Friday, September 28, 2012

வன்முறை கலாசாரத்தில் மாணவசமுதாயம்


-சாவித்திரிகண்ணன்

மாணவர் சமூகம் குறித்து சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனைகளையும் தருவதாக உள்ளன.

முன்பெல்லாம் ராகிங் கொடுமைகள் தான் மாணவர்கள் குறித்த அதிகபட்ச அநாகரிகச் செய்தியாயிருந்தது. இப்போதோ கொள்ளை சம்பவங்கள், கொலை நிகழ்வுகள், பயங்கர ஆயுதங்களுடன் ஈடுபடும் வன்முறை சம்பவங்கள், கடத்தல்கள்... என பலவற்றில் மாணவர்களை தொடர்புபடுத்தி வெளிவரும் செய்திகள் வருங்கால சமூகம் குறித்த ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன.

சமீபத்தில் சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்கள், கத்திகுத்து கைப்பற்றபட்ட ஆயுதங்கள் போன்றவை மாணவர் தலைவர் தேர்தலின் எதிர்வினைகளால் ஏற்பட்டவை! இது போன்ற சம்பவங்கள் மாநிலத்தில் உள்ள மற்ற அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் அடிக்கடி நடக்கின்றன.

கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தல்களில் பணபலம், அரசியல்செல்வாக்கு, வன்முறை போன்றவற்றுடன் மதுவிருந்து போன்ற அம்சங்களும் இடம்பெறுகின்றன. இப்படி தலைவராக வரும் மாணவர்களின் நோக்கம் என்ன? அடுத்ததாக அரசியலுக்குள் இறங்கி செயல்படுவதற்கான பயிற்சிகளமாக கல்லூரி தேர்தலை இவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. மாணவர்கள் கூட்டத்தை வளைத்துப்போட அரசியல் பிரமுகர்களும் மாணவர்களுக்கு பணத்தை அள்ளித்தருகின்றனர்.
விளைவு - கல்விக்களத்தை கலவரபூமியாக்கிவிடுகிறது.

கல்வி, ஒழுக்கம், பண்பாடு போன்றவற்றை கற்று நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதொரு குடிமனிதனாக வரவேண்டிய மாணவன் சகலதீயபழக்கங்களையும் கற்று தற்குறியாக கல்லூரியிலிருந்து வெளிவருகின்றான்!

இது போதாதென்று 'பஸ்டே' என்ற அநாகரீக கொண்டாட்டங்கள் வேறு! இதற்கும் ஆங்காங்கேயுள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் அள்ளித்தரும் பணம் தான் பின்புலமாயிருக்கிறது. பொதுச் சொத்தை சேதப்படுத்தியும், சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தியும், கூச்சல்,ரகளை, கும்மாளம் என பஸ் கூரை மீதேறியும், சாலைத் தடங்களிலும் மாணவர்கள் 'பஸ்டே'யை கொண்டாடும் போது பொதுமக்கள் செய்வதறியாது விக்கித்துப்போகிறார்கள்!

இவை பண்பாட்டில் அவர்களிடையே நிலவும் பற்றாக்குறையையும்,மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதில் அவர்களுக்குள்ள அறியாமையையும் தான் உணர்த்துகின்றன. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்புமே பொறுப்பேற்க வேண்டும்.

கல்லூரிதேர்தல்களையும், பஸ்டே கொண்டாட்டங்களையும் முற்றிலுமாக தடை செய்வது தான் இன்றைய அவசர அவசிய தேவையாகும்! ஆனால் இதோடு நமது பொறுப்புகள் முடிவதில்லை!

மாணவர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார மாற்றங்களில் நம் கவனம் தேவைப்படுகிறதது. அதீத செல்போன் செலவுகள், பாலியல் பிறழ்கள், மதுபழக்கங்கள், சமூக பொறுப்பற்ற தற்குறித் தன்மைகள் போன்றவை மாணவ சமூகத்தின் இன்றைய அடையாளமாக மாறிவரும் அறிகுறிகள் தென்படுகின்றன. 'கன்ஸ்யூமரிசம்' என்ற நுகர்பொருள் வெறிமிகுந்த ஒரு சமூகச் சூழலில் பக்குவப்படாத மனங்களில் ஏற்படும் பரிதவிப்புகள் சாதாரண மானவையல்ல.இதுவே பல சமூக விரோத செயல்பாடுகளுக்கு வித்திடுகிறது.

மாணவர்களுக்கு 'ரோல்மாடலாக' காண்பிக்க அரசியல் தளத்தில் இன்று ஆட்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூக தளத்திலோ, கல்விக்கூடத்திலோ, குடும்பங்களிலோ ஒரு சில ரோல்மாடல்களாவது அவர்களுக்கு கிடைக்குமானால் இது போன்ற அசம்பாவிதங்களை அறவே தவிர்க்கலாம்!

இலக்கியத்தேடல்கள், தீவிரவாசிப்புகள், அரசியல் - சமூகம் குறித்த ஆழமான விவாதங்கள், குடும்பத்திற்கும், சமூகத்திற்குமான தன்னுடைய பங்களிப்புகள் தன்னைக் குறித்த சுயமதிப்பீடுகள்... போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இளம் தலைமுறையை உருவாக்கவேண்டிய பொறுப்பு - உருவாக்கத் தவறிய பொறுப்பு இன்றைய பெரியவர்களுக்குச் சார்ந்ததாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
7-9-2012

பட்டாசு விபத்துகள், உயிரிழப்புகள் தீர்வு என்ன?


-சாவித்திரிகண்ணன்

நரகாசுரணை வதம் செய்த நாளை கொண்டாடத் தான் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பட்டாசு தயாரிப்பவர்களே நரகாசுரர்களாக மாறி, உழைக்கும் மக்களின் உயிரை வதம் செய்து விடுவது தான் வேதனை!

தற்போதைய சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் சுமார் 40பேர் இறந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் நடந்த 85ஆவது விபத்தாக இது பதிவு பெறுகிறது. ஆண்டுக்காண்டு சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் இது வரை நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் உடல் ஊனமடைந்துள்ளனர்.

இந்திய பட்டாசு சந்தையில் 90 சதவிகிதத்தையும் உலக பட்டாசு சந்தையில் 40 சதவிகிதத்தையும் கொண்டுள்ள - குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில், அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுள்ள தீ விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை தர தகுந்த மருத்துவமனை இல்லை. அதனாலேயே - காயமடைந்தவர்களை தூரத்திலிருக்கும் மருத்துவமனைகளுக்கு தூக்கிச் செல்லும் போதே - இறக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது இத்தனைக்கும் ஆண்டு வருமானம் ஆயிரம் கோடிகள் கடந்த நிலையில் தொழில்புரியும் பட்டாசு தொழிற்சாலைகளையும், அச்சகங்களையும் கொண்ட ஒரு நகரத்தில் மருத்துவமனையின் அவசியம் இருந்தும் அதற்கான முயற்சியோ, உறுதிப்பாடே இல்லாமல் போனது இந்திய முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குணாம்சமாகும்!

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் தொடர்ந்த நிலையில் இது வரை இதற்கு அரசுத்துறை அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை! தண்டிக்கப்படவில்லை!

முறையான உரிமம் இல்லாமல் சுமார் 300பட்டாசு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. உரிமம் பெற்ற தொழிற்சாலைகளுமே கூட பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப் படுவதில்லை. எனவே இதில் வெடிமருந்துகட்டுப்பாட்டு அதிகாரிகள், பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை, காவல்துறைஅதிகாரி, மாவட்ட ஆட்சியர் என அனைவருக்குமே பொறுப்புள்ளது. இவர்கள் யாருமே, எப்போதுமே தண்டிக்கப்படுவதில்லை.

தடை செய்யப்பட்ட ரசாயண வெடிமருந்து கலவைகளை தேவைக்கும் அதிகமாக முறையற்ற வழிமுறைகளில் பயன்படுத்தும் தைரியம் இந்த பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எங்கிருந்து வந்தது? அதை யார் தந்தது? அப்படித் தந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளால் கடுமையாக தண்டிக்கப்படும் நிலை இருக்குமானால் விபத்துகள் தொடராது.

இறந்தவர்கள், காயம் பட்டவர்களுக்கான நிதி உதவியை மத்திய, மாநில அரசுகள் தருவதும், அநுதாபச் செய்தி வெளியிடுவதும், பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றுவதும் ஒரு சடங்காக மேன்மேலும் தொடரக்கூடாது.

இறப்பவர்கள் ஏழை எளியவர்கள் என்பதாலேயே மனித உயிர்கள் மலினமானவைகளல்ல. தண்ணீர் வசதி இல்லாத வறட்சி பூமியில் பட்டாசு தொழிற்சாலைகளே இவர்களின் பசியை ஆற்றுகின்றன. ஆனால் வயிற்றுப் பசியாற்றும் தொழிற்சாலை அதிபர்களின் பேராசைப் பசிக்கு உழைக்கும் மக்களின் உயிரே தீனியாகின்றன. உயிரை பணயம் வைத்து வைலைபார்ப்பவர்களை பெரும்பாலான பட்டாசு ஆலைகள் நிரந்தர தொழிலாளிகளாக அங்கீகரிப்பதில்லை. 'பீஸ்ரேட்'டுக்கு வேலை பார்ப்பவர்களின் உடல்களே விபத்துகளில் பீஸ்பீஸா பிய்த்து எறியப்படுகின்றன!

600க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள், 50,000 தொழிலாளர்கள், ஒரு லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள் என இயங்கும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நகரத்தின் இண்டஸ்டிரி - அபரிமதமான வருமானத்தை அள்ளிக் கொடுத்த போதிலும் - அறிவியல் ரீதியா அணுகுமுறைகளை முற்றாகப் புறந்தள்ளிச் செயல்படுவது ஆச்சர்யமாக உள்ளது. அதைவிட ஆண்டுக்காண்டு விபத்துகள், உயிரழப்புகள் தொடர்ந்த போதிலும் இந்த தொழிற்சாலைகள் பாதுகாப்பு அம்சங்கள் விஷயத்தில் அரசாங்கத்தால் ஒழுங்குப்படுத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பட்டாசு தயாரிப்பதிலும் சரி, பண்டிகையை கொண்டாடுவதிலும் சரி அலட்சியபோக்குகளும், விபத்துகளும் தொடருமானால் உழைப்பைச் சுரண்டும் உயிர்களை குடிக்கும் பட்டாசுகளின் உற்பத்திக்கே கூட தடைவிதித்தால் என்ன? என்றும் சில சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்! கேள்வியை அலட்சிப்படுத்த முடியாது. இவ்விசயத்தில் அரசாங்கம் தெளிவான தீர்க்கமான முடிவெடிக்க வேண்டும்!


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
6-9-2012


நூறுநாள் வேலைதிட்டம் 150நாட்களாகிறது


-சாவித்திரிகண்ணன்



மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் கிராமபுற மக்களுக்கு நூறு நாட்கள் வேலை வழங்கவும், ரூ 132 தினக்கூலி தரவுமான திட்டம் தற்போது 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2005 முதல் இத்திட்டம் அமலாகிறது. இத்திட்டத்தின் மூலம் என்னென்ன பலன்கள், விளைவுகள் நடந்துள்ளன என்று கடந்த கால செயல்பாடுகளை கொண்டு மதிப்பிடும் போது கிடைக்கும் விடைகள் அதிரச்சிதருகின்றன!

ஊரக பகுதிகளில் கால்வாய்கள், ஏரிகள், கண்மாய்கள் போன்றவை தூர்வாரப்பட்டு அதனால் அந்தந்த கிராமங்களில் நீராதாரங்கள் பலப்பட்டனவென்றோ, விவசாயம் வளர்ச்சியடைந்து என்றோ மகிழ்ச்சியடைய முடியவில்லை.
  • வேலைவாய்ப்பிற்காகவும், பிழைப்பிற்காகவும் நகரங்களுக்கு இடம்பெயரும் கிராம மக்கள் எண்ணிக்கை குறையவில்லை!

  • இத்திட்டத்தில் வேலை செய்யும் மக்களின் வாழ்க்கைதரம் உயரவில்லை!

  • கிராமங்களில் விவசாயவேலைசெய்ய ஆட்கள் கிடைப்பதில்லை!
இதனால் விவசாயமே ஸ்தம்பித்தது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்களின் உழைப்பை பெறுகின்ற ஒரு திட்டத்தால் நாட்டில் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டாமா?
இயற்கை வளம் பெருகியிருக்கிறதா? பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கிறதா? தொழில்கள் தழைத்தோங்கி வருகின்றனவா? பிறகெதற்கு ஆண்டுக்காண்டு இதில் அளப்பரிய பணத்தை அள்ளி இறைக்கவேண்டும்? இந்த ஆண்டு மட்டும் ரூ 33,000கோடி ஒதுக்கப்பட்டது. ஆயினும் அதிகபட்சம் 48 நாட்களுகப்கு மேல் வேலைகள் தரமுடியவில்லை?

காரணம் - இத்திட்டத்தை பொறுத்த அளவில் வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் ஏதோ கணக்கு காட்ட சில திட்டங்கள் தீட்டப்பட்டு, வேலைநடந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி பணம் விரயமாக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தால் அரசு அலுவலர்கள், கிராமப்புற பஞ்சாயத்துகள் தொடங்கி அனைத்தும் ஊழல் மயமாகியுள்ளது. எனவே ஏன் நாம் உழைக்கவேண்டும். என்ற எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டு, ஏதோ உழைப்பது போல் பாவணை காட்டி பணம் கேட்கும் மனநிலை மக்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களின் வற்றாத ஒரே செல்வம் என்றால் அது அவர்களின் உழைப்பு தான்! அவர்கள் பெருமைபட்டுக் கொள்வதற்கான ஒரே அம்சமாக இருந்தது தன்மானம் தான்! இவை இரண்டையும் அந்த மக்களிடமிருந்து பறித்தெடுத்துள்ளது தான் இந்த திட்டத்தின் மிகப்பெரிய சாதனை!

இதைத்தான் நமது இன்றைய ஆளும் வர்க்கம் விரும்புகிறது போலும்! அதனால் தான் 50 நாட்களுக்கே கூட வேலைவாய்ப்பளிக்க முடியாத ஒரு திட்டத்தை 150 நாட்களாக அதிகரித்தும், பலன்களே இல்லாத தொழிலில் மேலும் பன்மடங்கு பணத்தை அள்ளி இறைத்தும் வருகின்றனர்.

கிராமங்களில் நீராதாரங்கள் வற்றி, விவசாயம் வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளது இதை மீட்டெடுக்க, நிரந்தர பலன் தரும் நீராதார திட்டங்களை திரட்டியும், விவசாயம் செய்வதற்கு உகந்த சூழலையும் உருவாக்கி கொடுப்பது தான் அரசாங்கத்தின் கடமை! இதை அரசு செய்யுமானால் இதன் பயனாக நிலமெல்லாம் பசுமை பூத்து குலுங்கும் வண்ணம் விளைச்சலை பெருக்கி காட்டி நாட்டிற்கே பெருமை சேர்ப்பர் விவசாயகூலிகளான இந்த உன்னதமான ஏழை, எளிய உழைப்பாளிகள்!

விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்டுகளாகி கொண்டிருப்பதை விவசாய விளைச்சல்கள் வெகுவேகமாக குறைத்து கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல், ஒட்டு அறுவடைக்காவும், ஊழல்களை பரவலாக்கவும் ஒரு மிகப்பெரிய திட்டம் தேவையா?

வறுமையில் வாடும் மக்களுக்கு இத்திட்டம் தற்காலிக நிவாரணமாகலாம்! ஆனால் அவர்களை என்றென்றும் வறுமைக்குள் தள்ளிவிடும் ஆபாயமும் இதில் உள்ளது.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
3-9-2012


பகை உணர்வை தவிர்ப்போம் பண்பாட்டை காப்போம்

-சாவித்திரிகண்ணன்


கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் பண்டை காலம் தொட்டு உன்னத நிலையில் இருப்பவர்கள் தமிழர்கள்! விருந்தோம்பல் என்று வந்துவிட்டால் விரோதியைக் கூட விசனப்படுத்திடாமல் உபசரிக்கவேண்டும் என்பதில் உயர்ந்த நாகரீகத்தை வெளிப்படுத்திய மண் தமிழகம்!

ஆனால் இப்படிப்பட்ட தமிழகத்தில் தற்போது விரும்பத்தகாத சம்பவங்கள் சில அரங்கேறி வருகின்றன. இலங்கையிலிருந்து வரும் மாணவர்கள், சுற்றுலாபயணிகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள், விளையாட்டுவீரர்கள் போன்றவர்கள் தமிழகத்தில் அவமானத்திற்கு ஆளாவதும், தாக்கப்படுவதும் விரட்டப்படுவதுமான சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இந்த சம்பவத்ததில் இது வரை வெகுஜன மக்கள் பங்கேற்கவில்லை. தமிழக மக்கள் இதை ஆதரித்ததற்கான ஆதாரமும் இல்லை ஆனால் பொதுமக்கள் பெயரால் சில சிறிய இயக்கங்கள், சிறு குழுக்கள் இதனை அரங்கேற்றுகின்றன. இத்தகைய அநாகரிகச் செயலை அரங்கேற்றுவதற்கான தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?


இலங்கை தமிழர் ஆதரவு சம்மந்தப்பட்ட விவகாரத்தில் கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் தமிழகத் தலைவர்களிடையே நிகழும் போட்டாபோட்டியை இந்த தமிழ் இனவெறி அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டிருப்பதையே நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இலங்கையின் கொழும்பு மாகாணத்தின் ராயல் கல்லூரி கால்பந்துவிளையாட்டு பள்ளி மாணவர்கள் இங்குள்ள சுங்க இலாகா கால்பந்து விளையாட்டு குழுவுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடிய நிகழ்வு தமிழக அரசாலேயே விரோத கண்ணோட்டத்தில் அணுகப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதும், விளையாட்டரங்க அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் மிகவும் துரதிஷ்டமானது. இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கிறிஸ்த்துவ தேவைலயத்திற்கு ஆன்மீகப் பயணமாக வந்த சிங்களர்கள் விரட்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வகையில் புத்தமத கல்வி நிலையத்திற்கு அடிக்கல் நாட்ட இந்தியாவரும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை எதிர்த்து போராடுவது விவேகமற்றது.

இலங்கை அதிபர் இந்தியாவிற்குள் வரக்கூடாது என்றால், இலங்கை தமிழர் நலன்சார்ந்து இலங்கை சென்று இந்திய அமைச்சர்களோ, எம்.பி.களோ எப்படி பேச முடியும்? யாரோடு பேசமுடியும்?
உலக அரங்கில் இவை தமிழர்களுக்கு தலைகுனிவையே தரும்.

இந்தியாவின் பகை நாடாக பகிரங்கமாகச் செயல்படும் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதை தடை செய்யக்கூடாது என்பது தான் பெரும்பான்மையான இந்தியர்களின் விருப்பம். விளையாட்டிலோ, சுற்றுலாவிலோ, ஆன்மீகத்திலோ அரசியல் கலக்கக்கூடாது என்பதே ஓர் அறிவார்ந்த சமூகத்தின் நிலைபாடாயிருக்க முடியும்.

இந்தியாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கை சென்று வருகின்றனர். அவர்கள் அங்குள்ள சிங்களர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் இல்லை. தமிழகத்திலுள்ள தொழில் முனைவோர் பலர் இலங்கையில் முதலீடு செய்து நாளும் அங்கு சென்று வருகின்றனர். அவர்களின் முதலீட்டிற்கோ, தொழிலுக்கோ எந்த குந்தகமும் ஏற்பட்டதில்லை. அப்படியிருக்க தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தால் அங்கும் அதன் எதிர்வினைகள் ஏற்படுமானால் அந்த கசப்பான அனுபவங்களை சந்திக்கப் போவது இங்குள்ள ஈழ ஆதரவு அமைப்புகளல்ல!

மேலும் இங்கு நடக்கும் இது போன்ற சம்பபவங்கள் அங்கு வாழ்வாதாரத்திற்காக தவித்துக் கொண்டிருக்கும் இந்தியத் தமிழர்களுக்கும், மலையகப் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி எதிர்வினையாகி விடாலாகாது!

இலங்கை அரசாங்கத்தின் ஒரு சில இனவெறிக் கொள்கைகளையும், இனப்பாகுபாட்டு அணுகுமுறைகளையும் நாம் எதிர்ப்பது என்பது வேறு! இங்கு வரும் இலங்கை மக்களை எதிர்ப்பது என்பது வேறு! உண்மையில் சிங்கள ஆளும் தரப்பின் இனப்பாகுப்பாட்டை அமைதியை விரும்பும் பெரும்பாலான சிங்களர்கள் எப்போதுமே ஏற்றதில்லை. இதற்கு ஆதாரமாக சிங்கள ஆளும்தரப்பின் இனப்பாகுப்பாட்டை எதிர்த்து இயங்கி தங்கள் இன்னுயிரையே அர்பணித்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் சமதர்மவாதிகள், கலைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலான சிங்களர்களை பட்டியலிடமுடியும்.
இன்றும் அங்குள்ள சிங்களமக்களுக்கும், தமிழர்களுக்கும் இணக்கமான சூழலும், இசைவான நட்புமே தொடர்கிறது. இனவெறி உணர்வை பரப்பும் வன்முறையாளர்கள் தனிமைப்படுத்ததி காந்தி தேசத்து மக்களும், புத்ததேசத்து புதல்வர்களும் கைகோர்க்கவேண்டியது காலத்தின் கட்டாயம்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
4-9-2012

Monday, September 24, 2012

குஜராத் - நரோபாட்டியா வழக்கம், தீர்ப்பும்!


-சாவித்திரிகண்ணன்
 
 
குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் ஒன்றையடுத்து ஒன்றென தற்போது தீர்ப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நாரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பான வழக்கும், தீர்ப்பும் நீதிமன்றம் சந்தித்த, "அரிதினினும் அரிதான ஒன்று" என நீதிபதிகளே கூறியுள்ளனர்.
 
ஆம்! இந்த வார்த்தைக்குள் மிகுந்த அர்த்தம் பொதிந்துள்ளது. குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டதாக 94 பேர் கைதாயினர். விசாரணை முடிவில் வெளியான தீர்ப்பில் இதில் 11முஸ்லீம்களுக்கு தூக்கு தண்டனையும், 20 முஸ்லீம்களுக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டது. மற்ற 63பேர் விடுவிக்கப்பட்டனர்.
 
ஆனால் கோத்ரா சம்பவத்திற்கு பிறகான கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இரண்டாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாயின. அவற்றில் மிகப்பெரும்பாலானவை குஜராத் காவல் துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே உதாசீனப்படுத்த பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு சுமார் 1600 வழக்குகளை விசாரிக்க ஆணையிட்டது. ஆனபோதிலும் அதில் 117 வழக்குகளே நடத்தப்பட்டன. அதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதிய ஒன்பது வழக்குகளை உச்சநீதிமன்றம் தன் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரித்தது. அதில் இந்த வழக்கும் ஒன்று.
இந்த வகையில் 2009ஆம் ஆண்டு தான் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநில அரசின் கெடுபிடிகள், காவல்துறையின் ஒத்துழைப்பின்மை, முக்கிய குற்றவாளிகள் உடனுக்குடன் ஜாமினில் வெளியாகி சாட்சிகளை மிரட்டி கலைக்க முயன்றது... என மொத்தத்தில் அதிகாரம்,பணம் என பல இடையூறுகளை இந்த வழக்கு எதிர்கொண்டது. இந்த பின்னணியில் இப்போது அலகாபாத் நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பை தந்துள்ளது. இதில் பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரான மாயாகோத்னானிக்கு 28 வருட ஜெயில் தண்டனையும், பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இறக்கும் வரை சிறை வாசத்தையும் வழங்கி மற்ற 30பேருக்கு கடுமையான ஆயுள்தண்டனையும் தரப்பட்டுள்ளது.
 
97பேர் கொடூரமான முறையில் - அடையாளம் தெரியாத வகையில் - எரித்தும் கத்தியால் சிதைத்தும் கொல்லப்பட்ட இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.
 
கொலை எனும் மாபாதகத்தை செய்பவர்கள் யாராயிருந்தாலும் எந்த மதம், எந்தகட்சி, எந்த இனம் சார்ந்தவராக இருந்தாலும் கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
 
குஜராத் கலவர வழக்கில் பெஸ்ட் பேக்கரி - குல்பர்க்சொஸைட்டி, நாரோடாகா சர்தார்புரா, ஒதே படுகொலைகள், நரோடியா பாட்டியா.... போன்ற முக்கிய வழக்குகள் மிகவும் கவனம் பெற்றவை!
 
இதில் பெஸ்ட் பேக்கரி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. இஹ்ரான் ஜாப்ரி உள்ளிட்ட 69பேர் கொல்லப்பட்ட வழக்கில் முதல்வர் நரேந்திரமோடி பெயர் பலமாக அடிபட்டு, இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.
 
33பேர் படுகொலையான சர்தார்புரா வழக்கில் 31பேருக்கு ஆயுள்தண்டனை உறுதி செய்யப்பட்டது. 23 பேர் கொல்லப்பட்ட ஒதே படுகொலையில் 23பேர் குற்றவாளிகள் என தீர்பளிக்கப்பட்டது.
 
இந்த தீர்ப்புகளெல்லாம் அரசியல் அதிகாரம், பணம், உயிர்பயம்... என எவ்வளவு இருந்தாலும் நீதிமன்றங்கள் உண்மைகளை பாரபட்சமில்லாமல் நிலைநாட்டுகின்றன என்பதற்கான சில உதாரணங்களாக கொள்ளலாம்!
 
குஜராத் படுகொலைகள் விஷயத்தில் மதங்களை கடந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும், உண்மைகள் வெளியாகவேண்டும் என பாடுபட்டவர்களில் அரசியல் சார்பற்ற சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குறைஞர்கள் தங்கள் பதவியை தூக்கி எறிந்து உண்மையை வெளிக்கொணர்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்... என பல ஈரமுள்ள இதயங்களுக்கு அவர்களது அச்சமற்ற அர்பணிப்புணர்வுக்கு முக்கிய பங்குண்டு!
 
மகாகவி பாரதியின் சாகாவரம் பெற்ற கவிதையை நினைவு கூர்வோம் ஒன்றுளதுண்மை, ஒன்றுளதுண்மை - அதை
கொன்றிடலொண்ணாது! குறைத்திடலொண்ணாது!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
31-8-2012    

Friday, September 14, 2012

உயர் அதிகாரிகள் காப்பாற்றபடுகிறார்களா?

-சாவித்திரிகண்ணன்
 
அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது மத்திய ஊழல் கண்காணிப்பகம். சுதந்திரம் கிடைத்த பிறகு 'நமது அரசாங்கம்' என நம்பி வந்த சாதாரண பிரஜைகள் ஊழல் பெருச்சாளிகள் மிகுந்த அரசு அதிகாரிகள், அலுவலர்களால் அலைகழிக்கப்படுவதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதாமக ஏற்படுத்தப்பட்டதே CVC எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பகம்!
 
சுதந்திரப்போராட்ட வீரரும், காந்தியவாதியும், இதழியல்துறை முன்னோடியுமான திரு. க.சந்தானம் அவர்களால் 1964-ல் தோற்றுவிக்கப்பட்டது.
 
பண்டிதநேருவாலும், லால்பகதூர் சாஸ்த்திரியாலும் பெரிதும் மதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் - தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனம் இன்று அரசாங்கத்தால் அலட்சியப்படுத்தப்படுகிறதோ? என மக்கள் ஆதங்கப்படும் நிலையில் உள்ளது.
 
ஊழல் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டுமெனில் அத்துறையின் உயர் அதிகாரிகள் அதற்கு அனுமதித்தால் தான் C.V.C விசாரணை நடத்தமுடியும். ஆனால் 18 அரசுத் துறைகள் சம்மந்தப்பட்ட 34 அதிகாரிகள் மீதான விசாரணைக்கு அனுமதிகோரி, அனுமதிக்கப்பட்ட கால அளவையும் கடந்து C.V.C காத்திருக்கிறது என்பது ஒர் அதிர்ச்சி தாரும் தகவலாகவுள்ளது.
 
நிதிஅமைச்சகம் தொடங்கி நிலக்கரி சுரங்கத்துறை மற்றும் பல்வேறு வங்கிகளில் மக்கள் பணத்தை முறைகேடாக கையாண்டு ஆதாயம் தேடிய அதிகாரிகள் ஏன் விசாரணை வளையத்திற்குள் வராமல் காப்பாற்றப் படுகிறார்கள்? என்பது தற்போது மக்கள் மனங்களில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் கேள்வியாகியுள்ளது.
 
C.V.C விசாரணைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் மூன்று மாதத்திற்குள் அதற்கு அனுமதி தந்தாக வேண்டும் என்று 'லோக்பால் போராட்டத்தின்' விளைவாக பிரதமர் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பா?
 
26 வங்கிகளில் மக்களின் 2,650கோடி பெறுமானமுள்ள பணம் வங்கி அதிகாரிகளாலேயே சூறையாடப்பட்டதாக C.V.C அறிக்கை வெளியானதே என்ன நடவடிக்கை? வருமானவரித்துறையில் ஊழல் தொடர்பாக C.V.C வெளியிட்ட அறிக்கை என்னவானது?
 
மத்திய ஊழல் கண்காணிப்பகம் விசாரணை நடத்த சுலபத்தில் அனுமதிகிடைக்காது. அப்படியே கிடைத்து விசாரணை முடிவை வெளியிட்டாலும் அதன் பேரில் நடவடிக்கைகள் குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்காது என்பது எவ்வளவு அவலம்.
 
இதனால் தான் மத்திய ஊழல் கண்காணிப்பகத்தின் தலைவராக திரு. என்.விட்டல் பதவி வகித்தபோது 'ஊழல் அதிகாரிகள் காப்பாற்றப் படுகிறார்களா?' என வினா எழுப்பி சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட்டார்.
 
