Friday, October 12, 2007

சேதுசமுத்திர திட்டம்; பேசமறுக்கும் உண்மைகள்;

ண்மைகளை உறங்கவைத்துவிட்டு, பொய்களுக்கு மட்டுமே போஷாக்கு தந்து கொண்டிருக்கும் தந்திரமே-உன்பெயர்தான் அரசியலோ....! என்று எண்ணத் தோன்றுகிறது. இனி என்னவாகும் சேதுசமுத்திர திட்டம்?
திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துதைக் குறித்து தன்னுடைய பதிலைக் கூற நீதிமன்றத்திற்கு மூன்று மாதகால அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு. இதற்குள் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது.
தொல்லியல் துறை கருத்தை சொன்னதிலேயே 'தொலைந்துவிடுவோமோ' என பயந்த மத்திய அரசுக்கு இனி இராமர் பாலத்தின் மீது கைவைக்கும் தைரியம் வரப்போவதில்லை. அப்படி கைவைத்தால், 'காங்கிரஸ் காணாமல் போய்விடும். பா.ஜ.க காலூன்றிவிடும்.' என்ற யதார்த்தங்களை புறக்கணிக்க மத்திய அரசு தயாராக இருக்காது. இந்நிலையில் மத்திய கூட்டணி அரசில் இடம்பெற்றுளள தி.மு.க காங்கிரஸூடன் கலந்தாலோசித்து இணக்கமான ஒரு முடிவுக்கு வராமல் தானடித்த மூப்பாக இந்தப் பாதையில் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று அறிவித்துவிட்டது. மத்திய அரசிடம் மாற்று கருத்து தனக்கு ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்தத தமிழகத்தில், 'உண்ணாவிரதம்', 'பந்த்' என இரண்டையும் ஒரு சேர நடத்திமுடித்துவிட்டது.இங்கே உண்மைகள் மறைக்கப்பட்டு ஒரு ஊமை நாடகம் அரங்கேற்றப்பட்டு கொண்டுள்ளது. கட்சிகள் பேச மறுக்கும் உண்மைகளை நாம் கொஞ்சம் கவனிப் போமாக.
தி.மு.க பேச மறுக்கும் உண்மைகள்:
தமிழர்களின் தலை எழுத்தையே மாற்றிவிடக்கூடிய 150 ஆண்டு கனவு நிறைவேறப் போகிறது என்றோம். ஆனால் சேது சமுத்திரதிட்டம் இப்போது சிக்கலாகிவிட்டது. தூர்வாரிய பிறகும், ஆழப்படுத்திய பிறகும் மீண்டும், மீண்டும், காற்று மற்றும் கடலலைகளின் போக்கால் சேறும், மணலும் பல ஆயிரம் டன் சேருவதால் மன்னார்வளைகுடா பகுதியில் செலவு தான் கூடிக்கொண்டிருக்கிறதே தவிர செயல் வடிவம் கிடைத்தபாடில்லை! திட்ட மதிப்பீடு 2427 கோடியிலிருந்து இரு மடங்காக எகிறிவிட்டது. ஏறத்தாழ 5000கோடி ஒதுக்கினால் தான் சேது சமுத்திர சாத்தியமாகும். இந்த கூடுதல் நிதியை ஒதுக்க, செயல்படுத்த பொருளாதார ரீதியாக இத்திட்டம் வெற்றிகரமானது என்றுசொல்ல முடியவில்லை. இவ்வளவு செலவழித்தாலும் இத்திட்டத்திற்கு செலவழித்த பணத்தை ஒரு போதும் திரும்ப எடுக்க முடியாது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. இப்படிப் பட்ட இக்கட்டான சூழ்நிலையில், பா.ஜ.கவின், "இராமர் பாலம் காப்போம்", கோஷம் எங்களுக்கு கைகொடுத்துள்ளது. இது தான் சாக்கு! 'தமிழர்களின் லட்சியக்கனவு, பொருளாதார ரீதியில் தமிழகத்தை பூத்து குலுங்க வைக்கும் திட்டம்' என்ற மாயைகளை விலக்கி கொள்ளாமல், வில்லன் பழியை பா.ஜ.கவின் மேல் போட்டாயிற்று. 'திட்டத்தின் மதிப்பீடு இரு மடங்காகிவிட்டது, அதற்கான நிதி ஆதாரத்திற்கு அனுமதியில்லை. அப்படியே கிடைத்தாலும் இது வெற்றிகரமான திட்டமில்லை. ஆழம்தெரியாமல் காலைவிட்டுவிட்டோம். மூழ்கிச்சாவது முட்டாள்தனம், கால்களை எடுத்துக் கொள்வோம். காரணங்களை மறைத்துக் கொள்வோம்'
