Friday, July 20, 2012

கட்டாய ஓய்வு அவசியமா?



-சாவித்திரிகண்ணன்

சில நேரங்களில் சட்டங்களின் நோக்கம் மேன்மையாக இருக்கலாம்!
ஆனால் அது நடைமுறையில் மகா மோசமான விளைவுகளை உருவாக்கிவிடக்கூடும்!

தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டம் மக்கள் நலன் கருதி என்பதாகச் சொல்லப்பட்டாலும், மக்கள் விரோத நோக்கங்களுக்கு பயன்படவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

சிறப்பாகச் செயல்படாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்,எஸ் அதிகாரிகளை கட்டாய ஒய்வுகொடுத்து வீட்டுக்கு அனுப்பலாம் என மாநில அரசுகளுக்கு ஆணை அனுப்பியுள்ளது மத்திய அரசு! 'மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் செயல்படாத சோம்பேறி அதிகாரிகளுக்கு ஏன் தண்டச் சம்பளம்? அவர்களின் செயல்படாத தன்மையால் அத்துறையே ஸ்தம்பிக்கிறது. பல மக்கள் நல திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன, இதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் சொல்லிமாளாது... எனவே இத்திட்டம் மிகச்சரியானது தானே....' என்று தோன்றலாம்!

ஆனால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் போன்ற பதவிகளுக்கு சாதாரணமாக ஒருவர் வரமுடியாது. அசாதாரண முயற்சிகளும், உழைப்பும், கொண்டவர்களே நன்கு படித்து பல நிலைகளைக் கடந்து அந்நிலையை பெறுகின்றனர் அது அதற்கான தேர்வுகள் எழுதி, உரிய பயிற்சிகள் பெற்றே ஒவ்வொருவரும் பெரிய அதிகாரியாக முடியும்.

அப்படியான அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படவில்லை என்று
எதைக்கொண்டு முடிவுக்கு வருவது? யார் அதை முடிவு செய்வது?
சிலநேரங்களில் சில அரசியல் சூழல்கள் அதிகாரிகளின் கைகளை கட்டிப் போடும். அவர்களின் செயல்பாடுகளை முடக்கும்.. இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன! தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக, நேர்மையாகச் செயல்பட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு பிடிக்காத நேரங்களில் பந்தாடப்பட்டதை நாடறியும். அந்நேரங்களில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியுள்ளனர்.

எனவே மத்திய அரசின் 'கட்டாய ஓய்வு' என்ற திட்டம் அந்தந்த மாநில அரசை ஆட்சி செய்யும் கட்சிகளின் சுயவிருப்பு வெறுப்புகளுக்கேற்ப தங்களின் சுயநலநோக்கங்களுக்கு உடன்படாத நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கக் கிடைத்த வாய்பாக மாறுவதற்கே வாய்ப்புள்ளது.

"முன்பே இச்சட்டம் அமலாக்கப்பட்டு பல அநியாயங்கள் அரங்கேறியதால் திரும்பபெறப்பட்டது" என்கிறார்கள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்! இது தொடர்பான பல வழக்குகள் ஏற்கெனவே நமது உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடந்துள்ளன!

'கட்டாய ஒய்வு' என்பதாக அறிமுகப்படுத்தப்படும் இச்சட்டம் அதிகாரிகளின் கழுத்துக்கு வைக்கப்படும் கத்தி என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பலநாடுகள் இச்சட்டத்தை பகிஷ்கரித்துள்ளன.

அதிகாரிகளை சரியாக வேலைவாங்கவேண்டியதும், அவர்களிடமிருந்து சிறப்பான ஒத்துழைப்பை பெற்று மக்கள் நல திட்டங்களை அமல்படுத்துவதும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் - குறிப்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கடமை! இது ஒரு ஆட்சிக்கலையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் செயல்பட மறுப்பவர்கள் கூட செயல்பட்டாக வேண்டும் அல்லது தகுதியில்லாதவர்கள் தாக்குபிடிக்கமுடியாமல் தாங்களே விலகிவிடநேரிடும்!

ஆகவே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் ஆகிய பதவியில் உள்ள அதிகாரிகள் மனசாட்சிப்படி, சுதந்திரமாக, நேர்மையாக செயல்படுவதை தடுக்கவோ, முடக்கவோவான எந்த ஒரு திட்டமும், சட்டமும் நாட்டுக்கோ மக்களுக்கோ நல்லதல்ல.
மாறாக அரசு அதிகாரிகள் சிறப்பாகப் பணியாற்ற ஊக்குவிக்கும் தலைமைப் பண்போடு உள்ள அரசியல் தலைவர்களே தேவை.
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
5-07-2012

Thursday, July 19, 2012

அதிகரிக்கும் தற்கொலைகள்

-சாவித்திரிகண்ணன்

பார்க்கும்போது பதறவைக்கிறது
கேட்கும்போதே அதிரவைக்கிறது நாளும்,
நாளும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வாகிவிட்டன தற்கொலைகள்!

உலகில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிற்குத் தான் முதலிடம்! சென்ற ஆண்டு இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 1,35,585. இது அதிரவைக்கும் புள்ளிவிபரம்!
தற்கொலை செய்து கொள்வதற்கு விரக்தி, வேதனை, கைவிடப்பட்ட நிராதரவு நிலை, தோல்வியில் துவண்டுபோதல், பொய்த்துப்போன நம்பிக்கை.... போன்ற பற்பல உணர்வுகள் காரணமாகின்றன.

எனினும் தற்கொலைக்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
1.சமூக,பொருளாதார காரணிகள்!
2. தனிமனிதனின் மனநிலை மற்றும் குடும்பத்தின் உறவு சிக்கல்கள்! விவசாயிகள் தற்கொலை, அரசியல் காரணங்களுக்காக தற்கொலை, பொருளாதார வீழ்ச்சியால் தற்கொலை போன்றவற்றிக்கு அரசும், சமூகமும் காரணமாகின்றன. குறிப்பாக அரசியல் காரணங்களுக்கான தற்கொலைகளில் தமிழகம் தான் உலகத்திற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.

அரசியல் தலைவர்களின் மரணங்களின் போதும், இலங்கைபிரச்சினை, மொழிப் போராட்டங்கள் போன்றவற்றின் போதும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு நிகழும் தற்கொலைகள் தமிழக அரசியல்களத்தில் வீரமரணங்களாக சித்தரிக்கப்பட்டு வருகின்றன!

மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற பொருளாதார கொள்கைகள், அரசியல்வாதிகளின் அதீத சுயநலத்தால் பெருகிவரும் ஊழல்கள், பெரும் கார்பரேட் நிறுவனங்களின் மனிதாபிமான சுரண்டல் போன்றவை மக்களை ஏழ்மையில் தள்ளி, இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் விரக்தியுரவைத்து தற்கொலைக்கு தள்ளுகின்றன!

  சென்ற ஆண்டு மதுபழக்கத்தால் விரக்தியுற்று மாண்டவர்கள் மட்டுமே 16 சதவிகிதம்! இந்த தற்கொலைக்கு தனிநபர்களை மாத்திரமல்ல, அரசாங்கத்தையும் நாம் பொறுப்பாளியாக்கலாம்! சென்ற ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மட்டுமே 14,000 இதற்கு அரசின் விவசாய கொள்கைகளும், பொருளாதார அணுகுமுறைகளுமே முக்கிய காரணம்! பரிட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, குடும்ப உறவுகளில் சிக்கல் போன்றவைக்கு அந்தந்த தனிமனிதர்களின் மனோதிடம், குடும்பத்தின் கலாச்சாரம், பண்பாட்டுசூழல் போன்றவை காரணங்களாகும்!

கடந்த சில ஆண்டுகளாக பெண்களை விட ஆண்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்கள் காலங்காலமாக கட்டமைக்கப்பட்டுள்ள ஆண்கள் பலசாலிகள், வீரர்கள் என்ற மதிப்பீடுகளை ஆட்டம் காண வைத்துவிட்டது.

தற்கொலைகளைத் தவிர்ப்பது குறித்து உலகெங்கும் பல ஆய்வுகள் நடக்கின்றன.
தற்கொலைகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுபோது அவை வேகமாக அதிகரிப்பதாக அந்த ஆய்வுகள் அறுதியிட்டு உறுதிபடுத்தியுள்ளன.

"எனவே தற்கொலை செய்திகளை தவிர்த்திடுங்கள்" என்று உலகம் முழுமையுமுள்ள மனநல மருத்துவர்கள் பலர் ஊடகங்களுக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்த வண்ணமுள்ளனர்.

அன்பு, அரவணைப்பு, மன்னிக்கும் மனோபாவம், பிறர்தேவையறிந்து உதவும் தயாளகுணம், கருணை, இறைநம்பிக்கை போன்றவைகள் சமூகதளத்தில் மேலெழுந்து வரும் போது தற்கொலைகள் பெருமளவு தவிர்க்கப்படும்!

சகமனிதனின் துன்ப துயரங்களில் அக்கரை கொள்ளாத சுயநலமனிதர்கள் ஒவ்வொருவருமே தங்களைச் சுற்றி நிகழும் தற்கொலைகளுக்கு ஒரு மறைமுக காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை!

ஆக, தற்கொலைகளை தவிர்க்கச் செய்யும் பொறுப்பும், கடமையும் அரசு, சமூகம், குடும்பம், தனிமனிதன் என எல்லாத் தரப்புக்குமே உரியதாகும்! ஆன்மீகத்தில் அதி உன்னத நிலையடைந்த பல மகான்களை பிரசவித்த நமது தேசத்தில் சமீபகாலங்களாக ஆன்ம பலம் குன்றி வருவதன் அறிகுறியே அதிகரிக்கும் தற்கொலைக்கு காரணமாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
2-07-2012.

குடியரசுத்தலைவர்தேர்வில் குழப்பங்கள்

-சாவித்திரிகண்ணன்


குழப்பங்கள், தாமதங்கள், அபிப்ராயபேதங்கள், இழுபறிகள்... போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு மெகா சீரியலைப் போல் இந்தியக் குடியரசுதலைவர் தேர்தல் நாளுக்குநாள் காட்சிமாற்றம் தருகிறது.


குடியரசுத் தலைவர் என்றால் மக்கள் தலைவர் என்று பொருளாகும்! ஆனால் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடாமல் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும்படியாக நமது நாட்டின் சட்ட விதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பது தானே முறையாகும்! ஜனநாயகமாகும்! ஒரு யோக்கியமானவர், ஊழல்கரைபடிஅப்பாற்பட்ட பொது கண்ணோட்டம் கொண்டவர், மக்களை நேசிப்பவர், மக்களால் நேசிக்கப்படுபவர்..போன்ற அம்சங்களை கொண்டவராக தங்கள் குடியரசுத்தலைவர் அமையவேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் நாட்டில் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது...? ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவரவர் பலத்தை காட்ட, அல்லது அவரவர் அரசியல்நலன்களை பாதுகாத்துக்கொள்ள, அவரவர் அரசியல் கணக்குகளுக்கு ஒத்துவரக்கூடியவரை அடையாளப்படுத்துவதில் தான் ஆர்வம் காட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த 13வது குடியரசுத்தலைவர் தேர்வை குழப்பி குட்டிச்சுவராக்கி, இன்று இழுபறிநிலைமைக்கு கொண்டுவந்ததில் காங்கிரஸ் கட்சிக்கு நிகராக வேறொரு கட்சியை காட்டமுடியாது. நீண்ட குழப்பத்திற்கு பிறகு பிரணாப் முகர்ஜியை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ். பிரணாப்முகர்ஜி என்ற அறிவிப்பு ஒரு வழியாக காங்கிரஸை குழப்பத்திலிருந்து மீட்டெடுத்திருக்கலாம். ஆனால் எதிர்கட்சிகளையும், மக்களையும் அது ஒரு சேர குழப்பத்தில் ஆட்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்!

தகுதி, திறமை, அனுபவம், அறிவு, ஆற்றல் என எல்லாவற்றிலும் மேம்பட்டவர் பிரணாப்முகர்ஜி. உண்மையில் அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கத் தகுதியானவர், இருந்திருக்க வேண்டியவர், ஆனால் மறுக்கப்பட்டவர்! அந்தவாய்ப்பு அவருக்கு கடந்த 25 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததென்றே சொல்லவேண்டும். இப்போதும் கூட நிதித்துறையை நிர்வகிக்க, வழிநடத்த அவரைவிட்டால் ஆளில்லை என்ற நிலைமை!

இந்நிலையில் அவர் குடியரசுதலைவராக்கப்பட்டு இந்த நாடு அவரிடமிருந்து பெறவேண்டிய பலன்களை தடுத்தால் அது நியாயமாகுமா? காங்கிரஸ் தலைமையைப்பொறுத்தவரை அது இதுநாள்வரை பிரணாப்முகர்ஜிக்கு இழைத்த துரோகத்திற்கு பிராயசித்தம் தேடி இந்த பதவியை அவருக்கு தந்திருக்கலாம்! யாரோ சிலரின் சுயநலம், பிராயசித்தம் போன்றவை நாட்டின் உன்னத பதவிக்கான தேர்வில் பிரதிபலிப்பதா? எனில் இந்த நாடு அடைந்த பின்னடைவுக்கு என்ன பிராயசித்தம்....?

உண்மையில் காங்கிரஸ் கட்சி பிரணாப்முகர்ஜியின் பெயரை பிரேரணை செய்த பின்ணணி குறித்த அவநம்பிக்கைகள் மக்கள் மனதை அலைகழிக்கவே செய்கிறது. காங்கிரஸ் நிலைமை இது வென்றால் பா.ஜ.க நிலைமையும் பரிகசிக்கதக்கதாகவே உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலாவது மம்தாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஒன்றுபட்டுவிட்டனர். ஆனால் தேசிய ஜனநாயக முன்னணியோ திரிசங்கு நிலையில் திணறுகிறது. பா.ஜ.கவிற்குள்ளேயே பல்வேறு அபிப்ராய பேதங்கள்! சிவசேனை சிலிர்த்துக் கொண்டு வெளியேறிவிட்டது. ஐக்கிய ஜனதாதளம் அடங்க மறுக்கிறது...!

மொத்தத்தில் கட்சிகள் ஒன்றுபட்டு, ஒருமித்து செயல்பட்டிருக்கவேண்டிய குடியரசுதலைவர் தேர்தல் - கட்சிகளை அணிபிரித்து, கட்சிக்குள்ளேயே அபிப்பராயபேதங்களை வளர்க்குமளவுக்கு சென்றுவிட்டது - துர்திர்ஷ்டமே!

இது இந்திய ஜனநாயகம் இன்னும் பக்குவப்படாததையே உணர்த்துகிறது. அரசியல் கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு செயல்படுவதையும், சிந்திப்பதையும் பறைசாற்றுகிறது. குடியசுத்தலைவர் என்பவர் மக்கள் திருப்திபட்டுக் கொள்ளும் வகையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமேயல்லாது திணிக்கப்பட்டவராக மக்கள் உணரும் நிலைகூடாது.
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
June2012.

Wednesday, July 11, 2012

பாகிஸ்தான் - ஊழல் அரசியல்வாதிகளும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும்!


-சாவித்திரிகண்ணன்

மெக்சிகோவில் உள்ள லாஸ்கேபோஸ் நகரில் நடைபெறும் ஜி20 நாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கை தற்போது பெருகிவரும் ஊழல்கள் குறித்த கவலையை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையோடு, பெருகிவரும் ஊழல்களையும் அவர்கள் இணைத்து விவாதித்திருப்பது கவனத்திற்குரியது.

குறிப்பாக தெற்காசியாவில் உள்ள வளரும் நாடுகள் அனைத்துமே ஊழலில் ஊறித் திளைத்துள்ளன... என்ற போதிலும் இதில் பாகிஸ்தான் நிலைமை தான் அதிபயங்கரமானது.

இந்தியாவின் அங்கமாக ஒரு காலத்தில் இருந்தது தான் பாகிஸ்தான்! அந்த பாகிஸ்தான் தந்தை என போற்றப்படும் முகமதலிஜின்னாவின் புகழ்பெற்ற பேச்சு ஒன்று நினைவுக்கு வருகிறது.

"இந்தியாவின் சுதந்திரம் என்பது காந்தி தலைமையில் பற்பல அறப்போராட்டங்கள், தியாகங்கள், இழப்புகளுக்கு பிறகு கிடைத்தது. ஆனால் நான் பாகிஸ்தானை ஒரு டைப்பிஸ்ட் மற்றும் டைப்ரைட்டரின் துணைகொண்டு என் ராஜதந்திரத்தால் பெற்றேன்" என்பார் ஜின்னா! இந்தியாவிலும் ஊழல்கள் இருக்கிறது என்றாலும் கடந்த இருபதாண்டுகளாகத் தான் அவை அதிகரித்துள்ளது. இது காந்திதேசம். இங்கே ஊழல் செய்வதற்கு நாணும் குற்ற உணர்வு இன்னும் முற்றாக விடைபெற்றுவிடவில்லை. ஆனால் பாகிஸ்தான் ஊழலில் உச்சகட்ட அரங்கேற்றம் கண்டுள்ளது என்பதை அந்நாட்டின் உச்சநீதிமன்றமே உறுதி படுத்துகிறது.

சுதந்திரத்திற்கு பின்னான இந்த 65 ஆண்டுகளில் சரிபாதி ஆண்டுகளுக்கு மேல் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சிதான்! அதோடு அதிபராயிருந்தவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள், இல்லையெனில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாவார்கள்! இந்த விசித்திர நிலைமைகளினூடாக அங்கு அவ்வப்போது ஜனநாயகம் உயிர்த்தெழுவது என்பதும், பொதுவாழ்வில் அறநெறிகளை நிலைநாட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதும் நீதிமன்றங்களின் வழியாகவே தொடர்ந்து நிலைநாட்டபட்டு வருகிறது.

தற்போது பாகிஸ்தான் பிரதமர் கிலானியை பதவி இழக்கவைத்துள்ளது அந்நாட்டின் உச்சநீீதிமன்றம்! காரணம் அவர் தற்போதைய அதிபர் ஜர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்க துணைபோனார் என்பது தான்!

இதே நீதிமன்றம் தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சளைக்காமல் பல தீர்ப்புகளை வழங்கியது. இந்த வகையில் தலைமை நீதிபதி இஃதிகான் சௌத்திரிக்கு மக்கள் மத்தியில் மாபெரும் மரியாதை உண்டு. நவாஷ்ஷெரிப், முஷாரப், பெனாசிர்புட்டோ - ஜர்தாரி என அனைவருமே ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் என்றாலும் உலகமே வியக்கும் வண்ணம் - உலகநாடுகள் சிலவே தண்டிக்கும் வண்ணம் - ஊழலில் உச்சகட்ட புகழ் பெற்றவர்கள் பெனாசிர்புட்டோ - ஜர்தாரி தம்பதியாகும்!

இரண்டுமுறை பாகிஸ்தானின் பிரதமாயிருந்துள்ள பெனாசிர்புட்டோ மிது பல இமாலய ஊழல் புகார்கள் இருந்தன. இந்த ஊழல் புகார்களால் அவர் தன் முதல் பதவிகாலத்தை இருபது மாதங்களில் இழந்தார். ஆனால் அடுத்த முறை வந்தபோது ஊழலில் வரலாறுபடைத்தார்.

புட்டோ - ஜர்தாரி ஊழல்கள் குறித்து பிரெஞ்சு, போலந்து, ஸ்பெயின் மற்றும் சுவிஸ் ஆவணங்கள் பல பிரபலமானவை!

இவர்கள் மீது சுவிஸ் நீதிமன்றத்தில் ஆறுஆண்டு நடந்த வழக்கின் முடிவில் ஆகஸ்ட் 2003ல் சுவிஸ் நீதிமன்றம் இவர்களின் பணமோசடியை ஆதாரபூர்வமாக அறிவித்து, 6மாத சிறைதண்டனை அறிவித்து இருவருக்கும் தலா 50,000டாலர்கள் அபராதம் விதித்தது! இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சுவிஸ், பாகிஸ்தான் அரசுக்கு தந்தது. இது போல போலந்து அரசும் இவர்கள் குறித்த 500 பக்க ஆவணங்கள் தந்து 97ல் வாங்கப்பட்ட 8,000டிராக்டர்களில் நடந்த மோசடிகளை அம்பலப்படுத்தியது. இப்படியாக தங்கம் இறக்குமதி தொடங்கி ஏகப்பட்ட ஊழல் புகார்களில் சிக்கிய ஜர்தாரியை, முஷராப் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தப்ப வைத்ததைத் தான் தற்போது செல்லாது என உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த வகையில் மீண்டும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஊழலைச் சாடியுள்ளதோடு ஜனநாயகத்தையும் உயிர்பிக்க முயன்றுள்ளது. இம்ரான்கான் போன்ற தேசபக்தர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் இதற்கு உறுதுணையாக உள்ளார்கள்.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
25-6-2012.

இருள்விலகட்டும் ஒளிபரவட்டும்

  -சாவித்திரிகண்ணன்

ந்தியாவிலேயே கிட்டத்தட்ட 100 சதவிகித கிராமங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்! வட இந்தியாவிலோ இது 60 அல்லது 70 சதவிகிதம் அளவே சாத்தியமாகியுள்ளது.

தமிழகத்தில் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களும், நிறுவனங்களுமாக சுமார் 2கோடி 4லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது தமிழக மின்வாரியம். அனல்மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை, அணுமின்நிலையம் என பலவிதமின் உற்பத்திகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட போதிலும் தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்பது சுமார் 3,000 மெகாவாட்டாக உள்ளது.

இதனை ஈடுகட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தனியார்களிடமிருந்தும் கூடுதல் பணம் கொடுத்து தமிழக அரசு மின்சாரம் பெற்று வருகிறது. இந்த வகையில் தமிழக மின்வாரியத்திற்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

தமிழக மின்வாரியத்திடம் மின்உற்பத்திக்கான பரந்துபட்ட கட்டமைப்பு உள்ளது. மிகப்பெரும் மனித ஆற்றல் உள்ளது. சுமார் 90,000 ஊழியர்கள் பலம் கொண்டது நம் வாரியம். மின்உற்பத்தியில் பல்லாண்டுகால அனுபவமும், அளப்பறிய ஆற்றலும் கொண்டவர்கள் தமிழக மின்பொறியாளர்கள்.

ஆனால் 1990களில் தொடங்கி தனியார் மின்உற்பத்தியை தமிழக அரசு ஊக்குவித்தது. இதில் தவறுகாண ஒன்றுமில்லை. ஆனால் தனியார்களைக் கொண்டே தமிழக மின்உற்பத்தி தேவைகளை சமாளிக்க முடியும் என தமிழக அரசு கருதி கடந்த சில ஆண்டுகளாக மின் உற்பத்திக்கான முதலீட்டை முடக்கி கொண்டது.

தனியார் நிறுவனங்களுக்கு தாராள சலுகைகள் பல வழங்கப்பட்டு, இடவசதி உட்பட அனைத்தையும் ஏற்படுத்தித் தந்து மின்உற்பத்தியை எதிர்பார்க்கிறது அரசு.

தனியார்களால் எதிர்பார்த்த அளவு உற்பத்தி செய்யமுடியவில்லை. அதோடு அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை மிக கூடுதல் விலை நிர்ணயித்து தமிழர் அரசிற்கு வழங்குகின்றனர். அதாவது தனியார்களிடம் பெறும் மின்சாரமானது அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விடவும் 100% அதிக விலையில் உள்ளது. இதனால் ஆண்டுக்காண்டு கூடுதல் விலைகொடுத்து மின்சாரம் பெற்ற வகையில் தமிழக மின்வாரியத்திற்கு சுமார் 20,000கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனபோதிலும் தனியாரை பெருமளவு நம்பும் போக்கே இன்றும் தொடர்கிறது. இதனால் அரசுக்கு அளவற்ற இழப்பு அதிகரித்த வண்ணமுள்ளது.

நம்நாட்டில் அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயியோ, கரும்பு விவசாயியோ, பால்பண்ணை வைத்து பால்தரும் விவசாயிகளோ தங்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை நிர்ணயிக்க முடியாது. அப்படியிருக்க அரசு உதவிகளால் மின்உற்பத்தி செய்யும் தனியார்கள் மட்டும் அதிக விலை நிர்ணயித்துக் கொள்வது, விந்தையிலும் விந்தை.

அரசு மின்உற்பத்தியில் கூடுதல் முதலீட்டை போட முன்வரவேண்டும். மின்உற்பத்த்திக்கான முதலீடு அனைத்து தொழில்வளர்ச்சிக்குமான 'ஆக்சிஜன்' என்பதே உண்மை!

தமிழக மின்வாரியத்திற்கு தேவையான ஊழியர்கள் 1.36லட்சம். இதல் சுமார்40% பற்றாக்குறையோடு செயல்படுகிறது மின்வாரியம். மின்வாரியத்தில் அரசின் முதலீடு அதிகரித்தால் ஆள்பற்றாக்குறை அகலும். அதோடு மின் திருட்டும், மின் இழப்பும் நிகழாவண்ணம் ஆள்பலத்தோடு கண்காணிப்பை பலப்படுத்தலாம்! தமிழகம் மின்உற்பத்தியால் தன்னிறைவை பெறும் காலம் விரைவில் கைக்கூடட்டும்.
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
19-6-2012.  

Tuesday, July 10, 2012

காங்கிரஸூக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு

 -சாவித்திரிகண்ணன் 

ந்திர இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது, இந்த அதிர்ச்சி வைத்தியம் காங்கிரஸை மீட்டெக்குமா? அல்லது இருப்பதையும் இழக்கச்செய்யுமா? என்பது இனி அது தன்னை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்வதில் தான் இருக்கிறது. 

ஆந்திராவில் காங்கிரஸூக்கு ஆகப்பெரும் தலைவராகத் திகழ்ந்து கட்சியை தன் கட்டுக்கோப்பான தலைமையின் கீழ் வைத்திருந்தவர் y.s ராஜசேகரரெட்டி! இவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியைத் தான் காங்கிரஸ் கட்சி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் எனக்கூறி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. 

காங்கிரஸின் குற்றச்சாட்டில் 100 சதவிகித உண்மை இருக்கலாம். இதை மக்களும் கூட மறுக்கமாட்டார்கள். ஆனால் ஜெகன்மோகன்ரெட்டி என்பவர் எப்படி இத்தனை சொத்துகளைக் குவித்தார். அவர் முதலமைச்சராயிருந்த அப்பாவின் ஆசியோடு தான் மேற்படி சொத்துகளை குவித்தார். அந்த அப்பாவை - ராஜசேகரரெட்டியைத்தான் - காங்கிரஸ்கட்சி ஆந்திரத்தில் கட்சியின் அடையாளமாகக் கருதியது! இன்று அவரது மகன் மீது காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டு என்பது ஜெகன்மோகன்ரெட்டியைவிடவும் ராஜசேகரரெட்டிக்கே அதிகமாகப் பொருந்தும். இதனால் அம்பலப்பட்டு போயிருப்பது காங்கிரஸின் ஊழல் முகம் தானேயன்றி வேறில்லை. 

ஜெகன் மோகன் ரெட்டி மீதான நடவடிக்கைகள் என்பவை அரசியலில் தார்மீக நெறிகளை கட்டிக் காப்பாற்றவே காங்கிரஸ் எடுத்தவை என்பதை ஆந்திர வாக்களர்கள் நம்பத்தயாரில்லை.ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் அவர் அங்கம்வகித்தபோது தான் அத்தனை சொத்துகளையும் குவித்தார். அப்போது அதனை தடுக்கவோ, தண்டிக்கவோ காங்கிரஸ் தலைமை முயற்சிக்கவில்லை. இவை யாவும் ஆந்திர மக்களுக்கு தெரியாததல்ல. எனவே காங்கிரஸ் கட்சிக்கு ஜெகன்மோகனை தண்டிக்கும் தார்மீகத் தகுதியில்லை என்பதையே இடைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தந்த பின்னடைவு மூலம் ஆந்திர மக்கள் உணர்த்தியுள்ளனர். 

அடுத்தததாக இன்று ஜெகன்மோகன் ரெட்டியை ஒரு ஹீரோவாக, வருங்கால எதிர்பார்ப்பாக மாற்றிய பெருமையும் காங்கிரசையே சாரும்! தேர்தல் நேரத்தில் தன் எதிரியை தேடிச்சென்று காலில் விழுந்து வெற்றிக்கனிகளை கொடுத்ததற்கு ஒப்பாகும் ஜெகனை ஜெயிலில் தள்ளியது! ஆத்திரம், அதிகாரபலம் இவை இரண்டும் காங்கிரஸின் கண்களை மறைத்ததோடு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட வைத்துவிட்டது. 

 அது சரி; தன்னைத் தானே சீரழித்துக் கொள்வது; உத்தம தலைவர்களை உதாசினப்படுத்தி ஊழல் தலைவர்களை வளர்த்தெடுப்பது என அகில இந்திய ரீதியில் காங்கிரஸ் என்று முடிவெடுத்ததோ அன்று தொடங்கி காங்கிரஸ் தன் முடிவை நோக்கி முன்நகர்ந்த வண்ணமே உள்ளது. 

ஜெகனின் வெற்றி அவருக்கு காங்கிரஸிடம் சரிக்கு சமமாக உட்கார்ந்து பேரம் பேசும் தகுதியை பெற்றுத் தந்துவிட்டது என்றே நம்பலாம்! 
இந்தப் பேரத்தில் மாநிலத் தலைமை கைமாறினால் ஜெகன் காங்கிரஸில் ஐக்கியமாகலாம்! அல்லது என்.டி.ராமராவைப் போல் காங்கிரஸ் எதிர்ப்பு ஒட்டுகளை அறுவடைசெய்யும் ஒரே மையத்தலைமையாக ஆந்திர அரசியலில் விஸ்வரூபம் எடுக்கலாம்! 
எது நடந்தாலும் அது காங்கிரஸ் தலைமையின் கைங்கரியத்தால் நடந்தது என்பதே சர்வ உண்மையாகும்! 

ஒரு காலத்தில் ஆந்திரத்தில் அப்பழக்கற்ற காங்கிரஸ் தலைவர்கள், பெரும் தியாகிகள் நிறைந்திருந்தனர். பட்டாபி சீதாராமையா, சஞ்சீவரெட்டி, ஆந்திரகேசரி பிரகாசம், நாகேஸ்வரராவ் பந்துலு, காளேசுவரராவ்... என்ற அந்த பட்டியல் கண்ணியத்திற்கு எடுத்துக் காட்டானது. இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதைகளைப் பற்றி நாம் சொல்லவேண்டியதேயில்லை மக்களை முட்டாளாக்க முடியாது. 

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
15-6-2012

வரவேற்போம் - பொது நுழைவுத்தேர்வை!



-சாவித்திரிகண்ணன் 

 "பொது நுழைவுத்தேர்வுக்குள் அனைத்து ஐ.ஐ.டிக்களும் அடுத்த ஆண்டு வந்துவிடும்" என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பகிரங்கமாக எதிர்த்துள்ளதன் மூலம் இரண்டாண்டுகளாக மத்திய அரசுக்கும் சில ஐ.ஐ.டிக்களுக்கும் இடையே நிலவிய பனிப்போர் பரவலான விவாதத்திற்கு வந்துள்ளது.

 "ஐ.ஐ.டி என்பவை தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. அவற்றின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதால் உயர்கல்வித்துறையின் தரம் சீர்குலையும்". என்பது கான்பூர் மற்றும் குவாஹட்டி ஐ.ஐ.டிக்களின் வாதம்.

ஐ.ஐ.டிக்களுக்காக மத்திய அரசு வரைமுறையற்ற வசதிவாய்ப்புகளை உருவாக்கித்தந்து, ஒவ்வொரு ஐ.ஐ.டிக்கும் பலநூறு அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரா நிலங்களை தாரை வார்த்து, பல்லாயிரம் கோடி நிதி தந்து, உயர்கல்வியை ஊக்குவிக்கிறது... என்பது உண்மை தான் என்றாலும், இத்தனை ஆண்டுகளாக மிகச்சிறப்பாகச் செயல்பட்டு உலக அளவில் மதிக்கப்படும் உன்னத உயர்கல்வியை வழங்கிடும் ஐ.ஐ.டி செயல் பாடுகளில் தேவையில்லாமல் மனிதவளத்துறை தலையீடு செய்கிறதோ என்ற எண்ணம் மேலெழுந்தவாரியாக இந்த விவகாரத்தில் எழுவது இயற்கை!

 ஆனால் உண்மை அதுவல்ல. மத்திய அரசு பொதுநுழைவுதேர்வை அதிரடியாக அறிவிக்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை உயர்கல்வியாளர்களிடையே நிகழ்த்தியது. இதற்காக அமைக்கப்பட்ட இராமசாமி கமிட்டி அனைத்து ஐ.ஐ.டி இயக்குநர்களிடம் பேசி விவாதித்து ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவே இது! சபையில் ஒத்துக்கொண்ட சிலர், தற்போது வெளியில் சர்ச்சை செய்கின்றனர். பொது நுழைவுத்தேர்வால் தரம் குறைத்துவிடும், ஊழல் மலிந்துவிடும் என்பதெல்லாம் யூகமே! உண்மையில் இது போன்ற தவறுகளை களைந்து வெளிப்படைத்தன்மையுடனும், சரியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு உகந்த நேர்மையுடனும் ஐ.ஐ.டி தேர்வுகளை அமைப்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.

 அதனால் தான் தேர்வுகளை உருவாக்குவதில் ஐ.ஐ.டிக்கே முன்னுரிமை தரப்பட்டுள்ளது. தேர்வை நடத்துவது மட்டுமே CBSEயாக இருக்கிறது, இதுவரையிலான ஐ.ஐ.டி - ஜே.இ.இ (I I I -JEE) எனப்படும் அனைத்து ஐ.ஐ.டிகளும் இணைந்து நடத்திய பொதுத்தேர்வில் பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண் ஒரு பொருட்டல்ல. அதனால் மாணவர்கள் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை மட்டும் சிறப்பாக எழுதினால் போதும் என்று பள்ளி இறுதிதேர்வை அலட்சியப்படுத்தி வந்தனர். இனி அதற்கு இடமில்லை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள நுழைவுத்தேர்வில் ப்ளஸ் டூ மதிப்பெண்ணுக்கு 40% வழங்கப்படும். அதோடு இருகட்டங்களாக ஒரு மாத இடைவெளியில் தேர்வுகள் நடத்தப்படும். இதில் வெறும் எழுத்து தேர்வோடு நில்லாமல், 'கற்ற அறிவை களத்தேவைகளுக்கேற்ப கையாளும் திறன் இருக்கிறதா?' என்ற பரிசோதனையும் இருக்கிறது. மேலும் ஏகப்பட்ட நுழைவுத்தேர்வுகள், அதற்காக தனித்தனி விண்ணப்பங்கள், பயிற்சிவகுப்புகள், தயாரிப்புகள் என பெற்றோர்களும், மாணவர்களும் அனுபவித்த சிரமங்கள் குறையும். பொருளாதாரச் செலவுகளும் மிச்சப்படும்.

 புதிய நுழைவுத்தேர்வு 16 ஐ.ஐ.டிகள், 4ஐ.ஐ.ஐ.டிகள், 30 என்.ஐ.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் நிதிஉதவி பெறும் பல்கலைகழகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதனை ஒரு சில ஐ.ஐ.டி பழமைவாதிகளைத் தவிர சம்மந்தப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரவேற்றுள்ளன. தேர்வு பற்றிய சர்ச்சைகள் ஒரு புறம் இருக்கட்டும்!

உண்மையான பிரச்சனை என்னவென்றால் இன்றைய தினம் இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டிக்கள் தங்களைத் தனி உலகமாகக்கருதி, மக்களிடமிருந்து முற்றிலும் அந்தியப் பட்டுள்ளனர். அரசு தரும் அளவற்ற உதவிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு படித்து வெளிநாடு செல்வதிலேயே கணிசமானோர் கவனம் வைக்கின்றனர். அதோடு ஐ.ஐ.டியில் படித்தவர்கள், படிப்பவர்கள், தேர்வில் வெற்றிபெறுபவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளிருந்தே மீண்டும், மீண்டும் வருகின்றனர் என்ற பலமான குற்றச்சாட்டுகள் சில தசாப்தங்களாக உள்ளது.

 இதை உடைப்பதற்காகவே சமீபத்தில் ஐ.ஐ.டிக்களுக்கும் இட ஒதுக்கீடு அறிமுகமாகி கூடுதல் ஐ.ஐ.டிக்கள் உருவாக்கப்பட்டன!
 தற்போது பொது நுழைவுத்தேர்வும் வர உள்ளது. தகுதி, திறமை, ஆற்றல், அறிவு ஒரு பிரிவினருக்கே சொந்தமானதல்ல, அது உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை கொண்டோருக்கு பொதுவானதாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
 14-6-2012

கலகத்தில் பரிதவிக்கும் கர்நாடக பா.ஜ.க அரசு

 -சாவித்திரிகண்ணன் 

ண்ணியக் குறைவான அரசியல் நாடகங்கள் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டுள்ளது. 
 கர்நாடகாவில் பா.ஜ.கவிற்குள் நடக்கும் உள்குத்து சண்டைகளை நீண்டநாட்களாக முடிவுக்கு கொண்டுவரமுடியாமல் தவிப்பதன் மூலம் பா.ஜ.க தேசிய தலைமையின் பலஹீனம் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. 

பாரதிய ஜனதாகட்சிக்கு தென் இந்தியாவில் முதன்முறையாக கிடைத்த அரிய வாய்ப்பை - அரியணைச் சண்டைகள், நாளும் அரங்கேறும் அமளிதுளிகளின் மூலம் அந்தக் கட்சியே பாழ்படுத்திக் கொண்டுள்ளது. 

 20008 - மே மாதம் கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றது. முன்னதாக மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியுடன் இணைந்து அது ஆட்சியில் பங்கு பெற்று இருந்தது. இரு கட்சிகளுக்குமான உடன்பாட்டின்படி இருபது மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.கவிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தர மறுத்தார் குமாரசாமி. இதனால் பா.ஜ.க ஏமாற்றப்பட்டது. எனவே இதையடுத்து நடந்த தேர்தலில் மக்களின் அநுதாபத்தால் பா.ஜ.க அரியைணை ஏறியது. 

காங்கிரசிற்கு மாற்றாக தூய்மையான அரசியலை தரப்போகிறோம் என்ற பா.ஜ.க, பதவிக்கு வந்தவுடன் பற்பல ஊழல் புகார்களில் சிக்கியது. இதில் முதலமைச்சராயிருந்த எடியூரப்பாவின் மீதும் ஏகப்பட்ட புகார்கள். அதில் குறிப்பாக அரசுநிலத்தை தன் மகன்களுக்கு மிக குறைந்த விலைக்கு ஒதுக்கி பதவியை துஷ்பிரயோகம் செய்ததும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு துணைபோனது அவரை பதவி இழக்கச் செய்தன. 

 இந்த நிகழ்வு கர்நாடகத்தில் மட்டுமல்ல, பா.ஜ.கவின் அகில இந்திய இமேஜையே ஆட்டம் காணவைத்தது. ஊழலை எதிர்ப்பதற்கோ, காங்கிரசை குறைகூறுவதற்கோவான பா.ஜ.கவின் தார்மீகத் தகுதி கேள்விக்குள்ளானது - எடியூரப்பாவால்! 

ஆனால் எடியூரப்பாவை சுலபத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வைக்க முடியவில்லை பா.ஜ.கவின் தேசியத் தலைமைக்கு! லோக் ஆயூக்தா நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பே எடியூரப்பாவின் பதவியை பறித்தது. அதன் பின்பும் எடியூரப்பாவால் அடையாளம் காட்டப்பட்டவரான சதானந்தா கௌடாவைத் தான் முதலமைச்சராக்கினார்கள். ஆனால் அந்தோ பரிதாபம்! 

தன் கைப்பாவையாக சதானந்தகௌடாவை கையாளலாம் என்ற எடியூரப்பாவின் நம்பிக்கை பொய்த்தது. அதோடு 'மிஸ்டர் கிளின்' இமேஜ் பெற்றவரான சதானந்த கௌடாவின் அமைதியான, ஆக்கபூர்வமான அரசியல் செயல்பாடுகள் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெறக் காரணமாயிற்று. 

இதனை பொறுக்கமுடியவில்லை எடியூரப்பாவிற்கு ! மீண்டும் தானே முதல்வராக முயன்றார். முடியவில்லை. இதனால் தற்போது ஜாதி அரசிலைக் கையிலெடுத்துள்ளார். 

கர்நாடகத்தில் பெரும் வாக்கு வங்கி கொண்ட தனது லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் ஷெட்டரை முதலமைச்சர் பதவிக்கு முன்நிறுத்தி சதானந்த கௌடாவை சாயக்கத் துடிக்கிறார். எடியூரப்பாவை பொறுத்தவரை அவர் மக்கள் ஆதரவை பெருமளவு இழந்துவிட்டார். ஊழலுக்கு ஒர் உதாரணபுருஷராக, கட்சித் தலைமைக்கு, கட்டுப்படாத கலகக்காராக சுயநல அரசியலின் சூத்திரதாரியாக, சாதி அரசியல் சாயம் கொண்டவராக, காங்கிரஸ் கட்சியோடு கள்ள உறவுகொண்டிருப்பவராக அல்லது கைகோர்க்கத் துடிப்பவராக பல பரிமாணங்களில் மக்கள் மனங்களில் பதிவாகிவருகிறார். இத்தனைக்குப் பிறகும் பா.ஜ.க தலைமை ஒரு உறுதியான நிலைபாடு எடுக்க முடியாமல் திணறுவது - திடசித்தமில்லாத தேசியத் தலைமையின் வெற்றிடத்தை உறுதிபடுத்துகிறது. 

கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சியால் மக்கள் பரிதவிக்கிறார்கள். ஆனால் இன்னும் பத்துமாதமே ஆயுள் கொண்ட ஒரு ஆட்சிக்கு இத்தனை கலகங்கள் தேவையா? சட்டசபையை கலைத்துவிட்டு, சரியான மாநிலத் தலைமையை அறிவித்து தேர்தலை எதிர்கொண்டு மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குவதே நல்லது! 

NDTV -THE HINDU,
                                                                                                          EDITORIAL VOICE,
 3-7-2012