ஆனால் மத்திய அரசு இதை விரும்பவில்லை. அதனால் அது சி.வி.சி.ஐ மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு ஊழலில் சம்மந்தப்படவரான பி.ஜே.தாமசையே C.V.Cயின் தலைவராக்கியது. அதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டு, நீதிமன்றமே கண்டித்த பிறகு அவர் பதவி விலகினார். அதன்பிறகு தற்போது தலைவராக உள்ள பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நிலக்கரி சுரங்க ஊழலில் சம்மந்தப்பட்டுள்ளார் என ஊடகங்களும், எதிர்கட்சிகளும் கூறிவருகின்றன. இந்த இரண்டு C.V.C தலைவர் நியமனத்திற்கும் ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்குமே பொறுப்பாகும்!
 
மத்திய அரசும் அரசு சார்ந்த துறைகள் சுமார் 1500! இதன் அலுவலர்கள், அதிகாரிகளோ பற்பல லட்சம்! இவர்கள் மீதான புகார்களை விசாரிக்க, கண்காணிக்க அமைக்கப்பட்ட C.V.Cயின் நிறுவன பலமே 299 பேர்தான்! அதிலும் தற்போது 42 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை C.V.C விஷயத்தில் இது தான் மத்திய அரசின் நிலைபாடு! மாநில அரசுகளோ இதை விடமோசம் என்ற நிலைமைதான்!
சில நேரங்களில் அரசுத்துறைகளில் ஊழலுக்கு எதிராக செயல்பட்ட உத்தம ஊழியர்களும், அதிகாரிகளுமே கூட C.V.Cயால் தண்டிக்கப் பட்ட அவலம் நேர்ந்துள்ளது. தவறான தலைமைகள் தவறான நபர்களை காப்பாற்ற நல்லவர்களை பலிகாடாவாக்கும் அவலங்களுக்கு யார் பொறுப்பு? நேர்மையான தலைமையின் கீழ் கூடுதல் அதிகாரத்துடன் C.V.C செயல்பட அனுமதிப்பதே மக்களின் எதிர்ப்பாகும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
30-8-2012

Thursday, September 13, 2012

தீண்டாமை ஒழிப்பு

-சாவித்திரிகண்ணன்
 
தீண்டாமையை முற்றிலும் ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூபாய் 10லட்சம் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 31 கிராமங்கள் கண்டறியப்பட்டு இப்பரிசுத் தொகையை வழங்க இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
சுதந்திரமடைந்து 63 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தீண்டாமை ஒழிப்பிற்கு இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுவும் தமிழகத்தில் 12 ஆயிரத்து சொச்சம் கிராமங்களில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் வெறும் 31 கிராமங்களை கண்டறிவதற்கே அரசு அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு ஆராய்ந்து தேட வேண்டிருக்கிறது எனும் போது இன்னும் இந்த மண்ணில் தீண்டாமையின் நச்சு வேர் எவ்வளவு ஆழமாகவும், அகலமாகவும் விரவியுள்ளது என நாம் உணரலாம்.
 
தீண்டாமை ஒழிப்பிற்காக அளப்பரிய களப்பணிகள் ஆற்றினார் அண்ணல் காந்தி. அவரைப் பின்பற்றி அன்றே ஆயிரக்கணக்கான உயர்ஜாதி இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் பதவி, அந்தஸ்த்து, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து தீண்டாமை ஒழிப்பிற்காக தங்களைத் தாங்களே அர்பணித்தார்கள் அறிஞர் அம்பேத்கார் பற்பல போராட்டங்கள் நடத்தியும், புரட்சிகரசட்டங்கள் இயற்றியும் தீண்டாமை ஒழிப்பிற்கு பாடுபட்டார்.
 
ஆனபோதிலும் இன்னும் பற்பல வடிவங்களில் தீண்டாமை நமது நாட்டில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இன்றும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இரட்டை டம்பளர்முறை வழக்கத்தில் உள்ளது. இன்னும் நகரங்களிலும், கிராமங்களிலும் தலித் மக்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சேரிப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர்.
 
பொதுக் கோயிலுக்குள் நுழைந்து வழிபடமுடியாது கிராமங்களும், சிற்றூர்களும் எத்தனையெத்தனையோ உள்ளன....
பொது வீதியில் நடக்கமுடியாமை, நடந்தாலும் செருப்போ, தோளில் துண்டோ அணிந்து கொள்ள முடியாமை, நுழையமுடியாத ஹோட்டல்கள், தாகம் தீர்க்க வழியற்ற பொதுக் கிணறுகள், குளிக்கவோ, கால்நினைக்கவோ வாய்ப்பற்ற பொதுக் குளங்கள், ஏரிகள்! முடிவெட்டிக் கொள்ள இயலாத சலூன்கள், கூடிக் கலக்க முடியாத திருவிழாக்கள், வடம்பிடித்து இழுக்கமுடியாத தேர்கள், சமாண்கள் வாங்க முடியாத கடைகள் ஒருவரை ஒருவர் பார்ப்பதையே தவிர்க்கும் தீண்டாமைக்கென எழுப்பப்ட்ட சுவர்கள்... இப்படி ஏதேனும் சில அம்சங்களாவது ஒவ்வொரு கிராமத்திலும் ஊரிலும் இருக்கின்றன. இதில் தீண்டாமையை கடுமையாக அனுஷ்டிக்கும் கிராமங்களாக சுமார் 2,800 கிராமங்கள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
 
தமிழக மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துகள் உட்பட சுமார் 60க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இன்னும் தேர்தல்களையே நடத்த முடியவில்லை. தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தலித்லைவர்கள் பணியாற்றவோ, கூட்டங்களுக்கு தலைமை தாங்கவோ, கொடியேற்றவோ முடியாத அவமானங்கள் இவ்வளவு ஏன் நன்றாகப் படித்து முன்னெறி உயர்பதவிகளுக்கு வந்தாலும் அங்கேயும் தீண்டாமையின் சில அம்சங்களையாவது அனுபவித்து கடந்து வரவேண்டிய நிலையிலேயே தலித்துகள் உள்ளனர். இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள் கூட விதிவிலக்கல்ல... என்பது சிற்சில சமயங்களில் அவர்கள் மனம் வதும்பித் தந்த நேர்காணல்களில் வெளிப்பட்டுள்ளன!
 
எனவே ஏதோ பரிசுத்தொகை, பணம் இவற்றால் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிடும் என்பது நம்மை நாமே ஏமாற்றும் முயற்சியாகிவிடலாகாது. அதே சமயம் இந்த முயற்சியும் தீண்டாமை ஒழிப்பிற்கான ஓர் ஆயுதம் தான்! ஆனால் இதோடு நிற்காமல் தீண்டாமையை முற்றிலும் ஒழித்த கிராமங்கள், ஊராட்சிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 'சிறப்புகிரேடு அந்தஸ்த்து' தரப்பட்டு அந்த ஊராட்சி தலைவர்களுக்கு அரசு அலுவலகங்களில், விழாக்களில் முக்கியத்துவம் தரவேண்டும்.
 
தீண்டாமை மனப்போக்கு கொண்டவர்களை தீய சமூகவிரோத சக்திகளாக 'டிரீட்மெண்ட்' செய்யவேண்டும்!
 
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தீண்டாமை மனப்போக்கு கொண்டவர்கள் தங்கள் கட்சியில் உறுப்பினராகத் தொடரமுடியாது என பிரகடனப் படுத்தவேண்டும். இத்துடன் மத்திய அரசும், மாநில அரசும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவிடவேணடும் துரதிர்ஷ்டவசமாக இந்நிதியில் 10 சதவிகிதம் கூட அந்த மக்களுக்காக செலவிடப்படுவதில்லை! செலவிடப்பட்ட நிதியிலும் பெரும்பகுதி அவர்களை சென்றடைவதில்லை என்ற நடைமுறைகள் முற்றாக மாறவேண்டும்! இந்த தலைமுறையிலேயே 'தீண்டாமை வீழ்த்தப்பட்டது' என சரித்திரம் படைப்போம்.
 
  NDTV -THE HINDU,
  EDITORIAL VOICE,
  29-8-2012

மக்கள் நலத்திட்டங்களும், ஆதார்கார்டும்

-சாவித்திரிகண்ணன்
 
சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன்சிங், "அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடையாதது குறித்து பேசியுள்ளார்.
 
முதியோர் பென்ஷன், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படும் சம்பளம் போன்றவை மக்களுக்கு சரியாகவும், முழுமையாகவும் கிடைக்க ஆதார் அட்டை திட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு பணம் நேரடியாக வங்கிகளில் செலுத்தப்படும். தற்போது 20கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார் பிரதமரின் எண்ணம் உயர்வானது.
 
ஆனால் இதன் செயல்திட்டத்தில் உள்ள சிக்கல்களும், சில குளறுபடிகளும் அவர் கவனத்திற்கு வரவில்லை போலும்! அதோடு தற்போது 20 கோடிபேருக்கு ஆதார் அட்டை தரப்பட்டுள்ளதாக அவர் கூறிய தகவலும் உண்மையில்லை.
முதலாவதாக ஆதார் அட்டையாலோ, நேரடி வங்கி கணக்கில் பணம் போடுவதாலோ ஊழலை தடுக்க முடியாது. வங்கியில் படம் போடப்படுவதற்கே பணம் கையூட்டு தரவேண்டிய நிலை ஏற்படாது என்பதற்கு உத்திரவாதமில்லை.
அரசு பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது இலவச கல்வி தரப்படுகிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மை. ஆனால் சென்னையின் புறநகர் பகுதி அரசு பள்ளிகள் சிலவற்றில் மாணவர் சேர்க்கைக்கு, இலவச சீருடைகளை பெறுவதற்கு இறுதியாண்டில் டி.சி பெறுவதற்கு என எல்லாவற்றுக்குமே தலைமை ஆசிரியர்கள் பணம் வசூலித்து கொண்டிருக்கிறார்கள்!!
மக்கள் கொடுக்கிறார்கள்!! ஆதி திராவி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மிகப்பெரும்பாலான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முற்றிலுமாகவோ, ஒரு பகுதியாகவோ 'ஸ்வாகா' செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக, கல்விக் கண் திறக்க வேண்டிய ஆசிரியர்களே கள்வர்களாக மாறி நிற்கிறார்கள் என்றால் இந்த தேசம் எந்த நிலையிலிருக்கிறது என்பதை நினைத்தால் விரக்தியும், வேதனையுமே மேலிடுகிறது. எனவே உழைப்புக்கு சம்மந்தமில்லாத பணத்தின் மீதான மோகம் மக்களிடையே வெகு வேகமாக பரவி வருவதை தடுப்பதற்கான தகுதியான தலைமையும், முன்மாதிரியுமே இன்றைய அவசரத் தேவையாகும்!
 
இது ஒரு புறமிருக்க, ஆதார் என்ற அடையாள அட்டை ஒவ்வொரு குடிமகனுக்கும் தரப்படும். 12 இலக்க எண் கொண்ட அந்த அடையாள அட்டை சகல தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். சம்மந்தப்பட்டவரின் கைரேகை, கருவிழி போன்றவை பதிவு செய்யப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
 
தமிழகத்தில் கடந்த ஒராண்டாக அங்கும், மிங்குமாக சிற்சில இடங்களில் இவை வழங்குவதற்கான முயற்சிகள் நடந்தன ஏனோ அவை தொடராமல் கைவிடப்பட்டன. பிறகு மீண்டும் சிற்சில இடங்களில் வழங்கப்படுகின்றன.
 
சென்னையில் மொத்தம் ஐந்தே தபால்நிலையங்களிலும், ஒரு சில வங்கிகளிலும் ஆதார் அட்டை வழங்கவிண்ணப்பங்கள் பெறப்பட்டன. நீண்ட கியூ வரிசையில் மக்கள் நின்றனர். ஆனால் ஒரு நாளில் 100பேருக்கு மட்டுமே தகவல்கள் பெறப்பட்டன. அதிலும் 30பேருக்கு மட்டுமே புகைப்படம், ரேகை பதிவு செய்யப்பட்டது. இந்த விதமான மந்த கதியில் இத்திட்டம் அமல்படுத்தப்படுமானால் இன்னும் 20 வருடம் ஆனாலும் ஆதார் அடையாள அட்டையை அனைவருக்கும் கொடுக்க இயலாது என்பதே யதார்த்தம்!
 
அதோடு தகவல் பதிவு செய்பவர்கள் கார்டுகள் தரும்போது புகைப்படம் மாறியிருப்பது, முகவரியே மாறியிருப்பது... என ஏகப்பட்ட தவறுகள்! இந்த தவறுகளை சுட்டிக்காட்டி, சரியான கார்டை பெற நாள்கணக்கில், மாதகணக்கில் அலைய விடுகிறார்கள். பணியாளர்கள் செய்த தவறுக்கு மக்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியதாகிவிடுகிறது.
 
உலகில் பல நாடுகளில் இந்த அடையாள அட்டை முறை மிகச்சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது . ஆனால் இந்தியாவில் இது வரை இதற்காக 3,000 கோடிக்கு மேல் செலவழித்தும் பத்து சதவிகித பணிகள் கூட முறையாக முழுமை பெறவில்லை.
 
இதற்கிடையில் யூனிக் ஐடெண்டிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் இடையிலான மோதல்கள் அனைத்து பணிகளையும் ஸ்தம்பித்து வைத்துள்ளது.
 
உண்மையான மக்கள் தொகை பதிவு, மக்களைக் குறித்த பதிவு பற்பலவழிகளில் மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மையாகும்! அந்நிய ஊடுருவல்கள் தடுப்பு, தீவிரவாதத்தடுப்பு, பற்பலமக்கள் திட்டங்களுக்கான அடிப்படைத் தகவல்கள், ஒவ்வொருவருக்குமான சுய அடையாளம் என பற்பல பலன்கள் இதிலுண்டு.போர்கால வேகத்தோடு, வீடுவீடாகச் சென்று நிறைவேற்ற வேண்டும். அக்கரையுள்ள, நேர்மையான பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படவேண்டும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

Wednesday, September 12, 2012

விவசாயக்கடன்களும், தற்கொலையாகும் விவசாயிகளும்

-சாவித்திரிகண்ணன்
 
கேட்பதற்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது.
 
நமது மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கு ரூபாய் 5லட்சத்து 75ஆயிரம் கோடிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அடேயப்பா... விவசாயிகள் மிது மத்திய அரசுக்குத்தான் என்னே ஒரு கரிசனம்! சும்மா சொல்லக் கூடாது - விவசாயிகளுக்கு அரசு கொடுக்கும் கடன்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004 -ல் விவசாயிகளுக்கு வழங்கியகடன் 1லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய்! இது படிப்படியாக ஆண்டுக்காண்டு அதிகரித்து 2011-12-ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 75 ஆயிரம்கோடியானது. அடுத்த ஆண்டு இதை 6 இலட்சம் கோடிகள் என அதிகரிக்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். நல்லது! ஆனால் ஆண்டுக்காண்டு விவசாயிகளுக்கென மத்திய அரசு தந்து கொண்டிருக்கும் கடன் தொகை அதிகரிப்பது போலவே விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றனவே?
 