பா.ஜ.க பேச மறுக்கும் உண்மைகள்:
பாபர் மசூதியை இடிக்க முடிந்ததே தவிர இன்று வரை அங்கே ராமர்கோயிலை கட்டி எழுப்ப முடியவில்லை. இப்போது அயோத்தி பிரச்சினையைப் பேசும் அருங்கதையை இழந்துவிட்டோம். அடுத்ததாக சங்கராச்சாரியர் கைது விவகாரமும் சரிவர கைகொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு வரும் தேர்தலுக்கு ஒட்டு அறுவடைக்கு என்ன செய்ய? என அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் தி.மு.க தானாகவே வந்து தாரை வார்த்து தந்தது தான் ராமர் பாலவிவகாரம். தி.மு.க காட்டிய பிடிவாத அணுகுமுறை! மாற்று வழி முறைகளை பரிசிலீக்க மறுத்ததுமற்றும் அதன் இந்துமத துவேஷமும் பா.ஜ.கவிற்கு பலம் சேர்க்க உதவிற்று. எப்படி பார்த்தாலும், எந்த வழியில் செயல்படுத்தினாலும் ஆதம்ஸ் பாலம் எனப்படும் 30 கி.மீ நீளமுள்ள ஏழு மணல்திட்டுகளைக் கொண்ட -5 அடிமுதல் 11 அடிவரையே ஆழம் கொண்ட- அந்த பாதையை பிளந்து தான் சேது சமுத்திர கால்வாய் சாத்தியமாகும். பா.ஜ.க நம்பும் பகுதிவரை மட்டுமே ராமர் நடந்துவந்து மீதிப்பாதையை நடக்காமலேயே பறந்து சென்றுவிட்டரா? என்பதை யாரும் கேட்கவில்லை இப்போதைக்கு ராமர்பாலம் என்பது வருகிற தேர்தலுக்கு கைகளில் வழுக்கி விழுந்த 'ஜாக்பாட் பரிசு' அவ்வளவே!.
காங்கிரஸ் பேச மறுக்கும் உண்மைகள் :
சிறுபான்மை அரசு என்பதால் தி.மு.க தந்த நிர்பந்தத்தால் சேது சமுத்திர திட்டத்தை பொருளாதார ரீதியாக, சுற்றுச்சூழல் ரீதியாக, பூகோள ரீதியாக பலனா? பாதகமா? என ஆராயமல் ஏற்றுக் கொண்டு விட்டோம். இன்று எல்லாவகையிலும் பாதகம் என அறியவந்த நிலையிலும் அதை அறிவிக்கத் தயக்கமாயுள்ளது. திட்ட மதிப்பீடு 2427 கோடியிலிருந்து இரு மடங்காக எகிறியுளள நிலையில் அதற்கு நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாது . இதுவரை நிதி திரட்டி தந்த ஆக்ஸிஸ் வங்கியும் நிச்சயமாய் இனி உதவமுடியாது என கைவிரித்துவிட்டது. தி.மு.கவின் இந்துமத துவேஷத்தை ஏற்கவும் வழியின்றி, எதிர்க்கவும் வழியின்றி இரண்டுங்கெட்டானாய், இருதலைக் கொள்ளியாய் இருப்பு கொள்ளாமல் தவிக்கிறோம், சேதுசமுத்திரதிட்டம் செயல்படுதத முடியாதது என்பதை சொல்லமுடியவில்லை. அ.தி.மு.க பக்கம் கதவு அடைபட்டு இருப்பதால் தி.மு.கவை விட்டால் வேறு திடமான துணையில்லை. விரும்பவும் முடியாத, வெறுத்தாலும் காட்டிக் கொளள வழியின்றி தி.மு.கவை வைத்திருக்கிறோம். தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க தவிர்தத மூன்றாவது அணி பலம் பெற்று அதில் காங்கிரஸ் பங்கு பெற்றால் பல உண்மைகள் வெளிவரலாம்.
