Tuesday, April 22, 2008
ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்
-சாவித்திரிகண்ணன்
''சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இது''
''ஈழப்பிரச்சினைக்கு ஒரு விடிவு நெருங்கிவிட்டது.''
''ஈழம் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வரப்போகிறது,''
''உலக வரலாற்றிலேயே இல்லாத அதிசய நிகழ்வு''
இப்படி ஊடகங்களால் ஊதி பூதாகரப்படுத்தப்பட்டது பிரியங்கா-நளினி சந்தித்த நிகழ்வு. பிரியங்கா இந்தியாவின் பிரதமருமல்ல, நளினி இலங்கையின் அதிபருமல்ல. ஒரு அமைச்சராகவோ, குறைந்தபட்சம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ கூட இல்லாத ஒரு பெண்மணி, தன் தந்தையின் கொலை தொடர்பாக கைதாகி சிறையிலிருக்கும் மற்றொரு பெண்ணை சந்தித்ததை சரித்திரத்தையே மாற்றப்போகும் சாகஸச் செய்தியாக்கின ஊடகங்கள்!!
விற்பனை போட்டிகளால் விவஸ்தையை பறிகொடுத்தன ஊடகங்கள்!
நேரு குடும்பத்தின் வாரிசு என்பதைத் தவிர எந்த அரசு பதவியிலும், இயக்கப் பொறுப்பிலும் இல்லாத பிரியங்காவுக்கு ஊடகங்கள் தந்த முக்கியத்துவம் இன்னும் மன்னர்கால அடிமை மனோபாவங்களிலேயே மக்களை ஆழ்த்திவைக்க ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை விளக்குவதாகவே இருந்தது.
நளினியின் ஆயுள் தண்டனை என்பது பத்து ஆண்டுகளைக் கடந்து 17ஆண்டுகளாக சட்டத்திற்கு புறம்பாக அரசியல் காரணங்களுக்காக நீடிக்கப்பட்டு வருவது பற்றியோ, அவருடன் கைதாகி விடுதலையான அவருடைய தாயும், சகோதரரும் கடந்த பத்து ஆண்டுகளாக வாடகை வீடுகளில் கூட வாழ உரிமையின்றி அலைகழிக்கப்டுகிறது பற்றியோ இதுநாள் வரை சிறிதும் அக்கரை காட்டாத ஊடகங்கள் இப்போது நளினி-பிரியங்கா சந்திப்பையடுத்து நளினியை உலகத்தலைவிகளில் ஒருவராக சித்தரிக்கும் அளவுக்கு சென்றுவிட்டன. அவரது குடும்பத்தாரை வலைவீசித் தேடத்தொடங்கினர்.
கிடைத்த ஓரிரு செய்திகளில் நூல்பிடித்து கற்பனைகளை விரியவிட்டு விருப்பப்படி கதை அளந்தனர். ஊடகங்களை பொறுத்தவரை ஊகங்களை செய்தியாக்கி ஒரு வார கால பரபரப்பு செய்துவிட்டு ஓய்ந்து விடுகின்றன.
ஆனால் இந்த நேரத்தில் நாம் சில உண்மைகளை உரக்கப்பேசுவது உகந்ததாயிருக்கும் என நினைக்கிறேன்.
பொதுவாக மக்கள் பலரிடமும் நிலவும் சந்தேகங்கள் சில;
''அவ்வளவு பெரிய தலைவர் கொல்லப்பட்ட வழக்கின் கொலையாளிகளான இவர்களுக்கு இன்னும் ஏன் தூக்குதண்டனையை நிறைவேற்றவில்லை?''
''உடனே தூக்கில் போடாமல் தாமதப்படுத்துவதன் காரணம் என்ன?''
''ஒரு வேளை காங்கிரஸ் கட்சியிலேயே வேறு சிலரும் இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா?'' ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு சுமார் 17 ஆண்டுகளாகியும் இதுபோன்ற சில கேள்விகளுக்கு மக்களிடம் பதிலில்லை.
இதற்கு பதில் வேண்டுமெனில் நாம் வழக்கு பற்றிய சில உண்மைகளை பார்க்க வேண்டும்
ராஜீவ்காந்தியை மனிதவெடிகுண்டாகச் சென்று கொன்றது தனு. அவரை இயக்கியவர் சிவராசன், அவர்களோடு இருந்த இன்னொரு பெண் சுபா. இந்த மூவரையும் பிடித்து விசாரிக்க முடியவில்லை.
அவர்கள் சயனைடு அருந்தி இறந்துவிட்டனர். தனுவும், சிவராசனும், சுபாவும் உயிர்போனாலும் பரவாயில்லையென்று சில உண்மைகளை தங்களோடு எடுத்துச் சென்றுவிட்டனர். இவர்களைத் தவிர ராஜீவ் கொலைக்கு சூத்திரதாரியாக இருந்திருக்கலாம் என்று சி.பி.ஐ அறிவித்த பிராபாகரன் , பொட்டு அம்மான் உளிளிட்ட பனிரெண்டு பேர் பிடிபடவில்லை.
ஆக, ராஜீவ் கொலையின் மிக முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டவர்களை சி.பி.ஐ யால் நெருங்கக் கூட முடியவில்லை. இந்நிலையில் பிடிப்பட்ட 26 பேரை விசாரித்த வகையில் இவர்கள் மேற்படி இறந்தவர்கள் மற்றும் பிடிபடாதவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடிந்ததேயன்றி கொலையில் சம்பந்தப்பட்டார்கள் என்று சொல்ல முடியவில்லை என்பதே யதார்த்தம்.
கொல்லப்பட்டவரோ நாட்டின் முன்னாள் பிரதமர் . அதுவும் நேரு குடும்பததிலிருந்து வந்த தலைவர். அவரை கொன்ற வர்களையும் உயிரோடு பிடிக்கமுடியவில்லை. அதற்கு சூத்திரதாரியானவர்களாக கருதப்படுபவர்களையும் நெருங்க முடியவில்லை என்ற சூழலில் இந்த வழக்கு விசாரணை 1991 தொடங்கி 98வரை நடந்தது.
''என்னப்பா இது? இன்னும் விசாரணை, விசாரணை என்று தனிக்கோர்டில் ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது? ஆனால் தீர்ப்பு வந்த பாடில்லை?'' என இந்தியா முழுமையிலும் மக்கள் முணுமுணுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து 1998-ஜனவரி 28-ல் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதில் ஒரே போடாக' 'கைது செய்யப்பட்டிருந்த அனைவருக்குமே தூக்கு தண்டனை' என்று தீர்ப்பாகியது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு தவறானது என சுட்டிக்காட்டப்பட்டு 19பேர் விடுதலையானார்கள்.
மற்ற ஏழுபேரில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோருக்கு தூக்கு என்றும் , ரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை என்றும் அறிவிக்கபட்டது. (பிறகு நளினியின் தூக்குதண்டனை, சோனியாவின் சிபாரிசினால், தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநரால் ஆயுள் தண்டணையாக்கப்பட்டது) இதிலும் கூட அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட சான்றுகளின் படியும், சாட்சிகளின் படியும் இவர்களில் யாருக்குமே ''ராஜீவ்காந்தியை கொல்ல ஒரு சதி தீட்டப்பட்டிருக்கிறது ''என்பது இறுதி வரை தெரியவில்லை... என்பது தான் உறுதிப்படுகிறது!
பிறகு ஏன் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு எப்படி எந்த வழிமுறையில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கினாலே போதுமானது என கருதுகிறேன். மேற்படி தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் தடாசட்டத்தின்படி கைதாகி, தடா சட்டத்தின் படி ரகசியமாக விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.
தடா சட்டத்தின்படி குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் ஒன்றை மட்டுமே வைத்து தீர்ப்பு கூறிவிடலாம்! சாட்சிகள் தேவையில்லை! குற்றத்தை நிருபிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. மாறாக தங்களை நிரபராதி என நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு.
எனவே இந்த சட்ட வழிமுறைகளின் படி என்ன நடந்திருக்கிறது என்பதை நாம் யூகித்துவிடமுடியும்! குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காவல்துறை நிர்ப்ந்தம் செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்டையாக வைத்து தான் உச்சநீதிம்னறம் மேற்படி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆழுள் தண்டனைகளை அறிவித்தது.
இதே நீதிமன்றம், 'ராஜீவ்காந்தி கொலை என்பது பயங்கரவாதச் செயலாக கருதமுடியாது' என்ற கருத்தையும் கூறியுள்ளது. இந்த வகையில் இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தனிப்பட்ட ஒரு பெண் ஒரு சிலரோடு சேர்ந்து செய்த பழிவாங்கும் முயற்சியாகவும் இதனை கருதலாம் என நாம் பொருள் கொள்ள முடியும்.
ஆனால் இந்த கொலைக்குப் பின்னணியில் விடுதலைபுலிகள் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை இந்திய அரசு, புலானாய்வுத்துறை, நீதிமன்றம் போன்றவை உறுதியாக நம்பின. எனவே இப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதின் மூலம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துவதாக தீர்ப்பு அமைய வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.
இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகள் மீது ஒரு அழுத்தமான சந்தேகம் கொண்டுள்ளது.'விடுதலைப்புலிகள் இலங்கையைப் பிரித்து தனி ஈழம் உருவாக்கினால், அதன் எதிர்வினையாக தழிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகள் தனித்தமிழ்நாடு கோரக்கூடும். அதற்கு விடுதலைப்புலிகளும் உதவக்கூடும்' என்பதே அது! இந்திய அரசை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதமாகிவிட்டது இந்தி சந்தேகம்.
இந்திய அரசின் பார்வையில் விடுதலைப்புலிகள் இயக்கம் வில்லனாகிப்போனது. இந்தச்சூழலில் ராஜீவ் கொலைக்கான உண்மையான குற்றவாளிகள் இறந்து விட்ட நிலையில், ''யாருக்குமே தண்டனையில்லை?'' என்ன தான் விசாரணை செய்தீர்கள் ?'' என்ற கேள்வியைத் தவிர்க்கவே இந்த ஏழு பேருக்கும் தூக்கு தண்டனையும், ஆயுள் தணடனையும் வலிந்து தரப்பட்டுள்ளது.
மேலும் ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசின் வெவ்வேறு புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்களால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதும், உண்மையை கண்டறிவதற்கான ஒத்திசைவை உருவாக்க முடியவில்லை என்பதும் மற்றொரு மறுக்க முடியாத உண்மை!
இந்த சூழலில் தான் ஏழுபேர் ராஜீவ் கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சட்டத்திற்கு அப்பபாற்பட்டு, மனித தார்மீக நெறிமுறைகளுக்கு முரணாக பதினேழு ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் வாடி வதங்குவது கொடுமையிலும் கொடுமையாகும். தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்த நிலையில் இன்றா?நாளையா? என்று தெரியாமல் மரணபயத்திலேயே ஆழ்த்தி வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் நிலையோ கொடுங்கோன்மையின் உச்ச பட்சமாகும். இவர்களுக்காக இந்தியா முழுமையிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கொடுக்கும் குரல்கள், முயற்சிகள் யாராலும் பொருட்படுத்தப்படவில்லை. ஏனெனில், இந்த உண்மைகளை வெளிப்படுத்தவோ, ஒத்துகொள்ளவோ இந்திய அரசியலில் ஒரு இணக்கமான சூழல் இல்லை.
விடுதலைப் புலிகள் என்ற பூச்சாண்டி அரசியலைக் காட்டி தி.மு.க வை மிரட்டுவதற்கு தனக்கு கிடைத்துள்ள சிறந்த ஆயுதமாக ராஜீவ் கொலை வழக்கை அ.தி.மு.க கையாள்கிறது. "சில யதார்த்தமான உண்மைகளைப் பேசினால் விடுதலைப் புலிகள் ஆதரவு சாயம் பூசப்பட்டுவிடுவோமோ..." என்ற பயம் தி.மு.கவிற்கு!
"ராஜீவ்காந்தி குடும்பத்தின் மீதுள்ள விசுவாசத்தை பறைசாற்றுவதற்கு அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படட்டவர்களை விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்கக வேண்டும்" என்ற ஒற்றை கொள்கை தவிர ஒன்று மறியாத தமிழக காங்கிரஸ்..
"இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்களில் பொங்கிஎழுவது, அதன் வழி அரசியல் ஆதாயம் தேடுவது..." என்பதைத் தவிர வேறு விவரங்களில் அக்கரையில்லாத பாஜ.க!
ஆக, கட்சிகளும், பரப்பரப்பை மட்டுமே செய்தியாகும் ஊடகமனோபாவமும் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் உண்மைகளை மக்கள் உணர்வதற்கு பெரும் தடையாகிவிட்டன. இநதச் சூழலில் தடுக்கப்பட்ட உண்மைகளை தானே முன்முயற்சி எடுத்து கண்டறியும் நோக்கத்துடன் பிரியங்கா, நளினியைச் சந்தித்திருக்க கூடும் என்று யூகிக்கலாம் அவ்வளவே!
ஒரு வேளை பிரியங்கா பல யதார்த்தங்களை, உண்மைகளை தரிசிக்க நேர்ந்தாலும் கூட ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட அரசியல் மாயையை கலைக்கும் விதத்தில் அதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வாரா என்பது சந்தேகம் தான்!
Saturday, April 5, 2008
பிழைப்பு அரசியலும்,பேதலிக்கும் தேசியமும்
-சாவித்திரி கண்ணன்
இவ்வளவு கீழ்தரமாக நமது அரசியல்வாதிகள் செயல்படக்கூடும் என்று மொழிமொழியாக மாநிலப்பிரிவினை நடந்தபோது யாரேனும் நினைத்திருப்பார்களா?
ஆனால் பிரதமர் நேரு நினைத்திருக்க கூடும் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இந்தியா சுதந்திரமடைந்தபோது மொழிவழி மாநிலப்பிரிவினையை அவர் தீவிரமாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக மொத்த இந்தியாவையும் நிலம் மற்றும் நிர்வாக வசதிற்கேற்ப ஐந்தாக பிரிக்கலாம் என்ற திட்டத்தை ஆதரித்தார்.
அதன்படி இந்தியாவை வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்தியபகுதி, தட்சிணப்பிரதேசம் என ஐந்தாக பிரிப்பது பலவகைகளிலும் அனுகூலமாயிருக்கும் என்றார்.
ஆனால் இந்தியா முழுக்க அதிகாரத்திற்காக தவம் கிடந்த அரசியல்வாதிகளும், மொழிஉணர்வாளர்களும் மொழிவழிமாநிலம் தேவையென்று பெரும்போரட்டத்தில் இறங்கினர்.
வங்கம்,வங்க மக்களுக்கே,
பஞ்சாப் பஞ்சாபியருக்கே,
ஆந்திரா தெலுங்கர்களுக்கே,
என்ற குரல்கள் தீவிரமடைந்தபோது நேரு, ''மொழி வழி மாநில கோரிக்கையாளர்களுடன் தெருச்சண்டைக்கும் தயார்'' என்றார். தமிழகத்திலும் ம.பொ.சி போன்றவர்கள் காங்கிரஸிற்குள்ளேயே தீவிரமாக மொழிவழி மகாணத்திற்காக அணிதிரட்டியபோது காமராஜரும், ராஜாஜியும் அதனை எதிர்த்தனர்.
அன்றைய சென்னை ராஜதானியிலே ஆந்திராவின் பெரும்பகுதிகளும், மலையாள பிரதேசங்களும், கர்நாடகாவின் கணிசமான பகுதிகளும் இருந்தன.''அந்த நிலை அப்படியே தொடர்ந்திருக்க கூடாதா?'' என்று வரலாற்றை திரும்பி பார்த்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை.
மொழிவழி மாநில பிரிவினைக்கு உடன்பட்டதால் சுதந்திரமடைந்த பின்பு சுமார் பத்தாண்டுகள் எல்லை பிரச்சினைகளுக்கே எல்லா ஆற்றலும், கவனமும் வீணடிக்கப்பட்டது.
அடுத்ததாக 60களில் தொடங்கி ஆற்று நீர் பிரச்சினை அல்லோலகலப்படுகிறது. இது இன்றும் தீர்ந்த பாடில்லை.
முல்லை பெரியாறு பிரச்சினை வட தமிழகத்தை பாலைவணமாக்கி கொண்டுள்ளது. காவேரி பிரச்சினையோ தீர்வுக்கே உட்படாமல் திசைமாறிப் பயணப்பட்டுவிட்டது.
ஒகேனக்கல் தண்ணீரில் கூட்டுக்கூடிநீர்திட்டம் என்பது கர்நாடகம் நமக்களிக்கும் கவேரி தண்ணீரை கடலில் வீணடிப்பதற்கு மாற்றாக குடிதண்ணீருக்குப் பயன்படுத்தும் திட்டம் தான்!
பெரும்மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களிலெல்லாம் தமிழகத்திற்கு கிடைக்கும் காவேரி நீரில் கணிசமான அளவு கடலில் வீணாகிறது. ஏற்கெனவே திருச்சி, தஞ்சை போன்ற மாவட்ட மக்களுக்கெல்லாம் காவேரி நீரே குடிநீராகி தாகம் தீர்த்து கொண்டுள்ளது.
வறட்சியில் வாடும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு இப்போது 1334 கோடியில் திட்டமிட்டிருக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியிருக்கவேண்டிய ஒன்றாகும்!
இப்போது தமிழகத்தின் தலையாய பிரச்சினையே பக்கத்து மாநிலங்கள் காட்டும் பகை உணர்வை சமாளிப்பதாகிவிடட்டது.
தேசிய இனங்குளுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கேட்க முடிந்தவர்கள் அதற்கேற்ப தங்களை தகுதிபடுத்திக்கொள்ளவில்லை.
''சுதந்திரம் பெறுவதற்கே இந்தியர்களுக்கு இன்னும் தகுதிபிறக்கவில்லை...'' என்று 1947-ல் அறுதியிட்டு சொன்னாரே பெரியார் ஒருவகையில் அது சரிதானோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.
''என்னிடம் அனுமதி கேட்டு ஏன் செயல்படவில்லை'' என்கிறது கர்நாடக தரப்பு.
''1998-ஆம் ஆண்டு பெங்களுரு குடிநீர் திட்டம் தயாரானபோதே தமிழகமும் தன்பங்குக்கு காவேரி நீரில் குடிநீர்திட்டங்களை செயல் படுத்திக்கொள்ளலாம் என இரு மாநிலமும், மத்திய அரசும் இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதுதானே!'' என்பது தமிழகத்தின் வாதம்!
மேலும் ஒகேனக்கல் என்பது தமிழகத்திற்கானது என்று சந்தேகமில்லாமல் ஒத்துக்கொள்ளப்பட்டு இதுநாள் வரை உரிமை அனுபவித்து வரும்சூழலில் ஓட்டு அரசியல் இந்தியதேசிய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.
முதலில் தேர்தல்கள் முக்கியமா? தேசியம் முக்கியமா? என்று தேசிய கட்சிகள் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் நாட்டுக்கு நல்லது.
கர்நாடத்தில் ஒருவேஷம், தமிழகத்தில் ஒருவேஷம் என்று போட்டுக் கொண்டு இனியும் காலந்தள்ள முடியாது.
2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதல்வர் தரம்சிங் ஒகேனக்கல் பிரச்சினையை கையில் எடுத்தார். தேர்தல் முடிந்ததும் கைவிட்டார். இப்போது பா.ஜ.கவின் எடியூரப்பாவால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
'தமிழர்மீது துவேஷம்' என்பது கர்நாடக அரசியலில் கதாநாயக அந்தஸ்து கோரும் அரசியல்வாதிகளால் கனல் மூட்டிவளர்க்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகளை அடித்துநொறுக்குவது, தமிழ்திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளை தாக்குவது, தமிழ் தினசரி அலுவலகங்களை தாக்குவது, தமிழ்சங்கத்தை தாக்குவது, தமிழ்சேனல்களை முடக்குவது என தறுதலையாய் தாண்டவமாடுகிறது.
இதன் எதிர்வினை தமிழகத்திலும் ஆரம்பித்துவிட்டது. கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் சில ஹோட்டல்கள் தாக்கப்பட்டுள்ளன.
கன்னடபள்ளிகள் மீதான தாக்குதல்,கன்னட சேனங்களின் தடை, தமிழ்திரைப்பட கலைஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போன்றவற்றால் பரஸ்பர பகை உணச்சிகளே மேலோங்குகின்றன.
ஆனால் இப்போது நாம் திட்டவட்டமாக ஒரு தீர்வை எடுத்தாக வேண்டும். தேசியத்தை கட்டிக்காக்க முடியாவிட்டால் அந்த தேசிய கட்சிகளில் தமிழர்கள் அங்கத்தினர்களாக தொடர்வதில் அர்த்தம் தான் என்ன?
மார்ச் 20ந் தேதி எடியூரப்பா ஒகேனக்கல் வந்து பிரச்சினை ஏற்படுத்திய போது, ''அவரை சந்தித்து உண்மை நிலையை விளக்குவோம் ''என்ற தமிழக பா.ஜ.க வினரால் இன்றுவரை அதை செயல்படுத்தமுடியவில்லை
அகில இந்திய தலைமையும் இந்த அநியாயத்தை வேடிக்கைபார்க்கிறது. அதேபோல் திமிழககாங்கிரசார் தமிழக சட்டமன்றத்திலும் பத்திரிக்கைகளிலும் மட்டுமே தங்களை வெளிப்படுத்த முடிகின்றதேயன்றி கர்நாக காங்கிரஸாரிடமோ , டெல்லி தலைமையிடமோ உண்மைகளை உரத்துச்சொல்ல முடியல்லை.
இது தான் கம்யூனிஸ்டுகளின் நிலைமையும்!
அரசியல் பிழைப்பாகி போய்விட்டது என்றால், அரசியல்வாதிகளிடமிருந்து பிழைத்துக் கொள்வது பற்றி மக்கள் யோசிக்கவேண்டியதாகிவிடும்
Saturday, March 22, 2008
ரஜினிமட்டுமல்ல, எல்லோருமே திருடங்கதான்!
- சாவித்திரி கண்ணன்
அரசாங்கமே அறிவித்துவிட்டது.
ரஜினிகாந்த் நிலம் வாங்கியதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்பதாக! இது உண்மையாகக் கூட இருக்கலாம்! ஆனால் ரஜினிகாந்த் நிலம் வாங்கியது தொடர்பான சர்ச்சையில் தமிழக அரசின் மரியாதைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது சர்வ உண்மையாகும். மார்ச் 20ந்தேதி குமுதம் ரிப்போர்ட்டரில் புஷ்கின் ராஜ்குமார் எழுதிய கட்டுரை நடிகர் ரஜினிகாந்த் திருவள்ளுர் மாவட்டம் ஆரணிபகுதியில் கன்னிகைபேர் கிராமத்தில் சுமார் 9 ஏக்கர் நிலத்தை சந்தை மதிப்புபடி சுமார் இரண்டேகால் கோடிக்கு வாங்கியதாகவும், ஆனால் பதிவுகட்டணம் கட்டும் போது கிட்டத்தட்ட அதில் பங்கில் ஒரு பங்கையே நிலத்தின் மதிப்பீடாக காண்பித்து மிகக்குறைந்த பதிவுகட்டணத்தை கட்டியதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் விதிமுறைகளுக்கு மாறாக பதிவுத்துறை அதிகாரியே ரஜினிகாந்த் வீட்டிற்குச்சென்று பதிவு செய்து விட்டு ஆனால் ரஜினிகாந்த் நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலகம் வந்து கையெழுத்து போட்டதாக பொய்யான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குமுதம் ரிப்போர்ட்டர் சுட்டிக்காட்டியிருந்தது.
இதைத்தொடர்ந்து இச்செய்தி பல தினசரிகளிலும் வெளியானது. ஆகவே இப்பிரச்சனையில் விசாரணை செய்து உண்மையறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டதாகவே தகவல் இல்லை. விசாரணைக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஸ்வரூப செல்வாக்கு கொண்டவரல்லவா அவர்? அவரிடம் விளக்கம் கேட்டிருந்தால் அவருடைய லட்சோபலட்சம் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்ற தயக்கம் தமிழக அரசின் தலைமைக்கு இருந்திருக்கலாமோ என்னவோ!
இப்படி விசாரணைக்கே அவரை உட்படுத்த தயங்குபவர்களை அவர் ஏதேனும் வில்லங்கம் செய்திருந்தால் அதை வெளிப்படுத்த துணிவார்களா? என்பதே மக்களின் மனதில் மேலோங்கி நிற்கிறது. சந்தை மதிப்புபடி சுமார் 2 கோடி சொச்சத்திற்கு சொத்துவாங்கிய ரஜினிகாந்த் அரசின் வழிகாட்டுதல் மதிப்புபடி குறைந்த பதிவு கட்டணத்தை காட்டியுள்ளார்.
இந்நிலையில் தான்வாங்கிய உண்மையான சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப பதிவு கட்டணம் ஒன்பது சதவிகிதத்தை ரஜினிகாந்த் கட்டியிருக்க வேண்டும் என நாம் கருதுவது சற்றே அதிகபட்ச எதிர்பார்ப்பாகத் தான் தோன்றுகிறது. எனினும் ரஜினிகாந்த் பற்றி சமூகத்தில் ஊடகங்களாலும், பல செல்வாக்கான முக்கியஸ்தர்களாலும் கட்டமைக்கப்பட்ட 'மிகவும் உண்மையான மனிதர்' என்ற பிம்பம் மக்களை அவர் நியாயமானவராக நடந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தந்திருப்பது தவிர்க்கவியலாதது. ஏனெனில் இரண்டுவிதத்தில் இது பாதகமான செயல்.
ஒன்று- 'கணக்கில் வராத பணம் என்பது கறுப்புபணம்' என்ற வகையில் கூடுதலாக ரஜினி கொடுத்த பணத்திற்கும், வாங்கிய பணத்திற்கும் இது பொருந்தும்.
மற்றொன்று- கறுப்பு பணம் கைமாறும் போது அரசாங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய வரி இழப்பு.
ஆயினும் சட்டப்படி ரஜினிகாந்த் அரசின் வழிகாட்டுதல் மதிப்புபடி பதிவு கட்டணம் கட்டியுள்ளார்.... என்பதை மறுக்க முடியாது. சந்தை மதிப்புக்கேற்ப நான் வாங்கிய சொத்தின் மதிப்பிற்குரிய பதிவு கட்டணத்தையே முறையாக கட்டுவேன் என்பது ஒருவரின் தார்மீக நெறிமுறை, மனசாட்சி சம்பந்தப்பட்ட விவகாரமே தவிர அரசாங்க பிரச்சனையல்ல.
ஆனால் இந்த விவகாரம் உரிய முறையில் அரசாங்கத்தால் விசாரிக்கப்படவில்லை என்பதைப் போலவே கடைசி வரை இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் தன்நிலை விளக்கம் தராததும் கவனத்திற்குரியதாகும்.
இதில் சம்பந்தப்பட்ட பணத்தைவிடவும் மிகவும் பாதிப்புக்குரிய அம்சம் ரஜினிகாந்த் நேரிலே செல்லாமல் செய்யப்பட்ட பதிவை நேரில் சென்று செய்ததாக அரசே அறிவித்த அவலம். சட்டத்தில் ஒருவர் நேரிடையாக பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்லாமல், அதிகாரிகளே சம்பந்தப்பட்டவரின் இல்லம் வந்து கையெழுத்து பெறுவதற்கான சில அரிய விதிவிலக்குகள் உள்ளன. அப்படியிருக்க ரஜினிகாந்த் நேரடியாக பதிவு அலுவலகம் செல்லாததை பெரிய குற்றமாக கருதக்கூட வாய்ப்பில்லை. ஆனால் நடக்காத ஒன்றை நடந்ததாக பதிவு செய்வது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். ரஜினிகாந்த் நேரில் வந்து கையெழுத்திட்டார் என்று துணிந்து பதிவு செய்த அதிகாரி தண்டிக்கபட்டிருக்க வேண்டும். ஆனால் ரஜினிகாந்தின் அனுசரணையோடே இந்த குற்றம் நடந்திருப்பதால் அவரை தண்டிப்பது ரஜினிகாந்தின் தவறை வெளிச்சம் போட்டதாகிவிடும்... என்று அரசாங்கம் அரண்டுபோய் ஒரு தனிநபருக்காக அப்பட்டமாக ஊர்உலகறிய பொய் விளக்கம் தருகிறது.
'வாய்மையே வெல்லும்' என்பது தமிழக அரசின் அரசாங்க சின்னத்துடன் பொறிக்கப்பட்ட வாசகம். இந்த அரசு 'வாய்மையே வெல்லும்' என்பதை வெறும் வாசகமாக வைத்துக்கொண்டு தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டது தமிழக அரசு.
இந்நிலையில் ரஜினிகாந்த் மிகவும் நேர்மையானவர். திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர். நிஜவாழ்வில் நடித்தறியா உண்மையான மனிதர். ஆன்மீகவாதி... என்று ஊடகங்களால் சலிப்பே இல்லாமல் பரப்பப்பட்ட சங்கத்தின் நினைவுக்கு வருகிறது.
"ரஜினிகாந்தை போன்ற நேர்மையானவர் அரசியலுக்கு வரவேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அரசியலே தூய்மையாகும். ஊழல் இருக்காது. நல்லாட்சி கிடைக்கும்..." என்று ஓயாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசியும், எழுதியும் வருகிற துக்ளக் ஆசிரியர் 'சோ' இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்த மாட்டார். ஏனெனில் மேற்படி குற்றம் செய்தது கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ இல்லை என்ற போது அவர் இதில் அக்கரை காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன?
Friday, March 21, 2008
ஒகேனக்கலும், ஓட்டு அரசியலும்
Thursday, March 13, 2008
எப்படி ஏற்பட்டது மின்சாரத்தட்டுப்பாடு?
- சாவித்திரி கண்ணன்
மின்தடை ஏற்பட்டால் ஏற்படும் எரிச்சலைவிட அதிக எரிச்சலாக உள்ளது மின்சார பற்றாக்குறை தொடர்பாக அரசியல் கட்சிகள் விடுக்கும் அறிக்கைகள்! "மின்சார உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்பற்றாக்குறை மாநிலமாக்கியுள்ளது தி.மு.க ஆட்சி " என்கிறார்.
ஜெயலலிதா
சென்ற அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்சார உற்பத்திக்காக எந்த திட்டமும் செயல்படுத்தாமல் விட்டது தான் இப்போதைய மின்சாரதட்டுப்பாட்டுக்கு காரணம்" என்கிறார் ஆற்காடு வீராச்சாமி.
இந்த இருவருமே பல உண்மைகளை மறைத்து, மக்களை திசைதிருப்பவே அறிக்கை யுத்தம் நடத்துகின்றனர். மின்சார உற்பத்தியில் தமிழகம் எப்போது மிகை மாநிலமாக இருந்தது...? அதுவும் ஜெயலலிதா ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் மின்உற்பத்திக்காக தொலைநோக்குத்திட்டங்கள் எவ்வளவு போடப்பட்டது?
அதே போல் அ.தி.மு.க வைத் தவிர்த்து, கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி செய்த சுமார் 14 ஆண்டுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனை மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன?
மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்குமே ஒரே விடை, இரு கழகங்களின் ஆட்சிகளிலுமே தமிழகம் மெல்ல, மெல்ல இருளுக்குள் தள்ளப்பட்டது என்பது தான்!
கருணாநிதி ஆட்சியிலிருந்த காலகட்டத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி யிலிருந்த காலகட்டத்திலும் சரி தமிழக மின்உற்பத்தி சுமார் 10 முதல் 30 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது. அதே சமயம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகாலத்திலும் சுமார் 120 சதவிகிதம் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினார். இத்தனைக்கும் அவர் ஆட்சி செய்த கால கட்டத்தில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி இப்போதைய காலத்தைப் போல் இவ்வளவு வேகமான விஸ்வரூப வளர்ச்சியை காணவில்லை. ஆனால் உலகமயம், மற்றும் தாராளமயத்தின் தாக்கத்தால் தடையற்ற அந்நிய முதலீடுகளும், தொழிற்சாலைகளின் பெருக்கமும் அதிகரிக்கும் நேரத்தில் இரு கழகங்களுமே மின் உற்பத்தியில் அக்கரை காட்டாமலிருந்துவிட்டனர்.
காரணம் இது தான்; மின் உற்பத்தியக்கான திட்டங்கள் என்பவை காலங் கனிந்து பயன்தரக்கூடியவை. அதாவது இப்போது முதலீடு செய்தால் குறைந்தது ஆறேழுவருடங்கள் கழித்துதான் அறுவடை செய்யலாம். அப்போது ஆட்சி மாறிவிட்டிருப்பின் அது அந்த ஆட்சிக்கு பெயர் தந்துவிடுமே....
ஆகவே, இப்படிப்பட்ட மக்கள் நலன், நாட்டுமுன்னேற்றம் சார்ந்த தொலைநோக்கு திட்டங்களையே யோசிக்கக்கூடாது. உடனடியாக மக்கள் பலனடைந்து அதன் காரணமாக ஓட்டு வாங்கக்கூடிய இலவசங்களை அள்ளி இறைக்கும்' திட்டங்களுக்கே நிதியை திருப்பிவிடலாம்' என்பதே இரு கழகங்களின் நடைமுறையாக இருந்துள்ளது. இது மட்டுமல்ல, மின் வாரியத்தில் 'ஷாக்' அடிக்கும் படியான ஊழல்களும், நிர்வாக சீர்கேடுகளும் வேறு மலிந்துவிட்டன. இதன் விளைவாக உற்பத்தியாக வேண்டிய மின்சாரமே கூடதடைபட்டுள்ளது.
நீர்மின்சக்தி மூலம் தமிழகம் பெற்றுக்கொண்டிருந்த 2184 மெகாவாட்டில் தற்போது சுமார் 400 மெகாவாட் தடைபட்டுள்ளது. அதே போல் அனல் மின் நிலையங்கள் மூலம் அடைந் திருக்க வேண்டிய இலக்கு 2970 மெகாவாட், ஆனால் அதில் இப்போது 550 மெகாவாட் தடைபட்டுள்ளது.
'அடுத்த மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கி சமாளிப்பேன்' என்று சொல்லும் ஆற்காடு வீராச்சாமி இருக்கிற மின்உற்பத்தி நிலையங்கள் சிறப்பாக செயல்படாமல் சீரழிந்துவருவதைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் அவருக்கோ எப்போதும் முதலமைச்சரின் நிழல்போல அவரை பின்தொடர்வதற்கே நேரம் போதவில்லை. தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்ற தலையாய பிரச்சனையில் தலையிடுவதற்கு அவருக்கு எங்கே நேரம் கிடைக்கிறது? அதற்குத்தான் அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது அவர்களின் பாடு... என்பதே அமைச்சரின் அணுகுமுறையாக உள்ளது.
ஆனால் அதிகாரிகள், இருக்கும் வாய்ப்புகளுக்குள் இருந்துதான் இயங்க முடியும். அவர்களால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது. உதாரணமாக கடந்த 17 ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் நிதியில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது
எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை? கூடுதலாக மின் உற்பத்திக்கு நிதி தேவைப்படும் காலகட்டத்தில் அதை குறைக்க வேண்டியதுதான் காரணத்தை விளக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதா, ஆற்காடு வீராச்சாமி இரு வருக்குமே உள்ளது.
இது மட்டுமல்ல, அரசாங்கம் முதலீடு செய்தபோது குறைந்த செலவில் பெறமுடிந்த மின்சாரத்தை தனியார் கைகளுக்கு தாரைவார்த்து அதை எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டு போனபோதிலும் இரு கழகங்களும் இறுமாப்பு கொள்ளலாம்.
தனியார் மின்உற்பத்தி செய்ய தாராள சலுகைகளை அள்ளித்தந்தது தமிழக அரசு, அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை அதிக விலை தந்து வாங்கிய வகையில் அடைந்ததோ அபார நஷ்டம்.
தனியார் மின் உற்பத்தியில் இறங்ககாத காலகட்டம் வரை நமது மின்வாரியம ஒரு பற்றாக்குறையற்ற வாரியமாகவே பரிமளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் தந்த நிர்பந்தங்களால் தமிழக மின்வாரியம் இன்று 3000 கோடி பற்றாக்குறையில் மூழ்கிவிட்டது. இத்தனை இழப்புகளுக்குப் பிறகு தமிழகமக்களின் மின்தேவையில் தனியார் நிறுவனங்கள் தந்த மின்சாரத்தின் மூலம் வெறும் 9 சதவிகிதத்தை மட்டுமே ஒப்பேற்ற முடிந்துள்ளது.
இந்தச் சூழலில் அமைச்சர், "வணிக ரீதியில் 25,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடத்தில் இந்த மின்சாரம் கிடைத்துவிடும் என அறிவித்துள்ளார். ஆனால் இது சாத்தியமே இல்லை, வெறும் சவடால்தான். என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்
இலவச கலர் டெலிவிஷன்களுக்கு பலநூறுகோடி செலவழிக்க முடிந்த தமிழக அரசுக்கு பல்வேறு வகையிலும் அடிப்படை, அத்தியாவசிய தேவையாகிப்போன மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு முதலீடு செய்ய மனமில்லை என்பது கவலையளிப்பதாக உள்ளது.
"வட மாநிலங்களைவிட தமிழகத்தில் மின்வெட்டு குறைவுதான். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தவேண்டும்..." இப்படியெல்லாம் சொல்வது அவமானகரமானது, என்பதைக்கூட உணராதவர்கள் தான் இன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளனர்.
உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தில் அலட்சியம் காட்டுபவர்களை வாழும் தலைமுறைமாத்திரமல்ல, வருங்காலத் தலைமுறையும் மன்னிக்காது.
Monday, March 10, 2008
சூதாட்டமாகும் கிரிக்கெட்
Thursday, February 28, 2008
சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல்
ஊடக வரலாறு
எப்போது பத்திரிக்கைகள் வர தொடங்கினவோ, அப்போது முதல் அதிகார மையங்கள் அட்டங்கொள்ள ஆரம்பித்தன. மன்னர்கள் தலைகளிலிருந்த மகுடங்கள் மக்கள் கைகளுக்கு மாறத்தொடங்கிய காலத்தின் அறிகுறியாக பத்திரிக்கைகள் ஆரம்பமாயின.
அரசர்களை ஆண்டவனுக்குச் சமமாக அடையாளம் காட்டி, மக்களை உரிமைகளற்ற ஊமைப் பதுமைகளாகக் கருதிய மன்னராட்சி காலங்களில், அரசனாக விரும்பிவெளிபடுத்தும் செய்திகளின்றி வேறெந்த செய்திகளையும் மக்கள் தெரிந்துகொள்ள வழியில்லை. நாற்சந்தியில் முரசைரைந்து நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட அரசு செய்திகளும், வரலாற்றில் இடம்பெறவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கல் வெட்டுகளும் மட்டுமே அன்றைய தினம் மக்கள் அறிந்து கொள்ள முடிந்த செய்திகளாயிருந்தன.
'நவீன நாகரிகத்தின் சின்னம்' என்றும், 'பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்' என்றும் பாரதியாரால் அர்த்தப்படுத்தப்பட்ட பத்திரிக்கை தொழில் சீனாவில் வேர்விட்டது, ஜெர்மனியில் உருப்பெற்றது, இங்கிலாந்தில் வலுப்பெற்று வடிவம் கண்டது.
17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கில செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. 17ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அமெரிக்காவிலும் செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. ஆனால் இந்தியாவிலோ இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு பிறகே, 1780ல் முதல் செய்திதாள் வெளியானது. இந்திய இதழியல் துறையின் முன்னோடியான 'ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹக்கியின்' 'பெங்கால்கெஜட்' அந்தாளில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தது.
முதல் முப்பது ஆண்டுகள் ஆங்கிலத்தில் மட்டுமே செய்திதாட்கள் வெளிவந்தன முதன் முதலாக இந்திய மொழிகளில் தமிழ்தான் இதழியலுக்காக அச்சேறிய மொழியாகும். அச்சேறிய ஆண்டு 1812. இதழின் பெயர் மாசத் தினசரிதை. இந்த இதழின் ஆசிரியர் தஞ்சையை சேர்ந்த ஞானபிரகாசம்இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இதழியல் ஆய்வில் தொய்வின்றி ஈடுப்பட்டு வரும் மூத்த பத்திரிக்கையாளர் அ.ம.சாமியின் 'விடுதலை இயக்கத் தமிழ் இதழ்கள்' என்ற நூலில் உள்ளது. ஆனால் இது வரையிலான மற்ற பல ஆய்வாளர்கள் 1820களில் வெளியான வங்காள இதழ்களையே இந்திய பிரதேச மொழிகளில் வெளியான முதல் இதழ்களாக எழுதி வந்தனர்.'தின மாதச்சரிதை' விடுதலை இயக்கப்போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்ததாக தகவல் இல்லை. ஆனால் சுதேசிமித்தரனுக்கு முன்பாகவே பல தமிழ் இதழ்கள் விடுதலைப்போராட்டங்களுக்கு வித்தூன்றியது என்ற தகவல்கள் இப்போது தான் வெளியாக ஆரம்பித்துள்ளன.
1831ல் வெளியான 'தமிழ் மேகசின்' தமிழின் முதல் இதழ் என்றும்,. 1856ல் வெளியான தினவர்த்தமானியே முதல் வார இதழ் என்றும் கூறுகிறார் டாக்டர் மா.பா.குருசாமி.
ஆயினும் சுதேசிமித்திரனுக்கு முன்பே 'சேலம் சுதேசாபிமானி' என்ற மாதமிருமுறை இதழை1877லிருந்தே சே.ப.நரசிம்மலு என்ற சிறப்புமிக்க செய்தியாளர் நடத்தியுள்ளார்.இதை மற்றொரு இதழியல் ஆய்வாளரான பெ.சு.மணியும் உறுதிப்படுத்துகிறார். தமிழின் முதல் புலனாய்வு இதழ் என்ற கூடுதல் சிறப்பும் இவ்விதழுக்குரியது. 1881 களிலேயே மாஜிஸ்திரேட்டுகளும், தாசில்தாரும், மலினப்பட்டு கையுட்டுப்பெறுவதை கண்டுபிடித்து எழுதியது இவ்விதழ்.
சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் எனக் கருதப்பட்ட நரசிம்மலு ஒரு கள ஆய்வாளருமாவார். கோவை குடிநீர் பஞ்சம் தீர மலை உச்சியிலிருக்கும் முத்துக்குளம் அருவியிலிருந்து தண்ணிர் கொண்டு வரமுடியம் என்று முதன் முதல் கண்டறிந்து எழுதியவர், வலியுறுத்திச் சொன்னவர் நரசிம்மலு.
1800களின் பிற்பகுதியலேயே தமிழில் சுமார் ஐநூறு இதழ்கள் வெளிவந்துள்ளன. வேறெந்த இந்திய மொழிகளிலும் இவ்வளவு அதிகமான இதழ்கள் வெளியாகியிருக்குமா....? என்பது கேள்விக்குறி. அதே சமயம் மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததாகச் சொல்ல வழியில்லை. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரமே ஏழெட்டு சதவீததிற்கு மேலில்லை. அப்படி படித்தவர்களிலும் கூட நாட்டு நடப்புகளை, பொதுவிவகாரங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் இல்லை.
இதனால் பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் பாடு,படு திண்டாட்டமாயிருந்துள்ளது. பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் எப்படியாவது சந்தா சேர்பதற்காக முதல் சில நாட்கள் இலவசமாக அனுப்பியும்கூட மக்கள் இசைந்து கொடுக்கவில்லை. மேலும் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழ் பத்திரிக்கை படிப்பதை காட்டிலும் ஆங்கில பத்திரிக்கையில் தான் ஆர்வம்காட்டியுள்ளனர். எனவே மக்களை பத்திரிக்கை படிக்கவைக்க மன்றாடிபார்த்தும் அவர்கள் மசியாத காரணத்தால் மரித்து போன பத்திரிக்கைகள் அநேகம்.
பத்திரிக்கைகளின் விற்பனையோ சுமார் 50 படிகளிலிருந்து அதிகபட்சம் 500 படிகள் என்பதாயிருந்தது. விலையோ சுமார் ஒருபைசாதான். இதில் விதிவிலக்காக விற்பனையை அதிகபடுத்தி 1000 பிரதிகளை தொட்ட பத்திரிக்கை ஜி.சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்ட 'சுதேசமித்திரன்' தான். சுதந்திர வேட்கைக்கான சுடரொளி தாங்கிய இதழாக தமிழ்மக்களால் இது தலையில் வைத்து போற்றப்பட்டது. ஆரம்பித்த காலத்தில் அதிக பொருளாதார இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அழுத்தமான கொள்கைப்பற்றால் மெல்ல, மெல்ல ஆதரவு தளத்தை அதிகபடுத்தி கொண்டது.
காங்கிரஸ் பேரியக்கத்தின் எண்ணங்களை, நோக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் மகத்தான பங்குபணி ஆற்றியது இவ்விதழ். ஜி.சுப்பிரமணிய ஐயர் முற்போக்கு வாதியாக, முன்னோடியாகத் திகழ்ந்தவர். விதவைப்பெண்கள் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்டு சகல இன்னல்களுக்கும் சாட்சியங்களாகி கொண்டிருந்த சமூகச் சூழலில், தன் விதவை மகளுக்கு மறு விவாகம் செய்து வைத்தார். இதனால் இந்து பத்திரிக்கையின் பாகஸ்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் பலர் இடர்பாடுகளுக்கு ஆளாகி கடைசியில் இந்து பத்திரிக்கையை தன் கூட்டாளி வீரராகவாச்சரியிடமே விட்டுவிட்டார்.
தி ஹிந்து பத்திரிக்கை ஜி .சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு ஆங்கில அரசுக்கு அனுசரனையாக மாறியது. ஆங்கில அரசின் அடக்குமுறைசட்டங்களால் சிறைசாலைக்கு சென்று மனச் சிதைவுகளுக்கு ஆளானார் ஜி.சுப்பிரமணிய ஐயர். சுதந்திர வேட்கையில், சுதேசாபிமானத்தை சாதரண மக்களிடம் சரியாக எடுத்துசென்ற சமூக கடமையை செய்த ஜி. சுப்பிரமணிய ஐயர் தான், மதுரையிலுள்ள பள்ளிகூடத்தில் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பாரதியாரை சென்னைக்கு அழைத்து சுதேசிமித்திரனின் துணைஆசிரியராக்கி, பாரதியாரை இந்த பாருக்கே அறிமுகம் செய்தார்.
பற்றிக்கொள்ளும் நெருப்பு போல பத்திரிக்கைதளத்தில் கருத்துகளை பரப்பியவர் பாரதியார். சுதேசகருத்துகளை பரப்புவதே சுவாசமாக்கி கொண்ட பாரதியார் சுதேசமித்தரத்திரனை சுதந்திர வேட்கைகான போர்வாளாக மாற்றினார். ஆயினும் அவரது அதித ஆற்றலுக்கு சுதேசமித்திரன் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. அவரது கவிதைகளை பிரசுரிப்பதற்கு சுதேசமித்திரன் ஆசிரியர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகவிருந்து கொண்டு 'சக்கரவர்த்தினி' மகளிர் மாத இதழின் ஆசிரியராக சமரசமற்ற கருத்துப்போர் நடத்தினார் பாரதியார்.
மண்டையம் குடும்பத்தாரின் ஆதரவில் நடத்தப்பட்ட 'இந்தியா' இதழின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்ற ஆண்டு ஆண்டு 1907. அந்த ஆண்டில் தான் இந்திய தேசிய காங்கிரஸானது தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாக பிளவப்பட்டது. தீவிரவாதிகளின் அணியில் இருந்த பாரதியார் திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு தீப்பிழம்பாக இந்தியாவில் கட்டுரைகளை எழுதினார். இதனால் இந்தியா இதழை அசிட்டவரான சீனிவாசனை ஆங்கில அரசு கைது செய்து ஐந்து வருடம் சிறையில் அடைத்தது. பாரதியார் தப்பிச்சென்று பாண்டிச்சேரியில் அடைக்கலமானார். பாண்டிச்சேரியிலிருந்து கொண்டே இந்தியா இதழை மூன்றாண்டுகள் மும்மரமாகக் கொண்டு வந்தார் பாரதியார். அந்நாளில் 'இந்தியா' இதழின் விற்பனை அதிகபட்சமே ஆயிரம் பிரதிகள் தான் என்றபோதிலும் ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஐம்பது பேரிடமாவது கைமாறியது; விவாதிக்கப்பட்டது; விரிவான கருத்துப் பரவலுக்கு வித்தூன்றியது.
பாரதியார் இந்தியா இதழின் வருடச் சந்தாவை எப்படி நிர்ணயித்தார் என்பது சுவாரஷ்யமான செய்தியாகும். சாதாரண பொது ஜனங்களுக்கு ஆண்டு சந்தா ரூபாய் 3 என்ற பாரதியார், வசதியாக வருவாய் ஈட்டுவோருக்கு ரூபாய் 15 என்றும், ஜமீன்தார், ராஜாக்களாயிருந்தால் ரூபாய் 30 என்றும், வெள்ளை அரசாங்கத்தாருக்கு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்குகுறைந்து அனுப்ப முடியாதென்றும் அறிவித்தார். 'கார்டூன்' எனப்படும் கருத்து சித்திரத்தை தமிழ் பத்திரிக்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா இதழ். எப்படி இந்த கருத்து சித்திரத்தை ரசிக்கவேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் கூடவே வர்ணித்து எழுதினார் பாரதியார்.
இந்தியா இதழோடு 'பாலபாரதம்' என்ற ஆங்கில வார இதழும் துணை இதழாக வந்தது. இந்த ஆங்கில இதழின் ஆசிரியரும் பாரதியார் தான். புதுச்சேரி புகழிடம் தானே என்றில்லாமல் 'விஜயா' என்ற மாலை நாளிதழுக்கும் ஆசிரியராயிருந்தது எழுதிகுவித்தார் பாரதியார். இது புதுவையில் வெளியான முதல் நாளிதழாகும். பிறகு சூரியோதயம் என்ற வார இதழிலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆங்கில அரசை எதிர்த்து எழுதினார் பாரதியார். இதனால் இந்தியா இதழுடன் இவ்விதழுக்கும் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
அரவிந்தர் ஆசிரியராகவிருந்து நடத்திய ஆங்கில இதழான கர்மயோகியின் தமிழ் பதிப்புக்கும் பாரதியார் ஆசிரியராக இருந்தார். இப்போது இலவசமாக வழங்கப்படும் இதழ்களைப் போல அன்றே இலவசமாக விநியோகப் பட்ட இதழின் பெயர் தர்மம். இதிலும் ஆசிரியர் பொறுப்பேற்று தர்மயுத்தம் நடத்தினார் பாரதியார். பாரதியின் வெற்றி பெறாத முயற்சிகளாக முளையிலேயே அழிந்தது 'அமிர்தம்' என்ற பெயரில் அவர் ஆரம்பிக்கவிருந்த இதழும், 'சித்திராவளி' என்ற பெயரில் முழுக்க முழுக்க சித்திரங்களின் வழியாகவே கருத்தை பரப்ப எண்ணிய இதழும்!
பாரதியார் சுமார் 18 ஆண்டுகளே பத்திரிக்கை துறையில் பணியாற்றியுள்ளார். இந்த குறுகிய காலகட்டத்திலேயே அவர் ஈடிணையற்ற சாதனையாளராக சகலவிதங்களிலும் முத்திரை பதித்துள்ளார். அவர் எழுதிய காலகட்டங்களில் தமிழ்நாட்டில், இந்தியாவில், சர்வதேச நாடுகளில் நிகழ்ந்த பெரும்பான்மையான நிகழ்வுகளை ஊன்றி கவனித்து விமர்சித்துள்ளார்.
நிரந்தரமாக ஒரே இதழில் பணியாற்ற முடியாமை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிக்கைகளில் எழுதுவது, பற்பல புதிய யுத்திகளை இதழியலுக்கு கொண்டுவந்தது. லட்சிய நோக்கத்தோடு பத்திரிக்கை நடத்தி தொடரமுடியாமல் துவண்டது,அப்படியும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய இதழ்கள் கொண்டுவர முயன்று முடியாமல் போனது.... என எண்ணற்ற இன்னல்களை பத்திரிக்கை அனுபவத்தில் பார்த்தவரான பாரதி மீண்டும் சுதேசிமித்திரனிலேயே வந்து சேர்ந்துவிட்டார்.
பாரதியாரின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணியசிவா 'ஞானபானு', 'பிரபஞ்சமித்திரன்' என்ற இதழ்களை நடத்தி தீப்பிழம்பென சுதேசியத்தையும், தமிழையும் ஒருங்கே பரப்பினார். "உறங்கி கிடக்கும் தமிழ்சாதியாரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணி முன்னிலையில் கொண்டுவருவதே இப்பத்திரிக்கையின் நோக்கம்" ஞானபானுவின் 1915ஜூன் இதழில் பிரகடனப்படுத்தினார். கூடவே சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் எழுதப்படும் கட்டுரைக்கு ரூபாய் 5 பரிசாகத் தரப்படும் என்றும் சிவா அறிவித்தார்.
தென்நாட்டுத் திலகராக மக்களை தட்டி எழுப்பிய வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஞானுபானு'வின் ஆசிரியப் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டுள்ளார். இது தவிர தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியான 'விவேகபாநு'விலும் இலங்கையிலிருந்து வெளியான வீரகேசரியிலும் தொடர்ந்து எழுதிய வ.உ.சி பத்திரிக்கை தொடஙுகும் முயற்சிகளில் ஈடுபட்டு அந்த எண்ணம் ஈடேறாமல் விட்டுவிட்டார்.
திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 'தேசபக்தன்' இதழ் 1917முதல் வெளியானது. தெருவெங்கும் தமிழ்முழக்கமும் ,தேசிய முழக்கமும் செய்யும் இதழாக இது வெளியானது. சமஸ்கிருதம் கலந்த மணிப் பிரவாள நடையிலேயே மற்ற பத்திரிக்கைகள் அன்று வந்து கொண்டிருந்த சூழலில் தனித்தமிழை, பழகு தமிழாக்கி மக்களிடையே பரவவிட்டார் திரு.வி.க. தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்குவதிலும் தொழிலாளர்களிடையே தமிழ்ப்பற்று, தேசப்பற்று வளர்வதற்கும் திரு.வி.க 'தேசபக்தன்' வழியாக தீவிர பணியாற்றினார். பிறகு 1920 தொடங்கி 1941 வரை 'நவசக்தி' என்ற வார இதழை திரு.வி.க நடத்தினார். அப்போது திரு.வி.கவின் குருகுலத்தில் உருவானவர்களே வெ.சாமிநாதசர்மா, கல்கி, கி.வா.ஜகந்தாதன் போன்றோர்.
மற்றொரு தேசபக்தரான வ.வே.சு ஐயரவர்களும் திரு.வி.க விற்கு பிறகு சிறிது காலம் 'தேசபக்தன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். இவர் திரு.வி.கவை விடவும் தீவிரமாகத் தனித்தமிழை கையாண்டவர். பத்தரிக்கையின் பக்க எண்களைக் கூட தமிழ் எண்ணிலையே குறிப்பிட்டார் வ.வே.சு ஐயர். சேலம் மருத்துவர். வரதராஜூலு நாயுடுவால் நடத்தப்பட்ட தமிழ்நாடு இதழுக்கு தமிழ் இதழியல் வரலாற்றில் தனி முக்கியத்துவமுண்டு. 1923-ல் வார இதழாக ஆரம்பிக்கப்பட்டு 1926ல் நாளிதழாக்கப்பட்டு 1931வரை வெளியான தமிழ்நாடு இதழ், சுதேசிமித்திரனுக்கு போட்டி இதழாக பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. இந்த இதழ் பல முன்னோடி இதழலாளர்களை தமிழ் இதழ் உலகிற்கு தநதது. 'பேனா மன்னன்' என்றழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், மணிக்கொடி சீனிவாசன், வ.ரா, தி.ஜ.ர , 'தமிழ் மணி' ரெங்கசாமி, 'வந்தேமாதரம்' சீனிவாசன், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பலர் இந்த இதழிலிருந்து உருவானார்கள். மருத்துவர் வரதராஜூலுநாயுடு தான் முதன் முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஆந்திரபிரஜா ஆகிய இதழ்களை ஆரம்பித்தார். டி.எஸ். சொக்கலிங்கம் 'தமிழ்நாடு' இதழுக்குப் பிறகு 'காந்தி' என்ற வாரமிருமுறை இதழை 1931ல் ஆரம்பித்தார். காலாணாவிலைக்கு விற்பனையான இவ்விதழ் காலப்போக்கில் நாளிதழானது. இவ்விதழ் நின்றபிறகு 1934ல் தினமணி ஆரம்பிக்கபட்டபோது அதன் ஆசிரியரானார். பாரதியின் நினைவுநாளான செப்டம்பர்11ல் ஆரம்பிக்குப்பட்ட தினமணி 'பாரதியின் கனவை நிறைவேற்றுவதே இதழின் லட்சியம்' என்று பிரகடனப்படுத்தியது.
தினமணி ஆசிரியர்குழுவிலிருந்த அத்தனை பேருமே தேசபக்தர்களாகவும், சிறந்த எழுத்தாளர்களாகவுமிருந்தனர். இதில் சிலர் சுதந்திர போராட்டத்தில்சிறையும் சென்றுள்ளனர். ஏ.என். சிவராமன், புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி... போன்றோரை துணை ஆசிரியர்களாக கொண்டு சொக்கலிங்கம் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் தினமணியின் வரலாற்றில் ஓர் பொற்காலமாகும்.
பிரபல பத்திரிக்கையாளர் சதானந்த்தால் ஆரம்பிக்கப்பட்ட தினமணி பிறகு ராம்நாத்கோயங்காவின் கைக்குமாறியது. அதற்கு பிறகு ஏற்பட்ட நிர்வாக அணுகுமுறைகள், அவர்கள் ஆசிரியர் குழுவினரை நடத்தியவிதம் போன்றவற்றில் அதிருப்தியுற்று சொக்கலிங்கம் தினமணியிலிருந்து வெளியேறி 'தினசரி' என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பித்தார். அவருடனேயே வெளியேறியவர்களில் புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி குறிப்பித்தக்கவர்கள். பொருளாதார நெருக்கடிகளால் 'தினசரி' திணறி நின்றுபோனது. பிறகு ஜனயுகம்,பாரதம்,நவசக்தி போன்ற பல பத்திரிக்கையும் நடத்தினார் சொக்கலிங்கம்.
பொதுவாகவே அந்நாளில் பத்திரிக்கையாளர் பலர் தேசபக்தர்களாக இருந்தனர். அந்திய துணிக்கடை எதிர்க்கும் மறியலில் "சுயராஜ்ஜியா" பத்திரிக்கை ஆசிரியர் சுப்பாராவ் மற்றும் நிருபர் ஓ.பி.ராமசாமி இருவரும் போலிஸ்சாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, வழக்கும் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1920கள் வரை பத்திரிக்கைகளின் விற்பனை அதிகபட்சம் ஆயிரத்து சொச்சம் என்ற அளவில் தான் இருந்தது. இப்படியான நிலையிலிருந்த இதழியல் துறை மகாத்மாகாந்தியின் அரசியல் நுழைவு ஆரம்பமான பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம், போன்றவைகளின் போது இதழ்கள் ஒரளவு விற்பனை கூடியது. உப்புசத்தியாக்கிரக போராட்டத்தின் போதோ மிகவும் உச்சபட்ச விற்பனையை எட்டின அன்றைய இதழ்கள்!
1930ல் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட 'சுதந்திரச்சங்கு' பத்திரிக்கை உலகில் ஒரு சூறாவளிபோல் சுழன்றது. எஸ்.கணேசன் என்ற தேசபக்தரால் நடத்தப்பட்ட சுதந்திரசங்குவின் ஆசிரியர் 'சங்கு'சுப்பிரமணியன். கதர்பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு, காந்தியின் பிரசங்கங்கள்..... போன்றவற்றை பிரசுரித்தே இப்பத்திரிக்கை ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்பனையானது. இதன் மக்கள் மொழியிலான நடை, எள்ளலும், துள்ளலுமான தலைப்புச் செய்திகள் போன்றவை மக்களிடம் பெரும்வரவேற்புபெற்றது. அந்தாளில் சுதந்திர போராட்டத்தில் சிறைசென்றுவெளியான தியாகிகள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு 'சுதந்திரச்சங்கு' அலுவலகம் சென்று அருகிலுள்ள கதர் கடையில் அலுவலக கணக்கில் ஒரு ஜோடி கதர் துணிமணிகளைப் பெறுவதும். அடுத்திருந்த உணவுவிடுதியில் பசியாற இரண்டு வேளை இலவசமாக உணவருந்திச் செல்வதும் வழக்கமாயிருந்துள்ளது. சுதந்திர வேள்வியில் சுடர்விடும் அக்கினிக் குஞ்சாக வெளிவந்த 'சுதந்திரச்சங்கு' 1938ல் அஞ்சாத வாசம் கண்டது.
அப்பழக்கற்ற தலைவராகவும், ஆளுமைமிக்க பேச்சாளராகவும், ஆற்றல்மிக்க இலக்கிய பேராசானாகவும் கருதப்பட்ட பா.ஜூவானந்தம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'ஜனசக்தி'வார இதழ் ஆரம்பத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் கருத்துகளை பரப்பியது. பிறகு 1942 செப்டம்பர் 30முதல் பொதுவுடைமை இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்தது. ஏகாத்திய எதிர்ப்பில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை அணிதிரட்டியதில் ஜனசக்திக்கு தனியிடமுண்டு.
1930ல் ஆனந்த விகடன் இதழ் ஆங்கில அரசால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சில காலம் வெளிவராமல் தடைப்பட்டது. இந்தியாவிற்கு தமிழகம் தந்த தலைசிறந்த பத்திரிக்கையாளர்களில் சதானந்தம் குறிப்பித்தக்கவராவார். தினமணியை ஆரம்பித்து வைத்த சதானந்தம் அதற்கும் முன்பே, முதன்முதலில் இந்திய அளவிலான செய்தி நிறுவனமாக 'அசோசியேட் பிரஸ் ஆப் இந்தியா'வை ஆரம்பித்து திறம்பட நடத்தியவர். ஆந்திரகேசரி பிரகாசத்தின் 'சுயராஜ்ஜியா' மகாத்மாகாந்தியின் 'யங் இந்தியா' ஆகியவற்றலெல்லாம் பணியாற்றியவர் சதானந்தம். 1939- 'பாரததேவி' என்ற பெயரில் நாளிதழ் மற்றும் வாரஇதழ் தொடங்கி நடத்தினார். இந்த பாரததேவியில் ஆசிரியராகப் பணியாற்றிய பக்தவத்சலம் பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சரானார். மும்பையில் 'ப்ரீ பிரஸ் ஜெர்னல்' என்ற பிரபல ஆங்கில இதழையும், 'நவபாரத்' என்ற மராட்டிய இதழையும் சதானந்தம் கொண்டுவந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு மஹாராஷ்டிர அரசு 'ப்ரி பிரஸ் ஜெனரல் சாலை' என்று பெயர் சூட்டியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் ஒரு மணிமகுடமென திகழ்ந்த மணிக்கொடி டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா, ஸ்டாலின் சீனிவாசன் ஆகிய மூம்மூர்த்திகளால் 1937ல் தொடங்கப்பட்டது. பல இலக்கிய முன்னோடிகள் இந்த இதழால் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டப்ட்டனர்.
புதுச்சேரியிலும் பல இதழ்கள் விடுதலை வேட்கையுடன் வெளியாயின அவற்றில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் சுதந்திரம் இதழ் குறிப்பிடத்தக்கது.
மகாத்மாகாந்தி அவர்களால் நடத்தப்பட்ட 'யங் இந்தியா' இதழுக்கு அவர் சிறை சென்ற தருணங்களிலெல்லாம். ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சி.ராஜகோபாலச்சாரியாரும், மதுரையைச்சேர்ந்த ஜார்ஜ் ஜோசப்பும் தான் என்பது ஒரு பெருமையான செய்தியாகும். அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த காந்தியபொருளாதார நிபுணரான ஜே.சி.குமரப்பா காந்தி சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஹரிஜன்' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றவராவார். 1942ல் 'தந்தி' என்ற தமிழ் நாளிதழை தேசிய இதழாக தொடங்கினார் சி.பா.ஆதித்தனார். அதற்கு முன்பே தமிழன் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தி விடுதலை வேட்கையை பரப்பினார் ஆதித்தனார்.நேதாஜிக்காக நிதித் திரட்டி அவரது இந்தியதேசிய இராணுவத்திற்கு உதவியது 'தினத்தந்தி'.
இவை தவிர காந்தியுகத்திற்கு முன்பே தமிழில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகுரலாகவும், ஆதிதிராவிடர்களின் ஆயுதமாகவும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சூரியோதயம் (1869), பஞ்சமன்(1871) 'திராவிடமித்ரன்'(1885) இரட்டை மலை சீனிவாசனாரால் நடத்தப்பட்ட 'பறையன்'(1893) அயோத்திதாச பண்டிதரால் நடத்தப்பட்ட ஒரு பைசா தமிழன் (1907) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
மதுவிலக்கு கொள்கையை மக்களிடையே பரப்ப இராஜாஜியால் கல்கி கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதழ் 'விமோசனம்'. இதே போல காந்தியின் கதர் பிரச்சாரத்தை வலியுறுத்துவதற்கென்றே அந்தாளில் கணக்கற்ற சிற்றிதழ்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதே வகையில் தீண்டாமைக்கு எதிராகவும் ஏராளமான சிற்றிதழ்கள் தமிழில் ஆரம்பித்து நடத்தப்பட்டன.
பொதுவாக நாட்டைபாதிக்கும் முக்கிய பிரச்சினைகள், போராட்டங்கள் வெடிக்கும் போது மக்களிடையே விழிப்புணர்ச்சி பெருகிறது. மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும், சில சமயங்களில் மக்களிடையே கருத்தாங்கங்களை உருவாக்கவும் இதழ்கள் பெரும் பணி ஆற்றியுள்ளன.
இதழியலானது மக்களிடையே ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களை அறிந்தே அன்றைய தினம் பெரும் தலைவர்களெல்லாம் இதழ்களை தொடங்கி நடத்தினார்கள். திலகர், கோபாலகிருஷ்ணகோகலே, அரவிந்தர், அபுல்கலாம் ஆசாத், வி.எஸ்.சீனிவாசாச்சிரியார்.
ஆந்திரகேசரி பிரகாசம், ராஜாஜி, ஜவஹர்லால்நேரு, மதன்மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற தேசிய தலைவர்கள் இதழியல் பொறுப்பேற்று மக்கள் திரளை தங்கள் கொள்கைகள், கருத்துகளுக்கேற்ப அணிதிரட்டினர்.
இவ்விதமே தமிழ்நாட்டிலும் ஜீவா 'ஜனசக்தி'யையும், ஈ.வே.ரா பெரியார் 'குடியரசு', 'விடுதலை' போன்றவற்றையும் சி.என்.அண்ணாதுரை 'ஹோம்லேண்ட்', திராவிடநாடு, காஞ்சி போன்ற இதழ்களையும், பிரிட்டிஸ் பேரரசை ஆதரித்து திராவிட இயகத்தினர் திராவிடன் நாளிதழையும், நீதிக்கட்சி தலைவர் டி.எம்.நாயர் 'ஜஸ்டிஸ்' ஆங்கில இதழையும் நடத்தினார்கள். இவ்விதழ்கள் பிரிட்டிஷ் பேரரசை தீவிரமாக ஆதரித்தன. காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டதை கண்டித்தன.
அந்தாளில் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பிராமணர் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் பிரமணரல்லாதோரில் பலர் தங்களுக்கு காங்கிரஸில் உரிய முக்கியத்துவம் இல்லை என கருதி காங்கிரஸுக்கு எதிராக இயக்கம் கண்டனர். மேலும் காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கத்தால் பழமை, பிற்போக்கு சிந்தனைகள் சமூக சீர்கேடுகள் பாதுகாக்கப்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆங்கில அரசின் ஆதரவால் விதவைமறுமணம். தேவதாசி ஒழிப்புச்சட்டம், இட ஒதுக்கீடு சட்டம் போன்றவற்றை நீதிக்கட்சியின் ஆட்சி நிறைவேற்றியது.
திராவிட இயக்கத்தின் வருகையால் தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தன. இவை பாமர மக்களிடையே படிக்கும் பழக்கத்தையும், விவாதிக்கும் ஆற்றலையும் வியக்கத்தக்க அளவில் வளர்த்தன. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரதேசமொழிகளில் பிரசவமான இதழியல் துறை வளர்ச்சி 20ஆம் நூற்றாண்டின் அரசியல், சமூக சூழல்களால் இணையற்ற வளர்ச்சிகண்டன. இப்போது 21ஆம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப புரட்சி இணைய இதழ்களின் சகாப்தத்தை முன்னேடுத்துச் செல்கிறது.
-புதிய பார்வை (மார்ச் 16 ,2007)