1997களில் தொடங்கி 2012 வரைக்குமான விவசாயிகளின் தற்கொலைகள் இரண்டரை லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளதே...?
 
மத்திய அரசு விவசாயிகளுக்கு தருவதாக கூறும் கடன்களால் விவசாயிகளில்
 
  • தற்கொலைகள் ஏன் தடுக்கப்படவில்லை?
  •  விவசாய உற்பத்திகள் ஏன் அதிகரிக்கவில்லை?
  •  விவசாயிகளின் பிரச்சினைகள் ஏன் குறையவில்லை?
எனில் கொடுக்கப்படும் கடன்களால் சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகள் தான் என்ன? இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல், பரிசீலிக்காமல் ஆண்டுக்காண்டு கடன் அள்ளி கொடுக்கப்படுகிறதே எதனால்?
 
இந்திய விவசாய சந்தையில் சர்வதேச நிதி நிறுவனங்கள் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் வீரியவிதைகள், B.Tபருத்தி போன்ற மலட்டு விதைகளை வாங்குவதற்காகவா?
அந்த விதைகளுக்கு உகந்த அதிக நச்சுதன்மை வாய்ந்த ரசாயண உரங்களை நமது நிலங்களில், பயிர்களில் கொட்டுவதற்காகவா?
 
இதற்கடுத்து இத்தகைய பயிர்களை நோக்கி ஈர்க்கப்படும் பூச்சிகளை கொல்ல எனக்கூறி விவசாயிகளிடம் திணிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்குவதற்காகவா?
 
இந்த மண்ணில் தற்கொலைசெய்து சாய்ந்துள்ள விவசாயிகளின் சரித்திரமெல்லாம் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில்லவா முடிக்கப்பட்டிருக்கிறது?
இவை வாங்கியதால் ஏற்பட்ட கடன்களல்லவா அவன் உயிரை காவுகேட்கிறது? எனில் விவசாயிகளுக்கு தேவை கடனா? கடன்பெற்று, கடன்பெற்று நெஞ்சம் கலங்கி தங்கள் கதைகளையே முடித்துக் கொள்கிறார்களே...! உங்கள் வங்கிகள் தரும் கடன்களுமே கூட விவசாயத்தின் பேரால் தொழில் அதிபர்களுக்கும், பெரியவசதிபடைத்த விவசாயிகளுக்கும் தானே தரப்படுகிறது, எளிய விவசாயிகள் வங்கிகளை நெருங்கக் கூட முடியாமல் கந்துவட்டி கொடுமையில் அல்லவா கலங்கிச் சாகிறார்கள்?
 
விவசாயத்தை வீழ்த்தியது அரசாங்கத்தின் கொள்கைகளே! அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அணுகுமுறைகளே! விவசாயி வேண்டுவதெல்லாம் கடன்களற்ற விவசாயச் சூழல்களைத்தான்!
 
நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரை விவசாயச் சூழல்கள் நம்பிக்கைக்குரியதாகத்தான் இருந்தது! அன்று உழைப்பு மட்டுமே விவசாயத்தில் அவனது முதலீடாக இருந்தது! முந்திய அறுவடையில் எஞ்சிய நெல்லும், சுற்றுப்புறத்திலுள்ள இழை, தளைகளும் அவன் வளர்க்கும் ஆடு, மாடுகளின் கழிவுகளும் உரக்களாயிருந்தன! எந்த பூச்சிகளையும் கொல்ல அவன் நினைத்தது கூட இல்லை! வேப்பந்தளைகளையும் இன்னும் விரும்பத் தகுந்த இயற்கை மூலிகைகளையும் கொண்டு பூச்சிகளை விரட்டியடித்தானேயன்றி கொன்றானில்லை!
 
பொருளாதார முதலீடுகள் தேவையில்லாத விவசாயத்தை பெறும் முதலீடுகள் தேவைப்படும் தொழிலாக நிர்பந்தித்ததே நமது அரசாங்கம் தான்! அதனால் அன்று ஒரு ஏக்கர் பயிரிட்டால் நான்கைந்து மாதம் கழித்து அந்த உழைப்பிற்கு கையில் நான்காயிரம் மிஞ்சியது. இன்றோ கடன் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
 
நாட்டில் எல்லா பொருள்களின் விலையும் ஏறலாம்! ஆனால் அரிசிவிலை ஏறுவதை மட்டும் நம்மால் அனுமதிக்க முடியாது. அரிசி, கோதுமையால் உருவாக்கப்படும் ஹோட்டல் உணவுபண்டங்களின் விலைகள் பற்பலமடங்கு ஏறலாம்! ஆனால் அந்த ஹோட்டல் உணவு பண்டங்களுக்கு மூலாதாரமான அரிசி, கோதுமையின் விலையை நிர்ணயித்துக்கொள்ள முடியாத நிலைமையில் விவசாயிகளை நாம் நிர்பந்தித்துள்ளோம்!
அது போகட்டும்! குறைந்தபட்சம் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை தருவதற்காக நிலைத்து நீராதாரத்திட்டங்களையாவது நிறைவேற்றலாமே! கடன் தொல்லையற்ற கௌரவமான விவசாயச் சூழல்களை அவனுக்கு மீட்டெடுத்து தருவதொன்றே உண்மையான தீர்வாகும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

ஆசிரியர் தகுதிதேர்வு - உணர்த்தும் உண்மைகள்!

-சாவித்திரிகண்ணன்
 
அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இந்த சோதனையிலிருந்து சில படங்களை பெற்று கொள்வது நல்லது.
 
தமிழகத்தில் சுமார் 18,000 ஆசிரியர் பணியிடங்களுக்கும், 5,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்குமாக ஜீலை - 12ந்தேதி நத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வி 6லட்சத்து 76ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் மொத்தம் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை கல்வியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
 
இப்படி ஒரு தேர்வு தேவையே இல்லை என பலர் வாதிட்டனர். இந்த தேர்வை தடுத்து நிறுத்த பலர் நீதிமன்றம் சென்று தாமதப்படுத்தினார். ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு எதற்குத்தேர்வு? பணிமுப்பின் அடிப்படையிலேயே பணியை உறுதிபடுத்தலாமே என ஆக்ரோஷமாக வாதிட்டனர் பலர். ஆனால் இப்போது தேர்வு நடத்தப்பட்டதால் நமக்கு பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அவை;
 
  • தமிழகத்தில் புற்றீசல்கள் போல் பல்கி பெருகி இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் யோக்கியதை இதில் வெளிச்சமாகியுள்ளது. இதன் மூலம் இந்த கல்லூரிகளை கடும் விதிகளுக்குட்படுத்தி ஒழுங்கு படுத்த வேண்டியதன் அவசியத்தை தற்போது தமிழ்நாடு கல்வியல் பல்கலைக்கழகம் உணர்ந்துள்ளது.
  • ஏற்கெனவே பணியில் இருந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் கல்வித்திறன் எவ்வளவு குறைபாடாக இருக்கிறது என்ற கசப்பான உண்மை தற்போதைய தேர்வில் அவர்கள் அடைந்துள்ள மிகப்பெரிய தோல்வியிலேயே விளங்கும். எனவே ஏழாண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுமே தங்களை ஆசிரியர் கல்வி தேர்வுக்கு உகந்த வகையில் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நிருபிக்கப்பட்டுள்ளது.
மாறிக்கொண்டும், வளர்ந்து கொண்டும், புதுப்புது தகவல்களை உள்வாங்கிக் கொண்டுமுள்ள கல்வித்துறையில் எதையும் 'update' செய்து கொள்ளாமல் ஆசிரியர் சமூகம் தேக்கநிலையில் இருந்து கொண்டிருக்கிறது என்பதும், இந்த தேக்கநிலை உடைபடவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது நிருபணமாகியுள்ளது.
 
தமிழக அரசு ஆண்டுதோறும் சுமார் 35,000லிருந்து 50,000ஆசிரியர்கள் வரை நியமனம் செய்துகொண்டிருப்பதால் இனி இந்த விஷயத்தில் அதிககவனம் தேவைப்படுகிறது.
 
ஒரு சமூகத்தில் ஆசிரியர்கள் தகுதியானவர்களாக அமைந்துவிட்டால் அதன் அடித்தளம் உறுதியாக போடப்பட்டதாக நாம் நிம்மதியடையலாம்! இதன் காரணமாகத்தான் இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைக்கென 30 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது துர்அதிர்ஷ்டவசமாக நம் ஆசிரியர்களில் பலருக்கோ, அல்லது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலோ இவை குறித்த புரிதல்கள் இல்லை. ஆனால் இவை குறித்த புரிதல்கள் இல்லாமலே இந்நாளில் பலர் ஆசிரியர்களாக வந்துள்ளனர் இருந்து கொண்டுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
எனவே இக்குறைபாடு இனி ஆசிரியர் தகுதிதேர்வினால் அகற்றப்படும் என நாம் நம்புவோம். இத்தேர்வில் தோல்வியுற்ற அனைவருக்கும் மறுதேர்வு எழுத அக்டோபர் 3ந்தேதி வாய்ப்பளிக்கப்படும் என்பதும், தேர்வு நேரத்தை ஒன்றரை மணிநரத்திலிருந்து மூன்று மணிநேரமாக்கியுள்ளதும் வரவேற்கத் தகுந்த முடிவுகளே!
 
அதே சமயம் கேட்கப்படும் 150 கேள்விகளும் சரியானவிடையை கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து 'டிக்' செய்யும் வாய்ப்பாக இருப்பதால் மிகப்பலரும் விடை தெரியாவிட்டாலும் ஏதேனும் ஒன்றை 'டிக்' செய்து அதிர்ஷ்டத்தை நம்புவதாகத் தெரிகிறது. எனவே ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் இருப்பது போல தவறான விடையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அரைமார்க் குறைக்கப்படும் என்ற நியதியை ஏற்படுத்தலாம். இதனால் உண்மையிலேயே உழைத்து படித்து வருபவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அமையும்!
 
ஆசிரியர் தகுதி தேர்வு இனி ஆண்டுக்கு இரு முறை நடக்க உள்ளது. அனைத்து ஆசிரியர்களும் ஏழாண்டுக்கு ஒரு முறை இதில் எழுதியே ஆகவேண்டும். இதன் மூலம் தமிழக கல்வித்துறையில் தகுதியான ஆசிரியர்கள் தேர்வாகி மகத்தான மாற்றங்கள் ஏற்படட்டும். மாணவசமுதாயம் பலன் பெறட்டும் இதன் மூலம் நாளைய நல்ல சமுதாயம் உருவாகட்டும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
27-8-2012

விலை ஏற்றத்தால் விவசாயிகள் பலனடைகிறார்களா?

-சாவித்திரிகண்ணன்
 
"அரிசி, பருப்பு, கோதுமை காய்கறிகள் விலைகளெல்லாம் மிகவும் அதிகரித்துவிட்டனவே..." என்ற கேள்விக்கு,
 
"நல்லது தானே, இதனால் விவசாயிகள் பலனடைகிறார்களே! அதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்" இப்படி பதிலளித்து, தற்போது பல தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் சந்தித்து வருகிறார் மத்திய அமைச்சர் பெனிபிரசாத்! எதிர்கட்சிகளனைத்தும் எம்பி குதித்து, அவரை தாக்கி தீர்க்கின்றன.
 
"விலைவாசி உயர்வால் சாதாரணமக்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கையில் அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறார்.." என்பது எதிர்கட்சிகள் எதிர்பபின் சாராம்சம்!
விலைவாசி ஏற்றத்தால் விவசாயிகள் கடுகளவும் பயன்பெறவில்லை என்பதோடு இதில் யாரைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் தாம் என்பதை ஆளும்கட்சி அமைச்சர் மட்டுமல்ல, ஆண் கட்சிகளான எதிர்கட்சிகளும் உணரவில்லை என்பதே உண்மை!
 
விவசாய விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை இதுவரை சுதந்திரமடைந்த இந்தியா தன் விவசாயிகளுக்கு வழங்கவில்லை! இப்படி இருக்க, ஏறிக்கொண்டிருக்கும் விலை ஏற்றத்தால் ஏற்றம் பெறுவது யார் என்பது சொல்லாமலே விளங்கும்!
 
கடந்த ஒராண்டில் உரவிலை 100சதவிகிதம் உயர்ந்துள்ளது, ஆனால் நெல் கொள்முதலே குவிண்டாலுக்கு அதே 1,100தான்! உரவிலைகள் ஏன் உயர்கின்றன? உரக்கம்பெனிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி மானியம் வழங்குவதோடு, உரவிலையை அவர்களே நிர்ணயிக்கும் உரிமையையும் அரசு விட்டுக்கொடுத்ததே காரணமாகும்!
 
இந்தியாவில் இப்போது விவசாயிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைப்போல் முன்னெப்போதும் அனுபவித்ததில்லை. அதனால் தான் 10 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆளும் தரப்புகளின் ஒவ்வொரு அசைவுமே விவசாய நலன்களுக்கு எதிராகவே உள்ளன என்பது தான் மிகப்பெரும் துரதிஷ்டம்!
 
'காடுவெளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்பது அந்த காலத்து நிலைமைகளைக் கூறும் பட்டுக்கோட்டையின் பாடல்வரிகள தற்போது கடன் தான் மிச்சம்! அந்தக் கடன்தரும் அச்சமே தற்கொலைகள்!
 
இந்த ஆண்டு பருவமழை பொய்த்தால் சோலைவனமான விவசாய பூமியெல்லாம் பாலைவனமாகிக்கொண்டுள்ளன. கடந்த இரண்டாண்டில் தஞ்சை தரணியில் மட்டுமே 40சதவிகிதம் தரிசு நிலங்கள் கூடியுள்ளன. பத்தாண்டுகளில் நிலத்தடி நீர் 50அடிகள் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது...!
பருவமழை பொய்த்தால் தென்னிந்தியா தீய்ந்து போகிறதென்றால்..., வட இந்தியாவில் வறண்ட பூமியில் வாழ்க்கையை தொலைத்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளையெல்லாம் கசாப்பு கடைகளுக்கு அனுப்பி பசிக்கொடுமைக்கு பரிகாரம் தேடுகின்றனர்...!
 
'அதனால் என்ன?' என்ற போக்கில் கழனி நிலங்களெல்லாம் தற்போது கார்பரேட் கம்பெனிகளின் வசமாகிவருகின்றன! இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடந்தையாக செயல்படுகின்றன... என்பது சோகத்திலும் சோகம் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசியவிவசாயிகள் ஆணையம் சமீபத்தில் ஒரு முக்கிய பரிந்துரையை அரசுக்கு வழங்கியுள்ளது. அது,
 
"இந்தியாவில் வேகமாக வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயத்தை மீட்டெடுக்க ஒரே வழி, வெயில், மழை, பணி போன்ற இயற்கை இடர்களை சமாளித்து கடும் உழைப்பை ஈந்து விவசாயிகள் தரும் உற்பத்தி பொருட்களில் மொத்த செலவை கணக்கிட்டு அதற்கு மேல் 50 சதவிகிதம் கூட்டி அவர்களுக்கு வழங்கவேண்டும்" என்று ஆழமாக வலியுறுத்தியுள்ளது.
 
மத்திய அரசு தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரையை முதலில் அமல்படுத்தவேண்டும். அப்போது தான், "விவசாயிகள் பலனடைகிறார்களே" என்ற வார்த்தையை உகுக்கும் அருகதையை அமைச்சரோ, அரசோ பெற முடியும்! விவசாயிகள் பலன்பெறுவதை எதிர்க்க எந்த எதிர்கட்சிக்கு துணிச்சல் வருகிறது என்று அப்போது பார்த்துக் கொள்ளுங்கள்!
 
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
20-8-2012

இந்திய சுதந்திர தினம் 65 சாதனைகளும், வேதனைகளும்!

-சாவித்திரிகண்ணன்
 
65வது இந்திய சுதந்திரதினம் அரசு விழாவாக மத்திய, மாநில, மாவட்டத் தலைநகரங்களில் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், அணிவகுப்பு, குதூகல கலைநிகழ்ச்சிகள் அரசு செலவில் அரங்கேறுகின்றன.
 
கல்வி நிறுவனங்கள் பலவும் அரசின் கட்டளைக்கேற்ப சுதந்திரதினத்தை கொண்டாடி மாணவர்களுக்கு மிட்டாய் தருகின்றன.
 
ஆனால் சுதந்திரம் பெற்றபோது ஊர்கள் தோறும், வீதிகள் தோறும் உற்சாக பெருவிழாவாக ஆராதிக்கப்பட்டு ஆனந்த களிப்பில் நாடு திளைத்தது. வீட்டுக்கு வீடு இந்தியக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தனவே அந்த ஆனந்த களிப்புகள் ஏன் ஆண்டுக்காண்டு தொடரவில்லை!
 
மக்களின் உணர்வுபூர்வமான கொண்டாட்டமாக சுதந்திரதினம் ஏன் கோபிக்கவில்லை? என்பது இன்றும் நம்மிடையே எஞ்சியிருக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் எழுப்பும் கேள்விகளாகும்!
 
இந்தக்கேள்விகள் ஆழ்ந்து சிந்தித்து அலசப்படவேண்டியவைகளே! பொருளாதாரத்தில் இந்தியா இமாலய வளர்ச்சியை கண்டிருக்கிறது. நமது சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் கோடி தான்! ஆனால் தற்போதோ 14,90,925 கோடிகள்!
 
எத்தனையெத்தனை பிரம்மாண்ட தொழிற்சாலைகள் தேவைக்கும் அதிகமான விவசாய உற்பத்தி, வானுயர்ந்த கட்டிடங்கள், பளபளக்கும் சாலைகள், அணிவகுக்கும் வாகனங்கள், அதீத பணப்புழக்கம், அங்காடித் தெருக்களில் அலைமோதும் மக்கள் கூட்ட்ம, தங்க நகைகள் வாங்குவதற்கு முந்தியடித்தும் முனையும் மாதர்கள் கூட்டம், அழகான சீருடைகள் மின்ன பள்ளிவாகனங்களில் பவனிக்கும் குழந்தைகள், எங்கெங்கும் எழும்பிக் கொண்டிருக்கும் வீட்டு மனைகள்... என இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதை யாரால் மறுக்க முடியும்?
 
ஆனால் இந்த வளர்ச்சி தோற்றம் ஒரு புறமென்றால், மாற்றமில்லாமல் தொடரும் ஏழ்மை, வறுமை மறுபுறம் இருக்கின்றன!
எங்கெங்கும் பொது நலன் புறந்தள்ளப்பட்டு சுய நலன்கள் கோலோச்சுகிறது.
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கைகோர்த்து ஊழல் சாம்ராஜ்ஜயம் எழுப்பப்பட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களில் ஊழல் பிரதானமாகிவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் பூதாகரமானதால் சில பூட்டப்பட்டுள்ளன. மற்றசில பொலிவிழுந்துள்ளன. இனி பொதுத்துறையில் புதிய நிறுவனங்களென்பது கானல் நீரானது.
 
ரயில்வே துறையில் பிரிட்டிஷார் அமைத்து தந்த கட்டுமானத்தை இந்த 65ஆண்டுகளில் 25 சதவிகிதத்திற்குமேல் அதிகரிக்க இயலவில்லை. பிரிட்டிஷ்காலத்தில் கட்டப்பட்ட அணைகள், சுதந்திரமடைந்து முதல் இருபதாண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட நீராதாரதிட்டங்கள் தவிர்த்து கடந்த 45 ஆண்டுகள் நாடு பெற்ற முன்னெற்றங்கள் ஏதுமில்லை.
 
திட்டமிடப்படாத விவசாய உற்பத்தியால் தேக்கி, பாதுகாக்கமுடியாத உணவுதானியங்கள் அழிகின்றன. மறுபுறம் விவசாய நிலங்கள் ரசாயண உரங்களால் கட்டுதட்டி மலடாகி வருகின்றன.
 
அடிமை இந்தியாவை பாதுகாக்ப்பட்ட இயற்கை அரண்களான மலைகளும், ஆற்றுமணல்களும் சுதந்திர இந்தியாவில் சூறையாடப்படுகின்றன இஸ்லாமிய படையெடுப்பார்களும், பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் ஆயிரம் ஆண்டுகளில் அள்ளிச்சென்ற செல்வங்களை விடவும் அதிகமாக சொந்த நாட்டிலேயே சூறையாடி அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்குகின்றனர் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும்!
 
தொலைநோக்கு பார்வை தொலைந்து ஆதாய அரசியல் மேலெழுந்து, இலவசதிட்டங்கள், மதுபெருக்கம், நுகர்வுகலாச்சாரவெறி, உழைப்பில் ஈடுபாடிண்மை, தன்மானச் சிதைவு... போன்றவை வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளன.
 
தியாக வேள்வியாலும் திடமான ஆன்மபலத்தாலும் காந்திய தலைமுறையால் கட்டமைக்கப்பட்ட இந்த தேசத்தை இன்றைய இளைய சமுதாயம் தான் தூக்கி நிறுத்தவேண்டும். பொதுநலத்திற்குள் தான் நமது அனைவரின் சுயநலன்களம் பூர்த்தியாகின்றன என்ற புரிதல் பலப்பட்டால் பலவீனங்கள் தொலைந்திடும்! நம்மைப் பீடித்திருக்கும் சுயநலப்பேராசைகளிலிருந்து நாம் விடுபடுவதே உண்மையான சுதந்திரமாகும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

கார்டுனிஸ்ட் அஸிம் திரிவேதி கைது!

-சாவித்திரிகண்ணன்
 
 
பிரபல கார்டூனிஸ்ட் அஸிம் திரிவேதி சர்ச்சைக்குரிய கார்டூன்களை வரைந்தார். என தேச துரோக வழக்கு பதியப்பெற்று கைதாகி உள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 124A பிரிவில் மும்பை போலீஸ் அஸிம்திரிவேதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, நாட்டில் கலவரத்தை தூண்டுவது ஆகியவற்றை தடுப்பதற்காக இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுகிறது. சென்ற ஆண்டு அண்ணாஹாசரே அவர்களால் ஊழலுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் இந்த கார்டுன்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
 
கடந்த ஒராண்டாக இந்த கேலிச்சித்திரங்களே நாட்டுப்பற்றுள்ள ஊழல் எதிர்பப்பாளர்களின் கொள்கை விளக்க சித்தரங்களாகப் பயன்பட்டுவந்துள்ளன! இந்தக் கேலிச்சித்திரங்களால் பொது அமைதிக்கு குந்தகமோ, நாட்டில் கலவரங்களோ ஏற்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை! அப்படியிருக்க இந்த சட்டப்பிரிவில் அஸிம் திரிவேதி எப்படி கைது செய்யப்படலாம்?
 
இந்த 124A சட்டம் தான் சுதந்திரப்போராட்டத்தின் போது பாலகங்காரதிலகர், மகாத்மாகாந்தி, மௌலானாஆசாத், அன்னிபெசண்ட் அம்மையார் போன்ற உன்னத தலைவர்களை கைது செய்யப்பயன்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கு!
 
அதே சட்டம் தான் தற்போது எழுத்தாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் சமூக சீர்திருத்தவவாதிகள்... (Dr.பினாய்க் சென், அருந்ததிராய்) போன்றவர்களின் செயல்பாட்டை முடக்குவதற்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது இந்திய அரசுக்கு!
 
இந்தச்சட்டம் சுதந்திர இந்தியாவிற்கு தேவையற்றது என ஜவஹர்லால் நேரு, தொடங்கி... இன்றைய ஜனநாயகவாதிகள், அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பல காலமாகவே கூறி வருகின்றனர். ஆனால் அதற்கான செஞ்சுரம், சிந்தனைதெளிவு ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது துரதிர்ஷ்டமே!
 
சரி, அஸிம்திரிவேதியின் கேலிச்சித்திரங்கள் சொல்வது என்ன? இந்த நாடு ஊழல்வாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகம் பாழ்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது! அரசியல்சாசனம், மற்றும் அரசாங்கங்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் நொறுங்கி கொண்டுள்ளது. நாட்டின் ஜனநாயகப் பாதுகாவலர்களாக நாம் கருதியவர்கள் நாட்டை சூறையாடுகின்றனர்! இவை தாம் அந்த கேலிச்சித்திரங்கள் சொல்லும் செய்திகள், உணர்த்தும் உண்மைகள்!
 
இவை கோடனுகோடி மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கு தரப்பட்ட சித்திரவடிவம்! அஸிம்திரிவேதியே கூறியிருப்பது போல, "கலையும், இலக்கிய சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்! என்னைச் சுற்றிலும் நான் எதைப் பார்க்கிறேனோ அதையே என கேலிச்சித்திரத்தில் வெளிப்படுத்தி உள்ளேன்!
 
"இதையெல்லாம் ஒத்துக் கொள்ளமுடியாது. நமது நாட்டின் தேசிய சின்னத்தையும் அரசியல் சாசனத்தையும், பாராளுமன்றத்தையும் அவமானப்படுத்தித் தான் இந்த உண்மைகளைச் சொல்லவேண்டுமா? சுதந்திரம் என்றால் எதைவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விமர்சித்து விடுவதா? இதற்கு ஓர் வரையறை வேண்டாமா? என்றும் சிலர் கேட்க்கலாம்!
 
இவர்கள் யதார்தத்தை, உண்மைகளை ஒத்துகொள்ள மறுப்பவர்களாகவோ அல்லது குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டவர்களாகவோ, அல்லது குதர்க்க எண்ணம் கொண்டவர்களாகவோ மட்டுமே இருக்க முடியும்.
 
ஒரு கலை அல்லது படைப்பின் உள்ளார்ந்த நோக்கங்களை புறந்தள்ளிவிட்டு அதன் உன்னதமான, உண்மையான ஆதங்கங்களை மறுதலித்துவிட்டு எப்படி வேண்டுமானாலும் வியாக்யானம் தரலாம்! ஆனால் அது நீதியில்லை.
 
"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற மகாகவி பாரதியாரை மாபெரும் பயங்கரவாதி என்றும் அடையாளப்படுத்தலாம் தனி ஒரு மனிதனின் பசிதுயரத்தை காணப்பொறுக்காத மென்மையான மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடகாவும் கருதலாம்!
 
ஒவ்வொரு உண்மையான கலைஞனும் இப்படித்தான் வெளிப்படுவான்! அவனிடம் ஒளிவுமறைவோ, போலித்தனமோ, நாசூக்கான வெளிப்படையோ எதிர்க்கமுடியாது. அவன் ஜனங்களின் ஆன்மாவாக இருப்பவன். ஒட்டு மொத்த மனிதகுலத்தையும், இந்த பிரபஞ்சம் முழுமையும் அவன் பரிபூரணமாக நேசித்து தன்னை அர்பணித்தவன்!
 
இந்திய பத்திரிக்கை கௌன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜீ, "அஸிம்திரிவேதியை கைது செய்தது மாபெரும் தவறு" என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பாரதிய ஜனாத கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட்டு கட்சி, ஊழலுக்கு எதிரான மக்கள் அமையும் பத்திரிக்கையாளர் அமைப்புகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் இக்க கைதை கண்டித்துள்ளனர். 'இந்தக் கைதில் காங்கிரஸிக்கு உடன்பாடில்லை' என்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஸ்திவாரி கூறியுள்ளார் . இந்தக் கைதின் மூலம் அஸிமின் கார்டூன்கள் அகில உலக கவனம் பெற்றமைக்கு காவல்துறைக்கு நன்றி செய்வோம்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
11-09-2012

Friday, September 7, 2012

வங்கித்துறை வேலை நிறுத்தம்

-சாவித்திரிகண்ணன்
 
நாடெங்கும் வங்கித்துறை வேலை நிறுத்ததால் பொருளாதாரச் செயல்பாடுகள் கடுமையான பாதிப்படைந்துள்ளன!
வங்கிகள் என்பவை பொருளாதாரச் செயல்பாடுகளை இணைக்கும் சங்கிலி பிணைப்புகள் போன்றவை! வேலை நிறுத்தத்தின் இரண்டு தினங்கள் வியாபார நிறுவனங்களும், மக்களும் சந்திக்கும் இடர்பாடுகள், இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
 
ஆகவே பிரச்சினைகள் என்னவாக இருந்தாலும் இந்த வேலைநிறுத்த இடர்பாடுகள், இழப்புகளை வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் நிர்பந்திருப்பதற்கு மாற்றாக மக்களிடம் இந்த பிரச்சினைகள் குறித்த விவாதத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.
 
'மக்களுக்காகவே வேலைநிறுத்தம்' என வங்கி ஊழியர்கள் சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் எதற்காக 'ஸ்டிரைக்' செயிகிறார்கள் என்பதே தெரியவில்லை மக்களுக்கு!
 
இந்தியாவில் 1969ல் அனைத்து வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. அதன்பிறகு வங்கிகளால் மக்களும், மக்களால் வங்கியும் கண்ட வளர்ச்சிகள் பிரமிக்கத்தக்கவை.
 
இன்று இந்தியாவில் 24 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சுமார் 87,000கிளைகளுடனும், 10லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் செய்லபடுகின்றன. இவற்றில் மக்கள் பணம் சுமார் 60லட்சம் கோடி வைப்பு நிதியாக உள்ளது. மொத்த வங்கி செயல்பாடுகளில் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு 75சதவிகிதம். இவையெல்லாம் பொதுத்துறை வங்கிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் புள்ளி விபரங்கள்.
 
இந்நிலையில் வங்கித்துறையில் சில சீர்த்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நியமித்த கந்தேல்வால் கமிட்டி 105 பரிந்துறைகளை வழங்கியுள்ளது. அந்து பரிந்துரைகள் பலவற்றை எதிர்த்தே தற்போது வேலை நிறுத்தம் நடக்கிறது.
  •  பொதுத்துறையில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது,
  •  வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் கோலோச்சும் வாய்ப்புகளை அதிகரிப்பது,
  • பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து வங்கிகளின் எண்ணிக்கையையும், கிளைகளையும் கணிசமாகக் குறைப்பது,
  • வங்கிப் பணிகள் சிலவற்றை Out sourcing மூலமாக வெளியே கொடுப்பது,
போன்ற பரிந்துரைகளே இன்றைய சர்ச்சைகளுக்கு காரணமாகும்!
 
வெளிநாட்டு வங்கிகள் குறிப்பாக இன்றைக்கு அமெரிக்காவில் ஏராளமான வங்கிகள் தங்கள் தவறான செயல்பாடுகளால் திவாலாகி வருகின்றன. இந்நிலையில் வங்கித்துறையில் அந்நிய வங்கிகள் ஆரோக்கியமானவை தானா? என்று ஆழமாகச் சிந்திக்கவேண்டும். அதோடு மூலதனத்தை அதிகரிக்கவே தனியார் ஆதிக்கத்தை வங்கிகளுக்குள் அனுமதிக்கிறோம் என்ற வாதமும் ஏற்புடையதல்ல. தற்போது பொதுத்துறை வங்கிகளின் வைப்புத்தொகையான 60லட்சம் கோடி மக்களால் தரப்பட்டவையே அன்றி தனியார்களால் அல்ல. மேலும் இன்று இந்தியாவில் இயங்கும் 12 தனியார் வங்கிகளின் மொத்த மூலதனமே 4,569 கோடிதான்! ஆனால் மக்களிடமிருந்து அவர்கள் பெற்றதோ 8,22,801 கோடிகள்! ஆக, அரசு வங்கிகளுக்கு அள்ளி கொடுத்து நம்பிக்கை வைக்க மக்கள் இருக்கும் போது அந்த நம்பிக்கைக்கு பாதகம் விளைவிப்பதா? என்பதையும் பரிசீலிக்கவேண்டும்.
 
தேசியவங்கிகளை இணைப்பது, கிளைகளை குறைப்பது என்பது தற்போதைய பரந்துபட்ட சேவையை முடக்கும் செயல் - இதை அனைத்து மக்களும் கண்டிப்பாக எதிப்பர் மூடப்படும் வங்கிகளின் இடத்தை தனியார் கந்து வட்டிபேர்வழிகள் ஆக்கிரமிக்கும் ஆபத்துகளும் உள்ளன!
 
'அதே சமயம் தனியார் வங்கிகளே கூடாது' என்பது ஏற்புடையதல்ல, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசியல் தலையீடுகள் அறவே தவிர்க்கப்படவேண்டும். வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் மக்களை அலட்சியப்படுத்துவது கால்கடுக்க காத்திருக்க வைப்பது, அலைகழிப்பது போன்ற அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை என்பது கவலையளிக்கிறது.
 
இந்நிலையில் 'Out sourcing' தவறாகத் தெரியவில்லை. அவட்சோர்சிங்கை எதிர்ப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது. ஏனெனில் அது குறைந்த செலவில் அதிக பலன்களை வாடிக்கையாளர்கள் பலன்கள் பெற உதவும்.
 
மொத்தத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை பலஹீனப்படுத்துவதை, மத்திய அரசு கைவிடவேண்டும். மாறாக அதை பலப்படுத்தும் சீர்திருத்தங்களை தயங்காமல் அமல்படுத்தலாம்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

டி.என்.பி.எஸ்.சி

-சாவித்திரிகண்ணன்
 
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் - 2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
 
3,631 பணியிடங்களுக்கு 6,40,000பேர் தேர்வு எழுதியுள்ளனர். ஆக, இவ்வளவு பேரின் உழைப்பும், நம்பிக்கையும் வீணாகி, சில தவறான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடலாகாது. சில பேராசைக்காரர்களின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி புதிய வரலாறு படைத்துள்ளது என்று கூட சொல்லலாம்! ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சியில் அரங்கேறிய அதிரடி நடவடிக்கைகள் அதன் தொடக்கம் அரசுத்துறைகளில் எல்லாம் இன்று லஞ்சம் தழைத்தோங்குவதற்கான அடிப்படை காரணமே குறுக்குவழியில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்தது தவறான நபர்கள் பதவிக்கு வருவது தான்! இப்படி பணம் பெற்று பணியில் சேர்ப்பது என்பது பதவிகாலம் முழுவதும் லஞ்சலாவண்யத்தில் திளைப்பதற்கு தரப்பட்ட 'லைசென்ஸ்' ஆகிவிடுகிறது.
 
ஆகவே அனைத்து லஞ்ச லாவண்யத்திற்கும் தொடக்கபுள்ளியாய் அமையும் டி.என்.பி.எஸ்.சி ஒழுங்கமைக்கப்பட்டாலே போதும் அரசுத்துறைகளில் பெருமளவு ஊழல் முறைகேடுகளை தவிர்க்கலாம்! அதாவது டி.என்.பி.எஸ்.சி ஒழுங்கமைக்கப்பட்டால் - அதன் மூலம் தவறான நபர்கள் அரசு பணிக்குள் நுழைவது தவிர்க்கப்பட்டால் - ஊழல் முறைகேடுகளை முளையிலேயே கிள்ளி எறிந்தது போலாகும்!
 
அனைத்து அரசு பணிகளுக்கும் நுழைவுவாயிலான டி.என்.பி.எஸ்.சி கடந்த காலங்களில் ஊழல் கறை படிந்திருந்தது. அதன் உறுப்பினர் பதவிகள் ஒரு கோடிக்கு விலைப்பேசப்பட்ட நிலைமைகள் இருந்தன. அதனால் தான் ஆட்சி மாற்றத்திற்கு பின் ஏற்பட்ட காட்சி மாற்றமாக டி.என்.பி.எஸ்.சி கறுப்பு ஆடுகள் சில களையெடுக்கப்பட்டன. அதன் உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், புரோக்கர்கள், பணம் கொடுத்தவர்கள் என பலர் வீடுகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள், கட்டுக்கட்டாக பணம், வெளிநாட்டு மதுவகைகள், வருமானத்திற்கு சம்மந்தமில்லாத சொத்துபத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அன்றைய டி.என்.பி.எஸ்.சி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.
 
அதைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சிக்கு ஒய்வுபெற்ற டி.ஜி.பி.ஆர். நட்ராஜ் தலைவராக நியமிக்கப்பட்டார். நேர்மையான தலைவர் நியமிக்கப்பதில் ஓர் நம்பிக்கை பிறந்தது என்ற போதிலும் பழைய ஊழல் பெருச்சாளிகள் இன்று வரை தண்டிக்கப்படாமல் அங்கேயே தொடர்வது என்பது நேர்மையான செயல்பாடுகளுக்கு சவால் ஆகிவிட்டது. இதுவே இப்போதைய வினாத்தாள் வெளியான விபரீதத்திற்கு காரணமாக கொள்ளலாம்!
 
ஆனபோதிலும் ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள், நவீன தொழில்நுட்ப வசதிகள், அரசின் ஆதரவு போன்றவற்றைக் கொண்டு திரு.ஆர்.நட்ராஜ் மகத்தான மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சிக்குள் அரங்கேற்றியுள்ளார் என்பதையும் மறுக்க முடியாது.
 
தற்போதைய குருப் -2 தேர்வு என்பது நகராட்சி கமிஷனர், சார்பதிவாளர் வருவாய்த்துறை உதவியாளர்... உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கானது. இதற்காக தேர்வு எழுதியவர்கள் வருடக்கணக்கில் இதற்காக கடுமையாக தங்களை தயார் செய்திருக்க கூடும். இரவு பகல் பாராமல் படித்தவர்கள், தனியார் பணிகளை தவிர்த்து இதற்காகவே தங்களை தயார்படுத்தி உழைத்தவர்கள் வறுமை, துன்பம், வீட்டுச் சூழல்களை மீறி தங்களை தேர்வுக்கு தயார்படுத்தியவர்கள்... என எத்தனையோ பேர் இருக்க கூடும்!
இப்படிப்பட்டவர்களின் நம்பிக்கையை சிதைத்து தவறானவர்கள் பணிபெறுவது என்பது சம்மந்தப்பட்ட நபர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிமட்டுமல்ல, அது இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் மன்னிக்க முடியாத அநீதியாகும்!
 
எனவே ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சியில் ஊழல்புரிந்தவர்கள், தற்போதைய வினாத்தாள் வெளியானதில் சம்மந்தப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அதுவும் தாமதமின்றி தண்டனைக்கு ஆளாகவேண்டும்.
 
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பதவிகளுக்கான தேர்வு நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற யு.டி.எஸ்.சி எப்படி நேர்மையாகவும், பாதுகாப்பு அம்சங்களோடும் செயல்படுகிறதோ அதே நிலைமை டி.என்.பி.எஸ்.சியிலும் பின்பற்றப் படவேண்டும். இதற்கு அரசு ஆதரவோடு திரு.ஆர்.நட்ராஜ் அவர்கள் - அடுத்தாண்டு ஓய்வுபெறுதற்கு முன்பு - துரிதமாக செயல்பட்டு சாதிக்கவேண்டும்! இது நடக்கும், நடக்கவேண்டும் என்று நம்பவோமாக!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
14-08-2012

போலிச்சான்றிதழ்கள்

-சாவித்திரிகண்ணன்
 
அரசுத்துறைகளில் போலிசான்றிதழ் கொடுத்து 1,832 பேர் பணிகளில் சேர்ந்திருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால் போலிச்சான்றிதழ் மூலம் அரசுப்பணிகளில் எத்தனைபேர் சேர்ந்துள்ளனர் என்ற ஒட்டு மொத்த விபரம் அரசிடம் இல்லை என்பதையும் நாராயணசாமி ஒத்துக்கொண்டுள்ளார்.
உண்மைதான்! எப்படி வானத்து நட்சத்திரங்களை எண்ணிவிடமுடியாதோ அதே போல் போலி சான்றிதழ்கள் மூலம் அரசுப்பணியில் சேர்ந்திருப்பர்களை எண்ணி விடமுடியாது.
இட ஒதுக்கீடு என்ற கொள்கை கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் நடைமுறைக்கு வந்த காலகட்டத்திலிருந்தே போலிச்சான்றிதழ்கள் என்பவை வெகுவாக புழக்கத்தில் வந்துவிட்டன!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் மாறிய கிறிஸ்த்துவர்களில் மிகப்பெரும்பாலோர் தங்களை இந்துக்களாகவே சான்றிதழ்களில் குறிப்பிட்டு வருவது வெகுகாலமாகவே நடைமுறையில் உள்ளது.
 
மதம் மாறிய தலித் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் மறுக்கப்படுவதை இவர்கள் காரணம் காட்டுகின்றனர். கன்னியாகுமரியில் மட்டுமல்ல, பரவலாக தமிழகம்... ஏன் இந்தியா முழுமையுமே இந்நிலை காணப்படுகிறது. இந்த உண்மைகள் அரசுக்குத் தெரியவந்தாலும் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கமுடியாத அளவிலான எண்ணிக்கையில் இவை நடப்பதாலும், கிட்டத்தட்ட சகஜமான நடைமுறையாக மாறிவிட்டதாலும் தற்போது முன்னைப்போல் யாரும் இதை பெரிதுபடுத்துவதில்லை.
 
அடுத்ததாக தாழ்த்தப்பட்டவர்களாக போலிச்சான்றிதழ் பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கைகளும் கணக்கிலடங்காது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தபட்டவர்கள், உயர்சாதியினர் என எல்லா சாதியினரும் அடங்கியுள்ளனர். தாசில்தார் அலுவலகத்தில் சில ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் கேட்ட ஜாதிக்கான சான்றிதழ் தரப்படுவதே இதற்கு காரணம்! இதனால் உண்மையிலேயே தலித்தாக பிறந்தவர்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு உயர்சாதியாய் இருந்த பிரிவினர் சிலர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தற்போது பிற்படுத்த பிரிவிற்கு வந்துள்ளனர். அதுபோல் பிற்படுத்தப்பட்டவர்களில் சில பிரிவினர் மிகவும் பிற்படுத்தபட்டியலுக்கு வந்துவிட்டனர்.
 
ஓட்டு அரசியல் ஜனநாயகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தும் அதற்கு நியாயம் அநியாயம் என்ற பாகுபாடே இல்லை. அந்தந்த ஜாதி மக்களின் ஓட்டைப் பெற அவ்வப்போது இந்த மாற்றங்கள் நடந்தவண்ணமே உள்ளன!
 
இது ஒரு புறமிருக்க, பழங்குடியின மக்கள், நரிக்குறவர்கள் போன்றவர்கள் ஆங்காங்கே தங்கள் ஜாதி சான்றிதழ்களை கூட பெற முடியாமல் போராட்டங்கள் நடத்துவதும் நடந்து கொண்டுதான் உள்ளது.
 
சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழுத்தப்பட்ட மக்களை தூக்கி நிறுத்த இட ஒதுக்கீடு என்ற உன்னத குறிக்கோள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நடைமுறையில் சலுகைகளை அனுபவிக்க, தங்கள் அடையாளத்தையே மாற்றிக் கொள்ளவும், போலிச்சான்றிதழ்கள் மூலம் தங்கள் பிழைப்பிற்கான ஒரு போராட்ட அணுகுமுறையாக பித்தலாட்டத்தை கை கொள்ளவும், மக்களில் பலர் தயங்குவதில்லை.
இதில், 'யாருக்கும் வெட்கமில்லை' என்று கூடச் சொல்லலாம்!
ஓட்டு அரசியலும், ஊழல் நிர்வாகமும், பிழைப்புக்கான பித்தலாட்டங்களும் நடைமுறை இயல்பாய் ஆகிவிட்ட ஒரு சமூகத்தில் கொள்கைகள், சட்டங்கள் போன்றவை காகித அளவில் கம்பீரமாக அச்சேற மட்டும் எந்தத்தடையுமில்லை!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
09-08-2012

மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா?

-சாவித்திரிகண்ணன்
 
 
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச செல்போன் தரும் திட்டம் ஒன்றை கொண்டுவரும் தீவிர ஆலோசனையில் உள்ளது.
 
2014 - தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் அரசு இப்படியொரு கணக்கை போட்டிருக்கலாம்.
 
இலவசங்களை அளித்து மக்களின் ஒட்டை அள்ளிக்கொள்ளலாம் என நினைப்பது அரசின் இயலாமையைத் தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சாதாரணமாக மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது ஊழலற்ற சிறந்த நிர்வாகம், உழைப்பதற்கான வேலைவாய்ப்பு, கௌரவமான வாழ்க்கைக்கான உத்திரவாதம், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர், தடையில்லாத மின்சாரம், முறையான சாலைவசதிகள், எல்லாபகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி, சுகாதாரமான சுற்றச்சூழல்!
 
மேற்படி விசயங்களில் வெற்றிபெற முடியாத விரக்தி காரணமாகத் தான் அரசு இலவசங்களைத் தர முன்வருகிறதென்றால், மக்கள் அரசாங்கத்திடம் எதிர்ப்பார்ப்பது மூன்றே மூன்று முக்கிய இலவசங்களைத் தான்!
1. தரமான கல்வி,
2. சிறப்பான மருத்துவம்
3. சுத்தமான தங்குதடையற்ற தாராளமான தண்ணீர்!
இந்த மூன்றும் ஒரு அரசு கட்டணமில்லாமல் மக்களுக்குச் செய்யவேண்டியவைகள்! அதன் தார்மீக கடமையும் கூட!
 
அதுவும் செல்போன் என்பது இந்தியாவில் தற்போது தேவைக்கும் அதிகமாகவே புழக்கத்தில் உள்ளன. உலகில் அதிகமாக செல்போன் பயன்படுத்துவோரில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தொலைபேசி மற்றும் செல்பேசியின் புழக்கம் தற்போது 97 கோடி என்று மத்திய அரசு புள்ளிவிபரமே சொல்கிறது.
 
உணவு, உடை, இருப்பிடம், வேலை, கல்வி, மருத்துவம், மின்சாரம்... போன்ற பல முக்கிய தேவைகளுக்குப் பிறகே செல்பேசியின் தேவை வருகிறது.
 
செல்போன் கொடுப்பதென்றால் அது எத்தனை கோடி பேருக்கு? அதற்கு என்ன அளவுகோல்? மண்குடிசை, பிளாட்பாரவாசிகளாக வாழும் 25சதவிகித மக்கள் செலவபோனை ரீசார்ஜ் செய்ய மின்வசதிக்கு என்ன செய்வார்கள்?
 
இத்தனை கோடி இலவச செல்பேசிகளுக்கும், அவற்றிற்கு மாதாமாதம் ரூ 100 இலவச பணம் என்றால் இந்த திட்டத்தின் எதிர்வினைகள் என்னென்ன என்பதற்கு பெரிய பட்டியலே போடலாம்!
 
இந்த இலவசங்களில் இறைக்கப்படும் பணம், அவற்றில் ஏற்படவிருக்கும் ஊழல்கள், இதில் சம்மந்தப்படபோகும் நிறுவனங்கள்.... அத்துமீறல்கள், இழப்புகள்... எல்லாமே மேன்மேலும் மக்கள் மீது விதிக்கப்படும் வரிச்சுமையைத் தான் மேலும் கூட்டும்!
 
உலகவங்கி மதிப்பீட்டின்படி 42 சதவிகித மக்கள் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ்வாழ்கிறார்கள். கிட்டதட்ட 50 கோடிப்பேர்!
 
கடந்த பத்தாண்டுகளில் 2லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்காண்டு விவசாயிகளின் தற்கொலை அதிகரித்த வண்ணமாக உள்ளது.
 
கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் மனம்வெதும்பிக் கிடக்கிறார்கள்.
ஆண்டுக்கு 50லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிர் இழந்து கொண்டுள்ளன.
 
பள்ளிக்கூடம் செல்லவேண்டிய பருவத்தில் உள்ள குழந்தைகள் கோடிக்கும் மேற்பட்டோர் குழுந்தை தொழிலாளிகளாக உழல்கிறார்கள் சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில் இருந்த 2கோடியே 50லட்சம் நீர் நிலைகளில் தற்போது 90 சதவிகிதம் வறண்டோ, ஆக்கிரமிக்கப்பட்டே உள்ளன. இயற்கையால் மனிதகுலத்திற்கு தரப்பட்டுள்ள கொடைகளே கூட கிடைக்காத வண்ணம் அரசியலும், ஆட்சி நிர்வாகமும் தடைகளாக உள்ளன! இந்த தடைகள் விலகவேண்டும்.
 
ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அரசியல்வாதிகளுக்கு தரும் கொடை என்றால் அதற்கு பிரதிபலனாக அவர்கள் மக்களுக்கு தரவேண்டியது ஊழலற்ற, சிறந்த நிர்வாகமேயன்றி திருவோடுகளல்ல! 
 
 
  NDTV -THE HINDU,
  EDITORIAL VOICE,
  08-08-2012

கபளீகரமாகும் இயற்கை அரண்கள்

-சாவித்திரிகண்ணன்
 
மலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன...
வரலாற்று சின்னங்கள் சிதைக்கப்பட்டுள்ளன!
கண்மாய்கள் பல காணாமல் போயுள்ளன...
ஏரிகள் ஏப்பம் விடப்பட்டுள்ளன...
நீராதாரங்கள் நீர்மூலமாக்கப்பட்டுள்ளன...
விவசாயம் வீழ்தப்பட்டுள்ளது, அரசு நிலங்களும், சொத்துகளும் அபகரிக்கப் பட்டுள்ளன....
இவையெல்லாம் போரினால் ஏற்பட்ட இழப்புகளல்ல...
அந்நிய நாட்டுப் படைகள் வந்து நம் நாட்டில் அள்ளிச் சென்றவைகளின் பட்டியலுமல்ல!
 
இவை சமூகவிரோத கிரானைட் மஃபியாக்கள் மதுரைக்கருகே நடத்தியுள்ள சாகஸங்கள்.
சுமார் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்த இயற்கை வளங்களின் சூறையாடலை கனிமவளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை... போன்ற அரசுதுறைகள் இது வரை தடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசின் தலைமையும் அறியாத வகையில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இயற்கை சுரண்டல்கள் நடத்திரவும் வாய்ப்பில்லை.
 
ஊடகங்கள் இவை குறித்து எச்சரித்துள்ளன. சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளனர். ஆயினும் சொல்லத் தகுந்த ஒருவர் சொல்லும் போது அதற்க்கோர் முக்கயித்துவம் கிடைத்து விடுகிறது என்பதற்கேற்ப முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. உ.சகாயம் அவர்கள் தமிழக அரசுக்கு எழுதிய கடிதமே அனைவரது கண்களையும் திறக்க வைத்துள்ளது. இந்தக்கடித்தத்தின் விளைவால் - அதுவும் அது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக பத்திரிகையாளர் அன்பழகனால் பகிரஙகப்படுத்தப்பட்டது.
 
கடந்த ஐந்தாறு மாதங்களாக தலைமைச் செயலகத்தில் கேட்பாரற்று கிடந்த அவரது கடிதம் தற்போது ஊடகங்களின் கேள்விக்கணையாக மாறி, மாநில அரசின் மௌனத்தை கலைத்துவிட்டது.
 
தற்போது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது! மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சூல் மிஸ்ரா 18 குழுக்களை நியமித்து குவாரிகளில் கள ஆய்வு நடத்தி வருகிறார். இது வரை 9 குவாரிகள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதி அழகிரி மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவாகி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது போலவே இதில் சம்மந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இன்றைய ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் மீதும் பராபட்சமின்றி வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் குற்றம் நிருபிக்கபடும் வகையில் உறுதியாக வழக்குகள் நடத்தப்பட்டு இந்த இயற்கை வள சூறையாடல்கள் செய்த அனைவரையும் கடும் தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.
 
இது மதுரையில் மட்டுமே நிகழும் கொள்ளையல்ல, மதுரை கொள்ளையின் குறைந்தபட்ச மதிப்பீடே 16,000கோடி என்றால் தமிழகத்தில் நெல்லை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி... உள்ளிட்ட இடங்களின் மொத்தமுள்ள 500 குவாரிகளிலும் நிகழ்ந்துள்ள அத்துமீறல்களைக் கணக்கிட்டால் கொள்ளை போன இயற்கை செல்வங்களின் மதிப்பு சில லட்சம் கோடிகளாக இருக்க கூடும்!
 
எனவே தமிழக அரசு மதுரையில் உள்ள ஒரு சில குவாரிகள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்வதும் நடவடிக்கை எடுப்பதும் என்றால் அதை கண்துடைப்பாகவே கருதவேண்டியதாகிவிடும்!
 
மலைகள் என்பவை இயற்கை அரண்கள்! இறைவனால் மனிதகுலத்திற்கும், உயிரினங்களுக்கும் வழங்கப்பட்ட நிலையான கொடைகள். பல தலைமுறைகளால் மனிதகுலத்தை பாதுகாத்துவந்த இயற்கை அரண்களான இந்த மலைகளை பேராசை கொண்ட சமூகவிரோத சக்திகளிடமிருந்து நாம் பாதுகாக்க தவறி, அடுத்து வரும் தலைமுறையிறருக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துவிட்டோம்!
 
பறிபோனவை மலைகள் மட்டுமல்ல, மதுரையின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களான பிராமிகல்வெட்டுகள், புடைப்புசிற்பங்கள், சமணர்படுக்கைகள்.... போன்ற அரிய வரலாற்றுச் செல்வங்களுமாகும்! அந்தப் பகுதியிலுள்ள எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நீர்மூலமாக்கப்பட்டுள்ளது.
 
ஒரு மக்கள் நலன் சார்ந்த அரசாங்கம் மேற்படி கொள்கைகளுக்கு எதிராக பொங்கி எழுந்து, இனி முற்ற முழுதாக இந்த இயற்கை சுரண்டலுக்கு முற்று புள்ளி வைப்பதோடு, இழந்த செல்வங்கள்னைத்தையும் அரசு கஜானாவிற்கு மீட்டெடுக்கும்!
இந்த அரசிடம் மக்களின் எதிர்ப்பார்ப்பு இதுவே!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
07-08-2012

மருத்துவர்கள் போராட்டம் நியாயமா?

-சாவித்திரிகண்ணன்
 
இந்தியா முழுவதும் ஆங்காங்கே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பல தனியார் மருத்துவமனைகள் இயங்கவில்லை. டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை தரவில்லை.
 
நமது மத்திய அரசு, தேசிய சுகாதார மனிதவள ஆணைய மசோதா ஒன்றை 2011 டிசம்பரில் கொண்டுவந்தது, "அந்த மசோதாவை ஏற்க மாட்டோம்" என்று டாக்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
"ஏன் ஏற்க மாட்டார்களாம்?"
"எங்களை யாரும் கண்காணிக்க கூடாது, விசாரிக்ககூடாது, மருத்துவ நெறிமுறைகளை பின்பற்று என்று உபதேசிக்க கூடாது..." இதுவே டாக்டர்களின் குரல்!
அப்படியென்ன மத்திய அரசு டாக்டர்களை பாதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
 
மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள தேசிய சுகாதார மனிதவள ஆணைய மசோதா என்பது அதிரடியாய் கொண்டுவரப்பட்டதல்ல. பல ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் எழுந்த புகார்கள், பிரச்சினைகள் அடிப்படையில் ஆராய்ந்து கொண்டு வரப்பட்டுள்ள தீர்வே இச்சட்டம். இது குறித்து யஷ்பால்கமிட்டியும் விரிவாக பரிந்துரைத்துள்ளது. இச்சட்டத்தை சமூக ஆர்வலர்கள், மனிதநேயமுள்ள மருத்துவர்கள் உளமாற வரவேற்கிறார்கள்.
 
இச்சட்டமானது அடிப்படை வசதிகள் இல்லாது தகுதியான உதவியாளர்கள் இல்லாது 'கிளினிக்' என்ற பெயரிலே 'கல்லா' கட்டும் மருத்துவர்களுக்கு கடிவாளம் போடுகிறது. அத்துடன் மருத்துவர்கள் தாங்கள் பெறும் சிகிச்சை கட்டணத்திற்கு ரசீது தர வேண்டும் தங்கள் உண்மையான வருமானத்தை தெரிவித்து வருமானவரி செலுத்தவேண்டும் என்கிறது அரசு - இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த நாட்டில் பத்து ரூபாய் பல்பொடி வாங்கினாலே விற்பனை வரியை ஒவ்வொரு குடிமகனும் அரசுக்கு செலுத்தியதாக வேண்டும் எனும் போது லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் மருத்துவர்கள் மட்டும் வருமானத்தை காட்டமாட்டார்களாம்! அவர்கள் சேவை செய்வதால் அதையெல்லாம் கேட்டு மருத்துவத்தை வியாபாரமாக பார்க்க கூடாதாம்!
 
மருத்துவம் வியாபாரமாக மாறி வெகுநாட்களாகிறது என்பதே மக்கள் அனுபவம்! "அந்த வியாபாரத்தை உண்மையாக, வெளிப்படையாகச் செய்யுங்கள்" - என்கிறது மத்திய அரசின் சட்டம்! டாக்டர்களுக்கு தகுதி தேர்வு நடத்த கூடாதாம்! டாக்டர்கள் தங்கள் தொழிலை, மருத்துவமனையை உரிய முறையில் பதிவு செய்யச் சொல்வது தவறாம்!
மருத்துவம் என்பது நாளும் வளர்ந்து தன்னை புதுபிக்கும் விஞ்ஞானம்! எனவே அதற்கேற்ப மருத்துவர்கள் தங்களை தகுதிபடுத்திக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு பரிட்சையா? என்றால் எப்படி? அது மட்டுமின்றி எங்கள் மீதான புகார்களை விசாரிக்கவே கூடாதென்றால் அது எப்படி நியாயமாகும்?
இந்தியாவில் பதிவுபெற்ற மருத்துவர்கள் ஆறுலட்சத்து 12ஆயிரம்! இவர்களில் 80 சதவிகிதம் பேர் 40 சதவிகித மக்கள் இருக்கும் பெருநகரங்களில் மட்டும் தான் வேலைபார்ப்போம் என்று செயல்படுகிறார்கள். எனவே மத்திய அரசு 3 1/2 வருட மருத்துவ படிப்பை முடித்து கிராமங்களில் பணியாற்ற மருத்துவ பட்டதாரிகளை உருவாக்க முனைகிறது. அதையும் இவர்கள் எதிர்ப்போடு அப்பாவி மாணவர்களையும் தூண்டிவிடுகிறார்கள்.
 
இன்றைய தினம் தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குவதாகவே மக்கள் உணருகிறார்கள்.
 
அதீதகட்டணங்கள், தேவையற்ற பரிசோதனைகள், தவறான மருத்துவசிகிச்சைகள் மனித உறுப்புகளின் திருட்டு, விற்பனை, மோசடிகள், சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட மருந்து மாத்திரைகளை பரிந்துரைப்பது என ஏகப்பட்ட மனக்குமுறல்கள் மக்களுக்கு உள்ளன!
 
இவையெல்லாவற்றிற்கும் தீர்வு காணும் நல்முயற்சியான பல அம்சங்கள் இந்த சட்டத்தில் தென்படுகின்றன! மனிதநேயமுள்ள அனைவரும் இதை நிச்சயம் வரவேற்பார்கள்!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

குறுவை சாகுபடி கோவிந்தா! சம்பா சாகுபடியாவது சாத்தியமா?

 
-சாவித்திரிகண்ணன்
 
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்!
இந்த ஆண்டு ஐந்து லட்சம் டன் நெல்சாகுபடி 'அம்போ'வாகிவிட்டது!
குறுவைசாகுபடி குந்தகமானது. அதனால் வறுமை சாகுபடி வந்துள்ளது.
 
கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி இந்த மாதம் நமக்கு 10 டி.எம்.சி தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால் தராமல் தடுத்து விட்டது. அடுத்த மாதம் 34 டி.எம்.சி வந்தாக வேண்டும்! அதுவும் வருமா என்ற உத்திரவாதமில்லை!
 
விவசாயத்திற்கு நுழைந்த வில்லங்க அரசியலே நமக்கு சோறு போடும் விவசாயியை சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
முன்பொருமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்து குறுவை சாகுபடிக்கு நீர் கேட்டுப் போராடியுள்ளார்.
 
2001-ஆம் ஆண்டு காவேரி டெல்டா விவசாயிகளின் சோகத்தை பொறுக்க முடியாமல் சோனியாகாந்தியே அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் வேண்டுகோள் வைத்து தண்ணீர் பெற்று தந்தார்!
 
2002- ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்டு தலையிட்டு கர்நாடக அரசிடமிருந்து தண்ணீர் பெற்றுத் தந்தது. இருக்கும் தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் பக்குவம் கர்நாடகத்திற்கு இல்லை. அதே போல் கிடைக்கும் தண்ணீரை சரியாக பயன்படுத்தும் பக்குவம் தமிழகத்திற்கு இல்லை!
 
காவேரியில் போதுமான தடுப்பணை, கதவணைகள் கட்டி தண்ணீரை காப்பாற்றத் தவறியது தமிழகத்தின் தலையாய தவறு . அடுத்ததாக அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும் நெல்சாகுபடியை சுமார் நான்குலட்சம் ஹெக்டரில் பயிரிடுவதும், தண்ணீர் போதாமல் கோடிக் கணக்கில் இழப்பதும் தொடர்கதையாகவுள்ளது. நெல்லுக்கு மாற்றாக மாற்று பயிர்களை பயிரிடுவதே இந்த அழிவிலிருந்து நாம் தப்பிக்கும் வழி என்று விவசாய நிபுணர்களின் யோசனைகள் பின்பற்றப் படுவதில்லை.
 
இந்த ஆண்டு ஜூன்- 12- ல் திறந்திருக்கவேண்டிய மேட்டூர் அணை இன்னும் திறந்தபாடில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தாமதங்கள் நேரும்போது எதிர்கட்சி, ஆளும்கட்சியை குற்றம் சாட்டும். இந்த வகையில் இப்போது கருணாநிதி ஜெயலலிதாவை தாக்குவது போல கடந்த காலங்களில் ஜெயலிலதா கருணாநிதியை வறுத்தெடுத்தார்.
ஆனால் இரு கட்சிகளின் மீதும் தமிழக விவசாயிகள் வைக்கும் குற்றச்சாட்டு என்னவெனில், "காவேரி நீர் பொய்த்தாலும் நிலத்தடி நீரைக் கொண்டு நாங்கள் சமாளிப்போம். அந்த நிலத்தடி நீரை சேமிக்கும் சிற்றணைகளையும் கட்டவில்லை. நிலத்திலிருந்து நீரை எடுக்க மின்சாரத்திற்கும் வழியில்லை. தி.மு.க ஆட்சியில் 9மணிநேர மின்வெட்டு என்றால் இந்த ஆட்சியில் 12 மணிநேர மின்வெட்டு உள்ளது. அப்படியே மின்சாரம் கிடைத்தாலும் சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால் குறுவை சாகுபடி பொய்க்கும் போது கடன்வாங்கிய விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
 
ஆகவே கர்நாடக அரசு நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கி தண்ணீர்விடாத பட்சத்தில் நதிகளை தேசியமயமாக்கி மத்திய அரசு பொறுப்பெடுப்பதே இதற்கு தீர்வாகும்! ஆனால் இது நடக்குமா? அல்லது எப்போது நடக்கும் என்பதற்கு யாராலும் பதில் சொல்ல இயலாது. அது வரையில் காவேரி நீரை வைத்து அரசியல் செய்வதை தமிழக அரசியல் கட்சிகள் அறவே தவிர்த்து ஆக்க பூர்வமான செயல்களை செய்யவேண்டும்.
 
தமிழக விவசாயிகள் செல்சாகுபடியை கூடுமானவரை தவிர்த்து மாற்று பயிர்களை பயிரிட்டு இழப்புகளை தவிர்க்க வேண்டும்! குறுவை தவறினால் வருணபகவான் தயவில் சாம்பாவயாவது சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்! NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

"விரயமாக்கப்படும் உணவுப்பொருள்கள்.....!"

-சாவித்திரிகண்ணன்

பிரேசிலில் நடக்கும் ரியோ +20 என்ற பெயரிலான ஜூ 20 நாடுகளின் மாநாட்டில் ஐ.நா வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல திட்ட அறிக்கை மிக அதிர்ச்சிகரமான சில தகவல்களை தந்துள்ளது.
 
"உலகில் உற்பத்தியாகும் உணவு பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. இந்த வகையில் ஆண்டுக்கு 130கோடி டன் உணவுப்பொருட்கள் மக்களுக்கு பயன்பாடின்றி வீணாகிறது" என்கிறது அந்த அறிக்கை!
கேட்கும் போதே "நெஞ்சு பொறுக்குதில்லை" என்ற பாரதியின் வரிகளே அனுபவமாகிறது. 'இதில் அமெரிக்காவின் பங்களிப்பு மிக அபரிமிதமானது' என ஐ.நாவின் அறிக்கை கூறினாலும் இந்தியாவிலும் இந்த வீணடிப்புக்கு குறைவில்லை!
 
மாநிலங்களவையில் நமது உணவுதுறை அமைச்சர் தந்த தகவல்படி 2010-11 ஆம் ஆண்டில் மட்டும் 1,56,000டன் உணவு தானிங்கள் வீணாகியுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் இதைக்காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பு!
 
பி.யூ.சி.எல் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில், " நாடெங்கும் உள்ள உணவு கிடங்குகளில் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் புழுத்து நாற்றமெடுத்து வீணாகி கொண்டுள்ளன. மத்திய அரசின் உணவு கிடங்குகளுக்கு தேவையான உணவு தானியங்கள் 270லட்சம் டன்கள் தான்! ஆனால் சேகரிக்கப்பட்டுள்ளவையோ 550 லட்சம் டன் தானியங்கள்!
இவற்றை சேகரிக்க போதுமான குடோவுன்கள் இல்லாததால் இவை வெயிலிலும் மழையிலும், பணியிலும் வீணாகின்றன. இது மட்டுமின்றி கிடங்குகளில் ஈரப்பதத்துடன் உணவு தானியங்களை அடுக்கி வைப்பது, மிக அதிக நாட்கள் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது, எலிகளுக்கு இறையாக்குவது.... அவற்றில் புழு பூச்சிகள் உற்பத்தியாகி விரயமாவது... போன்ற வகையில் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை மத்திய, மாநில அரசுகள் வீணாக்கி கொண்டுள்ளன...." என்று அம்பலப்படுத்தியது.
 
இதையடுத்து இவற்றை ஏழைகளுக்கு வழங்கும்படி உச்சநீதிமன்றம் உத்திரவிட்டதும், 'அரசின் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. என பிரதமர் மன்மோகன்சிங் கூறியதையும் நாம் சுலபத்தில் மறக்க முடியாது.
 
நமது நாட்டில் உணவுபதப்படுத்தும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாததால் 10% உணவுபொருட்களை மட்டுமே பதப்படுத்த முடிகிறது என மத்திய அரசே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது. ஆக, இந்த காரணத்தால் ஆண்டுக்கு 75லட்சம் கோடி ரூபாய் உணவுபொருட்களை நாம் வீணடிக்கிறோம்!
 
இந்தியாவில் சுமார் 30கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உணவின்றி பஞ்சத்தில் வாடி, பசியில் தவிக்கிறார்கள். தினசரி சுமார் 5,000 குழந்தைகள் ஊட்டச்த்து குறைவால் உயிரிழந்து கொண்டிருக்கின்றன. ஐந்துவயதுக்குட்பட்ட 47% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உடல்நலிந்துள்ளன. ஒரிசா மாநிலம் ஆஸ்கூல் மாவட்டம் பதிபஹால் கிராமத்தின் சுமித்திரா பஹேரா தனது ஒரு மாதக்கழந்தையை வெறும் 10ரூபாய்க்கு விற்று மற்றுமுள்ள தன் இரண்டு குழந்தைகளின் பசியாற்றிய பதறவைத்த செய்தியை - நாம் மறக்க முடியுமா?
 
எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்த தேசத்தந்தையான காந்தியின் நாட்டில் தான் இந்த காட்சிகள் அரங்கேறுகின்றன... இது பெரும் வெட்ககேடாகும்! நாம் அரசை குற்றம் சாட்டும் அதே நேரத்தில் நம்மை நாமே சுயபரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டும்.
 
ஹோட்டல்களில் ஆர்டர் செய்தும், வீடுகளில் சமைத்தும் நாம் வீணாக்கும் உணவுகள், திருமணம்... போன்ற விஷேசங்களில் பரிமாறப்படும் ஏகப்பட்ட உணவு பதார்த்தங்களில் கணிசமான உண்ணப்படாமல் குப்பை தொட்டியில் வீசியெறியப்படுகிறது.
 
சிறிய கையேந்தி பவன் தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை நாளும், நாளும் விரயமாக்கப்படும் உணவுபொருட்கள்... கொஞ்சமா? நஞ்சமா? ஆக, மாற்றம் என்பது தனிமனிதனில் இருந்து தொடங்கினால் தான் உலக அளவில் விரிவடைந்து வியாபிக்கும்!
 
"பசியால் தவிப்போரின் பசி ஆற்றுவதே கடவுளே நெருங்குவதற்கான முதல் படிநிலையாகும்" என்று வள்ளுவர் தொடங்கி வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் வரை கூறியுள்ளதை நினைவில் நிறுத்தவோமாக!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

பிறழ்சாட்சிகளும், பிறழும் நீதிகளும்!

-சாவித்திரிகண்ணன்
 
இது போன்ற அபூர்வம் இது வரையிலான நீதிமன்ற வரலாற்றில் அரிது.
 
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சஞ்சீவ்நந்தா என்பவரின் கார்மோதி ஆறுபேர் இறந்த வழக்கில் நேரடி சாட்சியாக இருந்த மூவர் பிறழ் சாட்சியாக மாறியதை நீதிபதி எஸ். ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
மிக முக்கியமான வழக்குகளில் சாட்சிகள் பிறழ்வது கவலையளிக்கிறது. இம்மாதிரியாக சட்சிகள் பிறழ்வது குற்றவியல் நீதி பரிபாலன அமைப்பையே குலைத்துவிடுகிறது. இது போன்ற பிறழ் சாட்சியங்களால் வசதிபடைத்தவர்களும், வலிமையானவர்களும் எப்போதுமே தப்பித்து விடுகிறார்கள், எவ்வளவு பெரிய குற்றங்களிலிருந்தும் தப்பிக்க முடியும் என்று நம்புகிறார்கள்... எனினும் நீதிமன்றங்கள் உண்மையை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது. என்கிறார் நீதிபதி!
நீதிபதி ராதாகிருஷ்ணனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் லட்சோபலட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் - அநீதி இழைக்கப்பட்ட மக்களின் - மனசாட்சியின் குரலாக வெளிப்பட்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
 
உண்மைகளை அறிந்த, கண்முன்னாள் அநீதியை கண்டு அறிந்த, நேரடிசாட்சியாக ஒரு பிரச்சனையில் சம்மந்தப்பட்ட எந்த ஒரு மனிதனும் அந்த பிரச்சினையில் பேரிழப்பை சந்தித்து நீதிகேட்டு நிற்பவர்களைப் பொறுத்த அளவில் கண் எதிரில் இருக்கும் தெய்வத்திற்கு சமமாகும்! அப்படி தெய்வாதீனமாக ஆய்த்த சாட்சிகள் செல்வாக்கு படைத்தவர்களின் நிர்பந்தத்தால் பிறழ் சாட்சியாக மாறுவதை சட்டமோ, நீதிமன்றமோ பெரிதாக கேள்விகேட்பதில்லை!
 
சட்டமும், நீதியும் சாட்சியங்களின் பலத்தை பொறுத்தே சாதகமான தீர்ப்பை தருகின்றன!
 
இதனால் தான் நமது நாட்டில் ஊழல் அரசியல்வாதிகள் ஒருபோதும் பெரிதாக தண்டிக்கப்படுவதில்லை.
 
தொழில் முறை கொலைக்காரர்கள் இன்று பெருகிவருவதெற்கெல்லாம் சாட்சி சொல்லவருபவர்களை சட்டம் பாதுகாக்கத் தவறுவதால் தான்!
 
1970களில் அன்றைய முதல்வராயிருந்த கருணாநிதி அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் உதயகுமார் என்ற மாணவர் கொல்லப்பட்டார். அது தொடர்பாக நடந்த ஆர்.டி.ஒ விசாரணையில் அம்மாணவனின் பெற்றோரே, 'இறந்தது தன் மகனல்ல' என பிறழ்சாட்சியானதை தமிழகம் அதிர்ச்சியோடு பார்த்தது. அந்த பிரச்சனையில் சம்மந்தப்பட்ட அனைவருக்குமே தெரிந்த உண்மை நீதி மன்றத்திற்கு மட்டும் மறைக்கப்பட்டது.
 
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஆட்சி மாற்றம் நடந்தபோது காட்சி மாற்றமாக ரவி சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பிறழ் சாட்சியானார்கள் சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த்சர்மா இருவரும் தற்போது தங்களை, "மறுவிசாரணை செய்யவேண்டும். மிரட்டியதால் நாங்கள் பிறழ்சாட்சியானோம்" என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
 
தங்கள் குடும்பத்தலைவனின் படுகொலையில் அந்த குடும்பத்தினரே மிரட்டி பிறழ்சாட்சியாக்கப்பட்ட அநீதிக்கு நீதிமன்றம் தண்டனை தருமா? தெரியவில்லை. ஆனால் இதுவரை பிறழ் சாட்சியங்களுக்கு காரணமான பின்னணிகள் நீதிமன்றத்தால் ஆராயப்பட்டதில்லை. தண்டிக்கப்பட்டதில்லை.
 
GRPC என்ற குற்றவியல் சட்டம் 430ன் படி இந்த பிறழ் சாட்சிகளை குறித்து ஆராய்வதற்கும், விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
 
ஒரு சாட்சி பிறழ் சாட்சியாவதற்கு உயிர்பயம் அல்லது பொருளாதார ஆதாயம் போன்ற காரணங்களைப் போலவே நீண்டகாலமாக வழக்கு இழுத்தடிக்கப்படுவதால் ஏற்படும் சோர்வும், விரக்தியும் கூட காரணமாவதுண்டு.
 
எனவே சாட்சிகளுக்கு உரிய முக்கியத்துவமும், பாதுகாப்பும் தர நீதிமன்றங்கள் உத்திரவிட வேண்டும். உரிய காலத்திற்குள் வழக்குகளை முடிக்கவேண்டும் அதோடு இனி பிறழ்சாட்சிகளுக்கு பின்னணியில் உள்ள சக்திகளின் மீதும் சட்டம் பாயவேண்டும்.
இவை நீதிமன்றங்களை கடைசி புகலிடமாக கருதும் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்குமான நீண்டகால எதிர்ப்பாகும்!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug