்டு புனர்வாழ்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.." என அந்த கைதிகளை அவலநிலைகண்டு மனம் நொந்து பேசியுள்ளார்.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள், ஆட்கடத்தல்கள, மனித உரிமை மீறல்கள் என்பவை இன்னும் இலங்கையில் முடிவுக்கு வந்த பாடில்லை...!! அவசரகாலத்தில் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.
இத்துடன் மூதூர் என்ற இடத்தில் பிரான்ஸ்நாட்டினர் நடத்தி வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் 17பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவையாவும் இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு விரைந்து முடிவு காண்பதை தவிர்த்து இழுத்தடிக்க விரும்பும் போக்கையே உணர்த்துகின்றன.

இதனால் இலங்கை அரசு மேன்மேலும் சர்வதேச ரீதியில் கண்டணத்திற்கு ஆளாவதும், அவமானப்படுவதும் தவிர்க்கமுடியாதாகிவிடும். சமாதானம் என்ற கருத்தில் இலங்கை அரசுக்கு சஞ்சலம் இருக்கும் பட்சத்தில் சர்வாதிகாரத்தோடு அதை சாத்தியப்படுத்துவேண்டிய நிர்பந்தம் சர்வதேச நாடுகளின் கடமையாகிவிடும்.

போரில் சகலத்தையும் இழந்து நிற்கும் இலங்கையில் உள்ள தமிழர்களை அரவணைத்து வாழ்வளிப்பதும், சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து இலங்கைத் தமிழர்களையும் குறிப்பாக தமிழக அகதிமுகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்விப்பதும் இலங்கை அரசின் வரலாற்றுக் கடமையாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
23-10-2012

Saturday, October 27, 2012

பாகிஸ்தானின் தீவிரவாத அச்சுறுத்தல்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

'தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் அரசு துணைபுரிகிறது' என இந்திய உளவுத்துறை தகவல் தந்துள்ளதாக நமது உள்துறை அமைச்சர் சுஷில்குமார்ஷிண்டே கூறியுள்ளார். 'திருவிழா நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையை காட்ட முயற்சிப்பார்கள். ஆகவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" என மக்களையும் உஷார் படுத்தியுள்ளார் நமது உள்துறை அமைச்சர்.

'பாகிஸ்தானோடு நல்லுறவுகளைப் பலப்படுத்தவேண்டும்' என்று இந்தியா தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அதற்கு ஒத்துழைப்பதில்லை. இந்தியாவிற்குள் ஊடுவருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனைவருமே ஒரு வகையில் ஐ.எஸ்.ஐயில் பயிற்சி பெற்றவர்களாவோ அல்லது வேறுவகையில் ஐ.எஸ்.ஐயின் ஆசி பெற்றவர்களாகவோ தான் இருக்கின்றனர்.

2008 நவம்பரில் நடந்த தாக்குதல் தீவிரவாதிகள் மீது இன்று வரை பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்துவருகிறது.
தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் கூடக் கூறிவருகிறது. அதற்கான ஆதாரங்களையும் அறிவித்துள்ளது.

இதன் பிறகு புனேயில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐயின் பங்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

சமீபத்தில் தமிழநாட்டின் திருச்சியில் கைதான தமீம் அன்சாரியிடமிருந்து இந்திய கடற்படை, ராணுவம்,துறைமுகம் தொடர்பான சிடிக்கள் கைப்பற்றப்பட்டதும், அவர் ஐ.எஸ்.ஐ யுடன் தொடர்பில் இருந்தும் தெரியவந்துள்ளது.
இப்படியாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ நமக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறதென்றால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மீதான வெறுப்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.

காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் லம்பார்டர் கிராமத்தில் அதிரடியாக ஒரு தாக்குதலை சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்தியுள்ளனர். இதில் அப்பாவி இந்திய சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் பலியாகியுள்ளனர். நமது நாட்டு எல்லையில் இந்திய ராணுவம் அமைக்கவுள்ள சோதனைச் சாவடிகள் எதிர்ப்பு தெரிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் அரசாலேயே கட்டுபடுத்தமுடியாத அமைப்புகளாக அதன் உளவுத்துறையும், ராணுவமும் செயல்படுகின்றனவா? என்பதற்கு பாகிஸ்தான் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளது.

பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலகட்டத்தில் ராணுவத்தையும், உளவுத்துறையையும் தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் தான் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான நட்புறவு ஒரளவு பலப்பட்டது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்த சர்க்கிரிக் பகுதி தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பஸ், ரயில் போக்குவரத்து ஆரம்பித்தது. இது வர்த்தகம், சுற்றுலா, நதிநீர் ஆதாரப்பயன்பாடு ஆகியவற்றில் மேன்மேலும் வளர்த்தெடுக்கப்படும் என நாம் நம்பிக்கொண்டிருந்த நிலையில் தான் பாகிஸ்தான் தீவிரவாத ஊடுவல்களை ஊக்கப்படுத்தி வருவதன் மூலம் பரஸ்பர உறவை ஊனப்படுத்திவிட்டது.

"பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ உதவக்கூடாது என இந்தியா பல முறை எச்சரித்துள்ளது. இதை அலட்சியப்படுத்திய பாகிஸ்தான் அரசும் கூட இப்போது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பாகிஸ்தான் அரசின் வசம் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளால் அபகரிக்கப்படும் அபாயம் இருப்பதை அந்த அரசு மட்டுமல்ல அகில உலகமுமே இன்று அச்சத்தோடு அவதானிக்கிறது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநில அளவுக்கான மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ள - இந்தியாவின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த - பாகிஸ்தான் இன்று தான் மூட்டிய பகைமைத் தீயில் தானே வெந்து நொந்து கொண்டுள்ளது. இந்திய அரசு மற்றும் மக்களின் நல்லுறவும், அண்டைநாடுகளுடனானா அதன் உண்மையான உறவுகளும் மட்டுமே அந்நாட்டை தீவிரவாதித்தில் இருந்து மீட்டெடுக்க உதவும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
22-10-2012

மழைவரமா? சாபமா?

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

வட கிழக்கு பருவமழை வலுக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் வடகிழக்கு பருவமழை தான் அதிக தண்ணீரைத் தருகிறது. இந்த நேரத்தில் பொழியும் மழை தான்ஏரி, குளம், ஆறு அனைத்துக்கும் பெருமளவு தண்ணீர் தருகிறது. வறண்ட பகுதிகளெல்லாம் கூட வளமடைகின்றன.

எனவே இந்த மழை நமக்கெல்லாம் 'வரம்' என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இயற்கையின் அருட்கொடையை நாம் வரம் போல் வந்த சாபமாக்கி கொண்டு வருகிறோம்.
நான்குநாள் மழைக்கே நாடு திணறிப்போய்விடுகிறதே!

தெருக்கள், சாலைகள்... எல்லாம் முழங்கால் அளவு தொடங்கி இடுப்பளவு தண்ணீரில் முழ்கி விடுகின்றனவே...!

குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்கள் நிலை நடுமாறி குப்புறக் கவிழ்கின்றன! மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தாலும், மரமே பெயர்ந்து விழுந்தாலும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதாமாகிறது!

மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்துவிழுவதும்,பூமியில் மின்கசிவு உண்டாவதும் எத்தனையெத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றன. ஆரம்பகட்ட மழைக்கே இது வரை 14பேர் பலியாகியுள்ளனர். தொழிற்சாலைகளுக்குள்ளும், வியாபார நிறுவனங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் மழை தண்ணீர் புக்ந்துள்ளன.

திருமணமண்டபங்களும், பள்ளிக் கூடங்களும் மக்களின் புகலிடங்களாகின்றன...!

வான்வெளி மண்டலத்தில் விண்கலங்களையும், ஏவுகணைகளையும் அனுப்பி வல்லமை காட்டத்தெரிந்த நமக்கு சாதாரண மழையைத் தாக்கு பிடிக்க முடியவில்லை!

பொதுநலத்திலும், நிர்வாகத்திலும் நிலவும் அக்கரையின்மையும், அலட்சிப் போக்குகளுமே மழைகாலத் துயரங்களுக்கு காரணங்களாகும் கழிவுநீர் சாக்கடைகளிலும், மழைநீர் வடிகால் கால்வாய்களிலும் அடைப்புகள் அகற்றப்பட்டு, பராமரிக்கப்படிருந்தால் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை. இற்று விழத்தயாராயிருக்கும் மரங்களைக் கண்டறிந்து, மழைகாலத்திற்கு சற்று முன்பாகவே வெட்டி எடுத்திருக்கலாமே.

ஆறுகள், ஏரிகள், குளங்கள் முறையாகத் தூர்வாறப்பட்டு தயார் நிலையில் இருந்தால், மக்களின் வாழிடங்களுக்குள் மழைத்தண்ணீர் ஏன் வருகிறது?
நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியிருந்தால், மழை தண்ணீர் அந்த கட்டிடங்களுக்குள்  ஆக்கிரமிப்பதை தடுக்க முடியாது!

ஆரம்கட்ட, நான்கைந்து நாள் மழையிலேயே தமிழகத்தின் அணைகளில் முக்கால் பகுதி நீர் நிரம்பிவிட்டது. இனி அடுத்தடுத்து மழை பொழிவு மூன்று மாதங்களுக்குத் தொடரும் போது பயிர்களெல்லாம் வெள்ளத்தில் மூழ்கி பாழாகுமே...!

அதுவும் ஆற்றுமணல் படுகைகளிலெல்லாம் மணல் களவாடப்பட்டிருப்பதால் சிறிய மழைக்கே ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. ஏனெனில் ஒரு கன அடி ஆற்றுமணலானது மூன்று அடிகள் தண்ணீரைத் தன்னகத்தே தேக்கவல்லது... என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்!
எனவே மணல்கொள்ளை தடுக்கப்படாதவரை, வெள்ளநீர் பாதிப்புகளை, வேதனைகளை இழப்புகளை தடுக்கமுடியாது.

தமிழ்நாட்டின் மணல் தேவைகளுக்கு ஆற்றுப்படுகைகளை அழிப்பதற்கு மாற்றாக அணைகளில், ஏரி, குளங்களில் அடைந்து கிடக்கும் மணலை அள்ளினாலே பல ஆண்டுகளின் மணல் தேவைகள் பூர்த்தியாகும் என மூத்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உதாரணத்திற்கு மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மூன்றில் ஒரு பகுதி பல ஆண்டுகளாக அடித்துவரப்பட்டுள்ள ஆற்றுமணலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அள்ளினாலே பல லட்சகணக்கான லாரி லோடுகளுக்கு தேறும். இதைப்போல மற்ற பல அணைகளில் படிந்துள்ள மணலையும், தமிழகத்தின் 41,262 ஏரிகளில் படிந்துள்ள மணலையும் தூர்வாரி எடுத்தால் அது தமிழகத்தின் பல ஆண்டுகால கட்டுமானப் பணிகளுக்கு கைகொடுக்கும்.

அதோடு நமது நீர்பிடிப்பு ஆதாரங்கள் வளம் பெறும். பூமிக்குள் மழைநீர் சேகரிக்கப்படும். இதோடு அனைத்துபகுதிகளில் உள்ள கட்டிடங்கள், தெருக்களில் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் அமலாக்கப்படவேண்டும்! இவ்வாறு நாம் விழிப்புணர்வுடன் திட்டமிட்டால், 'வாராது வந்த மாமழையும் நமக்கு வரமாகும்! இல்லையெனில் வரமே, சாபமாகி சங்கடங்களைத் தரும்'!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
19-10-2012

Friday, October 26, 2012

உழல் குற்றசாட்டுகளும், எதிர்வினையும்!

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

சமீபகாலமாக அடுத்தடுத்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சில ஊழல் புகார்களும் அதற்கு சம்மந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து வெளிப்படும் எதிர்வினைகளும் மக்களை மிரட்சியடைய வைத்துள்ளன.

மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் ஊனமுற்றவர்களுக்காக நடத்தும் அறக்கட்டளை,மோசடியில் ஈடுபட்டதாக ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம் புகார் தெரிவித்தது.
ஊனமுற்றோர்களின் பெயரில் பெறப்பட்ட ருபாய் 71லட்சம் பொய்க்கணக்கு எழுதி சுருட்டப்பட்டுள்ளது.

இந்த நிதிகளை பெறுவதற்கும், ஊனமுற்றர்வகள் பயன்பெற்றதாக காட்டுவதற்கும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டதாக போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் சொல்ல முனைந்த சல்மான்குர்ஷித் மேலும் தவறான தகவல்கள் தந்து அம்பலப்பட்டார்.

போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளது. பதற்றமடைந்து சட்ட அமைச்சர் "இதுவரை பேனாவில் மையை நிரப்பினேன். இனி ரத்தத்தாலும் பதில் கொடுப்பேன். என் தொகுதியில் போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி திரும்பி போவார் பாரக்கிறேன்" என்று பேசியுள்ளார்.

இந்தியாவின் சர்வவல்லமை பொருந்திய சட்ட அமைச்சர் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் எனில் அதை சட்டபூர்வமாக எதிர்கொண்டு தூள் தூளாக்கியிருக்கலாமே அதன் மூலம் அவர் தூய்மையானவர் என உலகறியச் செய்திருக்கலாமே!

சட்டத்தின் மீது சட்ட அமைச்சருகே நம்பிக்கையில்லையா? அல்லது தன் மீதே நம்பிக்கையில்லாததன் வெளிப்பாடு தான் இந்தப் பேச்சா? மக்களின் குழப்பம் தீர்க்கப்படவேண்டும்.

இதேபோல் இந்தியாவின் அதி சக்தி வாய்ந்த குடும்பத்தின் மருமகன் மீதும் புகார்! அவர் மூன்றே ஆண்டுகளில் எப்படி ரூ 300கோடிகளுக்கு அதிபதியானார்? என்பது ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்ததின் கேள்வி இந்த கேள்விக்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் காட்டமாக எதிர்வினை ஆற்றினர். ஆனால் உரியவர்களிடமிருந்து உண்மையான விளக்கம் வரவில்லை. இந்த குற்றசாட்டை ஆராய்ந்த உயர் அதிகாரி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதையே மக்கள் பதிலாக கொள்ளவேண்டும் போலத்தெரிகிறது...!

ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.கவும் விதிவிலக்கல்ல என்பது போல அதன் தலைவர் நிதின்கட்காரி மீதும் புகார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அணை கட்டுவதற்காக விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலம் மாநில அரசால் கையகப்படுத்தப்படுகிறது.

அணைகட்ட 72,000கோடி செலவழிக்கப்ப்ட்டுள்ளது. இதில் விவசாயிகள் இன்று வரை பலன் பெறவில்லை. மாறாக அவர்களிடமிருந்து அபரிமிதமாக பறிக்கப்பட்ட நிலத்தில் 100ஏக்கர் நிதின் கட்காரிக்கு தரப்பட்டுள்ளது. அதில் அவர் கட்டியுள்ள தொழிற்சாலைகளுக்கு அணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சோகம் என்னவென்றால் இந்தியாவிலேயே விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாக நடக்கும் விதர்பா மாவட்டத்தில் தான் இந்த வில்லங்கங்கள் நடந்தேறியுள்ளன. ஏழை விவசாயிகளின் நிலத்தையும் பறித்து, அதற்கு ஈடாக அவர்களுக்கு தந்திருக்கவேண்டிய தண்ணீரையும் மறுத்து மாநில அரசு செய்துள்ள முறைகேடுகளில் பா.ஜ.க தலைவர் பிரதான பலன் அடைந்துள்ளார்.
இது எவ்வளவு பெரிய கொடுமை?

அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சுமத்திக் கொண்டாலும் ஊழலில் பரஸ்பரம் பலடைந்து கொள்கின்றனரா? ஆளும்கட்சி எதிர்கட்சி அரசியல்வாதிகள்? என்று மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.!

இந்தப்பிரச்சினையில் சம்மந்தப்பட்ட சரத்பவார் குடும்பத்தின் ஊழல்களை அரவிந்த கெஜ்ரிவால் ஏன் அம்பலப்படுத்தவில்லை? என்று ஒரு ஒய்வு பெற்ற I.P.S அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் செய்பவர்கள் தப்ப முடியாது, அம்பலப்பட்டேயாகவேண்டும் என்பது இப்போது நிருபணமாகிவந்தாலும், ஊழலில் சம்மந்தப்பட்டவர்கள் எவ்விதம் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதையும் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
18-10-2012

பல்லுயிர் பாதுகாப்பு

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்
'பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு' எனும் 'Biodiversity Conservation' தொடர்பான விவாதங்கள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் தற்போது உலகம் முழுமையிலும் பரவலாக நடைபெற்றுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கும் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இதன் முக்கியத்துவம் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. நமது பிரதமர் இதற்காக இந்தியாவில் 264 கோடி ருபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த உலகில் புழு, பூச்சியினங்கள், பறவையினங்கள், நீர்வாழ் இனங்கள், நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள், புல், பூண்டு தொடங்கி சிறிய, பெரிய, தாவரங்கள், மரங்கள்... போன்றவை அனைத்துமே இந்த உலகை உயிர்ப்புடன் பாதுகாப்பதில் அதனதன் பங்களிப்பைச் செய்து வருகின்றன. இவை இல்லையேல் இந்த உலகம் வெகுசில நாட்களில் அழிந்துவிடும். நாம் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கே பெரும் முக்கியத்துவம் தருகிறோம். இயற்கையின் அம்சங்களாகவுள்ள இந்த பல்லுயிர்களை பாதுகாக்க தவறுவதோடு இவற்றின் அழிவுக்கும் காரணமாக இருக்கிறோம். 'இது காலப்போக்கில் மீட்கமுடியாத உலக பேரழிவுக்கே வழிவகுத்துவிடும்' என உலகம் முழுமையிலுள்ள இயற்கை விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் அறிஞர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.
இதை எளிமையாகச் சொல்வதென்றால், நாம் மண்புழுவை அழித்துவிட்டோமென்றால் விவசாயமே வீழ்ந்துவிடும், தேனீ உள்ளிட்ட பூச்சியினங்களை அழித்துவிட்டால் மகரந்த சேர்ககைக்கே வழியின்றி பூஞ்செடிகள் பூமியில் காணமலாகிவிடும்! அதே போல் மரம், செடி, கொடிகள் போன்றவை காற்றைத் தூய்மைப் படுத்தி மனித சுவாசத்தின் மற்றொரு நுரையீரலாக செயல்பட்டு வருகின்றன. இந்த பேசவியலா உயிரினங்கள் ஒவ்வொன்றுமே ஏதோ ஒரு வகையில் இந்த உலகின் உயிர்சூழலுக்கு மகத்தான பங்களிப்பை தந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பேசத்தெரிந்த மனித குணமோ தன் பகுத்தறிவால் இயற்கைக்கு அளப்பரிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • பல்லுயிர் இனப்பெருக்கத்திற்கு பலமான அரசாகத் திகழ்ந்து கொண்டிருக்கிருக்கும் காடுகளை அழித்துவருகிறோம். விளைநிலங்களை கான்கிரிட் காடுகளாக்கி வருகிறோம்.
 
  • ரசாயண உரங்களால் மண்புழு அழிக்கிறோம். பூச்சிக்கொல்லி மருந்துகளால் பூச்சியினத்தை வேரறுக்கிறோம்.
 
  • அந்தந்த மண்ணிற்கேயான செடிகளும், மரங்களும் இயற்கையின் அருட்கொடைகள்! இதை மாற்றும் விதமாக வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படும் விதைகள், செடிகள் மரங்கள் இயற்கை சமன்பாட்டை அழித்துவிடும். இதை நாம் அதிகமாகவே செய்து தற்போது அல்லல்படுவதற்கு, யூகலிப்டஸ்மரங்கள், வேலிகாத்தான் செடிகளே சாட்சியாகும். இவை மற்ற தாவரங்கள் எதையும் வளர அனுமதிக்காது.
  • மரபணு பரிசோதனை ஆராய்ச்சியின் உச்சமாக - இயற்கைவிரோதமான மரபணுக்களை மாற்றி வைத்து கலப்பினங்களாக நாம் உருவாக்கிவரும் தாவரங்கள், விலங்கினங்கள் வருங்காலத்தில் விகாரமான விளைவுகளைத் தரும். பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவேண்டும்.
  • பெருகிவரும் அதீத மக்கள் தொகை இயற்கை வளங்களுக்கு, பல்லுயிர்களின் நலன்களுக்கு மாபெரும் ஆபத்தாகிக் கொண்டிருக்கிறது.
  •  
  • கடலுக்குள்ளிருக்கும் பவளப்பாறைகள் கடல் போக்குவரத்திற்காக அழிப்பது, புவி வெப்பமயாமதல், ஓசோன் மண்டலத்தை மாசடையச் செய்தல், நீர்நிலை பூமியெங்கும் பிளாஷ்டிக்குப்பைகளை குவித்தல், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்களுக்குள் சுற்றுலாவை அனுமதித்தல்... போன்றவை அனைத்துமே பல்லுயிர் பெருக்கத்திற்கு எதிரான செயல்களாகும்!
பல்லுயிர் பெருக்கம் தடைபடுமாயின் அதை விட உயிர்சூழலுக்கு வேறு பேராபத்து இருக்க முடியாது. நம் சௌகரியத்திற்காக தாவரங்கள் பூச்சியனங்கள், உயிரினங்களை தொடர்ந்து அழித்துக் கொண்டிருப்பது மெல்ல, மெல்ல மனித இனம் தன் தலைக்கு தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்குச்சமமாகும்.
இந்த பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை அன்றே நம் முன்னோர்கள் உணர்ந்தால் தான், "பார்க்கும் உயிர்களனைத்துமே அந்த பரம்பொரு ளின் அம்சம் தான்" என்றனர்!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
17-10-2012

தேசிய முதலீட்டு வாரியம்; தேவையா? தீமையா?


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

மத்திய அமைச்சரவைக்குள் ஒரு மல்யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு அமைச்சர்களே, இந்த பரபரப்புக்கு காரணம். 'தீவிரமான பொருளாதார சீர்திருத்தத்திற்கு தீட்டப்பட்ட திட்டம் இது' என 'தேசிய முதலீட்டு வாரியத்தை' முன்மொழிந்தார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

இதன்படிஇனி, ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு மேல் துவக்கப்படும் எல்லா பெரிய தனியார் நிறுவனங்களுக்கும். அனைத்து லைசென்சுகளும் விரைந்து வழங்கப்படும். ஒரு பெரிய தொழிலை துவங்குகிறவர் ஒவ்வொரு துரையாக விண்ணப்பித்து அனுமதி பெறுவதில் இருக்கின்ற தாமதத்தைத் தவிர்த்து, அவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் வழங்கும் ஒரே வாரியமாக தேசிய முதலீட்டு வாரியம் செயல்படும். இதற்கு பிரதமர் தலைவராகவும், நிதிஅமைச்சரும், சட்ட அமைச்சர்களும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்..." என்பது ப.சிதம்பரம் பரிந்துரைத்துள்ள திட்டமாகும்.

இதை சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்திநடராஜன் மிகக்கடுமையாக விமர்சித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எல்லா துறைகளுக்கான கடமைகளையும், உரிமைகளையும் ஒரே ஒரு அமைப்பே கையில் எடுத்துக்கொள்ளுமானால் மற்ற துறைகளோ, மந்திரிகளோ எதற்கு?

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழலை ஒரு திட்டம் பாதிக்குமென்றால், மக்கள் நலன்களை, ஆரோக்கியத்தை ஒரு திட்டம் சீர்குலைக்குமென்றால் அதை தடுக்கின்ற பொறுப்பு சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உள்ளது. ஜனநாயக நாட்டில் அதிகாரப்பரவலை அழிக்கும் விதத்தில், 'எடுத்தேன் - கவிழ்த்தேன்' என செயல்பட்டால் பாராளுமன்றத்திற்கு பதில் சொல்லப்போவது யார்? மக்களுக்கு பதில் சொல்லப்போவது யார்? எனவே அதிமோசமான பின் விளைவுகளை ஏற்படுத்ததக்க தேசிய முதலீட்டு வாரியம் தேவையற்றது..." என்று தீர்க்கமாக கூறுகிறார் ஜெயந்திநடராஜன்.

ஜெயந்தியின் வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பழங்குடியின நலத்து அமைச்சர் கே.சி.தியாவும், ஏராளமான சுற்றுச்சூழல் ஆதரவாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மேற்படி வாரியத்தை எதிர்க்கின்றனர்.

அதே சமயம் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பல பெரும் தொழில் அதிபர்கள் குரல் கொடுக்கின்றனர். இந்தியத் தொழிலதிபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் C.I.I, Assocham, FICCI போன்ற அமைப்புகள் தேசிய முதலீட்டு வாரியத்தை வரவேற்கின்றன. இதற்கு இவர்கள் கூறும் காரணம், 'பற்பலதுறைகளிலிருந்தும் அனுமதி பெற வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், எண்ணிய இலக்கு ஈடேறாமல் போகிறது' என்பதே!

இந்த ஆதங்கம் நியாயமானது. விரைவில் சரிசெய்யப்படவேண்டியது என்பதில் யாருமே கருத்து வேறுபட முடியாது.
ஆனால், இந்த காலதாமத்திற்கான காரணங்கள் அரசுத்துறைகளின் இலக்கணமாகிப்போன அதீத அலட்சியப்போக்குகளும், ஊழல்களுமே!

எனவே இந்த இயல்பை மாற்றுகிற, இந்த இலக்கணத்தை உடைக்கிற அவசர, அவசிய அறுவைசிகிச்சை தான் இன்றைய தேவையாகும்!

ஏனெனில், இது போன்ற அணுகுமுறைகளால் இன்று பாதிக்கப்ப்ட்டிருப்பது பெரிய தொழில் அதிபர்கள் மாத்திரமல்ல. லட்சகணக்கான சிறு குறுந்தொழில் முகவர்களும் தான்! இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு குடிமகனுமே இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மாற்றாக ஒவ்வொரு லைசென்சுக்குமான காலக்கெடுவை கறாராக தீர்மானிக்கலாம், காலக்கெடு மீறிப்படுவதை கடும் தண்டைனைக்கு உட்படுத்தலாம்!

எனவே, எடுக்கப்படும் தீர்வு அனைவருக்கும் பொதுவாக அமைவதோடு இயற்கைசூழல்களுக்கோ, எளிய மக்களின் நலன்களுக்கோ எதிராக அமைந்துவிடக்கூடாது.

எனவே அரசுத்துறைகளின் அலட்சியத்தையும், ஊழலையும் பெரிய தொழில் அதிபர்கள் எதிர்க்க முன்வரவேண்டுமேயல்லாது, 'கரப்சனையே' தங்கள் காரியங்களை சாதிக்க கிடைத்த அனுகூலமாக கருதிவிடலாகாது.

மக்களின் நலன்களை பாதிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட தொழிற்திட்டங்கள் கடந்த காலத்தில் சந்தித்த அனுபவங்களுக்கு உதாரணங்களே நந்திகிராமம், சிங்கூர், வேதாந்தா, கூடன்குளம் போன்றவை. போபால் விஷவாயு கசிவு தந்த படிப்பினைகளையும் கவனத்தில் கொள்வோம். ஒரு ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கூட்டுச் செயல்பாடு முக்கியம். அதிகார குவியல் ஆபத்தானது. கூட்டுச்செயல்பாட்டை புறக்கணித்து, அதிகார குவிமையத்தின் குறியீடாக பாரக்கப்படும் தேசிய முதலீட்டு வாரியம் தேவையற்றது. தவிரக்கவேண்டியது.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
12-10-2012

Thursday, October 25, 2012

ஊழல் ஒழிப்பு....என்னசெய்யவேண்டும்?

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மாநில ஊழல் தடுப்பு பிரிவுகளின் 19வது மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் ஊழல் தடுப்பு குறித்து பேசியுள்ளார்.
அதன் முக்கியமான அம்சங்கள்;
  • ஊழல் தடுப்பு சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்படும் வகையில் திருத்தப்படும்.
  • ஊழல் கார்பரேட் நிறுவனங்களின் மீதும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் பாயும்.
  • ஊழலில் பணம் பெற்றவர் மட்டுமின்றி தருபவரும் தண்டனைக்குட்படுத்தப்படுவார்.
  • ஊழல் தடுப்பில் சி.பி.ஐயும், மாநில ஊழல் தடுப்பு பிரிவும் இணைந்து செயல்படலாம்.
  • நேர்மையான அரசு அலுவலர்கள் பாதுகாக்கப்படுபவர், நிர்வாகத்திறன் நிலைநாட்டப்படும்.
  • ஊழலை ஒழிக்கும் நடிவடிக்கைகளில் எதிர்மறைச் சிந்தனை, தோல்விமனப்பான்மை பலனளிக்காது. அவை நாட்டின் நன் மதிப்பை குலைக்கும்.
நமது பிரதமர் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் அனைவருக்கும் ஏற்புடையது தான். ஆயினும், பிரதமரின் பேச்சு பெரும் விவாதிமாகியுள்ளது காரணம் பிரதமரின் பேச்சில் சாதுர்யம் வெளிப்பட்டுள்ளதேயன்றி சத்தியத்தை நாம் அதில் தரிசிக்க முடியவில்லை... என்பதே!
  • ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த ஊழல்கள் நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ளன. ஆதர்ஸ் ஊழல், 2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்... போன்ற ஊழல்களை தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய அதிகாரத்திலிருக்கும் பிரதமர் எல்லாவற்றையும் ஒரு பார்வையாளர் கோணத்திலிருந்து அணுகுகிறார்.
"1990களுக்குப் பிறகு ஏற்பட்ட பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சிக்கேற்ப ஊழலும் வளர்ந்துள்ளது. அதற்கேற்ப ஊழல் தடுப்பு அமைப்புகளும் சவால்களை சந்திக்கின்றன" என்பதை தன் பேச்சில் ஒத்துக்கொண்டுள்ள பிரதமர் ஏன் ஊழல் தடுப்பு அமைப்புகளை பலப்படுத்தவில்லை...? அவற்றிக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை? என்பதற்கும் வினையாற்றவேண்டும், நமது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெறும் 200உறுப்பினர்களைக் கொண்டு எப்படி 120கோடி மக்கள் வாழும் நாட்டில் ஊழல்களை தடுக்கமுடியும்?
மேலும் சி.பி.ஐயையும், விஜிலென்சையும் அரசியல் நிர்பந்தல்களிலிருந்து விடுவிக்க பொறுப்பு இன்றைய ஆட்சித்தலைமைக்குரியது தானே! இதை எப்போது செய்யப்போகிறார்கள்? என்பது தான் மக்கள் கேள்வி!
காந்திய சகாப்தத்தை கண்ட நமது பாரத தேசம் - இன்று 'கரப்சன்' சகாப்தத்தை சந்திக்கும் அவலத்திற்கு ஆட்சியாளர்கள் தங்களை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும்.
இங்கங்கெனாதபடிக்கு இன்று நீதித்துறை வரைக்கும் ஊழல் தன் கோர நகங்களை நீட்டத்துணிந்துள்ளதானது, சாதாரண பாமர மனிதனையும் நிலைகுலைய வைத்துள்ளது. இன்று எந்த அமைப்பை நம்பி ஊழல் புகார்களை தருவது என்பதே மக்கள் தவிப்பு!
அப்படியே ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி விசாரணைக்கு ஏற்கப்பட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள், மிகவும் செல்வாக்கானவர்கள் தண்டிக்கப்படுவதில்லை விசாரணைக்கான அதீத காலதாமதத்தால் அவை வீரியமிழந்துவிடுகின்றன.
ஊழல்வாதிகளின் சொத்து முற்றிலும் பறிமுதல் செய்யப்படும் என்பதற்கு உத்திரவாதமிருந்தால் தானே ஊழல் வாதிகளுக்கு உதறல் எடுக்கும்!
அது ஊழலைத் தடுக்கும். எனவே, வலுவான 'லோக்பால் சட்டம்' அவசியமாகிறது.
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியது போல, 'இன்றைக்கு ஊழலை ஒழிக்க - ஊழல் என்ற புற்றுநோயை அழிக்க - அதிரடி கதிரியக்க சிகிச்சை மிகவும் அவசியமாகிறது!
ஆனால் இன்றைய தேர்தல் அரசியலும், தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு நடைமுறைபடுத்தப்படும் 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' போன்றவையும் மக்களையும் ஊழல்மயமாக்கி வருகிறது.
இது தான் மிக மிக அபாயகரமானதாகும்! ஏனெனில் மக்கள் எவ்வாறு இருக்கிறார்களோ, அதற்கேற்பவே அவர்களின் தலைவர்களும் அமைவார்கள்!
எனவே பரவிவரும் ஊழல் சிந்தனை மற்றும் செயல்பாடுகளிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? என்று தெளிவாகவும், திடமாகவும் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது! இது தான் ஊழல் ஒழிப்பில் எதிர்மறைச் சிந்தனை, தோல்வி மனப்பான்மையிலிருந்து நம்மைவிடுவித்து, நாம் முன்நகர்ந்து வழிவகுக்கும்! ஊழல் ஒழிப்பு என்பது வெறும் ேப்சல்ல. அனைவரும் சேர்ந்து நடத்தவேண்டிய வேள்வி!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
11-10-2012

அபரிமிதமான உணவுதானியங்கள் பசிக்கா? பகட்டிற்கா?

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


பிரிட்டிஷார் காலத்தில் பல பஞ்சங்களை பார்த்து இந்த பாரததேசம்!
அந்த பஞ்சத்தில் அடிபட்டு, பசியால் துடிதுடித்து, பல லட்சம் பேர் இறந்தனர். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் உணவுபற்றாக்குறை இருந்தன.
ஆனால் பசுமைபுரட்சி பஞ்சத்தை விரட்டியது.

அபரிமிதமான உணவு உற்பத்தியால் பாரதம் செழித்தது.
இப்படி அபரிமிதமாக உற்பத்தியாகி குவிக்கப்படும் உணவுதானியங்கள் பசியைத்தீர்ப்பதற்கா? என்பது இன்று கவலைக்குரிய விவாதப் பொருளாகிவிட்டது.

சமீபத்தில் பொருளாதார பத்திரிக்கை ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், கடந்த இரண்டாண்டுகளில் உணவு தானிய உற்பத்தி அபரிமிதமாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் மட்டும் நமது உணவு தானிய உற்பத்தி 25கோடியே 74லட்சம் டன்கள் இதனால் நாம் வெளிநாட்டிற்கு ஒரு கோடி டன் அரிசியையும், 25லட்சம் டன் கோதுமையையும், 25லட்சம் டன் சர்க்கரையையும் மற்றும் பல தானியங்களையும் தற்போது ஏற்றுமதி செய்கிறோம். இதையும் மீறி நமது உணவு தானியக் கிடங்குகளில் 7கோடி டன் தானிய கையிருப்பு உள்ளது. நமது பொதுவிநியோகத் திட்டத்திற்கு தேவைப்படுவதைவிடவும் உபரியாக 2.12கோடி டன் கூடுதலாக கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இது தான் நமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கெனவே இருக்கும் தானியங்களையே நாம் முறையாக பாதுகாக்க, பராமரிக்கத் தவறி பல லட்சக்கணக்கான டன் தானியங்கள் புழுத்துப்போய் வீணாகின்றன...! அப்படியிருக்க, இப்போது உபரியான தானியங்களனைத்தும் உதவாமல் அல்லவா விரயமாகும்....? என்பதே ஆர்வலர்களின் வேதனை!

நமது நாட்டின் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளில் சுமார் 4கோடி 20லட்சம் டன்களை மட்டுமே சேமிக்க இடமிருக்கிறது. மற்றபடி சேர்பவை அனைத்தும் திறந்த வெளி கிடக்குகளில் தார்பாய் போர்பத்தி வைக்கப்படுகின்றன.

இவை வெயில், மழை, பணியில் பாழாவதும், எலிகளுக்கு இரையாவதும் வாடிக்கையாயுள்ளன. அதோடு இவை அரசு அதிகாரிகள் சிலராலும், சமூக விரோதிகள் சிலராலும் கடத்தப்படுகின்றன. இது ஒரு புறமிருக்க, பாதுகாப்பாக கிடங்குகளில் அடுக்கிவைக்கப்படும் தானியங்களுமே கூட முறையான பராமரிப்பு, திட்டமிட்ட விநியோக முறையின்றி பூச்சிகளுக்கு இறையாகியும், பூஞ்சை பிடித்தும் அழிகின்றன.

இதனால் தான் பிரபல வேளாண்விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், "நமது உணவு தானியங்கள் வீணாவது குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வைண்டும்" என்றார்.

நமது ஊரகத்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ், "உணவுதானியங்களை எப்படி பாதுகாப்பது என்ற விவஸ்த்தையே இல்லாமல் பஞ்சாபில் பல கழிவறை கூடங்களே தானிய கிடங்காகி உள்ளன. இந்தியாவில் சிக்கிம் மாநிலம் தவிர, அனைத்து மாநிலங்களிலும் இன்று வரை திறந்தவெளி உணவுக்கிடங்குகள் பரிதாபமாய் காட்சியளிக்கின்றன" என்று பேசியுள்ளார்.

இந்தக்கொடுமைகள் பொறுக்கமாட்டாமல் தான் பி.யு.சி.எல் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து. உச்சநீதிமன்றமோ, "பாழாய்போகும் உணவுதானியங்களை பசியால் வாடும் ஏழைகளுக்கு விநியோகியுங்கள்" என கட்டளையிட்டது.

முதலில் இதை மறுத்த மத்திய அரசு பிறகு 25லட்சம் டன் தானியங்களை ஏழைகளுக்கு விநியோகித்தது. ஆனால் தற்போது முன்பைவிடவும் மோசமான அளவில் உணவு தானியங்களை வீணாவதை அடுத்து உணவு அமைச்சகம் இவற்றை விநியோகிக்க பரிந்துரைத்த போது நிதி அமைச்சகம் தடுத்துவிட்டது.

தங்கள் உயிரைக்கொடுத்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்கள் நாம் விரையமாக்குகிறோம். ஆம்! இந்த உணவு தானிய உற்பத்திக்கு காரணமாக இரண்டரைலட்சம் விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நமது நீராதாரத்தில் சுமார் 60சதவிகிதத்தை நாம் விவசாயத்திற்குத்தான் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் கிடைத்தற்கரிய நீரையும், மண்வளத்தையும், விவசாயிகளின் உழைப்பையும் வீணாக்குகிறோம்!

"சும்மா இருந்திருந்தாலே பல சுமைகளும், வேதனைகளும் தவிர்க்கப்பட்டிருக்குமே" என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
உணவை தெய்வமாக கருதும் பாரம்பரியத்தின் காரணமாகவே நாம் அன்னத்தை, 'அன்னலஷ்மி என்கிறோம். அன்னதானங்களை ஆண்டவனுக்கு செய்யும் சேவையாக கருதுகிறோம். ஒரு பருக்கை அன்னத்தை கூட வீணடிக்க மறுத்தவர் தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர். காந்திதேசம் இந்த உணவு தானிய விரயத்திற்கு உடன்படலாமா?

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
10-10-2012

காவேரி தண்ணீரும், கபடநாடகங்களும்

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

கர்நாடகாவில் காவேரி நீர் பங்கீடு தொடர்பான கொந்தளிப்புச் சூழல் அனைத்துகட்சி அரசியல்வாதிகளாலும் தூண்டிவிடப்பட்டு கடந்த 10நாட்களாக இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்துள்ளது. பத்துநாட்களாக தமிழகலாரிகள் கர்நாடக மாநிலத்திற்குள் செல்லமுடியவில்லை.

பந்த், ஆர்பாட்டம், ஊர்வலம், கடையடைப்பு, உண்ணாவிரம்.... என எல்லாவித போராட்டங்களும் அரங்கேறிக் கொண்டுள்ளன.

16பாராளுமன்ற உறுப்பினர்கள் கர்நாடகாதரப்பில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் விட இயலாத நிலைபற்றி அரைமணிநேரம் பேசியுள்ளனர். இத்துடன் மத்திய அமைச்சர்கள் எஸ்.எம். கிருஷ்ணா, மல்லிகார்ஜீனகார்கே, கே.எச்.முனியப்பா ஆகியோரும் பிரதமரைச் சந்தித்து கர்நாடக தரப்பு நிலைமைகளை பிரதரமரிடம் ஒரு மணிநேரம் விளக்கியுள்ளனர்.

இவ்வளவுக்குப் பிறகு, 'நான்மட்டும் விட்டுவிடுவேனா வாய்ப்பை?' என கர்நாடக முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டரும் பிரதமரை சந்திக்கிறார்.
ஆனால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் இந்த பதட்டங்கள் இல்லை. தமிழக எம்.பி.களோ, மத்திய அமைச்சர்களோ, முதல்வரோ, மாநில பொதுப்பணித்துறை அமைச்சரோ யாருமே தலைநகரில் காவேரி நீர்பிரச்சினை குறித்து எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

நமது தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் உயிர்ப்போடு வாதாடி வருகின்றனர்!
நீதி, உண்மைக்கு சாதகமாகத் தான் இருக்கிறது. அந்த உண்மை நம்தரப்பில் வலுவாக இருக்கிறது! அதையும் விட இயற்கையும் இப்போது நமக்குச் சாதகமாக திரும்பிவிட்டது.

கர்நாடகத்தில் தற்போது மழை ஆரம்பித்துவிட்டது. கிருஷ்ணராஜசாகரில் மளமளவென்று தண்ணீரின் அளவு கூடி 104 டி.எம்.சியை எட்டிவிட்டது. அதனால் தான், "நமக்குத் தரமாட்டேன்" என்று வாதம் வைத்த கர்நாடக தரப்பு வக்கீல் வாய் தவறி ஓர் உண்மையை உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார்.

"உச்சநீதிமன்றம் 9,000 கன அடி தான் திறந்துவிடச்சொன்னது. ஆனால் கடந்த சில நாட்களாக 12,000 கன அடி நீர் நாங்கள் திறந்து விட்டிருக்கிறோம்
கர்நாடகத்தில் இவ்வளவு களேபரங்களை நடத்தி, எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறிய நிலையில், ஏன் 12,000கன அடி திறந்துவிடப்பட்டது...? காரணம்; கர்நாடகத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதி சரிவாக உள்ளது. மழை பொழியும் போது அவர்களால் தண்ணீரை ஒரளவுக்கு மேல் தேக்கி வைக்க இயலாமலே திறந்துவிடுகின்றனர்.

ஆக, உண்மை நிலவரம்; இனிவரப்போவது மழைக்காலம் என்பதால் காவேரியில் நாம் கேட்காமலே தண்ணீர் கரைபுரண்டு வந்து கொண்டிருக்கும் என்பதே!
அதே சமயம் கர்நாடகத்தில் உள்ள மக்களிடம், "தண்ணீராவது, தமிழகத்திற்காகவது ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டோம்ல..." என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இது அவர்களே ஏற்படுத்திக் கொண்டது. அதைத்தான் டெல்லி வரை வந்து அரங்கேறிக் கொண்டுள்ளனர் இந்த நாடகத்தை!

நம்மைப் பொறுத்தவரை தற்போது கிடைக்கும் தண்ணீர் ஒன்றரை மாதத்திற்கு முன்பே கிடைத்திருந்தால் அது விவசாயத்திற்கு - குறிப்பாக சம்பா சாகுபடிக்கு பேருதவியாக இருந்திருக்கும்! இப்போது நம் பகுதியிலும் நல்ல மழைப்பொழிவு ஆரம்பித்துள்ளையடுத்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

'காலத்தே செய்வது தான் பயிர்' - காலம் கடந்தால் எல்லாமே பாழ்!
அடுத்த ஒரிரு மாதங்கள் காவேரி டெல்டா விவசாய நிலங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கும் நிலைமைகளையும் சந்திக்க உள்ளோம்! - வழக்கம்போல்!

எனவே, இடர்பாடு ஏற்படும் தருணங்களில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என, ஏற்கெனவே மத்திய நீர்வள ஆணையமும், காவேரி கண்காணிப்பு கமிட்டியும் உருவாக்கி தந்த பார்முலாவை கர்நாடகம் அமல்படுத்தியிருந்தால் இந்த கஷ்டங்களில்லை! தவிப்புகளில்லை, நீதிமன்ற அலைச்சல்களில்லை....!

ஆனால், பாழாய்போன அரசியல் பல அநீதிகளுக்கு அடிக்கோளிட்டுவிடுகிறது.
எனவே பிரதமர், ஏற்கெனவே கூறியது போல், 'தேசிய தண்ணீர் கொள்கை' விரைவில் வகுக்கப்பட்டு தண்ணீர் விநியோக விஷயமாக இனி இரு மாநிலங்களையும் அந்நியப்படுத்தி, தேசிய அமைப்பு அதில் முழுப்பெற்பேற்க வேண்டும்.

நிலத்தடி நீரை பொது சொத்தாகி நீர் நிர்வாகத்தை வளப்படுத்தவேண்டும் இது நடக்கமுடியாதது அல்ல. ஏற்கெனவே யமுனை நதி உத்திரபிரதேசம், ஹிமாச்சலபிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்தரிகாண்ட் என ஐந்தாறு மாநிலங்களில் அமைதியாக பங்கிடப்பட்டு வருகிறது. காரணம், அது மத்திய நீர்வளத்துறையின் நேரடி கண்காணிப்பில் நடக்கிறது.
அதே சூழ்நிலை காவேரி நீர் பங்கீட்டிலும் நடந்து, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகியவை உரியமுறையில் பலன்பெறவேண்டும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
09-10-2012

பொது ஒழுங்கு, சுகாதாரம் போதாத பாரதம்

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அரசுக்கு முடுக்கிவிட்டுள்ளது. இதில் பேசிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ்

"கோயில்களை விட கழிப்பறைகள் முக்கியமானவை. நமது நாட்டில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லாததது வருத்தம் அளிக்கிறது. கோயில்களை விட கழிப்பறைகள் தான் மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது...." என்றார். எந்த பேச்சுக்கு இந்துமத அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கழிப்பறைகளின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்தவே அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் இவ்விதம் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சில் கோயில்களை குறித்த துவேஷ உணர்வோ, அவை கூடாது என்றோ அவர் கூறவில்லை. ஆனால் இந்த சர்ச்சைகளைக் கடந்து மிக அக்கறையோடு அணுகவேண்டிய பிரச்சினை இது.

இந்தியாவில் கழிப்பிட வசதியில்லா பிரச்சினை குறித்து உலக சுகாதார நிறுவனமும் யூனிசெப்பும் அடிக்கடி கூறியுள்ளன; "இந்தியாவில் சுமார் 60 சதவிகித மக்கள் கழிப்பிட வசதியின்றி வாழ்கின்றனர். இதில் 95 சதவிகிதத்தினர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். வெகுசிலர் பொதுகழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் சுகாதாரகேடுகள் தொற்று நோய்கள், அதற்கான சிகிச்சைகள், மனித சக்தி இழப்பு, உற்பத்தி குறைவு என்ற வகையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் கோடியை இந்தியா இழக்கிறது." என்று யூனிசெப் கூறியுள்ளது.

உண்மையில், கழிப்பறை வசதியின்மையில் உலகிலேயே நாம் தான் முதலிடத்தில் உள்ளோம். மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஆப்ரிக்க நாடுகள் கூட இவ்விசயத்தில் நம்மை விட ஒரு படி முன்னேறி தான் உள்ளனர்.
ஆன்மீகத்தில், இலக்கியத்தில், தொன்மையான கலாச்சாரத்தில் இன்னும் பிறவற்றில் நாம் உலகத்திற்கே முன்மாதியாக விளங்கினாலும் கூட, சுத்தம், சுகாதாரம், பொது ஒழுங்கு ஆகியவற்றில் காலங்காலமாக கடைநிலையில் தான் உள்ளோம்.

நமது தேசதந்தை மகாத்மாகாந்தி இந்தியாவில் விடுதலை போராட்டத்திற்கு தன்னை ஆயுத்தபடுத்திக்கொள்வதற்கு முன் கழிவறை சுத்தம், கழிப்பிடப் பயன்பாடு குறித்தே அதிக அக்கறை எடுத்து களப்பணி ஆற்றினார். அவரது 50ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொதுவாழ்வில் அவர் கிட்டதட்ட நாள் தவறாமல் பேசியும், எழுதியும், இடைவிடாமல் களத்தில் இறங்கியும் செயல்பட்டு வந்த ஒரே விஷயம் இது தான்!-

ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை உபாதைகளிலிருந்து நிம்மதியாக விடுபடும் அடிப்படை வசதிகள் உறுதிபடுத்தப்படவேண்டும். இது நடந்தேற வசதியில்லாத மனிதனிடத்தில் - ஒரு சமூகத்தில் - மற்ற எந்த அறிவியல் வளர்ச்சி உயர்ந்தோங்கினாலும் கூட பயனில்லை .

சமீபத்தில் நமது உச்சநீதிமன்றம், 'நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கழிவறை வசதிகள் கட்டாயம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றவேண்டும்' என கட்டளையிட்டது பள்ளிகூடத்தில் கழிவறை வசதிஇல்லாததால் பள்ளிப்படிப்பை இடையிலான நிறுத்திய பெண்குழந்தைகள் ஏராளம்!

கழிவறை சுகாதாரசீர்கேட்டால், திறந்த வெளி கழிப்பிட அவலத்தால் தொற்றுநோய் உருவாகி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றால் உயிரிழக்கும் குழந்தைகள் கணக்கில் அடங்காது...!

பொதுச்சந்தை, கடைவீதிகள், பேருந்து நிலையங்கள்... போன்ற மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பொது கழிப்பிடவசதிகள் மிகமிக குறைவு, அரிது! அப்படியே இருந்தாலும் அவை முறையாக பராமரிக்கப் படுவது அரிதினும் அரிது. இதனால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது.

சுற்றுலாவை ஊக்குவிக்க ஜப்பான் அரசு ஆங்காங்கே பிரம்மாண்டமான செலவில் பொதுக்கழிப்பிடங்களைக் கட்டுகிறது. அது போல் நமது தமிழக முதல்வர் சமீபத்தில் தமிழகத்தின் பிரபல கோயில்களுக்கு வரும் பக்தர்களின் தேவைகான கழிவறைகளை கட்ட சுமார் 5கோடி நிதி ஒதுக்கியுள்ளார். நமது இந்துமத அமைப்புகள் தாங்களுமே கூட இது போன்ற பொதுக்கழிப்பறைகளை, குளியலறைகளை ஒவ்வொரு பெரிய கோவில் அருகிலும் கட்டி பக்தர்களுக்கு உதவினால் அது பகவானுக்கே செய்யும் புண்ணியமாகும்!

நடைபாதைகளில், புதிய குடியிருப்பு பகுதிகளில், நெருக்கமாக மக்கள் வசிக்கும் பகுதித் தெருக்கோடியில்... என எங்கெங்கும் கோவில்களை கட்டுவதில் நாம் காட்டும் ஈடுபாட்டை பொதுக் கழிவறைகளை கட்டுவதிலும், அதை பராமரிப்பதிலும் காட்டுவோமாயின் - அவை இந்த நாட்டில் இந்த வசதிகளற்றவர்களுக்கும், சாலையில் பயணிப்போருக்கும் பேருதவியாக அமையும்! நமது இந்து சாஸ்த்திரங்களிலேயே கழிவறை கட்டுவது ஒரு தர்மாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுசுகாதாரம், பொது இடங்களில் கழிப்படவசதிகள் குறித்த விரிவான விவாதங்களும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் காலத்தின் கட்டாயமாகிறது. இதில் வெட்கமில்லாமல் - அடிப்படை மனித உரிமை என்ற புரிதலோடு அர்ப்பணிப்போடு - அனைவரும் ஈடுபடவேண்டும்!



NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
08-10-2012

ஓய்வூதியம் பென்ஷனின் அந்நிய முதலீடு



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

உலகத்திலேயே அதிக அரசு ஊழியர்களையும், அதிக ஓய்வூதியதாரர்களையும் கொண்டது நம் நாடு தான்!

ஒரு கோடிக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள், 75லட்சம் ஒய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என்ற யானைபட்டாளத்திற்கு மாதாமாதம் ஊதியம், ஓய்வூதியம் இது வரை இந்தியாவில் வழங்கப்பட்டு வந்ததே ஒரு சாதனை தான்!

முறையான நிர்வாக மேலாண்மை பற்றாக்குறையாலும், அதிகரித்து வரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது அதீத எதிர்பார்புகளாலும் சமீப காலங்களில் நமது மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன என்பது உண்மை தான்! ஓய்வூதியதாரர்கள் உயிரோடு இருக்கும் வரை மாத்திரமல்ல அவரது மனைவிக்கு, மனைவி இறந்திருந்தால் திருமணமாகாத அல்லது விவாகாரத்தான மக்களுக்கு மற்றும் 25 வயதாகும் வரை மகனுக்கும் ஓய்வூதியம் தற்போது தரப்பட்டு வருகிறது.

சமீபகாலத்தில் பீகார்,ஜார்கண்ட் அரசுகள் ஓய்வூதியமே அளிக்க முடியாமல் திணறி சில காலம் நிறுத்தி வைத்தன.

இதையடுத்து தான் புதிய ஓய்வூதிய திட்டம் 2004 முதல் அமலாகியது.
இதை இடதுசாரி ஆளுகின்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. இதன்மூலம் அரசின் சுமை கணிசமாக குறைந்தது என்பது உண்மை தான்! ஆனால் இந்தக் கடமையைத் தொடர நமது மத்திய, மாநில அரசுகள் விரும்பவில்லை. தற்போது மத்திய, மாநில அரசு ஊழியர்களின் சேமநலநிதி மட்டுமே ஏழுலட்சம் கோடிக்கும் மேல் அரசிடம் உள்ளது.
இந்த மாபெரும் நிதி ஆதாரத்தை ஏன் நமது அரசுகள் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களிடம் தர இசைந்துள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்! தற்போது இது போன்ற நிதிகள் தான் பல மக்கள் நல மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு உதவுகின்றன.

வெளிநாடுகள் பலவற்றில் தனியார் நிறுவனங்கள் தான் இந்த பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதில் கிடைக்கும் அபாரமான பெருந்தொகையை அவை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன.
பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப பென்ஷன் தொகையும் இருக்கும் என்பது இதிலுள்ள அபாயகாரமான அம்சம்.

அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளில் சில தனியார் நிறுவனங்கள் பென்ஷன் தொகைகளை தரமுடியாமல் முதலீட்டாளர்களை நடுத்தெருவில் நிறுத்திய சம்பவங்கள் உள்ளன. இவை இந்தியாவிலும் அரங்கேறிவிடக்கூடாது என்பதே எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.

நமது நாடு ஜனநாயக சோசலிஷத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்ட நாடு. இதில் ஓட்டு அரசியல் வேறு சேர்ந்து கொண்டதால் அரசு ஊழியர்களின் காட்டில் அடிக்கடி அடை மழை பொழிவது வாடிக்கையாகிவிட்டடது. இதனால் இப்போது அரசு ஊழியர்களின் அதீத எதிர்ப்பார்ப்புகளை - தானே வளர்த்தெடுத்த எதிர்ப்பார்ப்புகளை - நிறைவேற்றத் திணறுகின்றன நமது மத்திய, மாநில அரசுகள்.

இதனால் தான் 2003-ல் பா.ஜ.க அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதியபென்ஷன் திட்டத்தையும், இதில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி என்ற நிலைபாட்டினையும் காங்கிரஸ் 2004 முதல் அமல் படுத்தத் துடிக்கிறது. காங்கிரஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவின் தலைவரே யஷ்வந்த் சின்கா என்ற பா.ஜ.க தலைவர் தான்! எனவே இதில் காங்கிரஸ். பா.ஜ.க ஒருமித்துள்ளன.
2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பென்ஷனுக்காக பிடிடத்தம் செய்யப்படுவதால் இனி பென்ஷன் திட்டம் அரசுக்கு சுமையில்லை என்பது மாத்தரமல்ல, லாபகரமானதும் தான்!

ஆனாலும் இந்த பொறுப்பை சுமக்க நமது அரசுகள் தயாரில்லை என்பது தான் பிரச்சினை. தண்ணீர் விநியோகம், குப்பை அள்ளுவது உள்ளிட்ட சாதாரண நிர்வாகத்தை கூட சமாளிக்க இயலாமல் அந்நிய நிறுவனங்களை நம்புகின்றன மனநிலையில் நாம் இருக்கிறோம்.
தற்போது பென்ஷன் திட்டத்தில் 49 சதவிகித அந்நிய நேரடி முதலீடை அமல்படுத்துவதில் பல பாதகங்கள் இருக்கின்றன! ஆனால் அப்படி பாதிப்பு ஏற்படாத வண்ணம் அசலுக்கும் குறைந்தபட்சம் எட்டு சதவிகித வட்டிக்கும் தானே பொறுப்பேற்கிறது அரசாங்கம். ஆனால் அந்நிய நிறுவனங்கள் மக்களை மாத்திரமல்ல, அரசாங்கங்களை கூட அல்லாட வைத்துவிடும் என்பதற்கு கடந்த காலத்தில் 'என்ரான்' நிறுவனமே அத்தாட்சி..!

இனி வருங்காலம் வசந்தகாலமா? வருத்தப்படப்போகும் காலாமா? என்பதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
05-10-2012

கூடுதல் சினிமா கட்டணங்கள்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

சென்னையில் சில சினிமா தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அரசு துறைகளிடமும், தியேட்டர்காரர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தின் மற்ற பல பகுதிகளிலும் நடந்து கொண்டிருப்பதால் 'தியேட்டர்களில் கூடுதல் கட்டணங்கள்' என்பது, 'கோடிக்கணக்கான சினிமா ரசிகர்களின் குமுறல்' என்று தான் சொல்லவேண்டும்...!

அடிக்கடி இது தொடர்பான குமுறல்கள் வெடிப்பதும், அரசு சில கட்டணவரைமுறைகளை வகுப்பதும் நாம் அறிந்ததே!

சினிமா தியேட்டர் கட்டணங்களை பொறுத்த அளவில் தமிழக அரசு பெருநகரங்கள், நடுத்தரநகரங்கள், கிராமப்பகுதிகள் என மூன்று பிரிவுகளாக பகுத்து, கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அதோடு பெருநகரங்களில் அதிநவீன சொகுசு தியேட்டர்களுக்கென்று பிரத்தியேக கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.

ஆனால் அரசின் கட்டணவரைமுறைகளை தியேட்டர்காரர்கள் பொருட்படுத்தவதில்லை. மக்கள் அதிகமாக, விரும்பி எதிர்பார்க்கும் படங்கள் வெளியாகும் போது முதல் சில நாட்களுக்கு வரம்பு மீறி கட்டணவசூல் செய்கின்றனர். இதன்மூலம் சென்னையில் உள்ள 120தியேட்டர்களில் - இப்படியாக வரம்பு மீறி வசூல் செய்யும் சில தியேட்டர்கள் நாளொன்றுக்கு ஈட்டும் சட்டவிரோத வருமானம் மட்டுமே பல கோடியைத்தொடும்! தமிழகம் முழுக்க தினசரி சுமார் ஆயிரம் கோடி இப்படி சட்டவிரோத வழிமுறைகளில் தியேட்டர்களில் வசூலிக்கப்படுகிறது என மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்காலங்களில் சினிமா தியேட்டர்களில் முன்கூட்டியே சில டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, டிக்கெட் கிடைக்காமல் திரும்புவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பவர்களை 'பிளாக்கில் டிக்கெட் விற்றவர்'களாக கருதி, போலீசார் கைது செய்து அடித்தவாறு இழுத்துச் செல்வார்கள். ஆனால் அந்த ஈனச்செயலை சில தியேட்டர்காரர்களே இன்று செய்கிறார்கள். கறைபடிந்த சில காவல்துறை அதிகாரிகளும் இதற்கு துணைபோகிறார்கள்.

இந்த சட்டவிரோத கூடுதல் டிக்கெட் மற்றும் கூடுதல் கட்டண விற்பனைக்கும் வசூலுக்கும் தியேட்டர்காரர்களை மட்டும் பொறுப்பாக்க முடியாது. நியாயமற்ற விலைக்கு படங்களின் விலையை ஏற்றி வைத்து விற்கும், விநியோகிக்கும் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் கூட பொறுப்புதான் சினாமாவை 'மரியாதைக்குரிய தொழில்' என்ற நிலையிலிருந்து சூதாட்டச் சந்தையாக்கி, தியேட்டர்குக்கு மக்கள் சுலபத்தில் வர முடியாத நிலைமையை உருவாக்கினால் பிறகு ஏன் திருட்டு டி.வி.டிக்கள் பெருகாது...?

சினிமா திரையரங்குகளில் சந்தோஷமாக குடும்பத்துடன் வந்து படம் பார்க்க விரும்புவதே பெரும்பாலான மக்களின் இயல்பு. பெரிய அரங்கில் பலநூறு பேரோடு பார்க்கும் சந்தோஷம் அலாதியானது. ஆனால் ஏழை எளிய நடுத்தரவர்கத்திற்கு இது இன்று எட்டாக் கனவாகிக் கொண்டிருக்கிறது. அதானல் தான் அவர்கள் திருட்டு DVDக்களை வாங்கி வீட்டில் பார்க்கும் நிலைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்களோ... என்று கூட எண்ணவேண்டியுள்ளது.

தமிழல் பெயர் வைத்தால் 'வரிவிலக்கு' என்ற சலுகையை இன்று அனைத்து தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர்களும் நன்கு அனுபவிக்கிறார்கள். இதன் பலன் மக்களுக்கு கிடைப்பதில்லை. நமது அரசுக்கு கேளிக்கைவரியாக கிடைத்த வந்த பலநூறுகோடி இழப்பானது தான் கண்ட பலன். ஆனால் இந்த சலுகையெல்லாம் போதாது என்று சினிமாகாரர்கள் சிலர் கருதி சட்டவிரோத வழிமுறைகளை கையாளுவார்கள் என்றால், அவர்களே சட்டவிரோத DVDக்கள் விற்பனைக்கும் பொறுப்பாகிறார்கள்.

ஏற்கெனவே தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மாலாகவும் மாறியுள்ளன. ஆனால் திரையரங்குகள் உரிய விதிமுறைகளின் படி, தொழில் தர்மத்தோடு நடக்கும் பட்சத்தில், அதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவை நல்கி வருகின்றனர். அப்படிப்பட்ட சினிமா தியேட்டர்கள் குறித்த இனிமையான நினைவுகள் ஞாபக புதையல்கள் ஒவ்வொரு சினிமா ரசிகர்களின் நெஞ்சிலும் நிழலாடிக் கொண்டுதான் உள்ளன. எனவே திரையரங்குகள் என்பவை சந்தோஷப்படும் அடையாளச் சின்னங்களாக நிலைகொள்ளட்டும். சபிக்கப்படும் சட்டவிரோத செயல்பாடுகளை தவிர்க்கவாம்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
04-10-2012

காவேரி நதி நீரும் நம் கடமைகளும்

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்
 
காவேரி டெல்டா பகுதிகள் வற்றிவரண்டு காய்ந்து கொண்டுள்ளன...
ஏமாற்றம், துரோகம், அக்கிரமம்... என அவரவர் மனநிலை சார்ந்து ஆதங்கங்கள் வெளிப்படுகின்றன.
 
குறுவை சாகுபடி பொய்த்து, அறுவடையாக வேண்டிய 5லட்சம் டன் நெல் அம்போவானது! இனி சம்பா சாகுபடியும் சாத்தியமில்லாமல் போனால் 'சாகும்படி' விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிய பாவத்தைத் தான் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். ஆண்டுக்காண்டு காவேரி பிரச்சினை தமிழகத்தை அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது.
 
காவேரி நதிநீர் கேட்டு நாம் நாற்பதாண்டுகளுக்கும் மேல் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். உச்சநீதிமன்றங்களின் கதவுகளை மீண்டும், மீண்டும் தட்டிக்கொண்டிருக்கிறோம். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதில் இடைக்காலத் தீர்ப்பும், இறுதித்தீர்ப்பும் வழங்கப்பட்டன. எதுவும் நடக்கவில்லை. மீண்டும் மத்திய அரசு, காவேரி நதி நீர் அணையம், பிரதமர், உச்சநீதிமன்றம்.... எல்லா தலையீடுகள் நிகழ்ந்தும் பலனில்லை.
 
கடைசியாக கிடைத்த உச்சநீதிமன்ற ஆணையால் கர்நாடகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு, வழங்கப்பட்டு வந்த ஓரளவு தண்ணீரும் ஒரேயடியாக நிறுத்தப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் இனியும் கர்நாடகாவிற்கு அழுத்தம் தருவதும், அப்படியே தந்தாலுமே கூட தண்ணீர் திறந்துவிடப்படுவதும் சந்தேகமே!
 
இந்த சந்தர்பத்திலாவது நாம் நம்மை சற்று சுயபரிசோதனைக்கு ஆட்படுத்தி, இனி நாம் செய்யவேண்டியது என்ன? என்று பார்ப்போம். காவேரியில், கர்நாடகம் தரும் நிலையிலும், நாம் பெறும் நிலையிலும் இருக்கிறோம். தரும் நிலையிலிருக்கும் கர்நாடகா காவேரி நதி தடத்தில் பற்பல சிற்றணைகளை இடையறாது கட்டி வருகிறது. இது மட்டுமின்றி, காவேரியின் உபநதிகளான கபிணி, ஹேமாவதி, சாரங்கி, சொர்ணவதியிலும் அணைகளை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் மத்திய நீர்வள ஆணையத்திடமும், கண்காணிப்பு ஆணையத்திடமும் அனுமதி பெறாமலே கட்டப்பட்டுள்ளன.
 
காவேரியில் தண்ணீர் பெறும் நிலையிலிருக்கும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்துவரும் சமயங்களில் அதை தடுத்து பாதுகாக்க தவறி ஆண்டுதோறும் சுமார் 100டி.எம்.சி தண்ணீரை கடலுக்கு தாரை வார்த்துக் கொண்டுள்ளோம்.
 
காவேரி டெல்டா என்பது தமிழகத்தின் 45 சதவிகித விவசாய நிலங்களை உள்ளடக்கிய பகுதி. காவேரி நீரை நம்பி விவசாயம் மாத்திரமல்ல, சென்னை, திருச்சி... உள்ளிட்ட பல பெருநகரங்களும், சிறுநகரங்களும், கிராமங்களும் குடிதண்ணீர் பெறுகின்றன. ஒரளவு மின் உற்பத்தியும் காவேரி நீரிலிருந்து பெற்ற்று வருகிறோம். ஆனால் நாம் நமக்கு கிடைக்கும் காவேரி தண்ணீரை காப்பாற்ற தவறுகிறோம்.
 
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் தலைசிறந்த பொறியாளர்கள் தமிழக அரசிடம் காவேரி நீர் படுகைகளில் குறைந்த பட்சம் 27 தடுப்பணைகளை சிறு,சிறு கதவணைகளை கட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.ஆனால் ஒரு சில தான் கட்டப்பட்டன.
 
இத்துடன் தமிழகத்திற்கு கிடைக்கும் மழைநீரை நாம் சரியாக சேமிப்பதில்லை. நம் முன்னோர் காலத்தில் திட்டமிட்டு கட்டப்டட ஏரிகள், குளங்களை தூர்வாறாமலும், அவற்றில் தண்ணீர் சென்று சேராத வண்ணம் ஆக்கரமித்தும் வருகிறோம். இவை நமக்கு நாமே செய்யும் துரோகம், அக்கிரமம், ஏமாற்று ஆகாதா?
 
அதோடு நமது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற படி அனைத்து ஆற்றோர படுகைகளிலும், மற்ற பல இடங்களில் பரவலாகவும் மரம் நடுவதை ஒரு யாகம் போல செய்து நிறைவேற்றினோமென்றால் வருணபகவான் கருணையால் தமிழகம் அதிக மழைபொழிவை பெறுமே!
 
இவை அனைத்தையும் போர்கால நடவடிக்கைகளாக கருதி, மக்களின் பங்களிப்புடன் நமது தமிழக அரசு செய்யுமானால் நிகழ்காலம் மட்டுமின்றி எதிர்காலமும் பயன்பெறும். அத்துடன் நமக்கு கிடைக்கும் குறைந்த ஆற்று தண்ணீரிலுமே கூட தொழிற்சாலை கழிவுகள் கலந்து பாழாவதை கண்டிப்பாக தடுக்கவேண்டும். இருக்கும் நீரை அசுத்தபடுத்தியும், கடலுக்கு தாரை வார்த்தும் வீணடித்துவிட்டு பிறகு பல்லாயிரம் கோடிகள் செலவழித்து கடல்நீரை சுத்திகரிக்க திட்டம் தீட்டுவது என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
03-10-2012

Tuesday, October 23, 2012

அணுஆயுத பரவலுக்கு தடை யாருக்கும் துணிவில்லை

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
தீவிரவாதம், அணு ஆயுத குவிப்பு.... இந்த இரண்டும் தான் இன்றைய சூழலில் உலக நாடுகளை அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது. இதைத்தான் தற்போது நீயூயார்க் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச்சபை கூட்டத்தில் நமது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெளிப்படுத்தியுள்ளார்.
 
"உலகில் அணு ஆயுதங்கள் கூடாது, அதன் உற்பத்தி தடை செய்யப்படவேண்டும் என்று சொல்லாத நாடுகளே இல்லை எனலாம். ஆனால் துரதிஷ்டவசமாக அப்படிச் சொல்லுகின்ற நாடுகள் தான் அணு ஆயுதகுவிப்பில் நிகரற்று விளங்குகின்றன. ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா... ஆகிய இந்த ஐந்து நாடுகளே இன்று ஆயுத குவிப்பில் முன்னணி வகிக்கின்றன ஆனால் இவை ஐந்தும் ஒன்று சேர்ந்து கொண்டு இன்று அணு ஆயுத பரவல் தடை சட்டம் ஒன்றை கொண்டுவந்து அதில் கையெழுத்திட மற்ற நாடுகளை நிர்பந்திக்கின்றன.
 
அப்துல்கலாம் அவர்கள் கூறியது போல இந்தியாவைச் சுற்றியிலுமுள்ள நாடுகள் அணு ஆயுதங்களை குவித்துக் கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் அமைதி வழியில் பயணிக்க முடியாது. அதிகாரச் சமநிலையை ஒரளவாவது ஈடுகட்டாமல் அமைதிக்கு உத்திரவாதம் தரமுடியாது. அதனால் தான் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இந்தியா உறுதியாக கையெழுத்திட மறுத்துவருகிறது.
 
உலகில் இன்றைய தினம் 20,000க்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன.
இதில் 50சதவிகிதம் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. அமெரிக்காவிடம் இருக்கும் எண்ணிக்கைக்கு ஒப்பிட்டால் இந்தியாவிடம் ஒரு சதவிகிதம் தான் இருக்கிறது. நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியிருப்பது போல, நிச்சய தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலகச்சூழலில் அணு ஆயுதங்கள் நமக்கு தவிர்க்க முடியாத பாதுகாப்பாகின்றன.
எனவே தான் இந்தியா முதலில் அணு ஆயுதங்களை குவித்துள்ள நாடுகள் அவற்றை குறைக்கவேண்டும். "இனி உற்பத்தி செய்யமாட்டோம்' என்ற உறுதிமொழியையும் அளிக்கவேண்டும். என்று வற்புறுத்துகிறது.
 
உலக அளவில் அதிகரித்துவிடும் தீவிரவாதத்தை தடுக்க, 'உலக தீவிரவாத புரிந்துணர்வு மாநாடு' விரைவில் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு பேசிய நமது வெளியுறவு அமைச்சர், "தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளுமே ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். அந்த தீவிரவாதத்தை வளர்த்தெடுக்க இடம், பயிற்சி, நிதி தரும் நாடுகளை மற்ற நாடுகள் புறக்கணிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தீவிரவாதத்திற்கு ஆதரவாக இடம், பயிற்சி தருவதில் பாகிஸ்தானும், நிதி தருவதில் அமெரிக்காவும் ஈடுபடக்கூடாது என்ற வேண்டுகோளாகவே இதை நாம் கருதலாம்!
 
தீவிரவாதிகள் ஆபத்தானவர்கள், ஒழித்துக்கட்டப்படவேண்டியவர்கள் என்பதில் நமக்கு எந்த கறுத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீவிரவாதம் உருவாவதற்கு வல்லரசுகளின் அதிகாரப்போட்டிகளும், பேராசைகளும் மிக முக்கிய பங்கு வகிப்பதை நாம் ஒரு போதும் புறக்கணித்துவிட முடியாது. அணு ஆயுத குவிப்பு என்பது உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஆபத்தானதே. முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி கூறியது போல, "விபத்து, கிறுக்குத்தனம், தவறான மதிப்பீடு என்ற மூன்று அம்சங்களில் உலகிற்கு அணு ஆயுத ஆபத்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்."
 
எனவே ஒவ்வொரு நாடும் இதில் மற்றவர்களுக்கு உபதேசிக்காமல் அவரவர் மனசாட்சியை தொட்டு பார்த்துக் கொள்ளவேண்டும். மூன்றாவது உலகப்போரோ, அணுஆயுத விபத்தோ நிகழுமாயின் இந்த உலகில் புல் பூண்டு உட்பட எந்த ஜீவராசிகளும் ஜீவித்திருக்கமுடியாது.
 
அன்பு, மனிதநேயம், மதம், ஆன்மீகம்... என்ற ஏதேனும் ஒரு சில அம்சங்கள் மனிதனை பேராசைகளிலிருந்தும், அதிகார வெறியிலிருந்தும் ஓரளவு விடுவிக்க துணைபுரிந்த போதிலும், அமைதியை நிலை நாட்டுவதில் உலக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வல்லரசுகளை பணிய வைக்கவோ, அல்லது மக்கள் எழுச்சியின் காரணமாக வல்லரசுகள் பணியும் சூழலோ உருவாக வேண்டும்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
02-10-2012

Thursday, October 18, 2012

காந்திய காட்டிய வழியில் செல்வோம்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
சமானத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் சமரசமற்ற அஹிம்சைப் போராட்டத்தை நடத்திய மகாத்மாகாந்தியின் 143வது பிறந்த தினம் இன்றைய அரசியல் சமூக சூழல்களுக்கிடையே மிகவும் முக்கியத்துவமானாதாகிறது.
 
காந்தி மறைந்து 64 ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட தற்போது உலகில் அதிக அளவில் நினைவு கூறப்படும் தலைவராக அவர் திகழ்கிறார். காரணம் தனிமனித ஒழுக்கம், பொதுவாழ்க்கை, சமுதாயமுன்னேற்றம், அஹிம்சை... என பலவற்றிற்க்கும் இன்றைய தினம் உலகத்தலைவர்கள் காந்தியின் வாழ்க்கையிலிருந்து வெளிச்சம் பெற்றுவருகின்றனர்.
 
அதனால் தான் வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் கொடி மாகத்மா காந்தியின் மரணத்திற்காக அரைக்கம்பத்தில் பறந்தது. அக்டோபர்-2- காந்தி பிறந்த தினம் ஐ.நாசபையால் உலக அஹிம்சை தினமாக அறிவிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
 
காந்தி, சென்ற நூற்றாண்டில் மட்டுமல்ல, இந்த நூற்றணாடிலுமே கூட உலகில் அதிக தாக்கத்தை உருவாக்கியராக மறைந்தும், மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆப்பிரிக்காவின் கென்னத்கௌண்டா, தென்ஆப்பிரிக்காவின் நெல்சன்மண்டேலா, அமெரிக்காவின் மார்டின்லூதர்கிங், மியான்மரின் ஆங்சாங்.சூயி, திபெதித்திய மக்களின் தலைவர் தலாய்லாமா... போன்ற எண்ணற்ற உலகத் தலைவர்களுக்கு காந்தி ஆதர்ஷபுருஷராக விளங்குகிறார் என்பது மாத்திரமல்ல, காந்தியை முழுமையாக பின்பற்ற முடியாவிட்டாலும், அவ்வப்போது பூமியில் பளிச்சிட்டுச் செல்லும் மின்னல்கீற்றைப் போல - இக்கட்டான பிரச்சனைகளில் இப்போதும் உலகத்தின் அதி சக்தி வாய்ந்த ஆட்சியாளர்களான அமெரிக்க அதிபர் ஓபாமா, ரஷ்ய பிரதமர் புட்டின் வரை காந்தியைத் தான் நாடுகின்றனர்.
 
இந்தச் சூழலில் அவர் பிறந்த தேசமான இந்தியாவிற்கு முன்னெப்போதையும் விட காந்தியின் வழிகாட்டுதல் தற்போது மிகவும் அவசியமாகிறது. இந்தியாவை இன்றைக்கும் உலகம் 'காந்திதேசம்' என்றே அடையாளம் காண்கிறது. ஐநூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்கள், 30தேசிய இனங்கள், நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள், கலாச்சாரங்கள், மதவழிபாடுகள் கொண்ட சிதறிக்கிடந்த நிலப்பகுதியை 'இந்தியா' தேச அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுத்திய சக்தியாக காந்தி திகழ்ந்தார். ஆனால் அவர் உருவாக்கி தந்த தேசத்தை இன்னும் எத்தனைகாலம் பாதுகாப்போம் என்பது தற்போது கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
  • மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகள்....,
  •  வெளிநாட்டு நிறுவனங்கள் நமது இயற்கை வளங்களை சுரண்ட அனுமதித்ததில் எழுந்துள்ள மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை...,
  • சிறுபான்மையின் மக்கள் பிரச்சினை..., மதத்தீவிரவாத பிரச்சினை..., இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஊழல் முறைகேடுகள்...,
  • ஏழை - பணக்காரர் இடையிலே உருவாகி விரிந்துசெல்லும் அதீத இடைவெளி..., வறுமை, வேலையின்மை...,
  •  தரமான கல்வி, மருத்துவம் போன்றவை ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிக் கொண்டிருப்பது..,
  • பொது வாழ்க்கையிலிருப்பவர்களின் சரிந்து வரும் மதிப்பீடு..,
போன்ற பற்பல பிரச்சனைகளுக்குமான தீர்வுகளை நாம் காந்தியிடம் தான் தேடிக் கண்டடைய வேண்டியவர்களாயிருக்கிறோம். அவர் சுதந்திரம், மட்டும் வாங்கி கொடுக்க போராடவில்லை...!
 
மதநல்லிணக்கமும், தாழ்த்தபட்டோர் முன்னேற்றம், கதர்கிராமத்தொழில்களின் மறுமலர்ச்சி, பொதுவாழ்க்கை அறம், தாய்மொழிக் கல்வி, பொதுசுகாதாரம் அனைத்தும் மேலாக ஆன்மீக விடுதலை... என்ற அனைத்தின் ஒருங்கிணைந்த அம்சமாகத் திகழ்ந்தார்.
 
அவரது பிறந்த நாளில் மட்டுமே நாம் இவற்றை நநினைவுகூர்வது என்பது நம்மை நாமே ஏமாற்றும் செயலாகிவிடும்.
 
நமது ஒவ்வொரு நடவடிக்கையிலும், எண்ணங்களிலும், பேச்சிலும், செயலிலும் காந்தி வெளிப்படவேண்டும். அப்போது தான் இன்றுள்ள இருள் சூழ்ந்து பிரச்சினைகளிலிந்து நாம் அகவிடுதலை அடையமுடியும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Oct

வரவேற்கதக்க அறிவிப்புகள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
அக்டோபர் - 2 - மகாத்மா காந்தி பிறந்த தினம் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பிலிருந்து சில நல்ல அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
அக்டோபர் மாதத்திலிருந்து மேலும் எட்டு மாவட்டங்களில் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுபாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள விருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை அமலானதைத் தொடர்ந்து சிகரெட் மற்றும் புகையிலைப் பயன்பாடு குறிப்பிடதக்க அளவில் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டே இவ்வறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 
பொது இடங்களில் புகைபப்பிடிப்பது, பான்பராக் போன்றவைகளை பயன்படுத்துவது தொடர்பாக இது வரை ஆறுலட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடமிருந்து அபாரதத்தொகையாக சுமார் 67,33,000வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே நெல்லை, கன்யாகுமரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் அண்ணல் காந்தி பிறந்தநாள் நெருங்குவதன் அடையாளமாக இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுளளது.
 
அதோடு 2012ம் ஆண்டிலேயே அனைத்து கல்வி நிறுவனங்களையும் புகையில்லா கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்படுவதுடன், மெல்லும் வகை புகையிலைக்கும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் அறிவிப்பும் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்!
 
தேசிய புகையிலை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தும் விதமாக தமிழக அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது இத்துடன் மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் விதமாக டாஸ்மாக் மதுவிற்பனையை தற்போது 12மணிநேரம் என்றுள்ளதை எட்டுமணிநேரமாக குறைக்கும் அறிவிப்பும் வெளிவர உள்ளதாக அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அதீத மதுபெருக்கத்தின் விளைவாக தமிழக அரசுக்கு ரூ 20,000கோடி வருமானம் கிடைத்துவரும் போதிலும், இதன் எதிர்வினையாக குடியினால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து கொண்டிருக்கும் நிலைமைகளை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டே இந்த முடிவுக்கு வந்திருக்ககூடும்!
 
மதுபெருக்கத்தால் குடிப்பவர்களின் உடல்நலம் சீர்கெட்டு அரசு மருத்துவமனைகளில் குடிகார நோயாளிகளின் கூட்டம் கட்டுபடுத்தமுடியாத வகையில் அதிகரித்து வருவதையும், குற்றம், கொலை, விபத்துகள் பெருகி வருவதையும் மது எதிர்ப்பாளர்கள் குறிப்பாக காந்திய இயக்கத்தினர் புள்ளி விபரங்களுடன் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதன் விளைவாகவும் மதுவிற்பனை தொடர்பான மறுபரிசிலனைக்கு தமிழக அரசு ஆளாகியிருக்ககூடும்.
 
காந்திய அமைப்புகள், தமிழருவிமணியன், குமரிஆனந்தன், டாக்டர்.ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களும் தமிழகத்தில் மதுவிலக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒராண்டாக மது எதிர்ப்பு தொடர்பான ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கருத்தரங்கள், மாநாடுகள், ஆர்பாட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள்.... என பற்பல அரங்கேறிவருகின்றன இவ்வித போராட்டங்களுக்கு தாய்குலத்தின் அமோக ஆதரவு பெருகிவருவதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டிருக்கும் என நாம் நம்பலாம்.
 
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மேலும் சில கறாரான நடவடிக்கைகள் மதுவிற்பனை தொடர்பாக தமிழக அரசு எடுக்குமானால் அது ஆளும்கட்சிக்கு தாய்குலத்தின் பேராதரவை பெற்றுத்தரும் என்று நிச்சயம் நம்பலாம்!
 
இதன்மூலம் சீரழியத் தொடங்கியுள்ள இளம் தலைமுறை காப்பாற்றப்படும். குடும்பங்களில் சச்சரவுகள், துன்பங்கள் குறைந்து அமைதி திரும்பும். எல்லாவற்றிக்கும் சிகரமாக இழந்து கொண்டிருக்கும் உழைக்கும் திறனையும், ஆர்வத்தையும் பாட்டாளிவர்க்கம் மீட்டெடுக்கும். இதனால் நாடும், வீடும் ஒரு சேரப் பலடையும்.
 
விஷன் - 2023 என்ற தொலைநோக்கு திட்டத்தின் ஓர் முக்கிய அம்சமாகவும் இதைக் கருதலாம். ஏனெனில் மதுபெருக்கம் நிறைந்துள்ள ஒரு சமூகத்தில் சமூக, பொருளாதார, கலாச்சரா தளத்தில் எந்த ஒரு மேம்பாடும் நிச்சயம் நிறைவேறாது.
 
எனவே, புகையிலை தொடர்பாகவும், மதுதொடர்பாகவும், தமிழக அரசு மேற்கொண்டுவருகிற அனைத்து முயற்சிகளையும் வரவேற்பதும், ஒத்துழைப்பு தருவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
28-9-2012

Wednesday, October 17, 2012

கூட்டுறவு சங்க தேர்தல்கள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
உச்சநீதிமன்ற உத்தரவின் நிர்பந்தத்தால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்கதேர்தலை நடத்த தமிழக அரசு முன்வந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசியல்களம் பரபரப்படைந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 10,442கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.ஒவ்வொரு சங்கத்திற்கும் குறைந்தபட்சம் 11 இயக்குநர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள இயக்குநர்கள் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சத்து சொச்சம்! இவை தவிர பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தலைவர்கள், துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மக்களின் வாழ்க்கையோடும், பொருளாதாரத்தோடும் பின்னிப்பிணைந்துள்ள கூட்டுறவு அமைப்புகள் என்பவை மக்களால் மக்களுக்காக நடத்தப்படுபவை. விவசாயம், நெசவு, பால், விற்பனை நிலையங்கள்... என பற்பல தளங்களில் மக்கள் ஒன்று சேர்ந்து உழைத்து தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி கொள்ள உதவும் உன்னதமான அமைப்பே கூட்டுறவு.
'கூட்டுறவே நாட்டுயர்வு' என்பது வெற்று கோஷமல்ல. நூறுசதவிகித நிதர்சனம். அப்படிபட்ட கூட்டுறவு அமைப்புகளில் பொறுப்புக்கு வருபவர்கள் நேர்மையானவர்களாக ஆளுமைத்திறன் உள்ளவர்களாக, அனைவர் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக கடந்த நாற்பதாண்டுகளாக கூட்டுறவு அமைப்புகளில் அரசியல்கட்சிகள் மற்றும் அரசின் அத்துமீறிய குறுக்கீடுகள் ஏற்பட்டு கூட்டுறவு அமைப்புகளின் நோக்கமே சிதைக்கப்பட்டு சீர்குலைந்துள்ளது.
கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஓர் இலக்கண பூமியாக தமிழகம் கருதப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அப்போது வெளிநாட்டுக்காரர்கள் தமிழகம் வந்து கூட்டுறவு அமைப்பு செயல்படும் விதத்தை பார்த்து கற்றுச் சென்றனர் அந்த பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டும்.
கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் முறைகேடுகளையும், அராஜகங்களையும் அரங்கேற்றிய கரை படிந்த கடந்த காலங்கள் தற்போதும் நிகழக்கூடாது என்பதே கூட்டுறவு விரும்பிகள், சமூகார்வலர்களின் தவிப்பு எதிர்பார்ப்பு.
ஏனெனில் கூட்டுறவு அமைப்புகளின் நேர்மை, நாணயம் என்பதே பல கோடிமக்களின் நிகழ்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
தற்போது தமிழகத்தின் பல ஊர்களிலுமிருந்து அதிரச்சிகரமான செய்திகள் வந்த வண்ணமுள்ளன. நாள்தோறும் கூட்டுறவு அமைப்புகளின் முன்பு மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். கூட்டுறவு அமைப்புகளில் புதிய உறுப்பினர்களாவற்கான விண்ணப்பம் மக்களுக்கு கிடைப்பதில்லை. அது ஆளும் கட்சியினர் வசம் மொத்தமாக ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மட்டுமே உறுப்பினராகும் நிலை எங்கெங்கும் ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.
கூட்டுறவு என்பது மக்கள் அமைப்பு. இது எந்த ஒரு கட்சிக்கும் மட்டுமே உரியதல்ல அனைத்துகட்சியினருக்கு மாத்திரமல்ல, கட்சிக்கு அப்பாற்பட்டவர்களுக்குமானதே கூட்டுறவு.
நவம்பர் மாதம் நடக்க உள்ள தேர்தலுக்கு இப்போதே அடிதடி, அராஜகம், வெட்டு, குத்து ஆரம்பித்துவிடும் அறிகுறி பரவலாகத் தென்படுகிறது. சென்ற ஆட்சியில் இதே சூழல் நிலவியதையடுத்து தேர்தல்கள் அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டது.
'கூட்டுறவு அமைப்புகளில் குளறுபடிகள் வேண்டாம்' என்று கடந்த தனது ஆட்சிகாலங்களில் கூட்டுறவு தேர்தல்களையே நடத்தாமல் இருந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவு தம்ழகத்தில் கூட்டுறவு இயக்கங்களின் செயல்பாட்டுக்கு புத்துயிர் ஏற்படுத்தும் என்பது பரவலான நம்பிக்கை!
கூட்டுறவு அமைப்புகள் கொள்ளை கூடாரங்களாக மாறுமேயானால் அது ஆட்சிக்குத் தான் அவப்பெயர் சேர்க்கும். அது அடுத்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களிலும் பெரும் பாதிப்பைத் தரும்.
இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் வரப்போகிற கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் நியாயமாக நடைபெறுவதற்கு உறுதியான அடித்தளம் போடவேண்டும். தேர்தல் முறையாக நடந்து தகுந்தவர்கள் பொறுப்புக்கு வந்தால் ஊழல், முறைகேடுகளுக்கு துவக்கத்திலேயே முற்றுபுள்ளி வைத்தது போலாகும்!
தமிழக தேர்வாணைய ஊழல்குளறுபடிகளை களைய ஒரு நேர்மையான நிர்வாகத் தலைமையை உருவாக்கியதைப்போல கூட்டுறவு அமைப்புகள் விஷயத்திலும் நேர்மையான நிர்வாகத்தை முதல்வர் உறுதிபடுத்தவேண்டும்.
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
27-9-2012

Tuesday, October 16, 2012

கூலிப்படை கொலைகள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
நாளுக்குநாள் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
அதில் பெரும்பாலானவை கூலிப்படைகளால் செய்யப்பட்ட கொலைகளாக உள்ளன. தொழில் தகராறு, நிலத்தகராறு, கடன்பிரச்சினை, கட்சிபிரச்சினை என்பதையும் கடந்து தற்போது குடும்ப பிரச்சினைகளிலும் கூலிப்படையை ஏவி கொலை செய்வது பெருகி வருகிறது.
 
பணத்திற்காக கொலைசெய்யும் இந்த கூலிப்படைக் கூட்டத்தை 'Habbitual offenders'- அதாவது, கொலைக்குற்றத்தை வழக்கமாகக்க கொண்டவர்கள்' என்று சட்டம்.. வரையறுக்கிறது. இவர்களுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் படி கடுமையான தண்டனைகள் வழங்க இடமில்லை. எனவே கொலை செய்தவர்கள் கைதானால் சில நாட்களிலோ, சிலமாதங்களிலோ விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர். இது மேன்மேலும் கொலை செய்து பணம் ஈட்டும் தைரியத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
 
இந்தச் சூழலில் தான் தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இரு குற்றவாளிகளைக் குறிப்பிட்டு இவர்கள் பற்பல கொலைகளிலும் சம்மந்தப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "இது போல் கொலை செய்யும் கூலிப்படைகள் பெருகினால் மக்களின் பாதுகாப்பு என்னாவது? இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் ஆகவே கடந்த 10ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்கடத்தல், கொலை தொடர்பான புள்ளிவிபரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டும்" என உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பிக்கும் உத்திரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.
 
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தான் இது போன்ற கூலிப்படை ஏவிய கொலைகள் நடந்தன. ஆனால் தற்போது அங்கே பெருமளவு கட்டுபடுத்தப்பட்டுள்ளது. காரணம், மகாராஷ்டிராவில் கொண்டு வரப்பட்ட அமைப்பு ரீதியான திட்டமிட்ட கொலையை தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சட்டமேயாகும்!
 
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தொழில்முறை குற்றவாளிகளை கொலை செய்வதை பழக்கமாக கருதிய குற்றவாளிகளை - தண்டிக்கும் சட்டத்தை நமது சுதந்திர இந்திய அரசாங்கம் வாபஸ் பெற்றது. மனித உரிமை ஆர்வலர்கள் குரல் ஒரு புறமும், சுதந்திர இந்தியாவில் அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்ற நல்நோக்கமும் அன்றைக்கு காரணமாகச் சொல்லப்பட்டன. ஆனால் இன்றைக்கு சூழ்நிலை வெகுவாக மாறியுள்ளது.
 
முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரையாக கருதும் நிலை இருந்தது இன்றோ குற்றம், கொலை செய்வதில் எந்த சாதியும் விதிவிலக்கல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
பொறுமை, விட்டுக்கொடுப்பது, பேச்சுவார்த்தையில் தீர்ப்பது, நியாயத்தை எடுத்துச் சொல்லும் பெரிய மனிதர்கள், சகிப்புத்தன்மை, குடும்பகௌரவம், பண்பாடு போன்றவை குற்றங்கொலைகளை ஆபூர்வசெய்திகளாக அன்று கருத வைத்தன. ஆனால் அந்தச் சூழல்கள் இன்று இல்லாமல் போனதோடு நுகர்பொருள் வெறிகொண்ட கலாச்சாரம் பெருகிவருவதும். ஒரு புறம் செல்வச்செழிப்புகள் குவிவதும், மறுபுறம் வறுமை கோரதாண்டவமாடுவதும் குற்றச் செயல்கள் பெருக காரணமாகிவிட்டன.
 
எம்.கே.பாலன், திருச்சி ராமஜெயம், முன்னாள் அமைச்சர்கள் ஆலடிஅருணா, தா.கிருஷ்ணன், வெங்கடாச்சலம் .... போன்ற அரசியல்வாதிகளுமே கூட கூலிப்படைகளின் பலிகடீக்கள் தானே! புத்தர், மகாவீர், காந்தி... என அகிம்சையின் புதல்வர்கள் தோன்றி அரும்பெரும் பண்புநலன்களை, தாக்கத்தை உருவாக்கியதேசத்தில் இன்று கணவன் - மனைவி சகோதரர்களுக்கிடையிலான சண்டைகளுக்கு கூட கூலிப்படை கொலை தீர்வாக பார்க்கப்படுகிறது.மடாதிபதிகள், பிஷப்புகள் தொடங்கி மாணவர்கள் வரை கூலிப்படை, ஏவிய குற்றசாட்டுக்கு ஆளாவது நமது கலாச்சார - பண்பாடு வறுமையைத் தான் பறைசாற்றுகின்றன.
 
இதற்கு உடனடி பரிகாரம் தொழில்முறை கொலைகாரர்கள் வெளியில் நடமாடத வகையில் மிகக்கடுமையான சட்டத்தை உருவாக்குவது தான்! தொழில்முறை கொலைகாரர்கள் சுதந்திரமாக நடமாடும் நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பில்லை நீதிமன்றத்தின் தலையிடு மட்டுமல்ல, மக்கள் மன்றத்தின் எழுச்சியும், விழிப்புணர்வும் அதிகரித்தால் தான் இப்படி ஒரு சட்டம் சாத்தியமாகும்.
 
ஏனெனில் நீதிமன்றமும் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பு தான். ஆனால் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் தான் சட்டத்தை உருவாக்குகின்றன. அந்த மன்றங்களில் இடம் பெற்றுள்ள அரசியல்வாதிகள் பலரும் கூட கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களாயுள்ளனர். கூலிப்படை கொலையாளிகளை வளர்ப்பவர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் சுலபத்தில் உடன்படமாட்டார்கள் என நாம் பின்வாங்கத் தேவையில்லை.
 
வாள் எடுத்தவன் வாளால் அழிவான் என்பது முதுமொழி யார் எவரை விடவும், வன்முறையை பிரயோகிப்பவர்களே நிம்மதியற்றும் பாதுகாப்பு தேடியும் வாழ்பவர்களாக இருப்பார்கள். எனவே வன்முறையை கைவிட அவர்களுக்கும் கூட இச்சட்டம் வாய்ப்பளிக்கட்டுமே!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
26-9-2012

Saturday, October 13, 2012

புதிய கல்வி கொள்கை

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்
 
12வது ஐந்தாண்டு கல்விதிட்டம் வெளிவந்துள்ளது.
இதில் புதிய பள்ளிக் கூடங்கள் எவையும் திறக்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுதந்திரமடைந்த பிறகு வெளிவந்த ஒவ்வொரு ஐந்தாண்டு கல்விதிட்டத்திலும் புதிய பள்ளிக்கூடங்கள் பற்றிய அறிவிப்புகள் தவறாமல் இருந்தன. ஆனால் இந்த முறை விடுபட்டுப் போனதற்கு என்ன காரணம்?
 
புதிய பள்ளிக் கூடங்கள் தேவைப்படாத அளவுக்கு அனைவருக்கும் கல்விதிட்டம் சாத்தியமாகிவிட்டதா? என்றால் இல்லை. ஆனால் அரசாங்கத்திடமிருந்து இனி புதிய பள்ளிகள் உருவாக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. ஏற்கெனவேயுள்ள பல அரசு பள்ளிகள் ஆண்டுதோறும் மூடப்பட்டு வருகின்றன.
 
அடிப்படை வசதிகளிண்மை, ஆசிரியர்கள் போதாமை, தரமற்ற கல்வி.... போன்ற காரணங்கள் மக்கள் சில அரசு பள்ளிகளை புறக்கணித்ததன் பிண்ணணியாகும்!
 
இன்னும் பள்ளிக்கல்வி கிடைக்காத நிலையில் தான் பல கோடிக் குழந்தைகள் உள்ளனர். இந்த நவீன தகவல் தொழில்நுட்பயுகத்திலும் எழுதப்படிக்காத எண்ணற்ற கொழந்தைகள் இருப்பது இந்த தேசத்தின் அவமானம்.
 
பள்ளிக்கூடம் சென்றாலும் கூட எழுதப்படிக்கும் நிலையை எட்ட முடியாத எண்ணற்ற குழந்தைகள் உள்ளனர். இது தான் அரசுக்கல்விகூடத்தின் அவலத்திற்கு சான்று. இதை உணர்ந்து தான் இந்த 12வது கல்விதிட்டத்தில் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்துவதும், கல்வித் தரத்தை உறுதி செய்வதும் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
இது மிகச்சரியான அணுகுமுறை!வரவேற்போம்!
 
நிரப்படாத லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படட்டும். அடிப்படை வசதிகளற்ற ஆயிரக்கணக்கான அரசுபள்ளிகள் புனரைமைக்கப்படட்டும்.
 
ஆசிரியர்களின் ஈடுபாடும், அர்பணிப்பும் உறுதி செய்யப்படட்டும். ஆனால் இதற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி கொஞ்சமும் போதுமானதல்ல. இவை மட்டுமின்றி மையப்படுத்தப்பட்ட கல்விமுறை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளிக்கு பள்ளிகல்வியில் அதிக முக்கியத்துவத்தை வழங்கவேண்டும்.
அனைத்து குழந்தைகளையுமே பெரிய படிப்பாளிகளாக்கமுடியாது. தேவையுமில்லை தற்போது 42% குழந்தைகள் பள்ளிகல்வியிலிருந்து இடைநின்றுவிடுகின்றனர். 90% குழந்தைகள் உயர்கல்வியை பெறுவதில்லை.
 
எனில், இவர்களுக்குகான கல்வி பள்ளிக்கூடங்களிலோ, உயர்கல்விக்கூடங்களிலோ இல்லை என்பதே காரணமாகும்.
 
மனப்பாட கல்வி மட்டுமே கல்வியல்ல...
சின்னச் சின்ன தொழில்கல்வி, இசை, கலைத்திறன், படைப்பாற்றல், கற்பனைவளம், நடனம், ஒவியம், விளையாட்டுகள்... என எந்தெந்த தளத்தில் குழந்தைகளின் ஆர்வம் வெளிப்படுகிறதெனக் கண்டறிந்து அவற்றை கற்கும் வாய்ப்பை வழங்கினால் கிட்டத்தட்ட நூறு சதவிகித குழந்தைகளும் பள்ளிக்கூடத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பள்ளி கல்விக்கான நிதி ஒதுக்கீடும், திட்டமிடலும் ஆண்டுக்காண்டு நடைபெறும் சடங்காகிவிடக்கூடாது. வருங்கால தலைமுறையை வளர்த்தெடுக்கும் வேள்வியாக இவை நடந்தேறவேண்டும்.
 
500கேந்திரிய வித்யாலயா புதிதாக கொண்டுவரப்படும் என்பதும் ஏழை, எளியயவர்களுக்கான 378 புதிய நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படும் என்பதும் பெரிதும் வரவேற்கக்கூடியதாகும்!
 
நமது தமிழக அரசு இணையும் வறட்டுபிடிவாதம் கொள்ளாமல் நவோதயா பள்ளிகளை அதிக அளவில் தமிழகத்திற்கு கொண்டுவர மத்திய அரசிற்கு அழுத்தம் தரவேண்டும். தாய்மொழியில் கற்பித்தலையும், தொழிற்கல்வியையும் உள்ளடக்கிய நவோதயா ஒரு உன்னத கல்விமுறை என்பது ஏற்கெனவே நிருபணமாக்கப்பட்டுள்ளது.
 
நமது தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிகல்வியில் மத்திய அரசு 75% பங்கும், மாநில அரசு 25% பங்கும் செலவிடுகின்றன. இரு அரசுகளுமே பள்ளிக்கல்விக்கான நிதியை அதிகப்படுத்தவேண்டும்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
25-9-2012