Monday, October 29, 2007

ஞாநி எழுதியது சரிதானா?

-சாவித்திரிகண்ணன்
'விருப்பப்படி இருக்கவிடுங்கள் என்று ஆனந்தவிகடனில் ஞாநி எழுதிய கட்டுரை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'இது நயவஞ்சகமான கட்டுரை' என, கவிஞர் இளையபாரதியின் முன்முயற்சியில் தீம்புனல் அமைப்பு தமிழின் மிக முக்கிய படைப்பாளிகளைக் கொண்டு சென்னையில் கண்டன கூட்டம் நடத்தியது.
"அவர் அப்படி என்ன தவறாக எழுதிவிட்டார்... இவ்வளவு வயதான கருணாநிதி இன்னும் தன் உடம்பை வருத்திக் கொள்ளவேண்டுமா...? என்றுதானே ஆதங்கப்பட்டார்..?" ஒரு எழுத்தானுக்கு கருத்துச் செல்லும் உரிமை இல்லையா? மாறுபட்ட கருத்தை சொன்னால் கூட்டம் போட்டு மிரட்டுவதா..? இதெல்லாம் ரொம்ப அதிகமாக இருக்கிறதே...?"
"இன்றைக்கு அவர் விமர்சிக்கப்படுவதை பொருட்படுத்தாமல் இருந்தால் இதே நிலைமை மற்ற எழுத்தாளர்களுக்கும் அல்லவா ஏற்படும்...?"
"ஞாநி இருப்பதை போல கருணாநிதி ஒய்வு எடுக்கவேண்டும் என்பதிலேயே எனக்கு முழுக்க,முழுக்க உடன்பாடுதான்!" இது போன்ற எதிர்வினைகளையும் நான் எதிர்கொண்டேன்.
சரி, ஞாநியின் இந்தக் கட்டுரை நியாயமான எழுத்துதானா? என்று பார்ப்போம். இந்தக் கட்டுரையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கருணாநிதி மற்றவர்களால் -அதாவது குறிப்பாக அவரது குடும்பத்தாராலும், கட்சிக்காரர்களாலும்- நிர்பந்தப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், அவரது விருப்பதிற்கு மாறாக அவர் முதலமைச்சர் பொறுப்பேற்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் உருகி, உருகி எழுதப்பட்டுள்ளது. "அவர் வதைக்கப்படுவதை, வதைபடுவதை பார்த்துக் கொண்டு இருக்க பொறுக்க வில்லை..." என்றும் கட்டுரையாளர் குமுறுகிறார். "யார் நிமித்தம் அவர் இந்த முட்கிரிடத்தை தரித்திருக்கவேண்டும்..." என்றும் கேட்கிறார். இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
கருணாநிதி ஒய்வுக்கான வயதுடையவர் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் கருணாநிதி நீண்டநெடுங்காலம் அரசியல் அதிகார மையத்தில் திளைப்பவர் -இடைவிடாது அதிலே உழல்பவர், அரசியல் அதிகாரத்தை கைகொள்ளுவதிலே தான் பலத்தையும், ஊக்கத்தையும் பெறுகிறார். கட்டுரையிலேயே உள்ளது போல் ஒருநாளைக்கு 18மணிநேரம் உழைப்பதிலே உற்சாகமும், இன்பமும் கொள்பவராக இருக்கிறார். தன் இறுதி மூச்சுள்ளவரை தமிழக அரசியலின் அச்சாணியாக இருப்பதில் விடாப்பிடியாக,விருப்பமுள்ளவராகத் தான் அவர் வெளிப்படுகிறார். விருப்பப்படி தான் மாநிலத்திலும், மத்தியிலும் ராஜதந்திர அரசியல் நடத்தி செல்வாக்கின் உச்சத்திலேயே சிலிர்ப்போடு உலாவருகிறார். தன் விருப்பத்தை, வெளிப்படுத்துவதிலும், செயல்படுத்துவதிலும், அடைந்தே தீருவது என்பதிலும் இன்றும் பல அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி கொண்டிருக்கிறார்.
இப்படிப்படட ஒருவருக்கு ஒய்வு தருவது தான் தண்டனையாகும் 'தான் ஒய்வுக்குரியவல்ல.. அப்படி யாரும் தன்னை நினைக்கக் கூட அனுமதிக்க முடியாது' என்பதாக, எல்லாம் தன்னை மையப்படுத்தி சுழல்வது என காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
இப்படிப்பட்டவரை அழகிரியும், ஸ்டாலினும், கனிமொழியும் ஏதோ சாட்டை எடுத்துக் கொண்டு வேலைவாங்குவது போலவும், கட்சி நிர்பந்திப்பது போலவும் ஞாநி எழுதியிருப்பது உண்மைக்கு மாறானது. அதுவும் அவருக்கே அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடியாத ஒன்றை, அவருக்கு நெருக்கமானவர்களே உணரத் தவறிய ஒன்றை தான் எடுத்துச் சொல்லி புரியவைப்பது போல உருக்கமாகவும், சென்டிமெண்டாகவும் எழுதியிருப்பது நேர்மையான அணுகுமுறையல்ல.
ஆனால் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்றும், அவர் ஆற்றல் மிக்க அடுத்த தலைமையை உருவாக்கி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்றும் ஞாநி கருதுவாரேயானால் அதை நேர்படச் சொல்லி இருக்கலாம். இதில் பலருக்கு உடன்பாடு இருக்கவாய்ப்பண்டு. இதை யாரும் மேடை போட்டு பேசியோ, இவ்வளவு தீவிராக எதிர்த்தோ எழுதியிருக்க மட்டார்கள்.
ஆனால் இல்லாத ஒரு சூழலை மிகவும் நுட்பமாக, வஞ்சமாக, உருக்கமாக எழுதி கட்டமைக்க முயலுவது கயமைத்தனம் தானே... இந்த நிலையில், 'பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்' என்று பாரதியை துணைக்கழைக்கிறார். பாரதியார் புதிய ஆத்திசூடியில், 'நேர்படப்பேசு', 'பொய்மை இதழ்' 'வெடிப்புறப்பேசு' என எழுதியுள்ளார். பாரதியை கொண்டாடுவது போல் தோற்றம் காட்டும் ஞாநியிடம் இந்த குணம் எதுவுமில்லையே...
இருந்திருந்தால் , அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பி பேசமுடியாமல் ஒய்வு தேவைப்படும் நிலையிலிருந்த எம்.ஜி.ஆரை அவரது கட்சிக்காரர்கள் நிர்பந்தித்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வைத்தபோது இப்படி ஒரு உருக்கமான கட்டுரை எழுதியிருப்பார். இருந்திருந்தால், தான்எங்கு தங்கியிருக்கிறேன், என்னசெய்கிறேன் என்ற வெளிப்படைத் தன்மை இல்லாமல் அடிக்கடி ஹைதராபாத், மாமல்லபுரம் பங்களா, குளிர்வாசஸ்தலங்கள் எனச் சென்றுவிடும் ஜெயலலிதாவை, 'நிரந்தர ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டியது தானே' என்று கேட்கத் துணிந்திருப்பார்.
அ.தி.மு.கவிலிருந்து வெளியேற்றப்படடவர்களிடமிருந்தும் அ.தி.மு.கவிற்குள்ளே இருப்பவர்களிடமிருந்தும் அவ்வப்போது புழுக்கமாக வெளிப்படும் ஒரு சொல்லாடல் "ஜெயலலிதா, 'சசிகலா குடும்பத்தின் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார்" என்பதாகும். 'சசிகலா குடும்பத்தினரால் ஜெயலலிதா சூழ்நிலைக் கைதியாக இருக்கிறாரா இல்லையா?' என்பதை ஆராயத் துணியாதவர் அந்த குற்றச்சாட்டை சற்றும் நியாயமில்லாமல் கருணாநிதி மீது வைக்கவேண்டிய நோக்கம் என்ன?
மேலும், இது நாள்வரை கருணாநிதியைப்பார்த்து, "குடும்ப அரசியல் செய்பவர், வாரிசை பதவியில் அமர்த்த துடிப்பவர்" என்று விமர்சனம் வைத்துவிட்டு, இன்று தி.மு.க வினரிடமே' ஸ்டாலினை முதலமைச்ராக்க உங்களுக்கு என்ன தயக்கம்' என்று சிபாரிசு செய்வது ஏன்? ஸ்டாலின் முதலமைச்சராவதில் ஞாநிக்கு எப்போது உடன்பாடு ஏற்பட்டது?
ஒர் அரசியல் விமர்சகராக அவர், கருணாநிதியின் முதுமை காரணமாக தமிழக அரசு நிர்வாகம் எப்படி பாதிப்புக் குள்ளாகிறது... என்றோ, அதனால் மக்கள் பெற்றுவரும் இன்னல்கள் எவை என்றோ, ஆதாரங்களைத் திரட்டி எழுதியிருப்பாராயின் அந்த கருத்திலே நானும் உடன்படத் தயங்கமாட்டேன்.
இந்த கட்டுரைக்கு, "என்விருப்பபடி கருணாநிதியை இருக்கவிடுங்கள்' என்று தலைப்பட்டிருக்கலாம் ஞாநி. ஆனந்தவிகடன், "விருப்பப்படி எழுதிக் கொள்ளுங்கள்...' என்று ஞாநியிடம் பெருந்தன்மை காட்டியதற்காக அவர் விரும்பத்தகாத விளைவுகளை, தர்மசங்கடத்தை விகடனுக்கு ஏற்படுத்தி தந்திருக்க வேண்டாமே...!

2 comments:

Badri Seshadri said...

மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Unknown said...

Gagni seems to be thinking that he only has the wisdom in analysing the public issues. I think one has once written about the APJ Kalam also as what he has done to the society ? By writting these kinds of controverisal things ...people will remember him for sometime for the bad reasons rather than good reasons. Of course, as writer he has to think rationaly and tell something new that does not mean he has to take Bharathi songs for his defence.. If this continues, Gangi might claim that he is the next 'avatharam' of Bharathi..careful. At the same time, we do not need to condemnhim in the public rather you can give our comments..