சிறுபான்மையினர் பேசமறுக்கும் உண்மைகள்:
உலகவரைபடங்கள் அனைத்திலுமே தலைமன்னாருக்கும். தனுஷ்கோடிக்கும் இடையிலான அந்த கடலடி மணற் திட்டுகள் ஆதம்ஸ் பாலம் என்றே அறியப் பட்டு வந்துளளது. ஆதாம் என்பவர் தான் கிறிஸ்த்துவ சிந்தாந்தப்படியும், இஸ்லாமிய சிந்தாந்தப்படியும், உலகின் முதல் சிருஷ்டி, கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மனிதன். அவர் இன்றளவும் இருக்கும் இலங்கையின் ஈடன் தோட்டத்திலிருந்து இந்த வழியே தென்னிந்தியா வந்ததை குறிக்கும் வகையில் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மணல்திட்டுகளுக்கு 'ஆதம்ஸ் பாலம்' என பெயரிடப்பட்டது. அகில முழுமையும் இது, 'ஆதம்ஸ் பாலம்' என்றே அறியப்பட்டுவந்துள்ளது. அதை ராமர்பாலம் என பா.ஜ.க அழைத்த நிலையில் நாங்கள் அதை 'ஆதம்ஸ் பாலம்' தான் என அறுதியிட்டு கூறி, அதன் மூலம் மதச்சார்ப்பறற காங்கிரஸூக்கும், தி.மு.க.விற்கும் சங்கடத்தை உருவாக்க விரும்பவில்லை. எப்படியோ சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திய பழி எங்கள் மேல் விழவில்லை.
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பேசி வந்த உண்மைகள்:
சேது சமுத்திரதிட்டம் சுற்றுச் சூழலை சீரழிகக கூடியது. உலகில் அரியவகை உயிரினமான பவளப்பாறைகள் பல தீவு கூட்டங்களாக இந்த மன்னார்வளைகுடாவில் இயற்கை மாளிகைகள் அமைத்துள்ளன. இந்த இயற்கை அரண்களே இராமேஷ்வரம், இராமநாதபுரம், தூத்துக்குடியை இதுவரை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளன. பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள், கடற்பசு, டால்பின்கள், கடல்ஆமை, கடற்குதிரை போன்றவை சேதுதிட்டசெயல்பாடுகளால் காலாவதியாகிவந்தன. இனி ஒரளவு காப்பாற்றபட போகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள மீன்வலைகள் இத்திட்ட செயல்பாடுகளால் இதுவரை அறுபட்டு நாசமடைந்துள்ளன. ஆதம்ஸ் பாலம் என்ற அபூர்வ மணல்திட்டுகளை அழிக்க கூடாது. அவை சுனாமியிலிருந்து தென்னிந்தியாவை காப்பாற்றும் இயற்கை அரண்களாகும். சூயஸ், பனாமாகால்வாய் போன்றவை நிலத்தை வெட்டி கடல்களை இணைத்தவை. ஆனால் சேதுபகுதியிலோ சேறும், மணலும் இடையறாது சேர்ந்து கொண்டிருப்பதால் கடலை ஆழப்படுத்த வழியில்லை இது இயற்கைக்கும், மீனவர் நலன்களுக்கும் எதிரான திட்டம். இன்று உண்மை உணரப்பட்டுவிட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், விஞ்ஞான பூர்வமான உண்மைகளைச் சொல்லி தடுத்து நிறுத்த முடியாத திட்டத்தை மதவாதிகள் ராமர் பெயரை வைத்து நிறுத்திவிட்டனர்.
எப்படியோ ராமர் கலகம் நன்மையில் முடிந்தது.

No comments: