Monday, October 22, 2007

காந்தியும், தமிழர்களும்

சாவித்திரிகண்ணன்
'சத்யாக்கிரகம்' சென்ற நூற்றாண்டின் வரலாற்றில் சிதைக்க முடியாததோர் மாபெரும் வெற்றிப் பதிவாகிவிட்டது. சத்யம் என்றால் உண்மை. அது அன்பை அடியொற்றியதாகும்.
ஆக்கிரகம் என்றால் உறுதி வாய்ந்த சக்தி. 'சத்யாகக்கிரகம்' என்பதற்கு உண்மையின் ஆற்றல்' என்று பொருள். நம்மை எதிரியாக எண்ணுபவர்களை அன்பு, தூய்மை, பணிவு, நாணயத்தால் வென்றெடுப்பதே சத்யாகிரகமாகும்.
இருபதாம் நூற்றாண்டில் சத்யாகிரகத்தை உலகிற்கு சாத்தியப்படுத்தியவர் அண்ணல் காந்தியடிகள். 1906 செப்டம்பர் 11ல் அது பரிணமித்தது. தென்ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ் பர்க் நகரில் எம்பயர் தியேட்டரில் திரளாக குழமியிந்த இந்தியர்கள் மத்தியிலே அண்ணலால் அறிமுகப்படுத்தப்பட்டதே சத்யாகிரகம்.
இனவெறிக்கு எதிராக தென்ஆப்பிரக்காவில் காந்தி ஒரு தீவரமான நிலைபாட்டை எடுக்க காரணமாய் அமைந்தவர் பாலசுந்தரம் என்ற தமிழரேயாவார். இனத்துவேஷத்தின் காரணமாக அடித்து நொறுக்கப்பட்ட பாலசுந்தரம், இந்திய வழக்கறிஞரான காந்தியை அணுகி கண்ணீர் மல்க விவரித்ததிலிருந்து காந்திக்கு தென் ஆப்பிரிக்காவில் ஒப்பந்தகூலிகளான இந்தியர்கள் படும் இன்னல்கள் தெரியவந்தது. பாலசுந்திரத்திற்காக வாதாடி அவரை பாதுகாத்ததின் மூலம் காந்தி தென்ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார்.
தென்ஆப்பிரிக்கத் தமிழர்களுக்காக 'இந்தியன் ஒபினியன்' என்ற இதழை தமிழிலும் நடத்தினார். இக்கால கட்டத்தில் தமிழ் கற்க ஆரம்பித்த காந்தி, அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பிரமுகர்களை இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.
தமிழகத்தில் திலகருக்கு இணையாக மாபெரும் தேசபக்த எழுச்சியை உருவாக்கிய வ.உ.சி பற்றியும், சிறைமீண்டு சிதம்பரனார் செய்து வந்த தொண்டுகள் பற்றியும் மிக உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நிதிதிரட்டி தென்நாட்டு திலகருக்கு அனுப்பி உதவினார்.
தென்ஆப்பிரிக்கசத்யாகிரகம் அங்கு குடியேறிவாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும்,கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.ஆகவே தான் அவர் தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராக 1896ல் தமிழகத்தில் பிரசாரம் செய்தார். அப்போது பச்சையப்பன் மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி, "தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சந்தித்து கொள்ளாத இனத்தினர்" என்றார்.
தென் ஆப்பிரிக்கா போராட்டத்திற்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் காந்திக்கு தார்மீக ஆதரவு பெருகியது. அன்று தமிழகத்தலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு நிதிஉதவி அனுப்பி ஆதரவளித்தவர்கள் ஜி.ஏ.நடேசன், அன்னிபெசன்ட், எஸ். சுப்பிரமணிய ஐயர்....போன்றபலர்! அதேபோல் காந்தியின் தென்ஆப்ரிக்க போராட்டத்தில் நாடுகடத்தப்பட்டும், சிறைச்சாலைகளில் நோயுற்றும், ஏராளமான தமிழர்கள் இறந்துள்ளனர். அவர்களில் தில்லையாடி வள்ளியம்மை, நாராயணசாமி, நாகப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். டிரான்ஸ்வாலில் கந்தியின் கட்டளைக்கேற்ப தடையைமீறி பிரவேசித்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியது தம்பிநாயுடு என்ற தமிழராவார். இதனாலெல்லாம் தான் தமிழர்களை சந்திக்கும்போது ரத்தபாசத்துடன்கூடிய சகோதர உணர்வுக்கு தான் ஆட்படுவதாகவும், அவர்களின் அர்பணிப்பு,வீரம்,எளிமை ஆகியவை தன்னை மிகவும் ஆகிர்ஷித்த தென்றும்காந்தி எழுதியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கபோராட்டத்தில் வெற்றிஈட்டிய பின் தமிழகத்திற்கு 1915ல் வந்தபோது காந்தி தம்பதியருக்கு தமிழகத்தில் தடபுடலான வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது சென்னை விக்டோரியா மண்டபத்தில் பேசியகாந்தி, "தென்ஆப்பிரிக்கவிடுதலை போராட்டத்திற்கு இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் தான் தமிழர்கள்.....எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த எளிய தமிழர்கள் தான் எனக்கு உணர்வூட்டினார்கள்.அவர்களெல்லாம் தியாகம் செய்ய எங்களுக்கு புகழ்கிடைத்தது" என்றார்.
இப்படி பேசுமிடங்களில்மட்டுமல்ல, எழுத்திலும் பலமுறை தன்னுடைய போராட்டங்களுக்கெல்லாம் அதிகளவில் தோளோடு தோள் நின்று அளப்பரிய தியாகத்தையும், அரிதினும் அரிதான உயிரையும், தமிழர்களே தந்தனரென்றும், 'இந்த அனுபவங்களை என்னுடைய வாழ்நாள் இறுதிவரை கருவூலம்போல் போற்றுவேன்' என்றும் காந்தி எழுதியுள்ளார்.
காந்தி ஆகமதாபாத் அருகே 'கோச்ரப்' கிராமத்தல் ஆசிரமம் அமைத்தபோது அதில் அவரோடு சேர்ந்து முதன்முதலில் தங்கி பணியாற்றியவர்கள் 25பேர். அதில் 13பேர் தமிழர்களாவர். அவரது சொந்த மாநிலமான குஜராத்தியினரை விட தமிழர்களே அதிகமாயிருந்தது கவனிக்கத்தக்கது. சபர்மதி ஆசிரமத்தில் தமிழ் பள்ளிகூடம் ஒன்றையும் காந்திநடத்தினார்.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தமிழக மக்களிடையே தன்னிகரற்ற ஆதரவு நிலை இருந்தது. மாணவர்கள் படிப்பை துறந்தனர். தேசப்பற்றுள்ளோர் அரசுவேலைகளை, பதவிகளைத் துறந்தனர். காந்திஅறிவித்த கள்ளுகடை மறியல் போராட்டத்தில் அந்நாளில் சென்னையிலிருந்த 9000 சாராயக்கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவைகள் அடைக்கப்பட்டன. பல தாலுகா,ஜில்லாபோர்டுகள் தென்னை, பனை, மரங்களை கள்ளிறக்க குத்தகைக்கு விடுவதில்லை என தீர்மானம் இயற்றி லாபத்தை புறக்கணித்தன. கிராமங்களில் குடிகாரர்களை புறகணிப்பதும் நடந்தேறின. இவையாவும் இன்று நினைத்துப் பார்க்கவியலாத அதிசயங்களாகும்.
அதேபோல் காந்தியடிகள் தண்டியில் உப்புசத்யாகிரகயாத்திரை நடத்தியபோது அதற்கு இணையாக தமிழகத்தில் மட்டுமே வேதாரண்யத்தில் ராஜாஜியும், சர்தார் வேதரத்தினமும் உப்புசத்யாகிரகத்தை அரங்கேற்றினர். சென்னை மகாணத்தில் ராஜாஜியின் வீட்டிலிருந்தபோது தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும்.
போராட்ட அறிவிப்பை முதன் முதலாக அறிவித்து அதற்கான மாபெரும் பொதுக்கூட்டத்தையும் சென்னையில் நடத்தினார் காந்தி. 1921ல் மதுரை வந்த போது தான் காந்தி தன் வழக்கமான குஜராத்தி பாணி உடையை துறந்து அரைநிர்வாணபக்கிரியாக அவதாரமெடுத்தார்.
காந்தியை முதன்முதலாக உலகத்திற்கு "மகாத்மா" என்று அடைமொழியிட்டு அறிவித்தவர் 'சுதேசமித்ரன்' ஜீ.சுப்பிரமணிய ஐயர்தான்! காந்தியை 'தேசத்தந்தை' என்று இந்தியாவிற்கு தெரிவித்தவர்கள் தமிழக மாணவர்கள் தாம்! காந்தி வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் இந்தியமொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் தான் வெளியாகி பல்லாயிரம் பிரதிகள் இலவசமாகத் தரப்பட்டன.
காந்தியின் பற்றிய ஆவணப்படத்தை அகிலமெல்லாம் சுற்றி,கர்மமேகண்ணாக, மூன்றாண்டுகள் முழுமுச்சாய் தவமிருந்து பதிவுசெய்தவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.தான்!
காந்தியடிகள் சிறைசென்ற தருணங்களிலெல்லாம் அவரது 'யங்இந்தியா' இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் ராஜாஜி, மதுரை ஜார்ஜ் ஜோசப் , ஜே.சி.குமரப்பா போன்றவர்களே. ஜே.சி.குமரப்பா காந்தியின்'ஹரிஜன்' இதழுக்கும் ஆசிரியராய் இருந்துள்ளார்.
"வாழ்க நீ எம்மான்" என்று காந்தியை வாழ்த்தி , 'வாழ்விக்க வந்த காந்தி' என வையகத்துக்கு பறைசாற்றியவர் நம் தேசிய கவி பாரதியார். சென்னையில் மகாத்மாவை சந்தித்து பாரதியார் பேசியதும், பாரதியைப்பற்றி விசாரித்தறிந்த காந்தி ராஜாஜியிடம், "இவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்" என்று பகர்ந்ததும் மறக்ககூடியதன்றோ...! இதேபோல் தன்னலம்கருதா தனிபெரும் தியாகியான ஜீவானந்தத்தை அடையாளம் கண்டறிந்து, ' நீ தான் இந்தியாவின் சொத்து' என்று அறிவித்தவர் அண்ணலன்றோ...!
கர்மவீரர் காமராஜரை மக்கள் போற்றும் பெருந்தலைவராக உயர்த்தியது காந்தியமன்றோ.... அண்ணலின் அஹிம்சா போராட்ட முறைக்கு அங்கீகாரமளித்த நாகபுரி காங்கிரஸை தலைமைதாங்கி நடத்தியது சேலம் விஜயராகவாச்சாரியன்றோ...
காந்தியின் மனசாட்சிக்குரலாக ஒலித்த ராஜாஜி, காந்தியப் பொருளாதாரத்தின் கருவூலமான ஜே.சி.குமரப்பா, காந்திய வழியிலான ஆதாரக்கல்விக்கு வித்திட்ட அரியநாயகம், அண்ணலின் அடிச்சுவட்டில் உருவான தத்துவஞானி ராதாகிருஷ்ணன், அவரது இதயத்தை இளக வைத்த இசையரசி எம்.எஸ். சுப்புலெட்சுமி, வெள்ளை அரசுக்கும், அண்ணலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் வில்லங்கங்களை விலக்கி வழிசமைத்த வி.எஸ்.சீனிவாசசாஸ்திரியார்......... போன்று காந்தியோடு தொடர்பு உள்ளவர்களின் பட்டியல் தமிழகத்தில் தாராளம்,ஏராளம்!
தென்ஆப்பிரிக்கா போராட்டத்திலும், தென்ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோதும், காந்தியின் ஒவ்வொரு முக்கிய போராட்ட தருணங்களிலும் தமிழர்களும், தமிழகமும் சிறப்பான முக்கியத்துவம் பெற்றதும், இறுதியாக இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதற்கு முன் வந்த பிரிட்டிஷ் தூதுக்குழு காந்தியைச் சந்தித்து தன் முடிவைக் கூறியதும்தமிழகத்தில் தான் என்பது தமிழகம் செய்த தவப்பயனன்றோ......!!
தமிழைக் கற்பதிலும், தமிழ் கலாச்சாரம், பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் அளப்பரிய ஆர்வம்காட்டிவந்த அண்ணல், அதன்பொருப்டே அன்னை கஸ்தூரிபாவையும், மகன் மணிலாலையும் தமிழகம் அனுப்பினார். தமது மூன்றாவது மகனான தேவதாஸுக்கு தமிழ்பெண்ணான லட்சுமியை மணமுடித்து வைத்தார். திருக்குறள் மீது அளவற்ற மரியாதை கொண்ட காந்தி, " திருவள்ளுவ மாமுனிவரை இன்னும் வட இந்தியர்கள் தெரிந்து கொள்ளவில்லையே...." என்ற ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார். ஒளவையின் ஆத்திச்சூடி, கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளை தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தோடன்றி, அவை பற்றி பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியுமுள்ளார். அவரது சேவாகிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்தலும் நடந்த தினசரி பிரார்த்தனையில் திருவாசகப்பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுரைமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டபோது, 'எனதுநீண்டநாள் ஆசை நிறைவேறியது' என நெஞ்சுருக எழுதிவைத்தார் மகாத்மா. அண்ணல் காந்தியடிகள் மொத்தம் 20முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். குமரி தொடங்கி குமரன் உறையும் திருத்தணிவரை தமிழகத்தின் கிராமங்கள், பட்டிதொட்டிகள், சேரிகள், சிற்றூர்கள், நகரங்கள் என பல இடங்களுக்கும் பயணப்பட்டுள்ளார். அவரது முதல் பயணம் 1896 அக்டோபரில் ஆரம்பித்தது. கடைசிப் பயணம் 1946 ஜனவரி என்று காலப்பதிவேட்டில் முடிந்தது.
காந்தியுடன் கருத்துவேற்றுமைகள் பல கொண்டிருந்த போதும் காந்தி மறைந்தபோது பெரியார் ஈ.வே.ராமசாமி, "இந்த தேசத்திற்கு காந்தி தேசமென்று பெயரிட வேண்டும்" என்றார். காந்தியநெறிமுறைகளில் ஆழ்ந்தபற்றுள்ளவர்களாக, அதை வாழ்நெறியாக வகுத்துகொண்டதில் தமிழர்களுக்கு தனி இடமுண்டு. காந்தியின் சத்யாகிரக நூற்றாண்டு நிறைவுறும் தருவாயில் இத்தகு நெகழ்ச்சியான நிதர்சனங்களை நினைவுகூர்வதும், நெஞ்சில் நிறுத்துவதும் தமிழர்களாகிய நமக்கு அரசியல், சமூகத்தளத்தில் இழந்துபோன ஆன்மபலத்தை மீட்டெடுக்க உதவட்டும்.
உதவிய நூல்கள்
மகாத்மா காந்தி வாழ்க்கை,
தமிழ்நாட்டில் காந்தி,
விடுதலைப்போரில் தமிழகம்,
விடுதலை வேள்வியில் தமிழகம்

No comments: