Wednesday, February 27, 2008

தொலைந்து போகும் கிராமங்கள்

-சாவித்திரிகண்ணன்

எங்கெங்கும் காணினும் பசுமை, நெளிந்து சுளித்து ஓடிவரும் சிற்றோடைகள், தூயதென்றல், குளிர்தரும்மரங்கள், கூவிடும் குயில்கள் 'அம்மா' என்றழைக்கும் ஆவினங்கள், நாற்றுநடும் பெண்கள், ஏரோட்டும் விவசாயிகள், துணி நெய்யும் நெசவாளர்கள், தச்சர், குயவர், தயிர்கடையும் பெண்கள், குளத்தில் தாவி குதித்து கும்மாளமிடும் சிறுவர்கள்... என இது வரை நாம் கண்டு அனுபவித்து வந்த கிராமங்கள் இனியும் நிலைக்குமா?

"ம்ஹூம் அடுத்தடுத்த தலைமுறைகளில் அழிந்துபோகக்கூடும்..." என எச்சரித் துள்ளது 'அசோசேம்' எனப்படும் இந்திய தொழில்வர்த்தக கூட்டமைப்பின் ஆய்வு! '

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது' என்றார் அண்ணல் காந்தி. அந்த கிராமங்களைத் தான் இந்த நூற்றாண்டுக்குள் அழித்து விடும் ஆவேசத்துடன் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,15,000 என்று அரசாங்கத்தின் புள்ளி விபரத்தில் அறிய முடிகிறதென்றால் உண்மையில் இந்த எண்ணிக்கை இதைக்காட்டிலும் இருமடங்காகத் தான் இருக்கக்கூடும்.

ஏன் இந்த நிலைமை?

அமைதியாக விவசாயம் செய்துகொண்டிருந்த அப்பாவி விவசாயிகளை பசுமைபுரட்சி என்றும், பணப்பயிர் என்றும் ஆசைக்காட்டி அவனிடம் வீரிய விதைகளை விற்று, ரசாயண உரங்களை திணித்து, பூச்சி கொல்லி மருந்துகளை போடச்சொல்லி, விவசாயத்தை நஞ்சாக்கி, நிலங்களை மலடாக்கி, விவசாயிகளை கடனாளியாக்கியதிலிருந்து தான் இந்த தற்கொலைகள் தொடங்கின.

இந்த மாற்றங்களுக்கு காரணமான மா மேதாவிகள் யார்?

அன்று பசுமைபுரட்சியின் தந்தை என்று பவனிவந்தவர்கள் இன்று பதுங்கி கொண்டு பாலுக்கும் காவலனாக, பூனைக்கும் தோழனாக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...! இவர்கள் இந்தியாவில் விவசாயிகளைத் தற்கொலைகளுக்கு தள்ளிக் கொண்டிருக்கும் மான்சான்டோவிற்கும் 'மார்கெட்டிங் கன்ஸ்ல்டண்ட்' தருவார்கள். மரணித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கும் ஒப்பாரி பாடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மானியமாக பல்லாயிரம் கோடி ரூபாய் உரம், மின்சாரம், பாசனம் மற்றும் இதரவகைகளில் தரப்படுவதாக அரசாங்க புள்ளி விபரம் அறிவிக்கிறது. ஆனால் இந்த மானியத்தை பெறுவது விவசாயிகள் அல்ல! உரக்கம்பெனிகளும் தனியார் நிறுவனங்களும் தான்! இதில் பத்து சதவிகித பலனைக் கூட விவசாயிகள் பார்பதில்லை. அரசாங்கங்களுக்கு தெரிந்தே இநத அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டுவருகின்றன.

'விதர்பா' என்றொரு இடத்தில் விவசாயிகள் ஆயிரக்கணக்கணக்கில் தற்கொலை செய்து அழிகின்றனர். "ஐயோ பரிதாபம், இதோ வந்துவிட்டேன்..." என்று பிரதமர் மன்மோகன்சிங் விதர்பாவுக்கு விஜயம் செய்து பலநூறுகோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்துவிட்டு வந்தார். அதற்கு பிறகான இந்த 15மாதகாலகட்டத்தில் அங்கே தற்கொலைகள் மேன்மேலும் அதிகரித்துவிட்டன. காரணம்,அரங்சாங்கத்தின் கைகள் கட்டப்பட்டிருப்பது தான்! தற்கொலைக்கு காரணமான சக்திகளே அரசாங்கத்தோடு கைக்கோர்த்துள்ளன.

இப்போது இந்திய வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு கிராம மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை போன்றவை வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கும் முதல்வரிசை நகரங்களாகும். அடுத்த வரிசையில் திருப்பூர், திருச்சி, ஈரோடு, சேலம்.... போன்றவையுள்ளன. 'கிராமங்களில் வாழ்வது இனி கட்டுப்படியாகாது' என பக்கத்தில் உள்ள நகரங்களில் தினசரி ஆயிரக்கணக்கான குடுமபங்கள் இடம்பெயர்ந்துவருகின்றன.

இன்று எல்லா திசைகளிலுமிருந்து கிராமங்களை நோக்கி விஷம் தோய்ந்த அம்புகள்வீசப்பட்டு வருகின்றன. முதல்காரணம் தண்ணீர் பற்றாக்குறை. காவிரி, தாமிரபரணி, வைகை, பொன்யையார், பாலாறு, வைப்பாறு, காவிரியின் உபநதிகளான பாவானி, நொய்யாலாறு, அமராவதி, கொடகனாறு போன்றவை இன்று வெயில் காலங்களில் வற்றியும், மழைகாலங்களில் வீணாகியும் வருகின்றன.

சின்னச்சின்ன அணைகள் கட்டினால் வெள்ளப்பெருக்கின் அழிவும், வெயில் கால வாட்டமும் முடிவுக்கு வந்து விடும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு இதில் அக்கரையில்லை. மறுபுறம் ராசாயன மற்றும் தோல்தொழிற்சாலைகள் இந்த ஆற்றுத் தண்ணீரை அசுத்தப்படுத்தி விவசாயத்துக்கு வில்லங்கமாக நிற்கின்றன.

தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு குறைவான நிலமே ஆற்று பாசன வசதி பெற்றவை. மற்றவை வானம் பார்த்த பூமிதான் ! இங்கே எல்லாம் மன்னர் காலத்து ஏரி குளங்களெல்லாம் தூர்வரப்படாமலும், ஆக்கிரமிப்புகளாலும் அவலத் திற்கு ஆளாகியுள்ளன. இதனால் இங்கே மழைதண்ணீர் வீணாகின்றது. 200 அடியிலிருந்து 800 அடிவரை நிலத்தை துளையிட்டு தண்ணீர் தேடும் துயரம் தொடர்கிறது.

இது போன்ற காரணங்களோடு விதை, உரம், பூச்சிகொல்லிமருந்து போன்றவற்றின் அபரிமிதமான விலைகள், பம்புசெட், மின்சாரத்திற்காகும் செலவுகள் போன்றவற்றால் விவசாயிமிரண்டு போயுள்ளான்.

முன்பு உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு முதலீடில்லாத தொழிலாக இருந்த விவசாயம் இன்று இப்படி பெரும் முதலீடு தேவைப்படும் தொழிலாக மாறியது பசுமைப்புரட்சியால் தான்! அன்று இயற்கையோடு இணைந்த பாரம்பரிய வேளாண்மைசெய்து உலகையே வியக்க வைத்தனர் இந்திய விவசாயிகள்! இன்று படித்த மேதாவிகளின் பேச்சைக் கேட்டு நிலத்தையும் வாழ்வையும் இழந்தோமே... என தவிக்கின்றனர். இவ்வளவு கடினப்பட்டு உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவனால் விலை நிர்ணயம் செய்யமுடியாது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கரும்பு பயிரிட்டு வளர்த்து, அரசாங்கம் கொள்முதல் செய்யாததால் அவை கருகி அழிவதை காணசகிக்காமல் கண்ணீரோடு அவற்றை தீயிட்டு எரித்தனர் திருவண்ணாமலை விவசாயிகள்! கட்டுபடியாகத விலை, காத்திருந்தும் கொள்முதல் செய்யாத அவலம், கழுத்தை நெரிக்கும் கடன்சுமைகள்... எப்படித் தாங்குவான் விவசாயி, இதனால் தான் கடந்த 15ஆண்டுகளில் 50லட்சத்திற்கு மேற்பட்ட விளைநிலம் தாக்குபிடிக்க முடியாமல் தரிசாகப் போடப்பட்டுவிட்டன தமிழக விவசாயிகளால்!

இன்னும் இருக்கின்ற விவசாயிகள் அனுபவிக்கும் அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. தமிழகத்தில் 80சதவிகித விவசாயிகள் துண்டு, துக்காணி நிலம் வைத்துள்ள குறுவிவசாயிகள் தாம்! இவர்களும், இவர்களை நம்பியுள்ள விவசாயிக்கூலிகளும் ஈட்டும் மாதவருமானம் ரூபாய் 225லிருந்து 500வரைதான்! எனவே இவர்கள் வறுமைக்கு வாழ்க்கைபட்டு வாடுகின்றனர்.

நம் தமிழக அரசு,பனை, தென்னையிலிருந்து பெறப்படும் தீமை குறைவான கள்ளுக்கு கல்லறை கட்டிவிட்டு, ஆல்கஹால் அதிகமுள்ள மதுவுக்கு மகுடாபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறது

இதனால் தமிழகத்தில் பனைத்தொழில் பட்டுபோயுள்ளது. தென்னைத் தொழில்கள் தேய்பிறையாகி வருகின்றன. சுமார் நான்கு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும், சுமார் 5,000கோடிக்கு வருமானமும் கொண்ட அருமையான தொழில் அரசாங்கத்தால் அலட்சியப்படுத்தப்பட்டுவருகின்றது. பக்கத்து மாநிலமான கேரளத்தில் பனை, தென்னைத் தொழில்கள் படுஜோராக உள்ளன.

யாரோ ஒரு சில வெளிநாட்டு மதுபான உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு இங்கே பலிகடாவாக்கப்பட்டுள்ளன பனை, தென்னை விவசாயிகளும், கூலித்தொழிலாளர்கள் வாழ்க்கையும்! இப்படியாக விவசாயம் வீழ்த்தப்பட்டு வருகின்றது. கைத்தறி தொழிலோ பாவம் கையறு நிலையில்! விசைத்தறிகளோ அசைவற்று ஸ்தம்பித்துள்ளன.

மொத்தத்தில் கிராமத் தொழில்கள் சீரழிந்து வருகின்றன. நகரங்களின் விரிவாக்கமும், சிறப்புபொருளாதார மண்டலங்களும், டாட்டா போன்ற பெரிய நிறுவனங்களின் புதிய பொருளாதார அணுகுமுறைகளும் கிராமங்களை விழுங்கி வேகவேகமாக செரிமானம் செய்து கொண்டுள்ளன.

தமிழர்களின் தொன்மங்களான தெருக்கூத்து, கரக்காட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பறை, வில்லுப்பாட்டு போன்றவை மெல்ல, மெல்ல விடைப்பெற்றுக் கொண்டுள்ளன.

குக்கிராமங்கள் வரை கோலோச்ச தொடங்கியுள்ள திரைபடங்களும், தொலைகாட்சி அவைவரிசைகளும், வட்டார வழக்கு சொல்லாடல்களைக் கூட வழக்கொழிய வைத்துக் கொண்டுள்ளன. தொலைக்காட்சித் தமிழும், அது கட்டமைக்கும் வாழ்க்கை மதிப்பீடுகளும் காலங்காலமாக கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கலாச்சார கட்டமைப்புகளை கலகலக்க வைத்துள்ளன. ஆக மொத்தத்தில் கிராமங்கள் மெல்ல, மெல்ல தொலைந்து கொண்டுள்ளன.

வாழும் தலைமுறையான நமக்கு இதை மீட்டெடுக்கும் பொறுப்புண்டு, இதைத் தடுக்க தவறினால் வருந்தலைமுறையின் வசவிலிருந்து நாம் தப்பமுடியாது.

No comments: